கடகம் - தமிழ் மாத ஜோதிடம்

மார்கழி மாத ராசிபலன்

Published On 2023-12-15 04:25 GMT   |   Update On 2023-12-15 04:27 GMT

கொள்கைகளை விட்டுக்கொடுக்காத கடக ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இதுவரை கண்டகச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த உங்களுக்கு இப்பொழுது அஷ்டமத்துச் சனி ஆரம்பிக்கப் போகிறது. எனவே எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் திடீரென பிரச்சினைகளை சந்திக்கும் சூழ்நிலையும், மனக்குழப்பமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடுகள் உண்டு. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலமே உற்சாகத்தோடு பணிபுரிய இயலும்.

கும்ப ராசியில் சனி

மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி வளர்ச்சிப் பாதையில் தளர்ச்சியை உருவாக்கப் போகிறது. வருமான பற்றாக்குறை அதிகரிக்கும். எதிரி களின் பலம் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமிது. சனிக்கவசம் பாடி முறையாக சனி பகவானை வழிபடுவதன் மூலம் முன்னேற்ற பாதிப்புகள் ஓரளவு அகலும்.

விருச்சிக சுக்ரன்

மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வருவதால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் உங்களை விட்டு விலகலாம். தொழில் வளர்ச்சி கருதி முதலீடுகள் செய்ய, வாங்கிய இடத்தை விற்க நேரிடும். அணிகலன்களை அடமானம் வைக்கும் சூழ்நிலைகூட உண்டு. உத்தியோகத்தில் நீங்கள் தீவிரமாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காது.

தனுசு-செவ்வாய்

மார்கழி 11-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது ஜீவன ஸ்தானம் பலப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தடைகளை முறியடிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். சனியின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால், மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கும். குரு வீட்டில் செவ்வாய் இணைவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

தனுசு-புதன்

மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்குவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட சறுக்கல்கள் அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. நீடித்த நோய் அகல, மாற்று மருத்துவம் கை கொடுக்கும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று விருப்ப ஓய்வில் வெளிவந்தவர்கள், சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் வருவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். கலைஞர்களுக்கு திடீர் திடீரென வாய்ப்புகள் கைகொடுக்கும். மாணவ, மாணவியர் களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்கள் பொறுமையோடும், நிதானத்தோடும் செயல்பட வேண்டிய நேரமிது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 20, 21, 24, 25,

ஜனவரி: 1, 2, 4, 5.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

Similar News