என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- 288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
- நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.
சென்னை:
காங்கிரஸ் தொகுதியான திருச்சியும், ஆரணியும் இந்த முறை மாற்றப்பட்டது. இதில் ஆரணி எம்.பி.யான விஷ்ணு பிரசாத்துக்கு கடலூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கு எங்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் திருநாவுக்கரசர் ஆதங்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த தேர்தலில் திருச்சியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித்தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.
288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், ஆட்படாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.
இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல்போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர்.
- பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.
சென்னை:
வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.
இதைத்தொடர்ந்து அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அதே சின்னத்தை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இது பற்றி மன்சூர் அலிகானிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பலாப்பழம் சின்னத்தை முதலில் கேட்டது நான் தான். எனக்கு பலா சின்னம் கிடைத்துள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., டி.பி.எஸ் என யாருக்கு ஒதுக்கப்பட்டாலும் எனக்கு கவலையில்லை.

பலாப்பழம் எனக்கு பிடித்த பழம். 'விறகு வாங்கலியோ விறகு' என்பது போல பலாப்பழத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தொகுதி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். நான் வெல்வது உறுதி. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராக இருந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பல முறை கூறிவருபவர் நான்.
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்ப்பதற்காக தினமும் முயற்சி செய்தேன். என்னை பார்க்கவிடவேயில்லை.
மோடியா? லேடியா? என ஜெயலலிதா தைரியமாக கேட்டார். வாக்குகளை பிரிப்பதற்கு நான் போட்டியிடுகிறேன் என சொல்கிறார்கள் 'படுபாவிகள்'
வேலூர் தொகுதியில் ஏராளமான மக்கள் பிரச்சினையில் உள்ளனர். மக்கள் அமோகமாக என்னை வரவேற்கின்றனர். பணபலம், அதிகார பலத்தை தாண்டி நான் வெல்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.
- காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட வட இந்திய தலைவர்களும் வருகிறார்கள்.
மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர்கள், பிரபலங்கள் என 50 பேர் வருகிறார்கள். இவர்கள் 39 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் பயண திட்டங்கள் வகுக்கப்படுகிறது.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பிரசாரத்துக்கு வருகிறார். அவர் 2 நாட்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சனாதன எதிர்ப்பு மற்றும் இந்து விரோத போக்கு குறித்து மக்கள் மத்தியில் அவர் எடுத்து சொல்வார் என்று கூறப்படுகிறது.
மேலும் காசி தமிழ் சங்கமம் மூலம் ஒன்றுபட்ட மக்கள் உணர்வுகளை பொய் பிரசாரங்கள் மூலம் தடுப்பதை முறியடிக்கும் வகையில் அவரது பிரசாரம் அமையும் என்று கூறப்படுகிறது.
- தென் சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது.
- அன்றைய தினமே வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
எனவே தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி 5 தடவை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்தார். கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.
கோவையில் சாய்பாபா காலனி முதல் ஆர்.எஸ்.புரம் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோவும் நடத்தினார்.
மீண்டும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் வருகிறார். தமிழகத்தில் சென்னை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்கான பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் முடிவாகி விடும்.
9-ந்தேதி சென்னை வரும் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்கிறார். தென்சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை, மத்திய சென்னையில் பா.ஜனதா வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது.
இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுவான இடத்தில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
தென்சென்னைக்கு மேற்கு மாம்பலம், மத்திய சென்னைக்கு பாண்டி பஜார் ஆகிய இடங்களை இணைக்கும் வகையிலும், இதே போல் மேலும் 2 இடங்களையும் தேர்வு செய்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களின் முடிவை பொறுத்து இடம் உறுதி செய்யப்படும்.
வடசென்னை தொகுதி மற்றும் திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவில் ஆகியவற்றையும் பயண திட்டத்தில் சேர்க்கவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
சென்னை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விமானத்தில் திருச்சி செல்கிறார்.
அன்றைய தினமே வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் கேரளா செல்கிறார்.
அதன் பிறகு மீண்டும் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய வருவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ராகுல்காந்தி 11-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்குள் ஒருநாள் தமிழகம் வருவதற்கு ஒத்துக்கொண்டு உள்ளார். ஒரே நாளில் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாராகிறது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் நெல்லையில் ஒரு இடத்தில் பிரசாரம் செய்கிறார்.
கடலூர், மயிலாடுதுறையை இணைத்து ஒரு இடத்தில் பேசுகிறார்.
மேலும் திருவள்ளூர், கரூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.
பிரியங்காவும் தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவர் வரும் தேதி இன்னும் உறுதியாகவில்லை.
