சினிமா

கார் விபத்தில் உயிர் தப்பிய கங்கனா ரணாவத்

Published On 2016-10-17 03:45 GMT   |   Update On 2016-10-17 03:45 GMT
நடிகை கங்கனா ரணாவத் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் காயத்துடன் உயிர் தப்பினார். அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
ஜெயம்ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயீன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். இந்தியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் கங்கனா ரணாவத் முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு இவர் ரூ.12 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் இவருக்கும் சமீபத்தில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. கங்கனா ரணாவத் தற்போது ஹன்சன் மேத்தா இயக்கும் ‘சிம்ரன்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் நடந்து வந்தது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட கங்கனா ரணாவத் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

ஜார்ஜியாவில் நடந்த படப்பிடிப்பில் கங்கனா ரணாவத் பங்கேற்று விட்டு அட்லாண்டாவில் இருந்த நட்சத்திர ஓட்டலுக்கு காரில் திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.

காரை உள்ளூர் டிரைவர் ஒருவர் ஓட்டினார். அவர் அருகில் கங்கனாவின் பாதுகாவலர் உட்கார்ந்து இருந்தார். கார் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவருக்கு திடீரென தொடர் தும்மல் ஏற்பட்டது. இதனால் அவரால் காரை நேராக ஓட்டமுடியவில்லை.

அங்கும் இங்கும் கார் திரும்பியது. பாதுகாவலர் தலையிட்டு காரை ஓட்ட முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. கார் நிலைதடுமாறி ரோட்டு ஓரத்தில் இருந்த மதில் சுவரில் வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. காருக்குள் இருந்த கங்கனா ரணாவத்துக்கு பலத்த அடிபட்டது. நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கைமணிக்கட்டிலும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பயப்படும்படி உள் காயங்கள் எதுவும் இல்லை என்று கூறி நெற்றி காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். இந்த விபத்தில் கங்கனா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Similar News