என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம்.
    • ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது.

    அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை இத்தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த சோக சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் போடாமல் இருந்தது.

    இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இன்று ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது.

    ஆனால் ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அன்றிலிருந்து மௌனம் எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல், மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.

    அப்படித்தான் RCB CARES உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை. ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க... ஒன்றாக முன்னேற... கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும். விரைவில் மேலும் விவரங்கள்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.
    • திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாப்பட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாப்பட்டி. இந்த சிறு கிராமம் தான் தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் படுபயங்கர ஃபேமஸ் ஆனது.

    ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க... சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.

    இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இதையடுத்து கூமாப்பட்டிக்கு வெளியூரில் இருந்து இளைஞர்கள் படையெடுத்தனர்.

    கூமாப்பட்டி கிராமத்தை டிரெண்ட் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி, பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் பணி எதுவும் நடக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    அதனை தொடர்ந்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது.
    • மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.

    சென்னை:

    சென்னையின் பாரம்பரிய கட்டிடத்தின் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது. அதன் எழில்மிகு தோற்றம் மாறாமல் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    எழும்பூர் ரெயில் நிலையத்துடன் மெட்ரோ ரெயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகர பஸ் வசதி, கார், ஆட்டோ போன்றவை எளிதாக பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க ஓட்டல்கள், ஷாப்பிங் செய்ய வணிகப் பகுதி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பல அடுக்கு பார்க்கிங் வசதி தயாராகிறது.

    ரெயில்கள் வருகை மற்றும் புறப்பாடுக்கான கட்டிடம், தரை தளம் மற்றும் 3 அடுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. ரெயில்கள் வருகை மற்றும்புறப்பாடுக்கு தனித்தனி பிரத்யேக பகுதிகள் ஒதுக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு பயணிகளுக்காக சிறப்பு வழியும் அமைக்கப்படுகிறது.

    ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது. காந்தி இர்வின் சாலையிலும் பூந்தமல்லி சாலையிலும் 5 அடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.

    பயணிகள் நடந்து செல்வதற்கு உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது. பிளாட்பாரங்களை கடக்கவும், சாலைக்கு செல்ல நடை மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. இது தவிர பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் எளிதாக செல்ல எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் புதிதாக நிறுவப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து எளிதாக வெளியேறி பஸ், ஆட்டோ, கார்களில் செல்லவும் அதே போல ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பயணிகளை இறக்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

    இது தவிர புதிதாக பார்சல் அலுவலகம், ரெயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம் பூந்தமல்லி சாலை பகுதியில் கட்டப்படுகிறது. துணை மின்நிலையம், புதிய ரெயில்வே குடியிருப்புகளின் தரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக லிப்ட் வசதி, எஸ்கலேட்டர், குளர்ச்சியான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவை கட்டப்படுகிறது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க வடக்கு பகுதியில் பிரமாண்ட குடிநீர் தொட்டி "சம்ப்" தரைக்கு அடியில் கட்டப்படுகிறது. இங்கிருந்து ரெயில்களுக்கு குடிநீர் நிரப்பும் வசதியும் அளிக்கப்படுகிறது.

    • கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு.
    • அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக 2-வது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, மத்திய அரசு கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்" என்று பேசியிருந்தார்.

    இந்த நிலையில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி விஜித ஹேரத் கொழும்புவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜித ஹேரத் கூறியதாவது:-

    முதலாவதாக கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான தீவு ஆகும். அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் இப்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிப்பதற்கு ஒவ்வொரு விஷயங்களையும் கூறுவார்கள். அப்படித்தான் கச்சத்தீவு பற்றி கூறுகிறார்கள். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல்முறை அல்ல.

    இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

    இலங்கை அரசாங்கத்தினால் ராஜதந்திர ரீதியாக எவ்வித மாற்றமும் நடைபெறவில்லை. அதனால் இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்த ஒரு ராஜதந்திர செயல்பாடுகளுக்காகவும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாங்கள் வழங்க மாட்டோம் என்று தெளிவாக கூறுகின்றேன். இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் பேச்சு குறித்து கவனம் செலுத்தலாம்.

    எனவே அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.
    • இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும்.

    புதுடெல்லி:

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், மின்சார எந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

    குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அத்துறை கடுமையாக பாதிக்கும்.

    இந்த நிலையில் பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், பாதிப்பை எதிர்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ஜவுளித்துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிக்க, கடந்த 19-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை பருத்திக்கான இறக்குமதி வரிக்கு தற்காலிகமாக மத்திய அரசு விலக்கு அளித்திருந்தது.

    ஏற்றுமதியாளர்களை மேலும் ஆதரிக்கும் வகையில், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை செப்டம்பர் 30-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வந்தது. மேலும் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி வரியும் விதிக்கப்பட்டது. இதற்கிடையே சுங்க வரி இல்லாமல் பருத்தியை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை கடந்த 18-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த வரி விலக்கை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உள்ளது.

    இந்த வரி விலக்கு நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி செலவுகளைக் குறைக்கும். உற்பத்தியாளர்கள், நுகர்வோருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    உள்நாட்டு சந்தையில் கச்சா பருத்தி கிடைப்பதை அதிகரித்து பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தம் குறையும். இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பதன் மூலமும் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும் என்று அரசு தெரிவித்து உள்ளது.

    • கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன்.
    • வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டுக்கு 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் சுமார் 30 சதவிகிதம் என்ற அடிப்படையில் 15000 கோடி ரூபாய் அளவிலான ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவிற்கு மட்டுமே அனுப்பப்படுகிறது. மேலும் ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் விலை அதிகம் உள்ள ஆடைகள் விற்பனை செய்யப்படும் நிலையில் அமெரிக்காவிற்கு விலை குறைவான ஆடைகள் மட்டுமே அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இதில் லாபமும் குறைவாக உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 50 சதவிகித வரி விதித்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந்த வரி விதிப்பு காரணமாக 100 ரூபாய் ஆடைகள் 150 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்தகர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் அவை விற்பனையின்போது 150 ரூபாய் என்ற உச்ச விலையை அடையும் என்பதால் அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த பனியன் ஆர்டர்களை பெறுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தியாவின் போட்டி நாடுகளான வங்கதேசம் வியட்நாம் ஜோர்டான் போன்ற நாடுகளில் பனியன் ஆடைகளை வாங்க வர்த்தக விசாரணைகளும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 3 மாதங்களுக்கு முன்பு பெற்ற ஆர்டர்கள் முழு பணியும் நிறைவடைந்து பெட்டிகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெறாமல் அமெரிக்க வர்த்தகர்கள் தாமதம் செய்து வருவதால் தங்களின் முதலீடு முடங்கி உள்ளதாகவும் பெரும் நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் கூறியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக சிறிய அளவில் பனியன் உற்பத்தி நிறுவனம் வைத்து அமெரிக்காவிற்கு பின்னல் ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் தயார் நிலையில் உள்ள ஆடைகளை பெறாமல் அப்படியே நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். இதில் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து அதனை பெற முடியாமல் உள்ளேன். இந்த தொகை முழுவதும் கடன் பெற்று ஆடைகளை உற்பத்தி செய்துள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன என தெரியவில்லை வர்த்தகர்கள் உடனான சந்திப்புக்கு பிறகே நிலை தெரியும் இந்த நிலை மாற விரைவில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறுகுறு நிறுவனங்கள் இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரும் என தெரிவித்தார்.

