என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும்.
    • எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது தற்போது விவாதமாகி வருகிறது.

    என்ன காரணத்தால் மக்கள் ஓட்டு போட வரவில்லை? வெயில் அதிகமாக இருந்ததால் ஓட்டு போட வரவில்லையா? அல்லது யார் ஜெயித்தால் நமக்கென்ன என்ற அலட்சியமா? அல்லது தேர்தல் கமிஷன் பூத் சிலிப் நிறைய வீடுகளுக்கு கொடுக்காதது ஒரு காரணமா? என பல்வேறு காரணங்களை முன் வைத்து மக்கள் பேச தொடங்கி விட்டனர்.

    இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்த காரணத்தால் அது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும். எந்த கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட தொடங்கி விட்டனர்.

    இது பற்றி முக்கிய அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:- தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு அப்படியே வந்து விடும். தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பது எங்களது கணிப்பு.

    வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் வந்திருந்தால் வெற்றி வாய்ப்புக்கான லீடிங் அதிகமாக இருக்கும். இப்போது பதிவான வாக்கு சதவீதம் குறைந்திருப்பதால் 'லீடிங்' கொஞ்சம் குறைவாக அமையும். மொத்தத்தில் வெற்றி எங்களுக்குத்தான்.

    அ.தி.மு.க. பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:-

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க.-பாரதிய ஜனதா ஆகிய கூட்டணிகளுக்கிடையேதான் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையேதான் கடும் போட்டி உள்ளது. காரணம் இந்த இரு கட்சிகளுக்கு மட்டும்தான் ஒவ்வொரு தெருவிலும் கட்சிக்காரர்கள் உண்டு. பாரதிய ஜனதா கட்சிக்கு ஆட்கள் கிடையாது.

    கிராம அளவில் கிளை கழகம் முதற்கொண்டு அ.தி.மு.க.-தி.மு.க.வில் ஆட்கள் அதிகம் இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியில் அந்த அளவு தொண்டர்கள் கிடையாது.

    வாக்குப்பதிவு சதவீதம் இப்போது குறைந்துள்ள நிலையில் இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா கட்சிக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறாது.

    நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஓட்டு வாங்குவதால் அதை போட்டியாக கருதவில்லை. அந்த கட்சிக்கு கிடைக்கும் வாக்கு விழலுக்கு இறைத்த நீர் போன்ற கதைதான். அவர்கள் எதுக்கு போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. எனவே சீமானை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    வாக்குப்பதிவு சதவீதம் பல தொகுதிகளில் குறைந்திருந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், யார் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டிருப்பார்கள்.

    அந்த வகையில் தி.மு.க. அணியின் வாக்கு வங்கி குறையுமா? என்று தெரியவில்லை. எங்கள் அணியில் அரசியல் ரீதியாக ஊசலாட்டத்தில் யாரும் இல்லை. எனவே ஒரு தெளிவான கொள்கையோடு, தெளிவான சிந்தனையில் இருப்பதால் எங்கள் அணிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பில்லை.

    பி.ஜே.பி. அ.தி.மு.க.வுக்குதான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. ஆர்வம் இல்லை. அவர்களிடம் திட்டமிட்ட தேர்தல் வியூகம் இல்லை. அதனால் பாதிப்பு என்று பார்த்தால் பி.ஜே.பி., அ.தி.மு.க.வுக்குதான்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    வாக்குப்பதிவு குறைந்திருந்தாலும் எங்கள் அணியை பொறுத்தமட்டில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்தான் வெற்றி பெறும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளதால் எதிர்காலத்தில் அதை சரி செய்வதற்கான முயற்சியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
    • பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.

    சென்னை:

    முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி தமிழகத்தில் தேர்தல் முடிந்ததால் கேரளாவில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    தலைநகரான திருவனந்தபுரத்தில் தமிழர்கள், மலையாளிகள், வேறு மாநிலத்தவர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள்.

    எனவே விஜயதரணி தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் பேசி வாக்கு சேகரிக்கிறார். ஏற்கனவே விஜயதரணி எம்.எல்.ஏ.வாக இருந்த விளவங்கோடு தொகுதியை அடுத்து திருவனந்தபுரம் இருப்பதால் தமிழ், மலையாளம் கலந்து பேசும் மக்கள் பெருமளவு அவர்கள் மத்தியில் இரு மொழிகளையும் கலந்து பேசுகிறார்.

