என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை.
    • வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள்.

    மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்து கவுரவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் சீனி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:

    பாரதியாரும் அவரது பணிகளும் நமக்கு எப்போதும் தேவை. தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதியாரை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை. தமிழ்.. தமிழ்… என்று பேசுபவர்கள் யாரும் தமிழுக்கும், தமிழ் இலக்கணத்திற்கும் சேவையாற்றவில்லை.

    பாரதம் ஒருங்கிணைந்த நாடு என்பதை ஏற்க மறுக்கும் கட்டமைப்பு இங்கே இருக்கிறது.

    காஞ்சி - காசி இடையே இருக்கும் ஒற்றுமையை பாரதியார் பேசினார். ஆனால், வடக்கு - தெற்கு என்று இங்கே பிரித்து வைத்திருக்கிறார்கள். பாரதியார் வேதங்களை போற்றினார், இங்கு வேதங்களை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள்.

    இம்மாநிலம் முழுவதும் சுற்றி இருக்கிறேன். மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை என்று பேசினார்.

    • இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
    • அனைத்து போட்டிகளும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்க இருக்கிறது. நாளை (பிப்ரவரி 19) கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. நாளை தொடங்கும் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 20) நடைபெறுகிறது.

    சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பங்கேற்கும் அணிகள்:

    குரூப் ஏ: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம்

    குரூப் பி: தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து

    முழு அட்டவணை:

    பிப்ரவரி 19: பாகிஸ்தான் v நியூசிலாந்து, கராச்சி (பாக்.)

    பிப்ரவரி 20: வங்கதேசம் v இந்தியா, துபாய்

    பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா, கராச்சி (பாக்.)

    பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லாகூர் (பாக்.)

    பிப்ரவரி 23: பாகிஸ்தான் v இந்தியா, துபாய்

    பிப்ரவரி 24: வங்கதேசம் v நியூசிலாந்து, ராவல்பிண்டி (பாக்.)

    பிப்ரவரி 25: ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, ராவல்பிண்டி (பாக்.)

    பிப்ரவரி 26: ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர் (பாக்.)

    பிப்ரவரி 27: பாகிஸ்தான் v வங்கதேசம், ராவல்பிண்டி (பாக்.)

    பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர் (பாக்.)

    மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி (பாக்.)

    மார்ச் 2: நியூசிலாந்து v இந்தியா, துபாய்

    மார்ச் 4: அரையிறுதி 1, துபாய்

    மார்ச் 5: அரையிறுதி 2, லாகூர், பாகிஸ்தான்

    மார்ச் 9: லாகூர் (இந்தியா தகுதிபெற்றால் துபாயில் நடக்கும்)

    மார்ச் 10: ரிசர்வ் நாள்

    போட்டி நேரம்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறும். போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு போடப்படும். போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.

    தொலைகாட்சி மற்றும் வலைதளங்களில் பார்ப்பது எப்படி?

    சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். இதுதவிர ஆன்லைனில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

    • ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது.
    • பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.

    ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

    குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவாரா? என்று வினவியுள்ளார். 



    • 1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'.
    • படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது.

    1995ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் ரஜினியின் 'பாட்ஷா'. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நக்மா, ரகுவரன், விஜயகுமார், தேவன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையில் ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் 'பாட்ஷா'. இந்த படம் 2017-ம் ஆண்டு மீண்டும் டிஜிட்டலாக ரீஸ்டோர் செய்து வெளியிடப்பட்டது.

    சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் திரைக்கதையாக அமைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரன் ஏற்று நடித்திருந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் இன்று ரசிகர்கள் மாஸ் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.

    படத்தில் இடம் பெற்ற பாடல்கள், தேவாவின் பின்னணி இசை பட்டித் தொட்டி எங்கும் எதிரொலித்தது. இன்றுவரை மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தில் இடம் பெற்ற வசனங்கள், ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. மாணிக் பாஷா, மார்க் ஆண்டனி என இன்றும் டிரேட் மார்க் வசனமாக அமைந்துள்ளது.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பாட்ஷா படம் 30 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து பேசினார். அதாவது "படம் 4கே டிஜிட்டல் வடிவத்தில், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் பாட்ஷா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குனியமுத்தூர் பகுதியில் தான் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறும், அங்கு தனியாக பேசலாம் என கூறி அழைத்துள்ளார்.
    • அவரிடம் பாட்டியும், போலீசாரும் துருவி, துருவி விசாரித்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெறாததால் அடுத்து படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இவரது பெற்றோர் வெளியூரில் உள்ளனர். இங்கு தனது பாட்டி பராமரிப்பில் இருந்து வருகிறார்.

    சிறுமி, செல்போனில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். வலைதளத்தில் மூழ்கி கிடந்த அவருக்கு குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பழக்கம் ஆனார். அந்த மாணவர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர். இங்கு தங்கியிருந்து கல்லூரியில் படித்து வந்தார்.

