என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தங்கம் தென்னரசு"

    • நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.

    அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். 

    • அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
    • பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள்.

    தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது அப்பள்ளி மாணவர் அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

    அம்மாணவரின் கோரிக்கையை ஏற்று, காரியாபட்டியில் இருந்து ஆத்திகுளம் வழியாக திருச்சுழி வரை (காலை 8.10, மாலை 4.15) செல்லும் புதிய வழித்தட பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன்.

    இப்பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். இந்த பிஞ்சுக் குழந்தைகளின் கனவு மெய்ப்பட திராவிட மாடல் அரசு எத்தனை உதவிகளையும் செய்யத் தாமதிக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கடந்த 10 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது எட்ட முடியாத வளர்ச்சி.

    தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. 9.69 சதவீதம் என்பது கடந்த 10 ஆண்டுகள் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது எட்ட முடியாத வளர்ச்சி" என்றார்.

    இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69% என்ற குறிப்பிடத்தக்க உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளது.

    இது அனைத்து மாநிலங்களைவிட மிக உயர்ந்தது. கடந்த 10 ஆண்டுகளில் வலிமையானது .

    மாநிலத்தின் பொருளாதாரம் நிலையான விலையில் ரூ. 14.53 லட்சம் கோடியாகவும், தற்போதைய விலையில் ரூ. 23.64 லட்சம் கோடியாகவும் விரிவடைந்துள்ளது - இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது.

    இந்த சிறந்த சாதனை, மக்கள் நலன், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக் கதையை முன்னெடுத்துச் சென்ற நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் தலைமைக்கு ஒரு சான்றாகும்.

    அவரது வழிகாட்டுதலின் கீழ், சேவைகள் துறை 12.7% மற்றும் தொழில்துறை 9% வளர்ச்சியுடன், பல்வேறு துறைகளில் விதிவிலக்கான வேகத்தைக் கண்டுள்ளோம்.

    தமிழ்நாடு வேகமாக வளரும் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நோக்கம், மீள்தன்மை மற்றும் கூட்டு முயற்சியுடன் வளரும் பொருளாதாரத்தையும் உருவாக்கி வருகிறது.

    1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான எங்கள் லட்சிய இலக்கை நோக்கி நாங்கள் உறுதியாகப் பயணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2.64 மில்லி கிராம் எடை கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    விருதுநகர் மாவட்டத்தில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.

    பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதையும் இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.
    • மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து, நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

    இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கான மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் வழங்கப்படும். மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
    • 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    * அறமே ஆட்சியின் அடித்தளமாக கொண்ட திராவிட மாடல் அரசு எல்லோர்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் செயல்படுகிறது.

    * கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரே ஆண்டில் உத்தரபிரதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

    * மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அதிகம் இடம்பெறும்.

    * தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கானதாக உள்ளது.

    * தமிழ்நாடு அரசு பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கும் உரிய கவனம் கொடுப்பதாக உள்ளது.

    * மத்திய அரசு நமது உயிரினும் மேலான தமிழ் மொரியை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நோக்குகிறது.

    * நாட்டிலேயே அதிகளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * 4 ஆண்டுகளில் 10, 649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.

    * தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

    * 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    * மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மாநில அரசே நிதி ஒதுக்கி பணி மேற்கொண்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் மத்தி அரசு நிதி வழங்கியது.

    * கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது.

    * உலகில் உள்ள பல நாடுகள் செமிகண்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    * செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காக கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என நம்புகிறேன் என்றார். 

    • சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது.
    • முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது.

    தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது.

    மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா?
    • நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இன்னும் ஓராண்டில் எப்படி விமான நிலையம் அமைக்க முடியும். தி.மு.க. ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ஏர்போர்ட் எப்படி அமைப்பீர்கள்? என செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்காரர்களுக்கு மட்டும் ஏர்போர்ட் இருந்தால் போதுமா? ராமநாதபுரத்திற்கு வேண்டாமா? படிப்படியாக பணி தொடங்கும். ஏர்போர்ட் ஜீபூம்பா வேலை இல்லை. கட்டமைப்பை ஏற்படுத்தியதும் உரிய காலத்தில் கட்டி முடிப்போம் என்று கூறினார்.

    நீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் ஏர்போர்ட் விரைவில் அமைக்கப்படும் என செல்லூர் ராஜூக்கு டிஆர்பி ராஜா பதில் அளித்தார்.

    ஓசூர் ஏர்போர்ட் குறித்து விவரம் இல்லையே என கேட்டால் விவகாரமாக பேசுகிறீர்கள். அதிகாரி சொன்னதை தான் செய்தோம், தெர்மாகோல் என கிண்டலடிக்கிறீர்கள், பரவாயில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    • வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும். சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.

    நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்" என்று கூறியிருந்தார்.

    அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இவர்களின் பணி நிலை குறித்த துல்லியமான விவரத்தை வெளியிடும்படி பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

    திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது '' என்று கூறியிருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு 25 ஆயிரம் உயர முடியும்?

    அதேபோல், மொத்தப் பணியாளர் எண்ணிக்கை உயரும் போது உள்ளாட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும் அல்லது அதே எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால், அவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 709-லிருந்து 21,866 ஆக 11 ஆயிரம் பேர் குறைந்தது எப்படி?

    அதேபோல், வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 பணிகளுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த 7 பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் கூட தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் பேரை எவ்வாறு தேர்வு செய்ய முடியும்?

    ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
    • திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பட்ஜெட் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,

    தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.

    தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.

    ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.

    திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக என்று கூறியுள்ளார். 



    • சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
    • வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    சென்னை:

    தமிழக பட்ஜெட்டில் உரையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சைதாப்பேட்டை தாண்டர் நகரில் ரூ.110 கோடியில் புதிதாக 190 குடியிருப்புகள் கட்டப்படும். மக்களின் முதல்வர் திட்டத்தில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

    சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகராட்சிகளில் 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.

    வரும் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கப்படும். 4 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம் ரூ.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

    வெப்ப அலை செயல் திட்டம் 11 மாநகராட்சிகளுக்கு தனி தலைமையிடமாக உருவாக்கப்படும்.

    • நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்!
    • விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!

    சென்னை :

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சுமார் 2 மணிநேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்க்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

    மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்

    ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்

    இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்

    தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்

    புதிய நகரம்

    புதிய விமான நிலையம்

    புதிய நீர்த்தேக்கம்

    அதிவேக ரயில் சேவை

    என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!

    'எல்லோர்க்கும் எல்லாம்' எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக பட்ஜெட்2025!

    நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார். 



    ×