search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cinima history"

    சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.
    சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.

    இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை. அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "என் இளமைக்கால தோழர்கள் என்றால் அதில் முதல் இடம் கரியணம்பட்டி சுப்பிரமணியத்துக்குத்தான். பலரும் இருந்தார்கள் என்றாலும் மிகவும் உயர்ந்த நட்பு இவருடன்தான் இருந்தது. ஜெயகரன், ரங்கசாமி, மகேஸ்வரன் என்பவர்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு.

    சுப்பிரமணியுடன் ஆறு, ஏழு, எட்டு என ஒன்றாகப் படித்த பின்னே, அவர் பெரியகுளம் ஆஸ்டலில் தங்கிப் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர், அப்போதிருந்த "பி.ï.சி'' முடித்து ஊருக்கு வந்த நேரத்தில்தான் எங்கள் நட்பு வலுத்தது.

    இந்த நேரத்தில்தான் இந்திய அரசு "என்.எம்.இ.பி'' என்றொரு அமைப்பை தொடங்கியிருந்தது. இது மலேரியா காய்ச்சல் வரும் முன் காக்கும் அமைப்பு.

    கிராமங்களுக்குப்போய் வீடு வீடாக இருப்பவர்களிடம் ரத்தம் எடுப்பார்கள். அதை பரிசோதனைக்கு வத்தலக்குண்டுக்கு அனுப்புவார்கள். இந்த சோதனையில் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்கள்.

    இந்த வேலையை பார்ப்பதற்காக எங்கள் ஊர் பண்ணைபுரத்தை சென்டராக்கி 7 கிராமங்களுக்கு மூன்று பேர் இருந்தார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக இன்ஸ்பெக்டராக ஒரு ஆள் வந்தார்.

    ஒருநாள் தற்செயலாக நானும், அண்ணன் பாஸ்கரும் பண்ணைபுரம் அத்தி மர பஸ் ஸ்டாண்ட் பக்கமாய் போய்க்கொண்டிருந்தோம். பஸ்சில் இருந்து பேண்ட் - ஷர்ட்டுடன் இறங்கிய ஒருவர், எங்களைக் கடந்து ஊருக்குள் போனார்.

    "அது யார்றா பேண்ட் - ஷர்ட் போட்டுக்கிட்டு நம்ம ஊருக்கு வர்றது?'' என்று எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம். உடனே விடை கிடைக்கவில்லை. மதிய உணவு முடிந்து சாயங்காலம் காபி சாப்பிட கடைத் தெருவுக்குப் போனால் அங்கே பாஸ்கரும், காலையில் பார்த்த பேண்ட் - ஷர்ட் ஆளும் உட்கார்ந்திருந்தார்கள்.

    என்னைப் பார்த்ததும் பாஸ்கர் "இவர்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிற என்.எம்.இ.பி. இன்ஸ்பெக்டர். பெயர் சின்னசாமி'' என்று அந்த புதியவரை அறிமுகப்படுத்தினார். நானும் உடனே கைகொடுத்து `ஹலோ சார்' என்று அறிமுகமாகிக் கொண்டேன்.

    காபி குடித்து முடித்ததும் அப்படியே பேசிக்கொண்டே நடந்தபோது ஒரு மாதிரியான ரசனை உள்ளவராகத் தெரிந்தது.

    மறுநாள் காலையில் கிணற்றடியில் குளிக்கப்போனோம். முதல் நாள் அவரை `சார்... சார்...' என்று அழைத்த பாஸ்கர், `ஏய், என்னப்பா' என்று மாற்றி, அதையும் தாண்டி `அடப்போய்யா' என்ற லெவலுக்கு நெருக்கமாகி விட்டார்.

    நான் சிறுவன். நானும் பாஸ்கரும் அண்ணன் - தம்பி என்றாலும் நண்பர்கள் போலத்தான் பழகுவோம். இப்போது பிரச்சினை என்னவென்றால் சின்னச்சாமியுடன் பாஸ்கர் நெருக்கம் காட்டியதில் என்னை வெட்டி விட்டார். அவர்கள் போகிற இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லமாட்டார்கள். மீறி அவர்களுடன் போக முயன்றால் "டேய், நீ சின்னப்பையன்! எங்களோடு வராதே!'' என்பார்கள்.

    இந்த சின்னச்சாமி வேறு யாருமல்ல. பின்னாளில் சினிமா டைரக்டராக மாறி, `மண்வாசனை'யுடன் ரசிகர்கள் மனதில் குடிகொண்டுவிட்ட பாரதிராஜாதான்.

    பண்ணைபுரத்திலேயே பாரதி ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார். இன்ஸ்பெக்ஷனுக்கு போய்வரவேண்டும் என்று அவ்வப்போது புறப்பட்டுப்போவார்.

    "என்னய்யா, பெரிய இன்ஸ்பெக்ஷன்? அப்புறம் போகலாம்'' என்பார், பாஸ்கர்,

    "டூட்டியில் கரெக்டா இருக்கணும்'' என்பார், பாரதி. "நீயே இன்ஸ்பெக்டர்தானே. எப்ப வேணும்னாலும் போகலாமில்லே?'' - இது

    பாஸ்கர்."மேல இருந்து யாராவது வந்து நான் மாட்டிக்கக் கூடாதில்லே?'' - இது பாரதி.

    பாரதி அங்கே இங்கே இன்ஸ்பெக்ஷனுக்காக சுற்றுகிற நேரம்தவிர, மற்ற நேரங்களில் எங்களோடுதான் இருப்பார். எங்களோடுதான் சுற்றுவார். நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்.

    சீட்டாடுவது; சினிமாவுக்குப் போவது; பிடித்த நடிகர்கள் பற்றி பேசுவது; எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி அலசுவது; புளியந்தோப்பில் காக்கா குஞ்சு விளையாடுவது; கிணற்றில் நீச்சலில் தலைகீழாகத் தாவுவது; கிணற்றுக்குள்ளேயே ஒளிந்து பிடித்து விளையாடுவது என இப்படி நாங்கள் சுதந்திரப் பறவைகளாகத் திரிந்தோம்.

    ஆனாலும் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை என்னை ஒதுக்கிவிடுவார்கள். `நீ சின்னப்பையன். எங்களுடன் வரக்கூடாது' என்று "தடா'' போடுவார்கள். நானும் ஒதுங்கி விடுவேன்.

    `ஏன் இப்படி?' கேட்பீர்கள். அந்த நேரம் ஸ்கூல் முடிந்து மாணவிகள் வீடு வரும் நேரம்! இதுதான் காரணம்.

    இப்படி `தடா' போட்டவர்கள் நாளடைவில் நான் வளர்ந்ததாக கருதினார்களோ என்னவோ, என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்.