    சிறுமியும், அந்த மாணவரும் அடிக்கடி போனில் பேசியும், சமூக வலைதளங்கள் மூலமும் பேசி வந்தனர். அந்த மாணவர், மாணவியை அடைய திட்டமிட்டு நேரம் பார்த்து காத்திருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அந்த மாணவியை அவர் தொடர்பு கொண்டுள்ளார்.

    குனியமுத்தூர் பகுதியில் தான் தங்கியிருக்கும் அறைக்கு வருமாறும், அங்கு தனியாக பேசலாம் என கூறி அழைத்துள்ளார்.

    அந்த பெண்ணும், மாணவரை நம்பி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். தனது பாட்டியிடம் வெளியில் செல்வதாகவும், உடனே திரும்பி விடுவதாகவும் கூறி விட்டு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இரவை கடந்தும் அந்த பெண் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பாட்டி உக்கடம் போலீஸ்நிலையம் சென்று புகார் செய்தார். போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை அந்த பெண் வீடு திரும்பினார். அவரிடம் பாட்டியும், போலீசாரும் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவலை அந்த பெண் தெரிவித்தார்.

    குனியமுத்தூரில் கல்லூரி மாணவர் தங்கியிருந்த அறைக்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் மாணவர் ஆசைவார்த்தைகள் கூறி இருக்கிறார். பின்னர் பெண்ணை நிர்வாணப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    அதன்பின் மாணவருடன் படித்த மேலும் 6 மாணவர்களும் அங்கு வந்துள்ளனர். அவர்களும் ஒருவர் பின் ஒருவராக அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். அங்குள்ள அறையில் அந்த பெண்ணை சிறைவைத்து இரவு விடிய, விடிய 7 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    பின்னர் காலையில் அந்த பெண்ணை வீட்டருகே கொண்டு வந்து விட்டு விட்டு 7 பேரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.

    அந்த பெண் அளித்த தகவலின் பேரில் கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறுமியை சிறைவைத்து 7 பேரும் பலாத்காரம் செய்தது உறுதியானது.

    இதையடுத்து 7 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

    20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • எத்தனை பேர் குளித்தனர் என்பது குறித்து தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள்
    • உ.பி.யின் வளர்ச்சிக்காக இரட்டை எஞ்சின் பாஜக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும்போது எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 'ஆளுநரே திரும்பி போ' (Go Back Governor) என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    சட்டமன்றத்தில் ஆளுநர் ஆனந்திபேசன் படேல் உரையாற்றியபோது, சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 'கோ பேக் கவர்னர்' என்ற முழக்கத்தை எழுப்பினர்.

    மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் போது ஏற்பட்ட மரணங்களுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் மாநில சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    உத்தரப்பிரதேச அரசு மகா கும்பமேளாவை ஏற்பாடு செய்தது. ஆனால் நிர்வாகத்தில் பல தவறுகள் இருந்ததால் பலர் உயிரிழந்தனர்.

    அரசு இறப்பு எண்ணிக்கையை கூட வெளியிடவில்லை. எத்தனை பேர் குளித்தனர் என்பது குறித்து தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுக்கிறார்கள் என்று என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசுதோஷ் சின்ஹா குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையில், மார்ச் 5 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்தார்.

    அமர்வை சுமூகமாக நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பொறுப்பும் கூட. கடந்த 8 ஆண்டுகளில் உ.பி.யின் வளர்ச்சிக்காக இரட்டை எஞ்சின் பாஜக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவு செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

    முன்னதாக மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி மவுனி அமாவசையை முன்னிட்டு அதிக மக்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தாதாக அரசு தெரிவித்தது. அவர்களுக்கு 25 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    • இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது.
    • காதலர் தினத்தை முன்னிட்டு bye bye bhaiya பாடலை இசையமைத்து, பாடி ஒரு இண்டிபெண்டண்ட் பாடலாக வெளியிட்டார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகராவார். இவர் இசையமைப்பில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. இவர் இயக்கி நடித்து தயாரித்து கடந்த ஆண்டு வெளியான கடைசி உலகப் போர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அவ்வபோது மியூசிக் டூரை நடத்தி வருகிறார். உலகமெங்கும் பல நாடுகளில் கான்செர்ட் நிகழ்ச்சிகளை செய்கிறார். சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு bye bye bhaiya பாடலை இசையமைத்து, பாடி ஒரு இண்டிபெண்டண்ட் பாடலாக வெளியிட்டார். அதில் யூடியூப் பிரபலம் ஹர்ஷத் கான் நடித்து இருந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக ஹிப்ஹாப் ஆதி சிங்கப்பூரில் ஒரு கான்செர்ட் நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அப்பொழுது அவர் அங்கு நடிகர் மற்றும் தொழிலதிபரான நெப்போலியனை சந்தித்தார். அவரை சந்திப்பை குறித்து தற்பொழுது அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் அதே பாசம் ❤️ என் மனம் கவர்ந்த கலைஞர், மனிதர் - எங்கள் அன்பிற்குரிய நெப்போலியன் அண்ணா". இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இவர்கள் இருவரும் அன்பறிவு திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
    • இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.