    திருப்பூரில் தயார் நிலையில் 10 லட்சம் ஆடைகள் மற்றும் உற்பத்தி நிலையில் 25 லட்சம் ஆடைகள் என சுமார் 500 கோடி மதிப்பிலான 35 லட்சம் ஆடைகள் தேங்கி உள்ளதாகவும் வரி விதிப்பு குறித்த முறையான தெளிவான அறிவிப்பு வரும் வரை பணிகளை நிறுத்தி வைக்க அமெரிக்க வர்த்தகர்கள் கோரி உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆரம்ப நிலையிலேயே 500 கோடி வர்த்தக பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும் மேலும் இடைக்காலமாக மற்ற நாடுகளிடமிருந்து ஆடைகள் வாங்கப்பட்டால் வர்த்தகர்களை மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வருவது சிரமமான நிலையை அடையும் என்பதால் இதில் தாமதமின்றி அமெரிக்க வரி விதிப்பு குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது.
    • பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை.

    பெரம்பலூர்:

    மதுரையில் கடந்த 21-ந்தேதி நடந்த த.வெ.க. மாநில மாநாட்டில் கட்சி தொண்டர் சரத்குமார் என்பவரை தலைவர் விஜய் முன்னாலே பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் குன்னம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் நடந்த மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது சரத்குமார் இல்லை என த.வெ.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மதுரை மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கி போட்டது சரத்குமாரே இல்லை. புகார் கொடுத்துள்ள சரத்குமார் அந்த இடத்திற்கு வரவே இல்லை. சரத்குமாரின் அம்மா பேட்டியை பார்த்து விட்டு அவரிடம் அது பற்றி கேட்ட போது, அது நான் இல்லை, அங்கு நான் செல்லவில்லை என தெரிவித்தார்.

    மேலும் எனது சட்டையை பார்த்து விட்டு யாரோ சொன்னதைக் கேட்டு எனது அம்மா அவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார் என்று என்னிடம் போனில் தெரிவித்தார். நான் அவரிடம் உனக்கு ஏதேனும் உடல் ரீதியாக பிரச்சனை இருக்கிறதா என்று கேட்ட பொழுது அப்படி எதுவும் இல்லை என சரத்குமார் தெரிவித்தார்.

    நாங்கள் 100 சதவீதம் சொல்கிறோம் பவுன்சர்கள் தூக்கி போட்டது இந்த பையன் இல்லை. இது ஒரு தவறான தகவல். யாருடைய தூண்டுதலின் பேரிலே இப்படி புகார் கொடுக்கப்பட்டு, எங்கள் கட்சித் தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் தள்ளிதான் விட்டார்கள், தூக்கி வீசவில்லை. பாதுகாப்பு வளையத்திற்குள் வருவது தவறு. எந்த தலைவராக இருந்தாலும் பாதுகாப்பு என்பது முக்கியம். ரசிகர் என்ற முறையில் அதை தாண்டி அவர்கள் வந்து விட்டார்கள். அவர்களை பவுன்சர்கள் தடுக்கிறார்கள். யாரையும் தூக்கி போடவில்லை.

    தள்ளி விடும்போது அவர் கம்பியை பிடித்து இறங்கி வருகிறார். உண்மையில் அந்த தொண்டர் சரத்குமார் கிடையாது. கீழே விழுந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஜய் என்பவர் தான். அவரும் பேட்டி கொடுத்துள்ளார். நான் தவறுதலாக அந்த இடத்திற்கு சென்று விட்டேன், நான் சென்றது தவறுதான், நான் போய் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    மாநாட்டுக்கு சரத்குமார் 2-வது நாள் தான் சென்றதாக கூறினார். முதல் நாள் சென்றவர்கள் மட்டுமே நடைமேடை அருகே செல்ல முடியும், காரணம் கூட்டம் அதிகமாக இருந்தது. இவர் தவறான தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார். கட்சியின் வளர்ச்சி பிடிக்காமல் இதுபோன்று செய்கிறார்கள்.