கர்நாடகா மாநிலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு பெங்களூரில் இருந்து ஓசூர் வருகிறார். அங்கிருந்து சேலம் வரை ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
- 10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
- எல்லாம் தேர்தல் தோல்வி பயம்
ஜெயங்கொண்டம்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையின் போது பிரதமர் உங்களை சந்தித்தாரா தொலைக்காட்சியில் அவ்வப்போது பேசுவார் அவ்வளவுதான்.
அப்போது அவர் நீங்கள் யாரும் வீட்டை விட்டு வரக்கூடாது வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருங்கள் வேலை வெட்டிக்கு செல்லாதீர்கள் வியாபாரமோ விவசாயமோ பண்ண வேண்டாம் என்று கூறினார்.
வெளியே வந்து விளக்கேற்றுங்கள். கையில் தட்டு வைத்து சத்தம் எழுப்புங்கள். இதன் மூலம் கொரோனா ஒழிந்து விடும் என்று கூறி மக்களை ஏமாற்றினார்.

ஆனால் நமது முதல்வர் கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை உயிரை பணயம் வைத்து கவச உடைய அணிந்து சென்று பார்த்து ஆறுதல் கூறி உயரிய சிகிச்சை அளிக்க செய்தார்.
10 வருடம் ஆண்ட பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இப்போது 10 தினங்களாக தமிழ்நாட்டிற்கு வருகிறார். எல்லாம் தேர்தல் தோல்வி பயம். நான் சவால் விடுகிறேன் 10 நாள் அல்ல ஒரு மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் தங்கி இருந்தாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது டெபாசிட் இழப்பார்கள்.
நாற்பதிலும் நாம் வெற்றி பெற்றால் மத்திய பிரதமராக மு.க.ஸ்டாலின் கூறுபவரே பிரதமர் ஆவார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திராவில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ்சில் யாத்திரையாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த குட்டி பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட்டு இருந்தார். ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் கூடி இருந்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். அந்தரத்தில் பறந்து வந்த செருப்பு ஜெகன்மோகன் ரெட்டியை தாண்டி சென்று விழுந்தது.
இதனைக் கண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி செருப்பு வீசியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நான் விஜயகாந்த் இல்லாமல் பொது செயலாளராகவும் வந்து உள்ளேன். கூட்டணி தர்மத்தை மதிக்க வந்துள்ளேன்.
- தொப்பூர் மேம்பாலம் ரூ.770கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதியாக கொண்டு வருவோம்.
தருமபுரி:
தருமபுரி, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
தருமபுரி மாவட்டம் காரி மங்கலம் மற்றும் நல்லம் பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து தே.மு.தி.க. பொது செயலாளர் பிரமேலதா திறந்தவெளி வேனில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்களிடையே பிரேமலதா பேசியதாவது:-
எடப்படி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் பொது செயலாராகவும், நான் விஜயகாந்த் இல்லாமல் பொது செயலாளராகவும் வந்து உள்ளேன். கூட்டணி தர்மத்தை மதிக்க வந்துள்ளேன்.
எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம்.ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் போல விஜயகாந்த் பெயரில் வாழ்நாள் முழுவதும் விஜயகாந்த் நினைவிடத்தில் உணவு அளித்து வருகிறோம். விஜயகாந்த் நினைவு இடத்தில் தினந்தோறும் அன்னதானம் செய்து வருகிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விஜயகாந்தின் ஆசையை நிறைவேற்றியே தீருவோம்.
தொப்பூர் மேம்பாலம் ரூ.770கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை உறுதியாக கொண்டு வருவோம். தொடர் உயிர் சேதங்களை தடுக்க டெல்லியில் குரல் கொடுப்போம். ஒகேனக்கல் காவிரி உபரி நீர்திட்டம் உறுதியாக நிறைவேற்றி தருவோம்.
தருமபுரி மொரப்பூர் ரெயில் பாதை திட்டம் உறுதியாக பெறுவோம். தருமபுரி மாவட்டம் வறண்ட பூமியாக உள்ளது. அதனை கலைத்து வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். நெல் மூட்கைள் பாதுகாக்க உறுதியாக கிடங்குகள் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாப்போம்.
தி.மு.க. அறிவித்த எந்த திட்டமாவது நிறைவேற்றியுள்ளதா? நீட் தேர்வு ரத்து, நகை கடன் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி என எதுவும் செய்யவில்லை. அனைவருக்கும் வேலை வாய்பபை தந்தார்களா? இல்லை. மாறாக விலைவாசி, மின் கட்டணம் உயர்த்தியுள்ளனர். தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை திறந்துள்ளனர்.
லாட்டரி விற்பனை, பாலியல் வன்கொடுமை அனைத்தும் இங்கு நடக்கிறது. தமிழகத்தில் எல்லா இடத்திலும் கஞ்சா நடமாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதனை தடுக்க நீங்கள் அளிக்கும் ஒற்றை ஓட்டில்தான் மாற்ற முடியும்.