    பாரதி நன்றாக ஓவியம் வரைவார். நானும் கொஞ்சம் வரைவேன். எல்லாம் பென்சில் டிராயிங்தான். சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஓவியம் வரைவதில் போட்டி வந்துவிடும். யார் வரைவது நன்றாக இருக்கும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. இரண்டுமே நன்றாக

    இருக்கும்.ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், பாரதி என்னைவிட நன்றாக ஓவியம் வரைவார் என்பது.

    இப்படி எங்களுடன் தெருவில் ஆரம்பித்த நட்பு வீடு வரை வந்துவிட்டது. வீட்டுக்கும் வந்து, `ஜோக்' அடித்து கலகலப்பு ஏற்படுத்திவிட்டுப் போவார்.

    ஆனால் இப்படி நெருக்கம் காட்டி பழகிய பாரதி என்னைவிட எங்களிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்தது. அதற்கு பாஸ்கர்தான் காரணம்.

    பாஸ்கர் ஒருமுறை கோம்பை டூரிங் தியேட்டரில் படம் பார்க்க பாரதியை அழைத்துப்போனார். டிக்கெட் வாங்காமல் நண்பர்கள் மூலம் பெஞ்ச் டிக்கெட்டில் ஓசியில் படம் பார்க்க ஏற்பாடு செய்தார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, போதாத நேரம் செக்கிங் அதிகாரி வந்துவிட, பாரதிக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு வழியாக செக்கிங் பார்வைக்கு போகாமல் தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர், பாஸ்கரை கோபத்தில் திட்டித் தீர்த்துவிட்டார்.

    அடுத்த நாள் காலையில் கடை வீதியில் டிபன் சாப்பிடப் போனால் அங்கிருந்தார். ஆனால் எங்களைப் பார்த்த பிறகும் பேசாமல் இருந்தார். "சரி; கோபம் போலிருக்கிறது'' என்றெண்ணி சாப்பிடும் நேரத்தில் மெள்ள பேச்சுக் கொடுத்தோம்.

    அப்போதுகூட தீராத கோபத்துடன்தான் பாஸ்கரை பார்த்தபடி, "டேய் இவன் இருக்கானே...'' என்று ஆரம்பித்தார்.

    ஆனால் அந்தக் கோபம் நிற்கவில்லை. பாஸ்கர் முகத்தைப் பார்த்ததும் புரையேறும் அளவுக்கு சிரிக்கத் தொடங்கி விட்டார். கூடவே நாங்களும் சேர்ந்து கொள்ள, நிறுத்த முடியாத சிரிப்பாகி விட்டது.

    சிரிப்பு ஓய்ந்த நேரத்தில் பாஸ்கரிடம், "எப்படிய்யா உனக்கு இந்த மாதிரி ஒரு தைரியம் வந்தது?'' என்று கேட்டார்.

    பாஸ்கர் அவரிடம், "இன்ஸ்பெக்டர் அய்யாவாச்சே! நல்ல படம் ஓடுது. அதைப் பார்க்கட்டுமேன்னு `ஓசி'யில ஏற்பாடு செய்தேன். ஆனா உன்னோட நேரம் சரியில்லை'' என்றார்.

    பாரதியும் விடவில்லை. "ஏண்டா கூட்டிட்டுப்போனது நீ! ஆனால் என் நேரம் சரியில்லையா?'' என்று மடக்கினார்.

    பாஸ்கரும் விடுவதாக இல்லை.

    "இத்தனை நாள் நாங்க போயிருக்கோம். யாராவது செக்கிங் வந்தார்களா? அதென்ன நீ வந்தப்போ மட்டும் செக்கிங்? அப்ப உன் நேரம் சரியில்லையா? என் நேரம் சரியில்லையா?''

    பாஸ்கர் விடாப்பிடியாகக் கேட்க, பாரதி  அதற்கு சிரிக்க, கோபம் காணாமல் போயிருந்தது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எங்கள் நட்பு மேலும் வலுப்பட்டது.

    அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.
    அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சேர்ந்து கச்சேரி நடத்தியபோது, இளையராஜா சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

    குரு என்று தனியாக யாரும் இல்லாமலே, ஆர்மோனியத்தை கற்றுக்கொள்ளத் தொடங்கினார்,  இளையராஜா. கொஞ்சம் பழகிய நிலையில் கச்சேரியில் அவர் வாசிப்புக்கு கிடைத்த கைத்தட்டல், இதை முழுமையாக கற்றே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு அவரை உந்தித் தள்ளியது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "கச்சேரியில் கிடைத்த கரகோஷம் எனக்குள் புது உத்வேகம் ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் நான் ஆர்மோனியம் வாசிக்கப் பழகும் நேரம் அதிகமானது.

    இதில் கூட இன்னொரு வித சிக்கல் இருந்தது. வாசித்து வாசித்துப் பழகி வந்தாலும் ராகங்களின் பெயர்கள் தெரிந்தாலும், ஸப்த ஸ்வரத்தில் எது `ஸ, ரி, க' என்று தெரியாது. எந்த ஸ்ருதியில் வாசிக்கிறோமோ அதுதான் `ஸ' என்று எண்ணிக் கொள்வேன். தெள்ளத் தெளிவாக தெரியாது. ஆனால் ஒரு முறைக்கு இரு முறை ஒரு பாடலைக் கேட்டால் போதும். முழுவதையும் வாசித்து விடுவேன்.

    பிராக்டீசில் அதிக கவனம் இருந்ததால் சாதாரணமாகவே என் கைவிரல்கள் ஏதாவது பாடலுக்குத்தக்கபடி அசைந்து கொண்டிருக்கும். இது நாளடைவில் அதிகமாகி, ஒரு கட்டத்தில் நெஞ்சை ஆர்மோனியக் கட்டைகளாக நினைத்து, விரல்கள் அதில் மேலும் கீழும் போய்வரும் அளவுக்கு ஐக்கியமாகிவிட்டேன்.

    தூங்கும்போதும் இது தொடர, ஒரு நாள் அம்மா கவனித்திருக்கிறார். காலையில் விடிந்ததும் விடியாததுமாக என்னிடம் வந்தவர், "ஏம்ப்பா! நேத்து தூங்கும்போது உன் நெஞ்சு மேலே விரலு மேலும் கீழுமா போச்சுதே! ஏதாவது ஆர்மோனியம் வாசிக்கிற மாதிரி கனவு கண்டியா?'' என்று கேட்டார்.

    அம்மாவை சமாளித்து அனுப்பினேன். தூக்கத்திலும் என் பிராக்டீஸ் தொடர்ந்திருக்கிறது என்பது புரிந்தது.

    நாங்கள் ஒரு குழுவாக ஆரம்பித்து, எங்கள் காலடி படாத சிற்றூரே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்கு, எல்லா இடங்களிலும் அண்ணனோடு எங்கள் இசை ஒலித்திருக்கிறது. அப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் எண்ணப் பிரதிபலிப்பை கண்ட பிறகுதான், எந்த மாதிரியான இசை விருப்பம் அவர்களுடையது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. சினிமாவுக்கு வந்த பிறகு இசையால் மக்களைக் கவர, எது எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் ஒரு பிடிமானம் கிடைத்தது.

