என் மலர்
அமெரிக்கா
- விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை.
- அவர்களின் அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அதிகாரிகளின் கூற்றுப்படி, யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையத்திலிருந்து ஆறு பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 441 விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
அவர்களின் அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது.
- ஆங்கிலம் பேசத் தெரியாத சிம்ரனுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை.
- குடும்பத்தினரை இந்தியாவில் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக ஜூன் 20 அன்று இந்தியாவிலிருந்து சென்ற சிம்ரன் (24) என்ற இந்தியப் பெண் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
புதன்கிழமை கண்காணிப்பு கேமராவில் கடைசியாகக் காணப்பட்ட சிம்ரன், அப்போது எந்த விதமான மன உளைச்சலிலும் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் உண்மையிலேயே திருமணத்திற்காக வந்தாரா அல்லது இலவசப் பயணத்திற்காக இந்த அவ்வாறு பொய் சொன்னாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆங்கிலம் பேசத் தெரியாத சிம்ரனுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை. வைஃபை மூலம் மட்டுமே இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தும் சிம்ரனின் குடும்பத்தினரை இந்தியாவில் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
இந்த சம்பவம் முன்னதாக டொமினிகன் குடியரசில் காணாமல் போன இந்திய மாணவி சுதீக்ஷா கொனாங்கியின் சம்பவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது.
- இதன்மூலம் ஒரு பெரிய வெற்றியைக் கண்டோம் என்று டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார்.
- இந்த மசோதாவை எதிர்த்தே டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து எலான் மஸ்க் பதவி விலகினார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் ஒரு பெரிய வெற்றியைக் கண்டோம் என்று டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த வெற்றிக்குப் பின்னால் பல குடியரசுக் கட்சி செனட்டர்களின் பணி இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
குறிப்பாக செனட்டர்கள் ரிக் ஸ்காட், மைக் லீ, ரான் ஜான்சன் மற்றும் சின்தியா லுமிஸ் ஆகியோரின் பணியை அவர் பாராட்டினார்.
அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மசோதா செனட்டில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்தார். இந்த மசோதா ஒப்புதல் வெற்றி டிரம்பிற்கு அதிக அரசியல் பலத்தை அளித்துள்ளது.
மசோதாவின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்த்தே டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து எலான் மஸ்க் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
- ஒபாமாவை மிச்செல் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவின.
- டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடக்கும் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றன. இதனையடுத்து விவாகரத்து குறித்த வதந்திகளை மிச்செல் ஒபாமா மறுத்தார். ஆனாலும் விவாகரத்து வதந்திகள் தற்போது வரை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு மீண்டும் ஒருமுறை மிச்செல் ஒபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மிச்செல் ஒபாமா, "எங்களுக்கு 60 வயது ஆகிறது. என் கணவருடன் நான் வெளியில் செல்வதை மக்கள் பார்க்காததால், எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக வதந்திகள் பரவுகின்றன. எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில்லை.
இறுதிச் சடங்குகள், பதவியேற்பு விழாககாலில் நான் கலந்து கொள்ள கூடாது என்று நான் முடிவெடுத்தேன். இந்த விஷயங்களில் இருந்து நான் விலகி இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தான் வதந்திகளுக்கு காரணமாகியுள்ளது" என்று தெரிவித்தார்.
- காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.
- ரான் டெர்மர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.
காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும், "காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தான் அங்கு நிறைய பணம் வழங்கப்படுகிறது. காசாவில் உள்ள மக்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்" என்று கூறிய டிரம்ப், காசாவில் உணவைத் திருடியவர்கள் மோசமானவர்கள் என்றும், அங்கு உணவு விநியோகம் திறமையாக செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
முன்னதாக காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.
இதற்கிடையே இஸ்ரேலிய அமைச்சர் ரான் டெர்மர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார். இந்த சந்திப்பின்போது போது காசாவில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரான் டெர்மர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.