தேர்தலில் அனைவரும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். 40 தொகுதிகளிலும் கூட்டணி தர்மத்தோடு சரித்திர சாதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயப்பிரகாசை ஆதரித்து, ஓசூர் ராம் நகரில், தே.மு.தி.க. பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரின் ஆசியுடன் அமைக்கப்பட்டுள்ள எங்கள் கூட்டணி, வெற்றிக்கூட்டணி, ராசியான கூட்டணி ஆகும். மக்கள் நலனுக்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இன்று, தமிழகத்தில் டாஸ்மாக், பெருகிவிட்ட கஞ்சா விற்பனை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை அதிகரித்து, போதை தமிழகமாக மாற்றிய பெருமை, ஆளும் தி.மு.க. அரசின் வரலாறாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என்ற நிலையை மாற்றி இந்த தமிழகத்தை மக்களுக்கான தமிழகமாக நிச்சயம் மாற்றிக் காட்டு வோம். ஜிஎஸ்டி வரி விதிப்பால், அனைத்து வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யை திரும்ப பெற, டெல்லியில் குரல் கொடுப்போம்.
தேர்தலுக்கு முன்பு, அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்கின்றனர். அப்படியானால் தகுதிவாய்ந்த பெண்கள் யார்? மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் இணைந்து நிச்சயமாக போராடும். அ.தி.மு.க. தலைமையிலான இந்த ராசிக் கூட்டணி, 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
- தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அரங்கேறும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு அளவுக்கு அதிகமான மதுபோதையே காரணம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டு உள்ளது.
தேர்தல் நேரத்தில் நபர் ஒருவருக்கு 3 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்றாக உள்ளது. அதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் மதுவாங்கி விட்டு வெளியே செல்பவர்கள் எத்தனை மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்? விதிகளை மீறி அவர்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி பறக்கும் படையினர் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனைகளின் போது டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபாட்டில் இருப்பை கணக்கிடும் அதிகாரிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 16-ந்தேதியில் இருந்து எவ்வளவு மதுபாட்டில்கள் விற்பனையாகி உள்ளன? என்பது பற்றிய கணக்கையும் கேட்டுப்பெற்றுள்ளனர்.
கடந்த 2 வாரங்களில் விற்பனையான மதுபாட்டில்களின் எண்ணிக்கையை அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து கூடுதலாக மொத்தமாக மதுவிற்பனை நடைபெற்று உள்ளதா? என்கிற விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக நடைபெறும் மது விற்பனையை விட 30 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றிருப்பதால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகள் கேள்வி எழுப்புவது இல்லை. அதே நேரத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக மதுவிற்பனை நடந்திருந்தால் அதுபற்றி டாஸ்மாக் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் விசாரித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் சென்னையில் பல இடங்களில் இந்தத் தேர்தல் விதிமுறைகளை மீறி டாஸ்மாக் கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் மொத்தமாக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதுபோன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
- திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் கொள்கைபரப்பு இணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா செல்லூர் 50 அடி சாலை, முனிச்சாலை சந்திப்பு, வடக்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பு, ஜீவா நகர் 1-வது தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சுய நலத்துக்காக தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு கூட்டணியையும் மக்கள் நம்ப தாயாராக இல்லை. வைகோ தனது மகனுக்கு ஒற்றை சீட் வேண்டும் என முதலமைச்சர் வீட்டின் பூட்டு போல தொங்கிக் கொண்டு இருந்தார். திருமாவளவன் பொதுத் தொகுதி கேட்டாலும் மு.க.ஸ்டாலின் தனித் தொகுதியையே தருகிறார்.
பெரம்பலூர் தனித் தொகுதி ஆன பிறகு ஆ.ராசாவுக்கு தனித்தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளது என தெரியவில்லை. தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க. கூட்டணி மிகவும் மோசமாக உள்ளது.

பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் கட்சியினர் கூட்டணியில் ஏன் இருக்கிறோம், ஏதற்கு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். அந்த கட்சிகளின் நிலை தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகும் என தெரியவில்லை. சரத்குமார் விருதுநகரை பெற்றுக் கொண்டு கட்சியை பா.ஜ.க.விடம் கொடுத்துவிட்டார். தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. பா.ம.க.வை கழற்றி விட்டு விடும் என ராமதாஸ் கூறியும் அன்புமணி ராஜ்ய சபா சீட்டுக்காக கூட்டணி வைத்துள்ளார்.
