சினிமா

ஹேராம் உள்பட 4 படங்களில் நடித்தார் வாலி

Published On 2019-02-14 17:40 GMT   |   Update On 2019-02-14 17:40 GMT
ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்'' உள்பட 4 படங்களில் நடித்தார்.
ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்'' உள்பட 4 படங்களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு - பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.

பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

கே.பாலசந்தர் இயக்கிய "பொய்க்கால் குதிரை'', கமலஹாசனின் "ஹேராம்'', "சத்யா'', "பார்த்தாலே பரவசம்'' ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், "கையளவு மனசு'', "அண்ணி'' ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்.

ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், "அவதாரபுருஷன்'' (ராமாயணம்), "பாண்டவர் பூமி'' (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

"நானும் இந்த நூற்றாண்டும்'' என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார்.

1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.

அப்போது "ஒளிவிளக்கு'' படத்தில் வாலி எழுதியிருந்த "இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'' என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.

இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

"எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன்.

"உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை'' என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.

என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், "அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்'' என்று சொன்னேன்.''

இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 10 ஆயிரத்துக்கு மேல். அவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏறத்தாழ 3 ஆயிரம் பாடல்களுக்கும், இளையராஜா சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.

வாலியின் பாடல்களில் பி.சுசீலா பாடியவை சுமார் 1,500. டி.எம்.சவுந்தரராஜன் பாடியவை ஏறத்தாழ 700.

"திரை உலகில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். இதுவரை வெளிவந்துள்ள படங்களில் உங்களுக்குப் பிடித்த 20 படங்களைக் கூறுங்கள்'' என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

"அந்தக் காலத்துப் படங்களில், பாகவதர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது "சிவகவி.'' இதைவிட நீண்ட காலம் ஓடிய படம் "ஹரிதாஸ்'' என்றாலும், சகல அம்சங்களிலும் சிறப்பான படம் "சிவகவி.''

பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் என்னைக் கவர்ந்தது "குபேர குசேலா.''

சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடித்த "கல்யாணராமன்'' படத்தை இன்றைய தலைமுறையினர் பலர் பார்த்திருப்பார்கள். இதே கதை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "இது நிஜமா'' என்ற பெயரில் வெளிவந்தது. எஸ்.பாலசந்தர் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார். நான் மிகவும் ரசித்த படம் அது.

1947-ல் வெளிவந்த "ஏவி.எம்'' தயாரித்த "நாம் இருவர்'', கே.சுப்பிரமணியம் தயாரித்த "தியாகபூமி'', ஜெமினியின் "நந்தனார்'', "அவ்வையார்'' ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை.

என் மனதில் இடம் பெற்ற சிறந்த படங்களின் பட்டியலில் உள்ள மற்ற படங்கள்:-

மந்திரிகுமாரி, மனோகரா, நாடோடி மன்னன், பெற்றால்தான் பிள்ளையா, உலகம் சுற்றும் வாலிபன், தில்லானா மோகனாம்பாள், வியட்னாம் வீடு, அபூர்வ சகோதரர்கள் (கமல்), நாயகன், இருகோடுகள், புவனா ஒரு கேள்விக்குறி, அந்த 7 நாட்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்.''

இவ்வாறு வாலி கூறினார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்றவர் வாலி.

1972-ல் "கலைமாமணி'' விருது பெற்றார்.

"கலை வித்தகர்'' என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது (ரூ.1 லட்சம்) முரசொலி அறக்கட்டளை விருது (ரூ.1 லட்சம்), ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது (ரூ.25,000) முதலான விருதுகள் கிடைத்துள்ளன.

இவர் கதை - வசனம் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே'' படம், மத்திய அரசின் விருது பெற்றது.

வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. "எம்.ஏ'' பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.

தலைசிறந்த பாடல்கள்

தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை திரையில் ஒலித்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனக்குப் பிடித்த 20 பாடல்களை வாலி கூறுகிறார். (தான் எழுதிய பாடல்களை அவர் தவிர்த்துள்ளார்.)

1. வள்ளலைப் பாடும் வாயால்...

(படம்: `சிவகவி' பாடியவர்: பாகவதர் பாடலாசிரியர்: பாபநாசம் சிவன் இசை: ஜி.ராமநாதன்)

2. மானமெல்லாம் போனபின்னே...

(`கண்ணகி' பி.யு.சின்னப்பா உடுமலை நாராயணகவி எஸ்.வி.வெங்கட்ராமன்)

3. காற்றினிலே வரும் கீதம்...

(`மீரா' எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்கி எஸ்.வி.வெங்கட்ராமன்)

4. வெண்ணிலாவே...

(`அவ்வையார்' கே.பி.சுந்தராம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ்)

5. சிந்தையறிந்து வாடி...

(`ஸ்ரீவள்ளி' பி.ஏ.பெரியநாயகி பாபநாசம் சிவன் சுதர்சனம்)

6. இந்த உலகில் இருக்கும் மாந்தரில்...

(`கஞ்சன்' எம்.எம்.மாரியப்பா அய்யா முத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு)

7. வாழ்க்கை என்னும் ஓடம்...

(`பூம்புகார்' கே.பி.சுந்தராம்பாள் கலைஞர் மு.கருணாநிதி சுதர்சனம்)

8. அருள் தரும் தேவமாதாவே...

(`ஞானசவுந்தரி' பி.ஏ.பெரியநாயகி கம்பதாசன் எஸ்.வி.வெங்கட்ராமன்)

9. ஆடல் காணீரோ!...

(`மதுரை வீரன்' எம்.எல்.வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி ஜி.ராமநாதன்)

10. மணப்பாறை மாடு கட்டி...

(`மக்களைப் பெற்ற மகராசி' டி.எம்.சவுந்தரராஜன் மருதகாசி கே.வி.மகாதேவன்)

11. துணிந்தபின் மனமே...

(`தேவதாஸ்' கண்டசாலா கே.டி.சந்தானம் சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன்)

12. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்...

(`நான் பெற்ற செல்வம்' டி.எம்.சவுந்தரராஜன் கா.மு.ஷெரீப் ஜி.ராமநாதன்)

13. மயக்கமா, கலக்கமா?...

(`சுமைதாங்கி' பி.பி.சீனிவாஸ் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)

14. சோதனை மேல் சோதனை...

(`தங்கப்பதக்கம்' டி.எம்.சவுந்தரராஜன் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)

15. நான் ஒரு சிந்து...

(`சிந்துபைரவி' சித்ராறீ வைரமுத்து இளையராஜா)

16. வசந்த கால கோலங்கள்...

(`தீபம்' எஸ்.ஜானகி கண்ணதாசன் இளையராஜா)

17. சின்னச்சின்ன ஆசை...

(`ரோஜா' மின்மினி வைரமுத்து ஏ.ஆர்.ரகுமான்)

18. ஆயிரம் நிலவே வா...

(`அடிமைப்பெண்' எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா புலமைப்பித்தன் கே.வி.மகாதேவன்)

19. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...

(`கந்தன் கருணை' சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன்)

20. அன்புக்கு நான் அடிமை...

Tags:    

Similar News