    எனக்கு கிடைத்த, அதாவது தானாக அமைந்த இந்த அனுபவங்கள், உலகின் எந்தவொரு இசைக் கலைஞனுக்கும் இதுவரை கிடைத்திராது. இனிமேல் எவருக்கும் கிடைக்காது என்று கூட சொல்வேன்.

    கச்சேரியில் படிப்படியாக பக்குவப்பட்டேன். வழக்கமாக கச்சேரியில் அண்ணன் பாடும் ஒரு குறிப்பிட்ட ஸ்ருதியில்தான் நன்றாக பிராக்டீஸ் செய்து வைத்திருப்பேன். அதை வேறு ஏதாவது ஸ்ருதியில் வாசிக்கச் சொன்னால் தப்பும் தவறுமாகத்தான் வரும். ஆர்மோனியத்திலோ, பியானாவிலோ ஒரு ஸ்ருதிக்கு வந்த `விரல்வித்தை' இன்னொரு ஸ்ருதிக்கு வராது.

    ஆனால் எல்லா ஸ்ருதியிலும் என்னைப் பழக்க, இசையே எனக்கொரு பரீட்சை வைத்தது.

    எங்கள் கச்சேரி முதல் நாள் நாகர்கோவிலில் இருக்கும். மறுநாள் ஊட்டியில் இருக்கும். நாகர்கோவிலில் இரவு 10 மணிக்கு கச்சேரி முடிந்தால் அதற்கு மேல் ஊட்டி பஸ் இருக்காது. எப்படியோ அடித்துப் பிடித்து காலை 5 மணி பஸ்சைப் பிடித்து, திண்டுக்கல், அங்கிருந்து கோவை, அங்கிருந்து ஊட்டி என்று விழுந்தடித்து மாலை ஆறுமணிக்குள்ளாக போய்ச் சேர்ந்து விடுவோம்.

    பயணத்தின்போது அண்ணனால் சரிவரத் தூங்க முடியாமல் சமயத்தில் குரல் சரியில்லாமல் போகும். இப்படி குரல் சரியில்லாத நாட்களில் `ஒரு அரைக்கட்டை கம்மி பண்ணு' என்று ஸ்ருதியை குறைக்கச் சொல்வார்.

    அவருக்கு பிரச்சினை இல்லை. தபேலா வாசிக்கும் பாஸ்கருக்கும் பிரச்சினை இல்லை. எந்த ஸ்ருதி என்றாலும், கட்டையை தட்டி சேர்த்து விட்டால், தபேலாவில் விரல் அசைவு மாறப்போவதில்லை. நான்தான் மாட்டிக்கொள்வேன். தப்பும் தவறுமாக அந்த கச்சேரியை எப்படியாவது சமாளித்து விட்டு, அடுத்த நாள் பகல் முழுவதும் அந்த மாறிய `ஸ்ருதி'யில் பிராக்டீஸ் செய்வேன். ஓரளவு தயார் ஆகிவிடுவேன்.

    இப்படியே கொஞ்ச நாள் ஓடும். பிறகு இன்னும் அரைக் கட்டை குறையும். அதிலும் இதே கதைதான்.

    இதற்குள் புதிய பாடல்கள் ஏதாவது எழுதிச் சேர்த்தால், குறைந்த ஸ்ருதியிலேயே பிராக்டீஸ் செய்து கரெக்டாக ரெடியாகி இருப்பேன். அன்றைக்கென்று பார்த்து அண்ணன் "ஸ்ருதியை, பழைய ஸ்ருதிக்கு ஏற்றி வை'' என்பார்.

    வம்புதான். மறுபடி அவசர கதியில் பதட்டமும் பரபரப்புமாய் `மாற்றல்' வேலையை தொடர்வேன்.

    இன்றைக்கு என்னுடைய பல பாடல்களில் உருகி, கண்ணீர் விட்டு, துன்பமடைந்து, ஆறுதலடையும் ரசிகர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். ஆனால் இந்த இசையால், ஸ்ருதியால், வாசிக்க இயலாமையால் நான் எவ்வளவு துன்பப்பட்டு, தூக்கம் கெட்டு நொந்திருந்தேன் என்பது உங்களில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    பெரும்பாலும் எங்கள் கச்சேரியில் சினிமா டிïன்களில்தான் அண்ணன் பாடல் எழுதிப்பாடுவார். இடையிடையே அவர் இசையமைத்த பாடல்களும் இடம் பெறும்.

    என் வாழ்வில் அதிகப் படிப்பினைகள் தொடங்கிய நேரம் இதுதான் என்பேன்.

    அண்ணனின் இசை நிகழ்ச்சிகளை மதுரை மாவட்ட கம்ïனிஸ்டு கட்சி அலுவலகம்தான் முடிவு செய்யும். கிரி என்பவர் அதை உறுதி செய்வார். அதன் பிறகே கச்சேரி நடக்கும். இதனால் கச்சேரி நடத்துவதில் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது. ஒரு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் ஆறேழு இடங்களில் கச்சேரி நடந்தால், அடுத்த வாரம் இன்னொரு மாவட்டம்.

    தொடர்ந்து இப்படி இரண்டு மாவட்டங்களில் 15 நாட்கள் கச்சேரி செய்து விட்டு, அடுத்த கச்சேரிக்கான இடைவெளி நேரத்தில் எங்கள் ஊருக்கு (பண்ணைபுரம்) வந்து போவோம்.

    அந்த நேரத்தில் அண்ணன் தன்னிடம் இருக்கும் பணத்தை அம்மாவிடம் கொடுப்பார். அம்மா அதை வீட்டுச் செலவுக்கு வைத்துக்

    கொள்வார்கள்.அண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் சில நேரங்களில் அம்மாவிடம் பணம் கொடுக்க மறந்தோ அல்லது முடியாமலோ போனால் அம்மா வருந்துவார். ஒரு கட்டத்தில் இந்த வருத்தம், கோபத்தில் கொண்டு விட்டது. அண்ணன் பணம் கொடுக்காத ஒரு நாளில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் வாக்குவாதம் வலுத்து, மனத்தாங்கலில் முடிந்த நேரத்தில், "இனி உன் பணத்தை என்னிடம் தரவேண்டாம். கச்சேரிக்காக நீ வாங்கும் பணத்தில் பாஸ்கருக்கும், ராஜையாவுக்கும் உள்ள பங்கை மட்டும் கொடுத்தால் போதும்'' என்று சொல்லி விட்டார்

    அம்மா.அண்ணனுக்கும் அது நியாயமாகப் பட்டதால், அடுத்த கச்சேரியில் இருந்து அது அமுலுக்கு வந்தது. பாஸ்கருக்கும் எனக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு என்று ஒதுக்கப்பட்டது. அது பாஸ்கர் கையில் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஊர் வரும்போது அதை அம்மாவிடம் பாஸ்கர் கொடுத்துவிடுவான்.