    இதன் பின்னணியில் இருப்பவர்கள் தலைவர் விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், தற்போது உள்ள ஆளுங்கட்சி தான், அவர்களாகவும் இருக்கவும் வாய்ப்புள்ளது. புகார் கொடுத்த சரத்குமார் போட்டிருந்த சட்டையை வைத்து முடிவுக்கு வர முடியாது. அதுமட்டுமின்றி கீழே விழுந்தவருக்கும், புகார் கொடுத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யான வழக்கு. அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். கட்சி தலைமையின் ஒப்புதலை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஜவுளி வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ரூ.3000 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நமது தொழில்கள், தொழிலாளர்களை பாதுகாக்க உடனடி நிவாரண, கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன.
    • குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை வராக்கடன்களாக அறிவிப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) கடுமையான இன்னல்களுக்குள்ளாகியுள்ளன; இதன் விளைவாக வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல், அவை வராக்கடன்களாக (NPAs) ஆக மாறும் அபாயமும் உள்ளது என எனது கவனத்திற்கு தொழில் முனைவோர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி குறு சிறு நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன. ஜவுளி, கடல் உணவு, நகைகள் ஆகிய துறைகள்—அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% பங்கைக் கொண்டுள்ள இவை - மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்தத் துறைகளில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 70% க்கும் அதிக பங்கு உள்ளது. இரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது; அந்தத் துறையின் ஏற்றுமதியில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 40% பங்கு உண்டு.

    தமிழ்நாட்டில் இத்தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது, ஏனெனில் இது ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய மாநிலமாகும்; இவற்றில் பெரும்பாலான அலகுகள் குறு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின்படி, விநியோகங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் திடீரெனக் கையிருப்புகள் அதிகமாகக் குவிந்து வருகின்றன. நூற்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு வழங்கல் சங்கிலியும், இந்த வரிப் போரின் காரணமாக கடந்த மாதத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.

    இந்த நிலைமை குறு சிறு நடுத்தர தொழில்கள், வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி கடன் செலுத்த தவறும் கடன்களை வராக்கடன் வகைக்கு தள்ளக்கூடும்; இதன் விளைவாக அந்நிறுவனங்களின் எதிர்காலக் கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்படும்.

    இந்தச் சூழலில், ஒன்றிய நிதியமைச்சரின் உடனடி தலையீட்டை நாடுகிறேன். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) விதிமுறைகளை தளர்த்தவும், இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த செய்யுமாறும் வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.
    • ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்தநிலையில் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் கடந்த 24-ந்தேதி இரவு லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த மதுபான பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் அனைவரும் பாரில் இருந்து புறப்பட்டனர். பாரை விட்டு வெளியே வந்தபிறகும் அவர்களுக்கும் தகராறு நடந்தது. அதன்பிறகு ஐ.டி. ஊழியர் அங்கிருந்து தனது காரில் ஆலுவா நோக்கி சென்றிருக்கிறார்.

    அப்போது நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று நடுரோட்டில் வழி மறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஐ.டி. ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களின் காரில் ஏற்றி தாக்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு இடத்தில் ஐ.டி.ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில், ஐ.டி.ஊழியர் அலியார் ஷா சலீம் புகார் செய்தார். அவர் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் மதுபான பார் மற்றும் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நடிகையின் நண்பர்கள், ஐ.டி.ஊழியரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களின் மீது ஆள் கடத்தல், தாக்குதல், மிரட்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோருக்கும், ஐ.டி.ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    அதில் தகராறு நடந்த போது லட்சுமிமேனன் இருந்தது தெளிவாக தெரிந்தது. ஆகவே ஐ.டி.ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடினர்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் தங்களின் மீது புகார் கொடுத்துள்ள நபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அவர் ஜாமின் மனுவில் கூறியிருப்பதாவது:-

    புகார்தாரர் என்னை ஒரு பாரில் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் பாரை விட்டு வெளியேறிய பிறகும், அந்த நபர் காரில் பின்தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் தாக்கினார். ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் அந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    அவரது மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் ஓணம் பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கு பரிசீலிக்கப்படும் எனவும் நடிகையின் மனுவை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

    ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
    • பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப (IT) துறைக்கும் அது ஒரு பெரிய சவாலாக உருவாகி வருகிறது. குறிப்பாக, சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சேவைகளின் பயன்பாடு, அடுத்த சில ஆண்டுகளில் இந்திய ஐடி துறையின் வருவாயைக் கடுமையாகப் பாதிக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை எச்சரித்தும் இருந்தது.

