என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான்.
    • பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான்.

    விஜயதசமி என்பது வெற்றியை குறிக்கும் பண்டிகையாகும். நவராத்திரி விழா முடிந்த 10-வது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த விஜயதசமி கொண்டாடுவதற்கு பலவிதமான புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இருப்பினும் பெரும்பாலானோர், பராசக்தி மகிஷாசுரனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடிய நாளே, 'விஜயதசமி' என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    'விஜய்' என்றால் வெற்றி என்றும், 'தசம்' என்றால் பத்து என்றும் பொருள். அன்னை, மகிஷாசுரனுடன் 9 நாள் போரிட்டு, 10-வது நாள் பெற்ற வெற்றியே விஜயதசமி ஆகும்.

    முன்பொரு காலத்தில் தனு என்ற அசுரன் இருந்தான். அவனுக்கு மிகவும் பலசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் இருவரும், தங்களுக்கு மிக சக்தி வாய்ந்த புத்திரர்கள் வேண்டும் என்பதற்காக கடும் தவம் புரிந்தனர்.

    கரம்பன் என்பவன் அன்ன ஆகாரம் இன்றி நீரில் நின்று தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.

    ரம்பன் என்பவன் யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான்.

    தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.

    அவனின் தவத்தில் மகிழ்ந்த அக்னி தேவன், அவன் முன் தோன்றி, 'உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.

    உடனே ரம்பன், 'எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்' என்றான். அதற்கு அக்னி தேவன், "நீ எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறாயோ, அந்த பெண்ணிடம் உனக்கு புத்திரன் பிறப்பான்" என்று வரம் கொடுத்தார்.

    இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையைப் பார்த்த உடன், அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தைப் பிறந்தது.

    எருமைத் தலையும், மனித உடலுமாக பிறந்த அந்தப் பிள்ளை 'மகிஷாசுரன்' என்று அழைக்கப்பட்டான். (இது மகிஷாசுரன் பிறப்பு பற்றி புராணங்கள் கூறும் பல கதைகளில் ஒன்று).

    மகிஷாசுரன், மகாமேரு என்ற மலையில் பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், "மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் வேறு வரம் கேள்" என்றார்.

    அதற்கு அவன், "தேவர்களாலும், பூதங்களாலும், ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது" என்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள், அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால், பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

    மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும், தாம்ரன் என்பவன் தனாதிபதியாகவும் இருந்தனர். அஸிலோமா, பிடாலன், பாஷ்களன், கால பந்தகன், உதர்க்கன், திரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் இருந்தனர். அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் அஞ்சனம் என்ற மலையில் மாஹிஷம் என்ற மிக அழகிய பட்டினத்தை நிர்மாணித்தான். தேவர்களை மிரட்டி, தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.

    மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.

    புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள்.

    இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள்.

    தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து, மகிஷாசுரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த அன்னை, 'மகிஷாசுர மர்த்தினி' என்று அழைக்கப்பட்டாள்.

    எந்த இடத்தில் மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் 'தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

    • கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.
    • நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசினோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பழிவாங்க நினைத்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.

    இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

    * கரூர் பெருந்துயரத்திற்காக விஜய் வருந்துவதாக தெரியவில்லை.

    * 10 மணி நேரமாக அவரை காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள், அடியெடுத்து வைக்க கூட இடமில்லாமல் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, தற்காத்துக்கொள்ள முயன்ற நிலையில்தான் இந்த பேரவலம் நடந்தேறியது என்ற உண்மையை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை.

    * கரூரில் 41 பேர் பலியானது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பில்லாத போக்கால் ஏற்பட்ட பேரிடர்.

    * நள்ளிரவில் கரூருக்கு சென்று கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பழிசுமத்தி விஜய் பேசியிருப்பது அவரது நேர்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

    * உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே விஜய் நோக்கமாக கொண்டிருக்கிறார்.

    * சங்பரிவார்களின் சதிவலையில் சிக்கி உழல்வதையே விஜயின் வீடியோ உறுதிபடுத்துகிறது.

    * சங்பரிவார் சக்திகளிடம் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    * தி.மு.க.வுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்பவர்களின் கோரப்பிடியில் விஜய் சிக்கியுள்ளார்.

    * தமிழ்நாட்டை குறி வைத்து வெளிப்படையாகவே தங்களது சித்து விளையாட்டை பா.ஜ.க. தொடங்கி விட்டது.

    * தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பா.ஜ.க.வின் கருவி தான் என்பது உறுதியாவதாக கூறியுள்ளார். 

    • நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
    • பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று இரவு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் சில நிமிடங்களுக்குள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

    இருப்பினும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். வரவு திருப்தி தரும். நினைத்தது நிறைவேறும். சொந்த பந்தங்களின் வாழ்த்துகள் உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

    மிதுனம்

    தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சனைகள் உருவாகலாம்.

    கடகம்

    நிதி நிலை உயரும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். ஆரோக்கியத் தொல்லை அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும்.

    கன்னி

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் கூடும். குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் முதலீடு செய்யும் சிந்தனை உருவாகும்.

    துலாம்

    யோகமான நாள். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இட மாற்றம், வருமானம் திருப்தி தரும்.

    விருச்சிகம்

    காரிய வெற்றிக்கு கலைவாணியை வழிபட வேண்டிய நாள். புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

    மகரம்

    சந்தோஷம் அதிகரிக்க சரஸ்வதியை வழிபட வேண்டிய நாள். ரொக்கத்தால் வந்த பிரச்சனை அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நட்பால் நன்மை உண்டு.

