என் மலர்
உலகம்

ஆபரேசன் சிந்தூர்: லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தை மீண்டும் அமைக்கும் பாகிஸ்தான்
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.
காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பு நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் இந்திய போர் விமானம் ஊடுருவி, முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் உள்பட 3 முக்கிய கட்டமைப்புகள் மீது குண்டுகளை வீசியது. இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன.
இந்தநிலையில் சேதம் அடைந்த லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தை மீண்டும் கட்டும் பணியை பயங்கரவாதிகள் தொடங்கி உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சேதம் அடைந்த கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
பின்னர் அங்கு புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளை முடித்து புனரமைக்கப்பட்ட வளாகத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி திறக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இந்த கட்டுமான பணிகளுக்கு பாகிஸ்தான் அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது.