    3 முறை தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்ததாகவும் கட்சியில் பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்றும் எனவே பெண் சக்தியை போற்றும் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு பெண்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார்.

    • தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.
    • வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வாக்குப்பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்ததாக கருதுகிறோம்.

    கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே? வெயில் அதிகமாக இருந்ததால் பல பேர் ஓட்டு போட வரவில்லை என்று கூறுகிறார்களே?

    ப:- வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகமாகும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    கே:- வாக்காளர் பட்டியலில் நிறையபேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்களே?

    ப:- ஆமாம். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்திருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருக்கிறோம்.

    தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.

    ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி அப்போதே நான் பேட்டியும் கொடுத்திருந்தேன்.

    வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை தவற விட்டார்கள். இது தேர்தல் கமிஷனின் அஜாக்கிரதை என்றுதான் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
    • ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பஸ் கட்டணம், ரெயில் கட்டணம் மற்றும் அனைத்து போக்குவரத்து கட்டணங்களும் அதிகமாக இருப்பதனால் செலவு செய்து ஓட்டு போடனுமா என்கின்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தேர்தல் வரும் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தான் வருகிறது. எனவே வெயிலின் தாக்கம் அதிகம் என்கிற காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் ஓட்டு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதில் முக்கியமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசதியானவர்கள், படித்தவர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை பெருமளவில் விரும்புவதில்லை என்பது வேதனையளிக்கிறது.


    நாம் யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன? என்ன மாற்றம் வரப்போகிறது? என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்களா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

    ஏற்கனவே வெற்றி பெற்றவர்களும் தொகுதி பக்கம் அதிகம் செல்வதில்லை, தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில்லை, அதுமட்டு மல்லாமல் இன்றைக்கு நிலவுகின்ற வேலையின்மை, வறுமை, அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கூட ஆளில்லை. யாருக்கு ஓட்டுப் போட்டால் என்ன என்ற மக்களின் வேதனையான மன நிலையை தான் இது நிரூபிக்கிறது. இதெல்லாம் மாறவேண்டும் என்றால் மத்திய, மாநில ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். ஆனால் ஆளும் ஆட்சியாளர்களோ ஓட்டுக்கு காசு கொடுத்தும், ஒட்டு மொத்த மீடியாவையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்கின்ற போக்கில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றணும், வாக்களித்த மக்களை நேரடியாக சந்திக்கணும் என்கிற பாடத்தை இந்த தேர்தல் மூலம் கற்றுள்ளனர். எனவே தேர்தல் ஆணையமும், காவல்துறையும், நீதித்துறையும், ஆட்சியாளர்களும் வாக்களிப்பதன் அவசியத்தையும், நம்பிக்கையையும் மக்களுக்கு இனிவரும் காலங்களில் உறுதியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.
    • நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 8 லட்சத்து 28 ஆயிரத்து 152 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 30ஆயிரத்து 307 பெண் வாக்காளர்களும், 222 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 596 ஆண் வாக்காளர்களும், 6லட்சத்து 40ஆயிரத்து 780 பெண் வாக்காளர்களும், 105 திருநங்கைகளும் என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரத்து 481 பேர் வாக்காளித்து உள்ளனர். சேலம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் 7லட்சத்து 83ஆயிரத்து 17 ஆண் வாக்காளர்களும், 7லட்சத்து 44ஆயிரத்து 87 பெண் வாக்காளர்களும், 158 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 52ஆயிரத்து 562 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவற்றில் 5 லட்சத்து 53ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், 5லட்சத்து 81ஆயிரத்து 525 பெண் வாக்காளர்களும், 53 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 11 லட்சத்து 35ஆயிரத்து 246 வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

    • தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை.
    • எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை.

    பிரதமர் மோடி இன்று கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபுராவில் நடைபெற்ற மிகப் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாய்மார்கள், சகோதரரிகள் இங்கே மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளீர்கள். உங்களுடைய குடும்பத்தை வளர்ப்பதற்கு உங்களுடைய போராட்டம் மற்றும் சவால்களை, மோடியாகிய நான் எனது வீட்டில் பார்த்துள்ளேன்.

