எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி விரய ஸ்தானத்தில் பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். தன ஸ்தானத்தில் ராகு இருக்கின்றார். எனவே லாபமும், விரயமும் சம அளவிலேயே இருக்கும். செலவிற்கு முன்னதாகவே வரவு வந்து சேரும் என்றாலும் அஷ்டமத்தில் கேது இருப்பதால் எந்தக் காரியத்தையும் உடனடியாக முடிக்க இயலாது. போராடியே முடிக்க நேரிடும். எனவே புது முயற்சிகள் செய்யும் போது அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை கேட்டுக்கொள்வது நல்லது.
வக்ர குருவின் ஆதிக்கம்
மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தனலாபாதிபதி என்பதால் தனவரவில் தடைகள் ஏற்படும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வருவதில் தாமதம் ஏற்படும். உறவினர் பகை உருவாகும். உடல்நலத்தில் தாக்கங்கள் ஏற்படும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்-சுக்ரன்
உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெறுகின்றார். எனவே சுகங்களும், சந்தோஷங்களும் குறையும். பணப்பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலர் கடன் வாங்கும் சூழ்நிலை கூட உண்டு. நகைகளை அடகு வைத்தும் பணம் புரட்டிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கார்த்திகை 14-ம் தேதி தனது சொந்த வீடான துலாம் ராசிக்கு சுக்ரன் வரப்போகின்றார். இதன் விளைவாகப் பாக்கியஸ்தானம் வலுவடைகின்றது. எனவே அதன் பிறகு படிப்படியான நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிம்மதியோடு புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
தனுசு-புதன்
உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கார்த்திகை 14-ம் தேதி லாப ஸ்தானத்திற்கு வருகின்றார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். எதிர்பாராத நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தி யோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு அது கிடைக்கலாம்.