ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:22 GMT   |   Update On 2023-04-15 13:33 GMT

கலையார்வம் நிறைந்த ரிஷப ராசியினரே, இதுவரை ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் பனிரெண்டாமிடத்திற்கு செல்கிறார். அக்டோபர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

விரய குருவின் பலன்கள்

12ம்மிடம் என்பது வெளிநாட்டுப் பயணம் விரயம், அயன, சயன ஸ்தானமாகும்.ரிஷப ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதியான குருபகவான் விரய ஸ்தானத்திற்கு செல்வது சுபமும் அசுபமும் கலந்த பலனைத் தரும். ஒரு மறைவு ஸ்தானத்திற்கு அதிபதியான குரு அதாவது அஷ்டமாதிபதியாகிய குரு மற்றொரு மறைவு ஸ்தானம் செல்வது சிறப்பு. கெட்டவன் கெட்டி டில் கிட்டிடும் ராஜயோகமாக அமையும். அதே நேரத்தில் லாபாதிபதி குரு விரய ஸ்தானம் செல்வது சுபித்துச் சொல்லக் கூடிய பலன் இல்லை. குரு விரய ஸ்தானம் செல்வதால் வரவைக் காட்டி செலவு கூடும். விரயங்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.வருமானம் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத விரயமும் உண்டாகும். சேமிப்பு கரையாமல் இருக்க சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

சிறிய செயலுக்கும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டுச் செய்ய வேண்டும். பிறருடைய விசயத்தில் தேவையில்லாமல் தலையிட்டால் அசிங்கம், அவமானம், வம்பு, வழக்கு வரும். வழக்குகள் சாதகமாகாது அல்லது விரும்பதகாத திருப்பங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் போதும் பழைய சொத்துக்களை விற்கும் போதும் தவறான விலை நிர்ணயத்தால் இழப்புகள் உண்டாகலாம். பலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாயகம் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உண்டாகும்.லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தை, யூக வணிகம் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம். சுய ஜாதகமும் தசா புத்தியும் சாதகமாக இருப்பவர்களுக்கு சுப விரயங்களால், சுப முதலீட்டால் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். சில அசவுகரியங்கள் இருந்தாலும் கடைசி நேரத்திலாவது காரியங்களில் வெற்றி உண்டாகும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

விரய குருவின் 5ம் பார்வை ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் பதிகிறது. நான்காமிடம் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி பற்றி கூறுமிடம் என்பதால் தாயின் அன்பும், அனுசரனையும்கிடைக்கும். சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். வாடகைக்கு போகாமல் இருந்த சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர் கிடைப்பார்கள். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.இதுவரை சொந்த வீடு இல்லாதவர்கள் கடன் பெற்றாவது சொந்த வீடு கட்டி குடியேறுவார்கள்.வாகனம் இல்லாதவர்களுக்கு நவீன வகை சொகுசு வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

தாய்வழிச் சொத்தில் நிலவிய வில்லங்கள் விலகும். சிலருக்கு சொத்துக்களின் மதிப்பு உயரும்.சிலர் கடன் தொல்லை தாளாமல் சொத்தை அடமானம் வைத்துக் கடன் பெறலாம் அல்லது அடிமாட்டு விலைக்கு விற்கலாம்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் 7ம் பார்வை ராசிக்கு 6ம்மிடத்தில் பதிகிறது. ஆறாமிடம் நோய், எதிரி, கடன், உத்தியோகம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். நண்பர்கள், உறவினர்களுக்கு கொடுத்து வசூலாகாமல் இருந்த கடன் தொகை இப்பொழுது வசூலாகும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தக் கூடிய வகையில் வாழ்க்கைத் துணை பிள்ளைகள் மூலம் வருமானம் வரலாம். கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் கடன் என விரும்பிய அனைத்து கடன்களும் கிடைக்கும்.போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வாய்ப்பும் உள்ளது. தொழில் போட்டிகளை எதிரிகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களையும், உடன் பணிபுரிபவர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பிறரின் விசயத்தில் மூக்கை நுழைத்து புதிய எதிரிகளை உருவாக்கமல் இருக்க வேண்டும். ஆரோக்கியத் தொல்லைகள் வைத்தியத்தில் சீராகும். வாழக்கைத் துணையின் வேலைக்காக எடுத்த முயற்சிகள் கைகூடும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