    இந்த நாட்களில், மோடியை அகற்றுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரிய மற்றும் சக்திவாய்ந்த நபர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

    ஆனால் நரிசக்தி, மாற்ரு சக்தி ஆகியவற்றின் ஆசீர்வாதத்தால், பாதுகாப்பு கவசத்தால் (Suraksha kavach), மோடி அவற்றை எதிர்கொள்ளும் திரணை பெற்றுள்ளார்.

    தாய்மார்கள், சகோதரரிகள், மகள்களுக்கு சேவை செய்வதும், அவர்களை பாதுகாப்பதும் மோடியுடைய முன்னுரிமை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தற்போது தலைவர் இல்லை. எதிர்காலம் குறித்த திட்டமும் இல்லை. அவர்களுடைய வரலாறு மோசடி.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • தருமபுரியில் அதிகபட்சமாக 81.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
    • கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தோராயமான வாக்குப்பதிவு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    அதன் முழு விவரம் வருமாறு:-

    1. தருமபுரி- 81.48

    2. நாமக்கல்- 78.16

    3. கள்ளக்குறிச்சி- 79.25

    4. ஆரணி- 75.65

    5. கரூர் - 78.61

    6. பெரம்பலூர்- 77.37

    7. சேலம்- 78.13

    8. சிதம்பரம்- 75.32

    9. விழுப்புரம்- 76.47

    10. ஈரோடு- 70.54

    11. அரக்கோணம்- 74.08

    12. திருவண்ணாமலை- 73.88

    13. விருதுநகர்- 70.17

    14. திண்டுக்கல்- 70.99

    15. கிருஷ்ணகிரி- 71.31

    16. வேலூர்- 73.42

    17. பொள்ளாச்சி- 70.70

    18. நாகப்பட்டினம்- 71.55

    19. தேனி- 69.87

    20. நீலகிரி- 70.93

    21. கடலூர்- 72.28

    22. தஞ்சாவூர்- 68.18

    23. மயிலாடுதுறை- 70.06

    24. சிவகங்கை- 63.94

    25. தென்காசி- 67.55

    26. ராமநாதபுரம்- 68.18

    27. கன்னியாகுமரி- 65.46

    28. திருப்பூர்- 70.58

    29. திருச்சி- 67.45

    30. தூத்துக்குடி- 59.96

    31. கோவை- 64.81

    32. காஞ்சிபுரம்- 71.55

    33. திருவள்ளூர்- 68.31

    34. திருநெல்வேலி- 64.10

    35. மதுரை- 61.92

    36. ஸ்ரீபெரும்புதூர்- 60.21

    37. சென்னை வடக்கு- 60.13

    38. சென்னை தெற்கு- 54.27

    39. சென்னை மத்தி- 53.91

    • இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.
    • அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-

    இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.

    கர்நாடகாவிற்கு மோடியின் பரிசு வெற்றுச் சொம்பு. ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்கள். செய்தார்களா? வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினார்களா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கினார்களா? நல்ல நாட்கள் வந்ததா?. ஒரு சிங்கிள் உறுதியை கூட நிறைவேற்றவில்லை.

    ஆகவே, மோடி மாநில மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு வெற்று சொம்பை கொடுத்துள்ளார். அவர்கள் ஏதும் செய்யவில்லை. இருந்தபோதிலும் நம்முடைய மாநில கஜானா காலியாகவில்லை. நம்முடைய காங்கிரஸ் கட்சி ஐந்து உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முன்னேற்றத்திற்கான பணிகளை தொடர்கிறோம். மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத கட்சி. அவர்களில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது மூலம் கட்சியை கலைத்து விடுவது நல்லது.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது.
    • ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

    2024 மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் என் வாக்கு என் குரல் (My Vote My Voice) திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடிமக்கள், இது நம் நாடு. அரசமைப்பு நாட்டு மக்களுக்கு ஏரளமான உரிமைகள் கொடுத்துள்ளது. ஆனால் நம் மீது சுமத்தப்படும் கடமையை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது. குடிமக்களின் முதன்மையான கடமைகளில் ஒன்று அரசியலமைப்பு ஜனநாயகத்தில் வாக்களிப்பதாகும்