    சாட்ஜிபிடியால் செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் குறியீடுகளை எழுதுவது, பிழைகளைச் சரிசெய்வது, எளிய தரவு பகுப்பாய்வு போன்ற பணிகளைத் திறம்படச் செய்ய முடியும்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறாக பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது மனித உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அமெரிக்காவில் சாட்ஜிபிடி உடனான உரையாடல்களுக்கு பிறகு 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    ஆடம்ரெய்ன் என்ற 16 வயது சிறுவன், உயிரை மாய்த்துக்கொள்வது குறித்த சாட்ஜிபிடி உடன் விவாதித்த போது அதற்கு பதிலளிக்க மறுக்காமல் அதற்கான எண்ணங்களை சாட்ஜிபிடி மேலும் தூண்டியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தவறான மரணம், வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் சாட்ஜிபிடி உடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியதற்காக ஓபன்ஏஐ மீது 40 பக்க அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

    • அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனை நடவடிக்கைகளால் இந்தியா அடிபணியாது.
    • இந்தியா அமெரிக்க தடைகளில் இருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், பல வருட பொருளாதார வளர்ச்சியை காண மீண்டும் எழுச்சி பெற்றது.

    பொருளாதாரத் தடைகள் முதல் பரஸ்பர வரிகள் வரை, இந்தியாவிற்கு அளிக்கப்படும் உதவிகளை தடுப்பது, சர்வதேச கடன்களைத் தடுப்பது மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களைத் தடை செய்தல் மூலம் அமெரிக்கா பலமுறை இந்தியாவை அழுத்த முயற்சித்துள்ளது.

    இருப்பினும், இந்தியாவின் திறமையான ராஜதந்திரம் மற்றும் உள்நாட்டு வளர்ச்சி மூலம் இந்த தண்டனை நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதை உறுதி செய்தது மட்டுமல்லாமல், வலுவான இருதரப்பு உறவுகளையும் ஏற்படுத்தியது.

    1998-ம் ஆண்டு பொக்ரான்-II அணுசக்தி சோதனைகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அளித்த பேட்டியில்,

    ஆம், எங்கள் நடவடிக்கைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது. இந்தியாவிடம் மகத்தான வளங்களும் உள் வலிமையும் உள்ளது.

    1998-ம் ஆண்டு இந்தியா அமெரிக்க தடைகளை எதிர்கொண்டது. ஆனால் தேசிய பாதுகாப்பிற்காக அணு ஆயுத சோதனைக்கு உறுதியளித்தது.

    புத்தர் மீண்டும் சிரித்தார் என்ற செய்திக்குப் பிறகு, மே மாதத்தில் தடைகள் வந்தன.

    இந்தியா அமெரிக்க தடைகளில் இருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், பல வருட பொருளாதார வளர்ச்சியை காண மீண்டும் எழுச்சி பெற்றது.

    தடைகள் நம்மை பாதிக்காது. இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனை நடவடிக்கைகளால் இந்தியா அடிபணியாது.

    இந்த வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் இந்தியா தனது கடந்த கால மகிமையையும் எதிர்கால கண்ணோட்டத்தையும் வலுவாக மாற்றி உள்ளது என்று வாஜ்பாய் கூறினார்.

    இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மே 11 முதல் 13 வரை, ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா சோதனைகளை நடத்தியது.

    டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வாஜ்பாயின் வார்த்தைகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.

    ×