- திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர்.
- சாளக் கிராமத்தை தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
நாமக்கல் என்றதும் நினைவுக்கு வருபவர் 18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீர தோற்றத்தில் கனிவுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்.
நாமக்கல்லில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
நாமக்கல் நகரில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கொண்ட நரசிம்ம சுவாமியை இருகரம் கூப்பி தரிசித்தவாறு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து நாமக்கல் கமலாலய குளம் அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள்.
திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர்.
அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார்.
பணி முடிந்ததும் மலையை அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பினார்.
அவ்வாறு வருகையில் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது.
இறைவனின் அம்சமாக இருப்பதை எண்ணி அதனை தம்முடன் எடுத்துக் கொண்டு வான்வழியாக வந்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
அப்போது நாமக்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் தமது கையில் இருந்த சாளக்கிராமக்கல்லை கீழே வைத்து விட்டு சந்தியா வந்தனத்தை செய்து முடித்தார்.
மீண்டும் வந்து சாளக் கிராமத்தை தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை.
ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்து விட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.
ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார்.
ஆஞ்சநேயர் விட்டு போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள் பாலிக்கிறார்.