நேற்று காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
- டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்ந்தோர் சேவைகள் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில், "பயங்கரவாதத்தை ஆதரிப்பது உள்ளிட்ட தீவிரமான குற்றங்களில் ஈடுபபவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும். அமெரிக்காவில் குடியிருப்பது என்பது நிபந்தனை உடனான சலுகையே தவிர உத்தரவாதமுள்ள உரிமை இல்லை" என்று பதிவிட்டுள்ளது.
- முடிவில் பெரும்பான்மை படி மாவட்ட நீதிபதிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
- டிரம்பின் பிறப்பால் குடியுரிமை பெறும் முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு எதிராக மாவட்ட நீதிபதிகள் தடையாக இருந்தனர்.
நீதிபதிகள் தன்னிச்சையாக அமெரிக்க அரசின் நிர்வாக நடவடிக்கைகளைத் தடுக்கும் அதிகாரங்களைக் அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது.
டிரம்பின் பிறப்பால் குடியுரிமை பெறும் முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு எதிராக மாவட்ட நீதிபதிகள் விதித்த தடையை எதிர்த்து டிரம்ப் தரப்பு உச்சநீதிமன்றம் சென்றது.
இதன் விசாரணையில், தனிப்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளால் பிறப்பிக்கப்படும் நாடு தழுவிய தடைகள் அவர்களின் அதிகார வரம்பை மீறியது என்று நீதிமன்றம் கூறியது. எனவே மாவட்ட நீதிபதிகளின் அதிகாரத்தை குறைக்க 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் சாதகமாகவும், 3 பேர் எதிராகவும் வாக்களித்தனர். முடிவில் பெரும்பான்மை படி மாவட்ட நீதிபதிகளின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.
இது தனக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி என்றும் இந்த தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூற விரும்புகிறேன். இது அரசியலமைப்பைப் மீட்டெடுக்கிறது என்று டிரம்ப் நேற்று பேட்டியளித்தார்.
பிறப்பால் குடியுரிமை பெறும் முறையை முடிவுக்குக் கொண்டுவருதல், திருநங்கைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு இடங்களை அமைக்க நிதி வழங்குவதை நிறுத்துதல் உட்பட தவறாக தடுக்கப்பட்ட பல கொள்கைகளை இப்போது தான் தொடர்வேன் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் உள்ள பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தானாகவே குடிமக்களாக ஆக மாட்டார்கள் என்று டிரம்பின் பிறப்பால் குடியுரிமை குறித்த நிர்வாக உத்தரவு வரையறுப்பது குறிப்பிடத்தக்கது.
- கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
- எரிந்து போன, வெடித்த நாடு, எதிர்காலம் இல்லாத, ஒரு சீரழிந்த இராணுவம், ஒரு பயங்கரமான பொருளாதாரம் மற்றும் அவர்களைச் சுற்றி மரணம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மிகவும் அசிங்கமான மரணத்திலிருந்து அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுத்தது. ஈரான் விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் சிலர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டின் அதி உயர் தலைவர் அயத்துல்லா காமேனி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசியது. இதில் அத்தளங்கள் முழுமையாக அழிந்ததாக டிரம்ப் அறிவித்தார்.
தொடர்ந்து கத்தாரில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்தை ஈரான் தாக்கியது. இதைதொடர்ந்து பின்வாங்கிய டிரம்ப், ஈரான்- இஸ்ரேல் இடையே 12 நாள் போர் முடிவடைந்ததாக அறிவித்தார். இதை இரு நாடுகளும் தாமதமாக ஏற்றன. மோதல் குறித்து பேசிய காமேனி, ஈரான் இந்த போரில் வெற்றி பெற்றதாகவும், அமெரிக்காவின் கன்னத்தில் ஈரான் அறைந்துவிட்டதாகவும் பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
இந்நிலையில் இதுகுறித்து நதனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், " போரினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டின் "உச்ச தலைவர்" என்று அழைக்கப்படும் ஆயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேலுடனான போரை வென்றதாக இவ்வளவு வெளிப்படையாகவும் முட்டாள்தனமாகவும் ஏன் கூறுகிறார். அவரது கூற்று பொய் என்று அவருக்குத் தெரியும். மிகுந்த நம்பிக்கை கொண்ட மனிதராக, அவர் பொய் சொல்லக்கூடாது.