    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.
    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.

    பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்) கச்சேரியில் டூயட் பாட அழைத்துக்கொண்டு போனார், அண்ணன்.

    "படிப்பும் போச்சு; பாட்டும் போச்சு! இதென்ன பெரிய பாடாய்ப் போச்சுதே!'' என்ற வேதனையுடன் பண்ணைபுரம் கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.

    என்னுடன் படித்த நண்பர்கள் மதுரையில் கல்லூரிகளில் சேர்ந்து படித்து லீவு நாட்களில் ஊர் வருவார்கள். ஊரில் இருக்கும் நான், அவர்களை சந்திக்க நேரும்போது படிப்பின் இழப்பைப்பற்றி நினைத்து, மனம் துன்பப்படும்.

    அதே நேரம் அதிகமாக ஊர் சுற்றியதால் கிடைத்த அனுபவத்தில், அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு, அவர்கள் பொறாமைப் படுவதைக் காணப் பெருமையாகவும் இருக்கும்!

    எப்படியோ! எப்போதும் நான் தனிதான் என்று இறைவன் எழுதி வைத்து விட்டதால், அதை என்னால் எப்படி மாற்ற முடியும்?

    இந்தத் தனிமையைப் போக்க, "கல்கி''யின் சரித்திர நாவல்கள் எனக்கு உதவின. பள்ளியில் படிக்கும்போது ஏற்கனவே இந்த நாவல்களை படித்திருந்தாலும், என்றைக்குப் படித்தாலும் அன்றைக்குத்தான் எழுதியதைப் போலிருக்கும்.

    இதற்கிடையே கோவையில் கச்சேரிக்கு சென்று வந்த அண்ணன் ஆர்மோனியம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதன் விலை 85 ரூபாய் என்றார். அதை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். யாரும் தொடக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.

    இது தெரிந்தும், அவர் வீட்டில் இல்லாத ஒரு நாள் நான் அந்த ஆர்மோனியத்தை எடுத்து சும்மா வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் அந்த நேரத்தில் அண்ணன் வந்துவிட்டார். நான் ஆர்மோனியமும் கையுமாக இருந்ததை பார்த்தவருக்கு, கோபம் வந்துவிட்டது. புறங்கையை நீட்டச்சொல்லி, பிரம்பால் விளாசிவிட்டார்.''

    - இவ்வாறாக இளமைப் பருவத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார், இளையராஜா.

    இளையராஜா இப்படி பிரம்படி வாங்கியிருக்கிறாரே என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே அண்ணனிடம் அடிவாங்கிய அனுபவமும் இருக்கிறது. அதை அவரே கூறுகிறார்:

    "சிறு வயதில் கிணற்றில் நீச்சலடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாதுகாப்புக்கு ஆளில்லாமல் சிறுவர்களாக சேர்ந்து குளித்ததை தெரிந்து கொண்டவர், என்னை வீட்டுத்தூணில் கட்டிப்போட்டார். மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வந்ததற்காக, அம்மாவே என்னையும் பாஸ்கரையும் தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல் கண்ணில் மிளகாயை அரைத்து வைத்தார்கள். அப்புறம் தண்டனையைக் குறைக்க வெங்காயத்தை அரைத்து வைப்பது வழக்கமாயிற்று.

    குறைந்தது மூன்று மணி நேரமாவது இப்படி தூணில் கட்டிப் போட்டிருப்பார்கள். பின்பு பரிதாபப்பட்டு அவிழ்த்து விடுவார்கள்.

    இப்படி தண்டனை வாங்குகிற அன்று இரவு சாப்பாட்டின்போது, கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் போட்டிருக்கிறார்கள். அதுதான் சமயம் என்று நானும் பாஸ்கரும் "இந்த வீட்டைப்போல் எந்த வீடும் இருக்க முடியாது'' என்று ஆரம்பிப்போம்.

    "ஏண்டா அப்படிச் சொல்றீங்க?'' என்று அம்மா திருப்பிக் கேட்பார்.

    "குளிக்கிறதுக்குப் போய் எந்த வீட்டிலாவது அடிப்பாங்களா?'' என்று தொடங்கி "இனிமே தீபாவளி தீபாவளிக்குத்தான் `கங்கா ஸ்நானம்' பண்ணணுமாக்கும்?'' என்று சொல்லும்போதே சிரிப்பு வந்து சிரித்து விடுவோம்.

    ஆர்மோனியத்துக்காகவும் அடி வாங்க நேர்ந்ததால், அதன் பிறகு அண்ணன் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆர்மோனியத்தை தொடுவதில்லை. அவர் இல்லாதபோது எடுத்து வாசிப்பது, வருவது தெரிந்தால் எடுத்து மூடி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.

    அம்மா, அண்ணனை கண்டிக்கவும் மாட்டார்கள்; நான் வாசிப்பதை தடுக்கவும் மாட்டார்கள். இதனால் அம்மாவின் மானசீக அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், சீக்கிரமே ஓரளவுக்கு ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டு விட்டேன்.

    ஆர்மோனியம் வீட்டுக்கு வந்த புதிதில், அண்ணனுடன் கச்சேரிக்கு வரும் சங்கரதாசிடம், எனக்கு ஆர்மோனியம் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறேன். அவரும் `சரி' என்றார். ஆனால் வாய்ப்பு அமையாததால் அவரிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிற்று. ஆனாலும் அவர் வாசிக்கிற பாணியை மனதில் கொண்டு வந்து `இப்படி வாசிப்பாரா? இல்லை, இப்படி வாசிப்பாரா?' என்று வாசித்து வாசித்து, ஓரளவுக்கு என்னால் வாசிக்க முடியும் என்ற தெளிவுடன், அதே நேரம் திருப்தியில்லாமலும் இருந்தேன்.

    இந்த நிலையில்தான் அண்ணனுக்கும், சங்கரதாசுக்கும் ஏதோ மனஸ்தாபம். கம்பத்தில் நடக்கவிருந்த ஒரு கச்சேரிக்கு, முந்தின நாள் தன்னால் வர இயலாது என்று சொல்லியனுப்பி விட்டார், சங்கரதாஸ்.

    அணணன் தவித்துப் போனார். ஒருநாள் இடைவெளியில் வேறு ஒருவரை பார்க்க வேண்டும். அதற்கு மதுரைக்குத்தான் போகவேண்டும். அப்படியே ஆள் கிடைத்தாலும் ஒத்திகை பார்க்க நேரம் வேண்டும்.