மரியாதையுடன் வாழ்ந்த டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் பாவம். சுயநலத்திற்காகவும், வாரிசுக்காகவும் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ்.சும் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க., பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தமிழக மக்களுக்கு மிகவும் ஆபத்தானவர்கள். தி.மு.க. தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். தி.மு.க. சொல்வது ஒன்று செய்வது ஒன்று. தி.மு.க. கொடுத்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றமால் அமைச்சர் உதயநிதி செங்கல்லை தூக்கி கொண்டு செல்கிறார். தி.மு.க. நீட்டை ஒழிப்போம் என சொல்லி விட்டு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. தேர்தலில் தி.மு.க.வையும், திருந்தாத பா.ஜ.க.வையும் மக்கள் ஒற்றை விரலால் ஒங்கி அடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.
- 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தெடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
நாளை (ஏப்ரல் 1-ந்தேதி) காலை 9 மணி-சென்னையில் இருந்து புறப்படுதல், (சாலை வழி), காலை 11.30 மணி-ஆற்காடு, மதியம் 3 மணி-வேலூர், மாலை 4 மணி-திருப்பத்தூர், இரவு 7 மணி-கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-காலை 11 மணி-சேலம், மதியம் 1 மணி-நாமக்கல், மாலை 6 மணி-கரூர் தேர்தல் பொதுக்கூட்டம்.
3-ந்தேதி (பதன்கிழமை)-காலை 11 மணி-ஈரோடு, பிற்பகல் 3 மணி-திருப்பூர், மாலை 4 மணி-பொள்ளாச்சி, இரவு 7 மணி-கோவை தேர்தல் பொதுக்கூட்டம்.
4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.
5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.
6-ந்தேதி (சனிக்கிழமை)-காலை 11 மணி-ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3 மணி-கோவில்பட்டி, இரவு 7 மணி-திருநெல்வேலி தேர்தல் பொதுக்கூட்டம்.
7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)-காலை 11 மணி-ராதாபுரம், மாலை 4 மணி-விளவங்கோடு, இரவு 7 மணி-நாகர்கோவில் தேர்தல் பொதுக்கூட்டம்.
8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகிறார்.
9-ந்தேதி-காலை 9.35 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்படுகிறார். பகல் 12 மணி-பெரம்பலூர், மாலை 4 மணி-திருச்சி, இரவு 7 மணி-சிவகங்கையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
10-ந்தேதி-காலை 11 மணி-தஞ்சாவூர், பிற்பகல் 3 மணி-திருவாரூர், இரவு 7 மணி-கும்பகோணம், இரவு 11 மணி-ரெயில் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.
11, 12, 13-ந்தேதிகளில் சென்னை சத்தியமூர்த்தி பவன்.
14-ந்தேதி-காலை 10 மணிக்கு சென்னை துறைமுகத்தில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
மாலை 4 மணி-விழுப்புரம், இரவு 7 மணி-சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
15-ந்தேதி-காலை 11 மணி-புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மதியம் 2 மணி முதல் 8 மணி வரை-கடலூர் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம்.
இரவு 11 மணிக்கு கார் மூலம் சென்னை புறப்படுகிறார்.
16-ந்தேதி-மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.
17-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் சாலை வழியாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
மதியம் 2.30 மணிக்கு திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.
கரூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதியுடன் நிறைவடைந்தது. 28-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 29-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாக இருந்தது. இதனையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிக்கு 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் அதிக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாக கரூரும், மிக குறைந்த வாக்காளர்கள் போட்டியிடும் தொகுதியாக நாகப்பட்டினமும் உள்ளன.
கரூரில் போட்டியிடுவதற்காக மொத்தம் 62 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனையடுத்து வேட்பு மனு பரிசீலனையின்போது 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 56 பேர் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனு திரும்பப் பெறும் நாளில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 54 பேர் இறுதியாக களத்தில் உள்ளனர்.
இதனால் கரூர் தொகுதி தமிழகத்திலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுளது. வாக்குப்பதிவின் போது தமிழகத்தின் மற்ற பாராளுமன்ற தொகுதியை விட கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கரூர் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ளது குறுப்பிடத்தக்கது.
தமிழகத்திலேயே மிக குறைவாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- மயிலாடுதுறையில் ஜவாஹிருல்லா தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
- ஸ்ரீபெரும்புதூர் வருகிற 17-ந்தேதி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
சென்னை:
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
ஏப்ரல் 3-ந்தேதி மயிலாடுதுறையில் தொடங்கி 4-ந்தேதி ராமநாதபுரம், 6-ந்தேதி நாகப்பட்டினம், 7-ந்தேதி கரூர், 8-ந்தேதி திருச்சி, 9-ந்தேதி பெரம்பலூர், 10-ந்தேதி திருவள்ளூர், 12-ந்தேதி வேலூர், 13-ந்தேதி திண்டுக்கல், 14-ந்தேதி சிதம்பரம், 15-ந் தேதி திருப்பூர், 16-ந்தேதி மத்திய சென்னை, 17-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரம் செய்கிறார்.






