என் மலர்
பாகிஸ்தான்
- குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
- பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் குவெட்டாவில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டாவில் உள்ள சர்கூன் சாலையில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து குவெட்டா பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்து காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
குண்டுவெடிப்பு காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 32 பேர் காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தான் சுகாதார அமைச்சர், அனைத்து மருத்துவமனைகளிலும் நகரம் முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார். ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
- 70 ஆண்டுகளுகளாக எங்களது மக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படைய உரிமைகளுக்காக போராட்டம்.
- உரிமைகளை வழங்குங்கள் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுங்கள்.
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் வீதியில் திரண்டு பேராட்டம் நடத்தினர். அவாமி ஆக்ஷன் கமிட்டி (AAC) shutter-down and wheel-jam என்ற தலைப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் காலவரையற்ற போராட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, நேற்றிரவு முதல் இன்டர்நெட்டை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் நிர்வாகத்தில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பொருளாதார புறக்கணிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி ஏசிசி போராட்டத்தில் குதித்துள்ளது.
இந்த அமைப்பு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக 38 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட POK சட்டமன்றத்தில் 12 சட்டமன்ற இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும்.
மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின் கட்டணங்கள் மற்றும் பாகிஸ்தான் வாக்குறுதியளித்த நீண்ட காலமாக தாமதமான சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் அடங்கும்.
ஏசிசி-யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சவுகாத் நவாஸ் மிர் "எங்களுடைய பிரசாரம் எந்தவொரு அமைப்புக்கும் எதிரானது அல்ல. 70 ஆண்டுகளுகளாக எங்களது மக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படைய உரிமைகளுக்காக. போதும். உரிமைகளை வழங்குங்கள் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
- விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வழக்கம்.
- விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பாகிஸ்தானில் ஆன்லைன் PUBG விளையாட்டில் ஏற்பட்ட வெறியின் உச்சத்தில் தனது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களை சுட்டுக் கொன்ற 17 வயதுச் சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
லாகூரின் கஹ்னா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜைன் அலி. 2022 இல் இந்த சம்பவம் நடந்த போது ஜைன் அலிக்கு 14 வயது.
PUBG விளையாட்டில் தீவிரமாக அடிமையாக இருந்த சிறுவன், விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவழிப்பதாகத் தாயார் நாகித் முபாரக் (45) கண்டித்து வந்தார்.
மேலும், விளையாட்டில் டார்கெட்களை அடைய முடியாதபோது சிறுவன் ஆக்ரோஷமடைவது வழக்கம்.
அப்போது ஒரு நாள், பல மணி நேரம் PUBG விளையாடிய ஜைன் அலி, ஒரு இலக்கைத் தவறவிட்டதால் ஆத்திரமடைந்தான். அதேநேரம் தாயாரும் சிறுவனை அதிக நேரம் விளையாட்டில் மூழ்கியிருப்பதாக கண்டிக்கவே அவன் மேலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தாயார் நாகித் முபாரக், அண்ணன் தைமூர் (20), மற்றும் இரண்டு சகோதரிகள் மஹ்னூர் (15), ஜன்னத் (10) ஆகியோர் தூங்கும் சமயத்தில் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் ஜைன் அலி அவர்களை சுட்டுக் கொன்றான்.
விளையாட்டின் தாக்கத்தால் இந்தக் கொலையைச் செய்ததாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளி ஜைன் அலிக்கு அவனது வயது காரணமாக, மரண தண்டனைக்குப் பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் (ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள்) என மொத்தம் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
- கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது.
- இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் மாத்ரே தாரா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் விமானப்படை சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. எட்டு LS-6 என வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புப்படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின்போது பொது மக்கள் பலர் உயிரிழந்து வரும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளது. இதில் 139-க்கும் அதிகமாக பொதுமக்கள், 79 பாகிஸ்தான் போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
கைபர் பக்துன்க்வா பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். நிலப்பரப்பை மலைகள் சூழ்ந்துள்ள இந்த மாகாணம் இயற்கையாகவே மறைவிடத்திற்கு வழிவகுத்துள்ளது.
சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், தங்களுடைய தளத்தை கைபர் பக்துன்க்வாவிற்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
- வகுப்பறையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் ஒன்பது மாணவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
- நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பாகிஸ்தானில் டியூசன் சென்டர் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 ஆசிரியர்கள், 7 மாணவர்கள் உயிரிழந்தனர்.
லாகூருக்கு வடமேற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள ஹபீசாபாத் நகரில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
டியூஷன் சென்டரின் கூரை இடிந்து விழுந்தபோது வகுப்பறையில் இருந்த இரண்டு ஆசிரியர்களும் ஒன்பது மாணவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.
மீட்புப் பணியாளர்கள், ஆறு முதல் பத்து வயது வரையிலான ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது இரண்டு ஆசிரியர்கள் உட்பட ஏழு பேரின் உடல்களை மீட்டனர்.
மேலும் படுகாயமடைந்த நான்கு மாணவர்களை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சமீபத்திய பலத்த மழை கட்டிடத்தை பலவீனப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
- துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடியாக உடனே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இது போர் நிறுத்த மீறலாகாது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது.
இதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது. பின்னர் இரு நாட்டு ராணுவங்கள் இடையே சண்டை மூண்டது.