    இப்போதும் அம்மாதான் கைகொடுத்தார். அம்மா அண்ணனிடம், "தம்பி ராஜையாவை கூட்டிட்டுப் போகலாமே'' என்றார்.

    அம்மா இப்படிச் சொன்னதும், அண்ணன் ஒருமுறை என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிராக்டீஸ் செய்து வைத்திருப்பதை அவராகத் தெரிந்து கொண்டாரோ அல்லது எனக்குத் தெரியாமல் அம்மாதான் சொல்லியிருந்தாரோ, "சரி, வா!'' என்றார்.

    என் இசை வாழ்வுக்கு போடப்படும் முதல் அஸ்திவாரக்கல் அது என்று தெரியாமல், ஆர்மோனியத்துடன் அண்ணன் கச்சேரிக்கு புறப்பட்டேன்.

    கம்பத்தில் மெயின் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் (இளையராஜா) அரை டிராயருடன் ஆர்மோனியம்வாசிக்க, பாஸ்கர் தபேலா வாசிக்க, அண்ணன் பாட கச்சேரி தொடங்கியது. என் கைகள் நடுக்கத்துடன் ஆர்மோனியம் வாசிக்க, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் வாசிப்புக்கும் கைதட்டல் கிடைக்குமென்று!

    தப்பும் தவறுமாய் வாசித்ததற்கே இவ்வளவு கைதட்டல் கிடைக்கிறதே, இன்னும் சரியாக வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று

    எண்ணினேன்.இதன் பிறகு, வீட்டில் ஆர்மோனியத்தை நான் தொட்டால், அண்ணன் அடிப்பதில்லை.

    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.

    கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.

    "இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.

    அவர் கூறுகிறார்:-

    "கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.

    அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.

    இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.

    ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.

    அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

    திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

    மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.

    அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.

    மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.

    அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.

    அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.

    இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.

    இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.

    டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.

    சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.

    இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.

    1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்

    பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்

    ஒனப்பத் தட்டும் தாரேன்

    ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்

    மாட்டப் பாத்து குத்து''

     - இது அண்ணன்.

    "ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க

    ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க

    ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள

    ஒழிச்சிக் கட்டப் போறோம்''

    - இது நான்.

    இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?

    இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி

    இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?

    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.
    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.

    தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:

    "சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா

    வெட்கங்கெட்ட காளை ரெண்டு

    முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது

    மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''

    என்று பாடினார்.

    பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.

    இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.

    `இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!

    நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,

    அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.

    அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.

    எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை அமைத்தது.

    மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.

    கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.

    அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

    அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.

    அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:

    "பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.

    அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.

    பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?

    ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.

    அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.

    "அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.

    அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.

    பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.

    அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.

    மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.

    என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.

    அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.

    இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.

    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

    ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.

    அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.

    அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.

    என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.

    "ஹு ஆர் ï? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.

    "ராஜையா'' என்றேன்.

    "கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    "எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.

    "எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

    அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.

    "சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.

    அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா.  போ! போ!'' என்றார்.

    அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.

    ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்

    இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.

    ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.

    என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''

    இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:

    "அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.

    ஊரை விட்டு மக்கள் வெளியேற்றம்

    அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.

    அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.

    அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''

    - இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.

    "இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.

    ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.

    இதுபற்றி அவரே கூறுகிறார்:

    "1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.

    இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்ïனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நìலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்ïனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.

    ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.

    கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்ïனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.

    இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.

    இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.

    தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.

    உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.

    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.


    ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.

    அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.

    அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.

    என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.

    "ஹு ஆர் ? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.

    "ராஜையா'' என்றேன்.

    "கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    "எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.

    "எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

    அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.

    "சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.

    அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா.  போ! போ!'' என்றார்.

    அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.

    ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்

    இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.

    ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.

    என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''

    இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:

    "அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.

    அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.

    அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.

    அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''

    - இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.

    "இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.

    ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.

    இதுபற்றி அவரே கூறுகிறார்:

    "1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்யுனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.

    இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்யுனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நிலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்யுனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.

    ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.

    கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்யுனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.

    இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.

    இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.

    தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.

    உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது. #tamilnews
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!

    எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என்று ஊரின் பிரபல ஜோதிடர்கள் சொன்னதும், நொந்து போனார் இளையராஜா. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஜோதிடர்களிடம் `வார்த்தைப்போர்' செய்தார்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    நான் எட்டாவதை தாண்டமாட்டேன் என்று என் ஜாதகத்தை கணித்து ஜோதிடர்கள் சொன்னதும், அவர்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் "சரியாக பாருங்கள். என் ஜாதகத்தில் அப்படியா இருக்கிறது?'' என்று தாஜா செய்து கேட்டேன்.

    ஆனால் ஜோதிடர்களோ என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், "உனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பே இல்லை'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். "உங்களுக்கு சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளைத் தெரியுமா? அவர் சேரன் செங்குட்டுவனுக்கு இளையவர். `மூத்தவன் இருக்க இளையவனுக்குத்தான் பட்டம் சூட்டப்படும்' என்று ஜோதிடம் சொன்னவர்களிடம் "உங்கள் ஜோதிடத்தை இப்போதே பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்றவர், அந்த நிமிடத்திலேயே துறவி ஆகிவிட்டார். அவர் துறவி ஆனதால், சேரன் செங்குட்டுவனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல் உங்கள் ஜோதிடத்தை நானும் பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிற தொனியில் பேசினேன்.

    எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக ஒரு சின்ன சோதனை. பரீட்சையை உத்தமபாளையத்தில் எழுதவேண்டும் என்றார்கள். அங்கே ஒரு ஆஸ்டலில் தங்கி மூன்று நாட்கள் பரீட்சை எழுதவேண்டும். உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டியிருந்தது. பணம் கட்ட வேண்டிய கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை.

    இந்த இக்கட்டான நேரத்தில், அக்கா கமலம்தான் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார்; அதுவும் அத்தானுக்கு (அக்காவின் கணவர்) தெரியாமல்.

    அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.

    இப்போது நினைத்தால் அக்காவின் அன்பும், உயர்ந்த பண்பும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. உயர்ந்த பண்புகள் கல்வியால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அக்காவின் அன்றைய தியாகத்துக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்? எதைக் கொடுத்தாலும் ஈடாக முடியாத அந்த அன்பை வெறும் வார்த்தைகளில் விவரித்து விடமுடியாதுதான்.''

    - இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்த இளையராஜாவுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது.

    அதுபற்றி அவரே கூறுகிறார்:

    "ஒன்பதாம் வகுப்பில் சேர, தேவாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு போனேன். பள்ளியில் சேரவேண்டுமானால் `ஸ்பெஷல் பீஸ்' 25 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும்

    நடக்கவில்லை.பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. இரண்டு மாதமானது. பணம் புரட்ட முடியாத அம்மாவின் முகம் எனக்குள்ளும் கவலை ஏற்படுத்தியது. இதே நிலை மூன்றாவது மாதமும் நீடித்தபோது, "சரி! இந்த வருடம் நாம் ஸ்கூலுக்குப் போக, அந்த ஸ்கூல் விரும்பவில்லை போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்தபோதே, ஜோதிடர்கள் சொன்னதும் நினைவுக்கு வர, "இனி அந்த ஜோதிடர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?'' என்றும் வருத்தப்படத் தொடங்கினேன்.

    இந்த நேரத்தில் அத்தானும் அக்காளும் வைகை அணையில் இருந்தார்கள். மிலிட்டரியில் இருந்த அத்தான் அங்கிருந்து வந்து வைகை அணைப் பகுதியில் டிரைவராக இருந்தார்.

    அக்கா நினைப்பு வந்ததும் ஐடியா வந்து விட்டது. வைகை அணையில் மட்டும் எனக்கொரு வேலை கிடைத்தால் ஒரு வருடம் வேலை பார்த்து, ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அடுத்த வருடமாவது படிப்பைத் தொடரலாம் என்று நினைத்தேன்.

    அம்மாவிடம் ஓடிவந்தேன். விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி, "நான் வைகை அணை போய் அத்தானைப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டேன்.

    அம்மாவுக்கும் என் ஆர்வம் புரிந்தது. படிக்க ஆசைப்படும் பிள்ளையை அதற்கொரு புதிய வழி கிடைக்கும்போது எந்தத் தாய்தான் தடுப்பார்? "போய்வா மகனே'' என்றார், அம்மா.

    என் வாழ்வைத்தேடி முதல் பயணம். வைகை அணை எப்படி இருக்குமோ என்ற கற்பனையுடன் புறப்பட்டேன். அத்தான் மூலமாக வேலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை.

    வைகை அணையின் கரையிலும், கீழே பூங்காவிற்கு மேலுள்ள புல்வெளிகளிலும் தண்ணீர்க் குழாயை பிடித்தபடி தண்ணீர் ஊற்ற வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ரூபாய் சம்பளம்! வாரா வாரம் சம்பளமாக ஏழு ரூபாய் கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.

    அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம். தண்ணீர் பாய்ச்சும்போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.

    பொதுவாகவே சத்தம் போட்டுப் பாடுவது எனக்கும் பாஸ்கருக்கும் பழக்கம். அக்கம் பக்கம் போவோர், வருவோர் என்னை வேடிக்கை பார்த்தார்கள். நானோ விடாப்பிடியாக பாடியபடியே வேலையைத் தொடர்ந்தேன்.

    ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆபீசுக்குப் போய் சம்பளம் வாங்கினேன்.

    ஏழு புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள். மணக்க, மணக்க! அடேயப்பா, வான மண்டலத்தில் சஞ்சரித்தேன். பறந்தேன் என்று கூட சொல்லலாம்.

    ஏழு ரூபாய் கையில் கிடைத்த அந்த நொடியில் ஏற்பட்ட ஆனந்தத்தை இன்றுவரை வேறு எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை.

    இப்படி 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் ஸ்கூலில் சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.

    ஆனால் 4 மாத பாடம் நடந்திருக்குமே, என்ன செய்வது?

    சரி! ஒரேயடியாக அடுத்த வருடம் படிப்பை தொடரலாம். எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன்.

    இப்படிச் சொன்ன இளையராஜா, ஒருநாள் தண்ணீர் பாய்ச்சும் நேரத்தில் பாடிக்கொண்டே பணியைத் தொடர அப்போது அந்த வழியாக வந்த வைகை அணையின் சீப் என்ஜினீயர் காதுக்கும் அந்தப் பாட்டு எட்டியது.

    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில்  25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.

    வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது.அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய

    25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்ïனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.

    இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.

    நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல்

    நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

    ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.

    இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?

    அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.

    அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-

    இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.

    ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மிïசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்ïமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.

    "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.

    ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.

    அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.

    அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.

    அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''

    அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது.

    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

    "அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

    இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

    தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

    அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

    எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

    1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

    அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

    அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

    பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

    எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

    நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

    பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

    இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

    அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

    என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

    இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

    அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.

    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.
    தனது திரை உலக அனுபவங்கள் பற்றியும், குடும்ப வாழ்க்கை பற்றியும், பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் சொன்னார், சிவகுமார்.

    சிவகுமாரின் முதல் படம் 1965-ல் வெளிவந்தது. அவருடைய கலை உலகப்பயணம் தொடங்கி, 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் சொன்ன பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- உங்கள் மகன் சூர்யா, இப்போது முன்னணி நடிகராகத் திகழ்கிறார். அவர் நடிகர் ஆவார் என்று நீங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தீர்களா?

    பதில்:- சூர்யா நடிகனான அதிர்ச்சி இன்னும் என்னுள் இருக்கிறது. சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்'' படித்தவன் அவன். காலையில் கல்லூரி சென்றால் மாலை வரை அவன் வகுப்பில் நாலு வார்த்தை பேசினால் பெரிய விஷயம். மவுனமாக எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கும் சுபாவமுள்ளவன்.

    சென்னையில் பிறந்து 22 வருடம் வளர்ந்த ஒரு நடிகனின் மகன், இங்குள்ள எந்த ஸ்டூடியோவிலும் அப்பாவின் ஷூட்டிங்கை பார்த்ததே இல்லை. விளையாட்டாகக் கூட அவனை ஒரு சினிமா ஹீரோவாக நாங்கள் கற்பனை செய்து பார்த்ததில்லை.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னமும் அவனை திரை உலகுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு இனிய விபத்து. `வீடியோ டெஸ்ட்' என்று அவனை அழைத்துப் போனார்கள். நான் மணிரத்னத்திற்குப் போன் செய்தேன். "சார்! அவனுக்குச் சினிமா சம்பந்தமாக எதுவும் தெரியாது. அப்படி அவனை நாங்கள் வளர்க்கவில்லை. பெரிதாக எதிர்பார்த்து நீங்கள் `டெஸ்ட்' செய்து ஏமாந்து விடக்கூடாது.

    `கார்மென்ட் எக்ஸ்போர்ட்' (ஆடை ஏற்றுமதி) கம்பெனியில் இப்போது பயிற்சி பெறுகிறான். நாளைக்குச் சொந்தமாக அவன் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது எங்காவது வேலை பார்த்து மாதம் பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ சம்பாதித்து நிம்மதியாக வாழலாம்.

