சினிமா

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரபியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதல்

Published On 2017-05-21 07:17 GMT   |   Update On 2017-05-21 07:17 GMT
தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் சமீபத்தில் சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்றார்.

நேற்று அவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் காரில் சென்றார். பள்ளியக்கரா சோதனைச்சாவடியில் அவர்கள் சென்றபோது அந்த சோதனைச் சாவடியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. அங்குள்ள ஊழியர்கள் மெத்தனமாக வாகன வசூல் செய்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து சென்றன.

இதை பார்த்த நடிகை சுரபி லட்சுமி, காரில் இருந்து இறங்கி சோதனைச்சாவடி ஊழியர்களை கண்டித்தார். விரைவாக வாகன வசூல் செய்து போக்குவரத்தை சீர் செய்யுமாறு அவர் கூறினார். இதனால் சுரபி லட்சுமிக்கும், சோதனை சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலானது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமரசப்படுத்தி நடிகை சுரபி லட்சுமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.



நடிகை சுரபி லட்சுமியுடன், சோதனை சாவடி ஊழியர்கள் மோதிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுரபிலட்சுமியும் தனது பேஸ்புக்கில் மோதல் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

சுரபி லட்சுமி கூறுகையில், நாங்கள் காரில் அமர்ந்திருந்தோம். மற்றொரு காரில் கணவனும், மனைவியும் அமர்ந்திருந்தனர். அவர்களில் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். உடல் நலம் சரியில்லாத அந்த பெண் வாகன நெரிசலில் சிக்கி தவித்தது எனக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுபற்றி கேட்ட போது தான் சோதனை சாவடி ஊழியர்கள் என்னுடன் தகராறு செய்தனர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இனிமேல் அந்த சோதனை சாவடியில் வாகனங்கள் விரைந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
Tags:    

Similar News