4 நாள் மோதலுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
- ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
- நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையில் மோதல் நீடித்த வந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இருநாடுளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டது. 3 நாட்கள் நீடித்த இந்த சண்டை, இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிசல் அப்படியே நீடிக்கிறது.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பாகிஸ்தான்- சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் முக்கியம்சம் என்னவென்றால், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தான் பாதுகாக்க வரும். இது இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஏனென்றால், இந்தியா- சவுதி அரேபியா இடையே நல்ல நட்புறவு உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியதாவது:-
ஆமாம். நிச்சயமாக. இதில் எந்த சந்தேகமும் இல்லை. நேட்டோ ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவில், கூட்டு பாதுகாப்பு எனக் குறிப்படப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள ஒரு நாட்டுக்கு எதிராக தாக்கதல் நடத்தப்பட்டால், அனைத்து நாட்டிற்கும் எதிராக தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படும் என்பதுதான் இதன் முக்கிய அர்த்தம். இதேபோன்ற ஒபந்தந்தம்தான் இரு நாடுகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா உடனான ஒப்பந்தம், தாக்குதல் ஏற்பாடு என்பதை விட, பாதுகாப்பு ஏற்பாடு என்பதுதான். பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு (தாக்குதல்) இருந்தால் அதை நாங்கள் ஒன்றாக எதிர்ப்போம்.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவது எங்களது நோக்கம் அல்ல. ஆனால், மிரட்டில் ஏற்பட்டால், அதன்பின் செயல்பாட்டிற்கு ஏற்பாடு நடைபெறும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் எங்களுடைய திறன்கள் முற்றிலுமாக கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.
பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம்.
- இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை திட்டவட்டமாக இந்தியா மறுத்தது.
பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம். இதில் 3-வது நாடு தலையீடு இல்லை என்று இந்தியா தெரிவித்தது. ஆனாலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தநிலையில் போரை நிறுத்த அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமெரிக்க வெளியுறவு செயலர் ரூபியோ மூலம் எனக்கு மே 11-ந்தேதி போர் நிறுத்தம் குறித்த தகவல் வந்தது. இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் ஒரு பொதுவான இடத்தில் விரைவில் ஒரு பேச்சுவார்த்தை இருக்கும் என்று எனக்கு சொல்லப்பட்டது. ஜூலை 25-ந் தேதி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை நான் சந்தித்தேன்.
அப்போது மோதல் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சு வார்த்தையின் நிலை குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் இது ஒரு இருதரப்பு பிரச்சினை என்று இந்தியா கூறியதாக ரூபியோ பதிலளித்தார்.
இந்தியா எந்த 3-ம் தரப்பு தலையீட்டையும் திட்டவட்டமாக நிராகரித்தது. பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் இருதரப்பு அடிப்படையில் கண்டிப்பாக கையாளப்பட வேண்டும் என்று இந்தியா எப்போதும் கூறி வருகிறது.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பொருளாதாரம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்த கருத்து மூலம் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்பது மேலும் உறுதியாகி உள்ளது.
- பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்.
- பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முகாமும் ஒன்று.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைபின் கமாண்டர் இல்யாஸ் காஷ்மீரி, இந்தியா தாக்குதலில் மசூத் அசாத்தின் குடும்பம் சிதைந்ததாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற மிசன் முஷ்தபா மாநாட்டில் இல்யாஸ் காஷ்மிரி உருதில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பலர் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், அவர்களுக்கு மத்தியில் இல்யாஸ் காஷ்மீரி "சித்தாந்தம்மற்றும் நாட்டின் புவிபரப்பு எல்லையை பாதுகாப்பதற்கு நாம் டெல்லி, காபூல், கந்தகார் மீது தாக்கதல் நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பஹவல்பூரில் இந்திய தாக்குதலில் சிதைந்துவிட்டனர்" எனக் கூறுவதுபோல் வீடியோவில் உள்ளது.
லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹல்வர்பூர் ஜமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது இந்திய தாக்குதல் நடத்தியதில் மசூத் அசார் குடும்பத்தை சார்ந்த 10 பேரும், அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. மசூத அசாரின் மூத்த சகோதரி, அவருடைய கணவர், மருமகன், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.
1999ஆம் ஆண்டு IC-184 விமானம் கடத்தப்பட்டபோது, விமானிகளுக்குப் பதிலாக அசார் ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு ஐ.நா. மசூத் அசார உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. 2019 ஏப்ரலில் இருந்து மசூத் அசார் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஜேஇஎம் இந்தியாவில் 2001 பாராளுமன்ற தாக்குதல், 2000-த்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளது.
- உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடரில் நடித்தவர்.
- உமர் ஷா உயிரிழந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லாகூர்:
பாகிஸ்தானில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர் உமர் ஷா. இவருக்கு வயது 15.
இந்நிலையில், மாரடைப்பு காரணமாக உமர் ஷா உயிரிழந்தார் என அவரது சகோதரர் அகமது ஷா தெரிவித்துள்ளார்.
உமர் ஷா ஜீதோ பாகிஸ்தான் என்ற பிரபல டி.வி. தொடர் உள்பட பல்வேறு தொடர்களில் நடித்தவர்.
டிக் டாக் பிரபலமான அகமது ஷா, உமர் ஷாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய வயதிலேயே உமர் ஷா மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.
காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் இந்திய போர் விமானம் ஊடுருவி, முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்பட 3 முக்கிய கட்டமைப்புகள் மீது குண்டுகளை வீசியது. இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன.
இந்தநிலையில் சேதம் அடைந்த லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தை மீண்டும் கட்டும் பணியை பயங்கரவாதிகள் தொடங்கி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சேதம் அடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
பின்னர் அங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை முடித்து புனரமைக்கப்பட்ட வளாகத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி திறக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இந்த கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.