ராசிக்கு 8ம்மிடத்திற்கு குருவின் 9ம் பார்வை பதிகிறது. எட்டாமிடம் என்பது துன்பம், வேதனை, அவமானம், விபத்து, கண்டம், சர்ஜரி, ஆயுள், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றைப் பற்றிக் கூறுமிடம். ஆயுள், ஆரோக்கியம், தீராத நோய் தொடர்பான பய உணர்வு நீங்கும்.வேதனைப் படுத்திய வம்பு, வழக்கு, அவமானம் இவற்றிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். யார் வம்புக்கு இழுத்தாலும் கண்டும் காணமலும் இருப்பது நல்லது. நல்ல நேரம் வரும் பொழுது எதிரிகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாப்பது மிக அவசியம். வெற்றுப்பத்திரம், எழுதாத காசோலை போன்றவற்றில் கையெழுத்துப் போடுதல், ஜாமீன் போன்றவற்றைப் தவிர்க்க வேண்டும். வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் போன்றவை கிடைக்கலாம். பதறாத காரியம் சிதறாது. எனவே முறையாக திட்டமிட்டால் சங்கடங்களிலிருந்து விடுபடலாம்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் முன் கோபத்தால் சில முன்னேற்றத் தடை உருவாகலாம்.பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகளால் பணிச் சுமை அதிகமாகும். மன நிறைவு இருக்காது. தனிமையை அமைதியை மனம் விரும்பும். மலைபோல் நம்பிய சில முக்கிய நபர்கள் கடைசி நேரத்தில் காலை வாரி விடலாம். சிலர் கடனுக்கு பயந்து ஆரோக்கிய குறைபாட்டை இல்லாத நோயை புதியதாக வரவழைத்துக் கொள்வார்கள். எதிலும் நிதானத்தோடு நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

பரணி சுக்கிரனின் நட்சத்திரம்.

ரிஷப ராசிக்கு சுக்ரன் ராசி அதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. ராசி அதிபதியே ஆறாம் அதிபதியாக இருப்பதால் ஒரு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் ஜாதகரே காரணமாக இருப்பார். எனவே நல்லது, கெட்டது போன்ற நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்துச் செயல்பட வேண்டும்.அரசு உத்தியோக முயற்சி வெற்றி தரும். வருமானப் பற்றாக்குறை அகலும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள் ,பொறுப்புகள் தாமாகவே வந்து சேரும். கடந்த காலத்தில் வாங்கிய கடன் சுமைகள் குறையும். தாய் மாமன், மைத்துனர் மூலம் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தாயின் ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும். சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.பூர்வீகச் சொத்துக்கள் பங்கு பிரிக்கப்படும். அடமான நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். விலை உயர்ந்த அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தாய் வழி உறவுகளிடம் நெருக்கம் அதிகரிக்கும்.

குருவின் வக்ர பலன்கள் :

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்வீர்கள். தொழில் கூட்டாளிகள் பிரிந்து செல்வார்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது.

பெண்கள் :

பொறுப்புள்ள குடும்ப தலைவியாக இருந்து குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவீர்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் திருமணம், படிப்பு, வளைகாப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மாணவர்கள் :

நான்காமிடத்திற்கு குருப் பார்வை இருப்பதாலும், அக்டோபர் மாதத்திற்கு மேல் கேது ஐந்தாமிடம் செல்வதாலும் கல்வி ஆர்வம் அதிகரிக்கும். புரிந்து படிக்கும் தன்மை உருவாகும். போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். உயர் கல்வியை விரும்பிய பாடத்திட்டத்தில் விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் :

அரசு வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உங்களை மகிழ்விக்கும். சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கேட்டவர்களுக்கு மாறுதல்கள் கிடைக்கும்.

ராகு/கேது பெயர்ச்சி :

அக்டோபர் 30, 2023 அன்று ராகு 11ம் இடத்திற்கும் கேது 5ம்மிடமும் செல்கிறார்கள். விரய குருவால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யக் கூடிய வகையில் வருமானம் உயரும்.குறைந்த சம்பளம் உள்ள வேலையிலிருந்து அதிக சம்பளம் கிடைக்கும் உத்தியோகத்திற்கு மாறலாம். இழந்த பதவிகள், வேலைகள் திரும்பக் கிடைக்கும்.

பரிகாரம் : ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. அதனால் இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல. உறவுகளும் பணமும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும், போகும். தொடர் வெற்றியை நிலைநாட்ட தன்னம்பிக்கை மிக முக்கியம்.ரிஷப ராசியினர் வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகா லஷ்மி வழிபாடு செய்து வர வீண் விரயங்கள் குறைந்து சேமிப்பு உயரும். மாதம் ஒரு முறை ஜென்ம நட்சத்திர நாளில் பசுவிற்கு 6 மஞ்சள் வாழைப்பழம் வழங்க தொழில் விருத்தியடைந்து லாபம் அதிகரிக்கும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News