அவரது நாடு அழிக்கப்பட்டது, அவரது மூன்று தீய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன, மேலும் அவர் எங்கு அடைக்கலம் புகுந்தார் என்பது எனக்குத் தெரியும், மேலும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகள் அவரது உயிரை முடிவுக்குக் கொண்டுவர அனுமதிக்கவில்லை.
நான் அவரை மிகவும் அசிங்கமான மற்றும் இழிவான மரணத்திலிருந்து காப்பாற்றினேன், அதற்காக அவர் "நன்றி, அதிபர் டிரம்ப்!" என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையில், போரின் இறுதிச் கட்டத்தில் , இஸ்ரேல் விமானங்கள் நேரடியாக தெஹ்ரானுக்குச் சென்று கொண்டிருந்தன, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும், மேலும் பல ஈரானியர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.
இதுவரை நடந்த போரின் மிகப்பெரிய தாக்குதலாக இது இருந்திருக்கும். ஆனால் அவ்விமானகளை மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்ப நான் கோரினேன். கடந்த சில நாட்களாக, ஈரான் பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் பிற விஷயங்களைப் பற்றி நான் ஆலோசித்து செய்து கொண்டிருந்தேன். இது ஈரானுக்கு முழுமையான, விரைவான மீட்சியைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளித்திருக்கும். ஆனால் வெறுப்பு அறிக்கையால் நான் உடனடியாக நிவாரணம் மற்றும் பலவற்றைக் கைவிட்டேன்.
ஈரான் உலக ஒழுங்கு ஓட்டத்தில் மீண்டும் இறங்க வேண்டும், இல்லையெனில் விஷயங்கள் அவர்களுக்கு மோசமாகிவிடும். அவர்கள் எப்போதும் மிகவும் கோபமாகவும், விரோதமாகவும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அது அவர்களுக்கு என்ன கொடுத்தது என்பதைப் பாருங்கள் - எரிந்து போன, வெடித்த நாடு, எதிர்காலம் இல்லாத, ஒரு சீரழிந்த இராணுவம், ஒரு பயங்கரமான பொருளாதாரம் மற்றும் அவர்களைச் சுற்றி மரணம்.
அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, அது இன்னும் மோசமாகிவிடும்! வினிகரை விட தேன் மூலம் நீங்கள் அதிகம் பெற முடியும் என்பதை ஈரானின் தலைமை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சுங்கத்துறைக்கு சொந்தமான நாய் ஹமேத் என்பவரின் உடைமையைப் பார்த்து குரைத்தது.
- இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சுங்கத்துறைக்குச் சொந்தமான நாய் எகிப்தில் இருந்து சென்ற ஹமேத் என்ற நபரின் உடைமையைப் பார்த்து குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் சுமார் 45 கிலோ தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இருந்தன. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஹமேத்தை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நாயின் சிகிச்சைக்கான செலவு சுமார் ரூ.70 ஆயிரத்தைச் செலுத்த உத்தரவிட்டது.
- கனடா அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.
- இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா.
வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.
இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நகலெடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் இதே காரியத்தைச் செய்துள்ளது. தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது.
இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.
அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாளுக்குள் கனடாவுக்குத் தெரிவிப்போம் என பதிவிட்டுள்ளார்.
- டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
- 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும்.
இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூர்ந்து, அடுத்த பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் இருக்கலாம் என்று கூறினார்.
"எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நேற்று சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களைச் செய்கிறோம்.
விரைவில் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் வரப்போகிறது. அது மிகப் பெரியது. நாங்கள் இந்திய சந்தைகளைத் திறக்கிறோம்" என்று டிரம்ப் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அதிகாரிகளும், வர்த்தக அமைச்சகத்தின் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை தற்போதைய 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.
- ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக ஈரானின் அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது. இந்த அறிக்கைகள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றார்.
மேலும் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானது. இது துணிச் லான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும்" டிரம்பின் தலைமையை குறைத்து மதிப்பிடுவதும் நோக்கமாகக் கொண்டவை.
நீங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அவர்களின் இலக்குகளில் சரியாகப் போடும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு முழுமையான அழிவு ஏற்பட்டது என்றார்.