    நம்முடைய சிறந்த தாய்நாட்டு மண்ணில் உள்ள மக்கள் வாக்களிக்கும் வாய்ப்பை தவற விடாதீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நம் தேசத்திற்காக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் வெறும் ஐந்து நிமிடங்கள். இது செய்யக்கூடியது, இல்லையா? பெருமையுடன் வாக்களிப்போம். "என் வாக்கு, என் குரல்"

    இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • எம்.எஸ். டோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என கருதப்படுகிறது.
    • அவர் பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் டோனி... டோனி... என ஆரவாரம் செய்கின்றனர்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ். டோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்துடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதனால் டோனி களம் இறங்கும்போதெல்லாம் ரசிகர்கள் டோனி... டோனி... என ஆர்ப்பரிக்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது மைதானத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ரசிகர்களும் டோனி... டோனி... என சத்தம் எழுப்பி வருகின்றனர். இது மற்ற வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

    இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ். டோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் டோனி டோனி என ஆர்ப்ரித்த சத்தம், ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் மேல்போர்ன் மைதானத்தில் கூட இது போன்ற ஆர்ப்பரிப்பை கேட்ட முடியாது. இது மிகவும் வேடிக்கையானது.

    இவ்வாறு ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    எம்.எஸ். டோனி இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடைசி ஓவரில் ரன்கள் விளாசுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். நேற்று எல்எஸ்ஜி அணிக்கெதிராக ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விளாசினார்.

    • 2019-ல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 18 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
    • நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் அவர்கள் யாராவது ஒருவர் கேரள மாநில நலத்திற்கான நின்றார்களா?.

    கேரளா மாநிலத்தில் வருகிற 26-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 20 தொகுதிகளை கைப்பற்றுது யார் என்பதில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும், இடதுசாரி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

    இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளது. தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இடசாரிகளையும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கேரள மாநில நலனிற்காக அவர்கள் நிற்கவில்லை என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "2019-ல் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 18 பேர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தில் அவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்வது தொடர்பாக அவர்கள் கவலைப்படவில்லை. நாங்கள் கேட்க விரும்புவதெல்லாம் அவர்கள் யாராவது ஒருவர் கேரள மாநில நலத்திற்கான நின்றார்களா? அவர்கள் ஆர்எஸ்எஸ் எஜென்டாவுடன் நின்றார்கள். கேரளாவிற்காக ஒரு வார்த்தையாவது உச்சரித்தார்களா?.

    பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் தவறுகளுக்கு இடதுசாரி அரசை குறை கூற விரும்பினார்கள். சங்பரிவார் தனது திட்டத்தை செயல்படுத்தும்போது, மதசார்பற்ற எண்ணம் கொண்டவர்கள் அதை எதிர்க்கிறார்கள். ராகுல் காந்தி மதசார்பற்ற நபரா? சங்பரிவார் மனநிலை கொண்ட ஒருவரா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். சிஏஏ போன்ற சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் எப்படி போராட்டம் நடத்தாமல் இருக்க முடிகிறது.?

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.
    • கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் நேற்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

    ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

    இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் 450 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கடவரஅள்ளி கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு அப்பகுதி பொதுமக்கள் சமாதானம் அடைந்து 5.20 மணி முதல் வாக்கு பதிவு செய்ய தொடங்கினர். 6 மணிக்கு பிறகு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இரவு 9 மணி வரை வாக்குபதிவு நடைபெற்றது.

    கடவரஅள்ளி பகுதியில் மொத்தம் 455 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 377 பேர் மட்டும் வாக்களித்தனர். அந்த பகுதியில் மொத்தம் 76 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை.

    கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதியம் 1 மணிக்கும் மேல் வாக்களிக்க சென்றனர். 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் விநியோகம் செய்தனர். அதன்பிறகு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டவர்கள் இரவு 9 மணி வரை வாக்களித்தனர். இதில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    இதேபோல் வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

    மேலும், அந்த பகுதியில் 1050 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக மேம்பாலம் அமைக்கவில்லை. இதனால் பொது மக்கள் 4 வழிசாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

    அப்பகுதி பொது மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் யாரும் சமாதானம் ஆகவில்லை. இதன் காரணமாக கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

    ×