    "நீங்கள் `டெஸ்ட்' செய்து ஒதுக்கிவிட்டால், அது அவன் எதிர்கால வாழ்க்கையை ரொம்பவும் பாதிக்கும். இப்போதுகூட `லேட்' இல்லை. அவனை அனுப்பி விடுங்கள்'' என்றேன்.

    `அவர் மீது 200 சதவீதம் நமëபிக்கை இருக்கிறது. கவலைப்படாதீர்கள். நாங்கள் அவரைப் பார்த்துக் கொள்கிறோம்'' என்றார், மணிரத்னம்.

    டைரக்டர் வசந்தும், மணிரத்னம் அவர்களும் "நேருக்கு நேர்'' படத்தில், `சூர்யா' என்று பெயரிட்டு அவனை அறிமுகப்படுத்தினார்கள். அந்தக் கலைஞர்களுக்கு நெஞ்சார நன்றி கூறுகிறேன்.

    அமெரிக்காவில் 3 ஆண்டு "இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங்'' படித்து எம்.எஸ். பட்டம் பெற்று இந்தியா வந்த என் இளைய மகன் கார்த்திக், ஒராண்டுக்கும் மேலாக மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பயிற்சி பெற்றான். தற்போது `பருத்தி வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான்.

    கேள்வி:- காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புகள் இருந்தும், அதை நீங்கள் விரும்பவில்லை. தாயாரும், குடும்பத்தினரும் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். உங்கள் மகன் சூர்யா, காதல் திருமணம் செய்து கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?

    பதில்:- தூய காதலுக்கு நான் எதிரி அல்ல. தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை மணக்கமாட்டேன் என்ற கொள்கையில் சூர்யா உறுதியாக இருந்தால், அவர் விரும்பியபடி திருமணம் செய்ய அனுமதிப்பேன்.

    கேள்வி:- நீங்கள் நடித்த சினிமாப்படங்களில் முதன் முதலாக உங்கள் தாயார் பார்த்த படம் எது? பார்த்து விட்டு என்ன சொன்னார்கள்?

    பதில்:- கந்தன் கருணை. "முருகனையே நினைத்து வாழ்ந்து, பழனி மலைக்கு கிருத்திகை தவறாமல் போய், திருப்புகழ் - மொத்த பாட்டையும் பாடி, சாமி கும்பிட்டவரு உங்கப்பா. ஒரு கிருத்திகை அன்னிக்கு பழனிலே பாடும்போதே நாவு விழுந்து போச்சு! வந்து பத்து நாள்ளே இறந்துட்டாரு.' அவரு செஞ்ச பிரார்த்தனை, உனக்கு அந்த முருகன் வேஷம் கிடைச்சிருக்கு'' என்றார், என் தாயார்.

    கேள்வி:- 193 படங்களில் நடித்திருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 படங்கள் எவை?

    பதில்:- கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், சொல்லத்தான் நினைக்கிறேன், புதுவெள்ளம், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், பவுர்ணமி அலைகள், சிந்துபைரவி.

    கேள்வி:- நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனைவிக்குப் பிடித்தமான படம் எது?

    பதில்:- ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி.

    இவ்வாறு பதிலளித்தார், சிவகுமார்.

    193 திரைப்படங்களில் நடித்து விட்ட சிவகுமாரின் கலைப்பயணம், இப்போது சின்னத்திரையில் தொடருகிறது.

    "சித்தி'', "அண்ணாமலை'', "அபிராமி'' உள்பட ஏராளமான டெலிவிஷன் தொடர்களில் நடித்துள்ளார்.

    சின்னத்திரைக்கு போனது பற்றி அவர் கூறியதாவது:-

    "ஓவியக் கலைஞனாக வாழ்க்கையைத் தொடர நினைத்த என்னை `சிவகுமார்' ஆக்கி, உலகளாவிய தமிழ் மக்கள் அறிந்திடச் செய்தது, திரை உலகம்தான். இன்றைய புகழ், பொருள், வாழ்வு எல்லாம் திரை உலகம் இட்ட பிச்சை.

    ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடிக்கத் துவங்கி, நூற்றி இருபது படங்களை முடிக்கும் காலங்கள் வரை கூட நான் லட்ச ரூபாய் சம்பளத்தை எட்டவில்லை. தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி அதிகம் கேட்டதில்லை. காரணம், திரை உலகம் என்னைக் கைவிடாது என்ற அசாத்திய நம்பிக்கை.

    இரண்டரை மணி நேர சினிமா ஏற்படுத்துகிற தாக்கத்தை 25 வார டெலிவிஷன் தொடரில் ஏற்படுத்த முடியாது. காரணம் தொடர்ச்சி விட்டுப் போவதுதான்.

    மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும், படைப்பாளி திறமைசாலியாகவும், டெலிவிஷன் மீடியத்தை திறம்படக் கையாளத் தெரிந்தவராகவும் இருந்தால் பெயர் பெறமுடியும் என்பதற்கு கே.பாலசந்தர் உருவாக்கிய `ரயில் சிநேகம்', `கையளவு மனசு', `காதல் பகடை' தொடர்கள் சாட்சி.

    1990களில் "நீதிமான்'' தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்தபோது, "என்ன சார்! இத்தனை வருஷமா சினிமாவிலே ஹீரோவா நடிச்சிட்டு `டிவி'க்கு வந்திட்டீங்களே!'' என்று சில துணை நடிகர்கள் கேட்டனர். நான் சொல்லும் சமாதானம் அவர்களை திருப்திபடுத்தாது என்பதை உணர்ந்து, மவுனப் புன்னகை செய்தேன்.

    1999-ல் `சித்தி' தொடர் உருவாக ஆரம்பித்ததும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 கோடி பேர் `சித்தி' தொடரை பார்த்ததாக புள்ளி விவரங்கள் கூறின.

    "அண்ணாமலை'', உலகின் பெரிய நாடுகளில் எல்லாம் ஒளிபரப்பு ஆயிற்று.

    உலகில் எல்லாத் துறைகளிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழும். அந்த மாறுதல்கள், திரை உலகிலும் நிகழும். கதாசிரியன், சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டு, பேனா முனை மதிப்பு பெறும் காலம் விரைவில் வரும். அப்போது அர்த்தமுள்ள கதைகள், ஆழமான கருத்துக்கள் மீண்டும் திரை மூலம் உயிர் பெறும். அதுவரை சின்னத்திரையில் தற்காலிகமாக பவனி வருவேன்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சிவகுமார் - லட்சுமி தம்பதிகளுக்கு சூர்யா, கார்த்திக் தவிர, ஒரே மகள் பிருந்தா.

    பிருந்தா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படித்து "பி.ஏ'' பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயரும் சிவகுமார்தான். இவர் "பி.ஈ'',"எம்.பி.ஏ'' பட்டங்கள் பெற்றவர். சென்னையில், "கிரானைடு''களை வெட்டப் பயன்படும் "டயமண்ட் டூல்ஸ்'' கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துகிறார்.