    8 அணிகள் மோதும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஜெர்சி அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புகைப்படங்களின் படி இந்திய அணி ஜெர்சியில் "சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான்" என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது என கூறப்பட்டது. எனினும், தற்போது பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சீருடை சார்ந்த ஐ.சி.சி. விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளது.

    இது குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் தேவ்ஜித் சைகா, "சாம்பியன்ஸ் டிராபியில் சீருடை சார்ந்து ஐ.சி.சி. பிறப்பிக்கும் அனைத்து விதிகளையும் பி.சி.சி.ஐ. பின்பற்றும்," என்று தெரிவித்தார்.

    ஐ.சி.சி.-யின் சீருடை விதிகளின் படி ஐ.சி.சி. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் அந்த தொடரை நடத்தும் நாட்டின் பெயரை தங்களது ஜெர்சியில் இடம்பெற செய்ய வேண்டும். இது தொடர்பான போட்டிகள் தொடரை நடத்தும் நாட்டை தவிர்த்து பொதுவான இடத்தில் நடந்தாலும், இந்த விதிமுறையை பின்பற்றுவது அவசியம் ஆகும்.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. எனினும், இதர காரணங்களால் அதிகாரப்பூர்வ போட்டோஷூட் அல்லது கேப்டன்கள் போட்டோஷூட் நடத்தப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.



    • சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது.
    • விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறை வாசிகளுக்கு ரூ.3.75 கோடி உதவி தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது.

    விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதவி தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது. அசைவ உணவு, சத்தான உணவு வழங்கப்படுகிறது. சிறைவாசிகளுக்கு உதவி செய்வதில் தமிழக அரசு முன் மாதிரியாக திகழ்கிறது.

    அவர்களது நலனில் அக்கறை கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. சிறைக் கூடங்களை தண்டனை இடமாக பார்க்கவில்லை. அது சீர்திருத்த இடமாக பார்க்கப்படுகிறது. விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சிறைவாசிகளுக்கான நலச்சங்கம் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    சிறைவாசிகள் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். இந்த நிதியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நம்பிக்கையுடன் செல்லுங்கள். புதிய உலகத்தை பாருங்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பி.கே.சேகர்பாபு , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், உயர் அதிகாரிகள் தீரஜ் குமார், மகேஷ்வர் தயாள், கனகராஜ், முருகேசன் மற்றும் சிறை மீண்டோர் நலச் சங்க கவுரவ பொருளாளர் ஞானேஸ்வரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    • 2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார்.
    • விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    அந்த இலக்கினை விரைவில் எய்திடும் வகையில் அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

    2000-ம் ஆண்டு கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

    இதன் அடுத்தகட்டமாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூரில், ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் 6 தளங்களுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப் போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் 314 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் 12 தளங்களுடன், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ., ஸ்டார்ட் அப்போன்ற நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இப்பூங்காக்கள் சுமார் 12,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு, குளிர்சாதன வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.

    இதன்மூலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.

    இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
    • தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறி அது தொடர்பான விவரங்களை பேனர்களாகவும் வைத்திருந்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் ஆ.பழனி, முன்னாள் எம் .எல்.ஏ. புரசை வி. எஸ். பாபு, பகுதி கழக செயலாளர்கள் வெற்றிலை கே.மாரிமுத்து, பட்மேடு டி.சாரதி, கே.சி. கார்டன் எம். சந்திரசேகர், முகம்மது இம்தியாஸ், வழக்கறிஞர் இஸ்மாயில், துறைமுகம் பயாஸ், சேத்துப்பட்டு எ.சம்பத்குமார், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிரசாத், 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட மாணவர் அணி செயலாளர் எம்.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில்.வி. ஆயிரம்விளக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வழக்கறிஞர் சதாசிவம். மற்றும் கொளத்தூர் கே.கணேசன், ஆவின் ஆர்.அருள்வேல், லண்டன் எம்.வெங்கடேசன், இனியன், நேரு நகர் எஸ்.கோதண்டன், வில்லிவாக்கம் ஜெய் சுரேஷ், என். கோவிந்தன், ஆதிலட்சுமி, கொளத்தூர் கிருபா, சேத்துப்பட்டு பிரகாஷ், அயன் புரம் சரவணன், மேட்டு தெரு மதன், வட்ட செயலாளர் மாரியப்பன் அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் இ.சி.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள். தமிழகத்தில் கடந்த 100 நாட்களில் 63 பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறி அது தொடர்பான விவரங்களை பேனர்களாகவும் வைத்திருந்தனர்.

    ×