சினிமா

கபாலிக்காக மன்னிப்பு கேட்ட ராதிகா ஆப்தே

Published On 2016-07-30 11:14 GMT   |   Update On 2016-07-30 11:14 GMT
கபாலி படத்தின் புரோமோஷன்களில் கலந்துகொள்ள முடியாததற்காக ராதிகா ஆப்தே மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து கீழே பார்ப்போம்..
ரஜினி நடிப்பில் உருவாகி வெளிவந்து வெற்றிநடை போட்டு வரும் ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ரஜினியின் நடிப்புதான் படத்திற்கு பெரிய பலமாக இருந்தாலும், ராதிகா ஆப்தேவின் எதார்த்தமான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக இருந்தது.

இருப்பினும் ‘கபாலி’ படத்திற்கான புரோமோஷன்கள் எதிலும் ராதிகா ஆப்தே இதுவரை தலைகாட்டவே இல்லை. ஒருமுறை பத்திரிகையாளர்களை ராதிகா ஆப்தே சந்திப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அதுவும் நடக்காமலேயே போனது. இந்நிலையில், ‘கபாலி’ புரோமோஷன்களில் பங்கேற்க முடியாதது குறித்து ராதிகா ஆப்தே வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், மீடியாக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நான் நடித்துவரும் ‘கோல்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு இடைவிடாது தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால் ‘கபாலி’ படத்தின் புரோமோஷன்களில் என்னால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்காக மீடியாக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘கபாலி’ படம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் மகிழ்ச்சியை அளிக்கிறது. ரஜினி சாருடன் இணைந்து நடித்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாதது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, அடுத்ததாக தமிழ் படங்களில் நடிப்பதற்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ‘கோல்’ படம் முடிந்த கையோடு, நடிப்புக்கு சிறிய இடைவெளி கொடுக்கப்போகிறேன். அதன்பிறகு அடுத்த படம் குறித்து முடிவு செய்வேன் என்று தெரிவித்தார்.

Similar News