    சிவகுமார் பற்றிய தொடர் இத்துடன் நிறைவடைந்தது.


    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.
    சிவகுமார் நடித்த "மறுபக்கம்'' என்ற படத்துக்கு தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

    எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குறுநாவல் "உச்சி வெயில்.'' அதை, "மறுபக்கம்'' என்ற பெயரில் டைரக்டர் கே.எஸ்.சேதுமாதவன் படமாகத் தயாரித்தார்.

    இந்தப் படத்துக்கு, "தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்'' நிதி உதவி செய்தது. மொத்தம் ரூ.14 லட்சம் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

    வேம்பு அய்யர் என்ற வேடத்தில் சிவகுமார் நடித்திருந்தார். அவருடன் ராதா நடித்தார். 1991-ல் வெளிவந்த இப்படத்துக்கு, அகில இந்திய ரீதியில், சிறந்த படம் என்பதற்கான தேசிய விருது (தங்கத்தாமரை) கிடைத்தது.

    பிரபலமான மூத்த கலஞர்களுடன் சேர்ந்து நடிப்பதை 1974 முதல் சிவகுமார் தவிர்த்து வந்தார். கதாநாயகனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார்.

    சிவாஜிகணேசன் நடிக்க, பாரதிராஜா இயக்கிய "பசும்பொன்'' படத்தில் நடிக்க, 1995-ல் அழைப்பு வந்தது. பாரதிராஜாவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும் என்ற ஆவல், சிவகுமாருக்கு நீண்ட காலமாக இருந்தது.

    எனவே, தனது "விரத''த்தை முடித்துக்கொண்டு, 21 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிவாஜியுடன் இணைந்து நடித்தார், சிவகுமார்.

    "பசும்பொன்'' படத்தைப் பற்றி சிவகுமாரின் கருத்து:

    "பாரதிராஜாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் இது. செதுக்கிச் செதுக்கி, இழைத்து இழைத்து காட்சிகளைப் படமாக்கினார்.

    எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறினால், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற படம் தவறிவிட்டது. எனினும், பாரதிராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் பசும்பொன்னும் ஒன்று.

    ராதிகாவின் கதாபாத்திரம் `மாஸ்டர் பீஸ்.' வயதுக்கு மீறிய கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டினார் அவர்.

    திரைக்கதையை உருவாக்க சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை உழைத்து, அதன்பின் அதை நண்பர்களிடம் படித்துக்காட்டி, அதை மேம்படுத்தி, அதற்குப் பிறகுதான் படப்பிடிப்புக்கு செல்வார், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளரான நண்பர் எம்.பாஸ்கர்.

    தீர்ப்புகள் திருத்தப்படலாம், பவுர்ணமி அலைகள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் நான் நடித்தவை.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    சினிமாவில் தந்தையும், மகனும் ஒரே படத்தில் நடிப்பது விசேஷமானது.

    இந்தி நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் சிவாஜிகணேசனும், அவர் மகன் பிரபுவும் சேர்ந்து நடித்துள்ளனர்.

    22-9-2000-ல் வெளிவந்த "உயிரிலே கலந்தது'' என்ற படத்தில் சிவகுமாரும், சூர்யாவும் சேர்ந்து நடித்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா.

    1997-ல் வெளிவந்த "காதலுக்கு மரியாதை'' படத்தில் இளம் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்தார், சிவகுமார்.

    இந்தப்படத்தில், இந்து மதத்தைச்சேர்ந்த விஜய்யும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஷாலினியும் காதலிப்பார்கள். காதலுக்கு மதம் தடையாக இருந்தாலும், இருவரும் பெற்றோர் மீது கொண்ட பாசத்தின் காரணமாக, காதல் வெற்றி பெறும்.

    இந்தப் படத்தில் நடித்தது பற்றி சிவகுமார் கூறியதாவது:-

    "காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது. மனித இனம் தோன்றிய காலம் தொட்டு நிகழ்வது.

    ஆனால், 25 வயது வரை பெற்று வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையைக் கொடுத்த பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு புது உறவுடன் ஓடிப்போகலாமா? அது தவறு. போராடி, பெற்றோர் சம்மதத்தைப் பெற்று வாழ்க்கையில் ஒன்று சேருங்கள் என்ற உயர்ந்த படிப்பினையைச் சொன்ன படம் "காதலுக்கு மரியாதை.''

    நானும், ஸ்ரீவித்யாவும் விஜய்க்கு பெற்றோர்களாக நடித்தோம்.

    பாசில் உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் இந்தப்படமும் ஒன்று.''

    இவ்வாறு கூறினார், சிவகுமார்.

    திரை உலக அனுபவங்கள் பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    "நான் நடித்த மொத்த படங்கள் 193.

    152 தயாரிப்பாளர்களுடனும், 98 டைரக்டர்களுடனும் பணியாற்றியுள்ளேன். என்னுடன் நடித்த கதாநாயகிகள் 87 பேர்.

    எனக்குப் பிறகு திரைப்படங்களில் அறிமுகமாகி, எனக்கு ஜோடியாக அதிகப்படங்களில் நடித்தவர்கள் லட்சுமி, ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, சுஜாதா, சரிதா, அம்பிகா, ராதிகா ஆகியோர்.

    மூன்று நான்கு படங்களில் இணையாக நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, ஜெயசுதா, ஸ்ரீதேவி, ராதா, சுஹாசினி ஆகியோர்.

    கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் "கவிக்குயில்'', "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு'', "மச்சானைப் பாத்தீங்களா'' என்ற மூன்று படங்களில் ஸ்ரீதேவி என்னுடன் இணைந்து நடித்தார். துரதிர்ஷ்டவசமாக மூன்றுமே வெற்றிபெறத் தவறிவிட்டன.

    என்னுடன் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லட்சுமி. மிகுந்த தைரியசாலி. சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அவற்றால் துவண்டு விடாமல், தன் நடிப்பாற்றலைக் கொண்டு, வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுபவர். புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்.

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் அவர் ஏற்ற வேடம், அவரது அன்றைய வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய ஒன்று. ரொம்பவும் `மெச்சூர்டாக' அந்தப் பாத்திரத்தில் நடித்து, "ஊர்வசி'' விருது வாங்கினார்.

    தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகம் ஆகும்போதே சுஜாதாவின் தோற்றத்தில் `மெச்சூரிட்டி' இருந்தது. அதனால், குடும்பத் தலைவி, வக்கீல், டாக்டர், பழி வாங்கத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப்பெண்... என்று குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன. உணர்ச்சிகரமான கட்டங்களில், நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.

    சரிதா ரொம்பவும் திறமை சாலியான நடிகை. அவருடைய கண்களே ஆயிரம் கதைகள் பேசும்.''

    இவ்வாறு சிவகுமார் கூறினார்.

    ×