    மீனம்

    ஆயுத பூஜையில் ஆர்வம் காட்டும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

    • கடந்த மாதம் ரூ.1,738-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.

    அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 16 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.1,754.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,738-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது. 

    • தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
    • பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 3-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ரதோற்சவம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-15 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி பிற்பகல் 3.33 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : உத்திராடம் (முழுவதும்)

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை. மகாநவமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ரதோற்சவம். ஏனாதி நாயனார் குரு பூஜை. மதுரை ஸ்ரீ கூடலழகர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.

    கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-சுகம்

    கடகம்-வாழ்வு

    சிம்மம்-பொறுமை

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஆதரவு

    மகரம்-உற்சாகம்

    கும்பம்-சாந்தம்

    மீனம்-உதவி

    • சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
    • குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.

    இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.

    பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு.

    எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

    குமாரி தேர்வு செய்யப்படும் முறை

    2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.

    இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

    குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும்.

    குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.

    குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.

    ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர். 

    • முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
    • 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.

    ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது.

    2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

    ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியால் ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ADB தெரிவித்துள்ளது.

    அதேபோல் 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.

    அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி (Goods Exports) குறைந்தாலும், சேவை ஏற்றுமதி (Service Exports) வலுவாக இருக்கும் என ADB தெரிவித்துள்ளது.  

    • பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன என்று அவரின் தந்தை தெரிவித்தார்.
    • லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    லடாக்கில் மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை லேவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் உடனான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் முன்னாள் ராணுவ வீரரான ட்சேவாங் தார்ச்சின் என்பவரும் ஒருவர். 1999 முதல் 2017 வரை அவர் ராணுவத்தில் பணியாற்றினார். சியாச்சின் பனிமலையில் பணியாற்றியவர் ஆவார். கார்கில் போரில் அவர் பங்குபெற்றார். அவரது தந்தையும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்.

    மகன் இறப்பு குறித்து தந்தை அளித்த பேட்டியில், "என் மகன் ஒரு தேசபக்தன். அவன் கார்கில் போரில் போராடினான். மூன்று மாதங்கள் போர்முனையில் இருந்தான்.

    டா டாப் மற்றும் டோலோலிங்கில் பாகிஸ்தானியர்களுடன் சண்டையிட்டான். பாகிஸ்தானியர்களால் அவனைக் கொல்ல முடியவில்லை, ஆனால் நம் சொந்தப் படைகள் அவன் உயிரைப் பறித்துவிட்டன" என்று ஆதங்கத்துடன் கூறினார்.

    அவரின் பேட்டியை பகிர்ந்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "தந்தை ராணுவத்தில், மகன் ராணுவத்தில் - தேசபக்தி அவர்களின் இரத்தத்தில் ஊறுகிறது.

    லடாக்கிற்காகவும் அவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பாஜக அரசு இந்த துணிச்சலான தேச மகனை சுட்டுக் கொன்றது. 

    தந்தையின் வலி நிறைந்த கண்கள் ஒரு கேள்வியைக் கேட்கின்றன: இன்று தேசத்திற்கு சேவை செய்ததற்கான வெகுமதி இதுதானா?

    லடாக்கில் நடந்த இந்தக் கொலைகள் குறித்து பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

    மோடி ஜி, நீங்கள் லடாக் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டீர்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைக் கோருகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் - வன்முறை மற்றும் பயத்தின் அரசியலை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • பத்மஸ்ரீ முகமது ஷாஹித்தின் வீட்டை பாஜக அரசு இடித்துள்ளது.
    • பாஜக புல்டோசர் அரசாங்கத்திடம் மனிதாபிமானமும், நாட்டின் மாவீரர்களுக்கு மரியாதையும் இல்லை

    உத்தரப் பிரதேசத்தில் சாலை விரிவாக்க திட்டத்திற்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முன்னாள் ஹாக்கி வீரரின் வீடு இடக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    1980 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி இந்திய அணியில் விளையாடிய வீர்ர் முகமது ஷாஹித். இவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016 இல் அவர் உயிரிழநதார்.

    ஷாஹித்தின் மூதாதையர் வீடு கராச்சி-சந்தாஹா சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதிகாரிகள் வீட்டின் ஒரு பகுதியை புல்டோசர்கள் மூலம் இடித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பத்மஸ்ரீ முகமது ஷாஹித்தின் வீட்டை பாஜக அரசு இடித்துள்ளது , அது வெறும் வீடு மட்டுமல்ல, நாட்டின் விளையாட்டு பாரம்பரியத்திற்கு ஒரு சான்று என்றும் பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

    ஆசாத் சமாஜ் கட்சித் தலைவரும் எம்பியுமான சந்திரசேகர் ஆசாத், பாஜக புல்டோசர் அரசாங்கத்திடம் மனிதாபிமானமும், நாட்டின் மாவீரர்களுக்கு மரியாதையும் இல்லை என்றும் விமர்சித்தார்.   

    • தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.
    • விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டார். அதில் கரூரில் மட்டும் ஏன் நெரிசல் ஏற்பட்டது, உண்மை விரைவில் வெளிவரும் என விஜய் பேசியிருந்தார்.  

     இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கட்சி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

    தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காதது, அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

    உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 பேர் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.

    இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

    மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

    இத்தகைய உள்நோக்கங்கள் விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ×