என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
    • சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

    அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இன்று காலை 10 மணி அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம்காணும் காளைகள், மாடுபிடி வீரர்கள் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் சென்னை வந்துள்ளார்.
    • நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் சச்சின் பைலட்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் நேற்று சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் கூறியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்ததாக உள்ளது.

    பாரம்பரியமாக தமிழகத்தில் காங்கிரசுக்கு தனி வாக்கு சதவீதம் உள்ளது.

    காங்கிரஸ் கட்சி எப்போதும் தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பணியாற்றுகிறது.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பல முயற்சிகளைச் செய்தாலும் ஒருபோதும் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது.

    பா.ஜ.க.வை எதிர்க்க எப்போதும் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்படும்.

    என்ன நடந்தாலும் வருங்காலத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரக்கூடாது.

    நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என தெரிவித்தார்.

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கு விற்பனை.
    • மனமகிழ் மன்றங்கள் மூலம் 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனை.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம் தேதி ரூ.33.16 கோடிக்கும், 15ம் தேதி ரூ.49.43 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

    சென்னை மண்டல டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.98 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

    கடந்த பொங்கல் விடுமுறையின்போது 4 நாளில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில் இந்தாண்டு 2 நாளிலே ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
    • தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    வரும் தேர்தல்களை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுடனான உறவு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

    மாநிலம் தழுவிய அளவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் போராட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    • ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்களின் பங்கேற்போடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • வெளிநாடுகளைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.

    ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில் 'பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா' நேற்றும் இன்றும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இன்று (16/01/2026) நடைபெற்ற நாட்டு மாடுகளின் கண்காட்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் இணைந்து சுழற்றிய சிலம்பம் ஆகிவை பொது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

    ஈஷாவில் பொங்கல் விழா ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்களின் பங்கேற்போடு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    இந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவைச் சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

    இயற்கை விவசாயத்தில் அத்தியாவசியமானதாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.

    முன்னதாக வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஈஷா தன்னார்வலர்கள் சிலம்பம் சுழற்றி அசத்தினர்.

    சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷாவில் வெளிநாட்டவர் உட்பட அனைத்து தன்னார்வலர்களுக்கும் சிலம்பக்கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா சார்பில் பராமரிக்கப்படும் கோசாலையில் 700-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இதனைத் தொடர்ந்து, மாலையில் கோவையைச் சேர்ந்த 'அலமேலு மங்கம்மாள் கலைக்குழுவினரின்' கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், காவடி ஆட்டம், மயில் ஆட்டம், மாடு ஆட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது. பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்தனர்.

    • சிறப்பாக களம்கண்ட காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
    • இருவர் முதலிடத்தில் இருந்ததால் குலுக்கல் முறையில் முதலிடம் தேர்வு செய்யப்பட்டது.

    உலகப்புகழக பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் 10 சுற்றுகள் முடிந்த நிலையில், போட்டியின் முடிவில் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் பொந்துகம்பட்டி அஜித், பொதும்பு பிரபாகரன் இருவரும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளனர்.

    இந்த போட்டியில் சிறப்பாக களம்கண்ட காளையின் உரிமையாளருக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அஜித், பிரபாகரன் இருவரில் யாருக்கு கார் பரிசு என்பது கேள்விக் குறியாக இருந்தது.

    குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் மாடுபிடி வீரருக்கு காரும் மற்றொரு நபருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவுரை 4 முறை கார் பரிசு வென்ற பிரபாகரன் மீண்டும் கார் பரிசை வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்தது.

    இந்நிலையில், 16 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரருக்கான கார் பரிசை பொந்துகம்பட்டி அஜித் தட்டிச்சென்றார்.

    அஜித், பிரபாகரன் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்ததால் குலுக்கல் முறையில் முதலிடம் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
    • தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

    'கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்யும் விடியா திமுக அரசுக்கு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.

    தற்போது இந்நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசா வளர்ப்பு கூலியாக கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

    தேங்காய் நார்மஞ்சி விலை உயர்வு மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, ஆள் கூலி உயர்வு என பல்வேறு செலவுகள் அதிகரித்ததற்கு ஏற்ப நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காததால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 20-ஐ அடிப்படை கூலியாக வழங்க வேண்டும்; மின் கட்டண சலுகை, தரமான தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2

    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.

    1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுவனங்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து, 7.1.2026 அன்று சென்னை கால்நடை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளையும், தமிழக விவசாய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேரை 14.1.2026 அன்று விடியா திமுக அரசின் காவல்துறை கைது செய்து, சிறையில் வைத்துள்ளதாக வந்த செய்தி கடும் கண்டனத்திற்குரியது.

    கைது செய்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினரையும், நிறுவனங்களையும் உடனடியாக அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி.

    கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

    • ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது.
    • காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில பங்கு கேட்பதில் தவறு ஏதும் இல்லை.

    காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சச்சின் பைலட் கூறுகையில் "ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில பங்கு கேட்பதில் தவறு ஏதும் இல்லை. இதன்மூலம் அவர்களால் தமிழ்நாடு மக்களுக்கு உதவி செய்ய முடியும்.

    எதிர்காலத்தில் எது நடந்தாலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழக அரசியலில் கால் பதிக்க முடியாது. தி.மு.க. அரசு சிறந்த பணியை செய்து வருகிறது. அவர்களின் செயல்பாட்டை மக்கள் விரும்பியுள்ளனர்" என்றார்.

    தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆட்சியில் அதிகாரம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    • அதிகாலையில் தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அவரை பார்க்க அலுவலகத்துக்கு வந்தனர்.
    • அலுவலகத்தின் உள்ளே சைதை சுகுமார் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

    சைதாப்பேட்டை:

    சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் சைதை சுகுமார் (வயது 47). இவரது அலுவலகம் சைதாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது.

    இந்த நிலையில் நாளை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். பின்னர் இரவு கட்சி அலுவலகத்திற்கு தூங்க போவதாக கூறி அவருடன் இருந்த நண்பர்களிடம் கூறி சென்றார்.

    இதனால் நண்பர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர். இன்று அதிகாலையில் தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அவரை பார்க்க அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.

    அலுவலகத்தின் உள்ளே சைதை சுகுமார் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். உடனே இது பற்றி குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுகுமார் உடலை கைப்பற்றி சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இறந்துபோன சுகுமாரின் செல்போனை பறிமுதல் செய்து கடைசியாக யார்? யாரிடம் பேசிள்ளார் என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அ.தி.மு.க. பகுதி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
    • லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.

    குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கனரக வாகனங்கள் எப்போதுமே அணிவகுப்பதை காண முடியும். துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்களால் செங்குன்றம், புழல், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர் லாரிகள் அதிக அளவில் சென்று வரும்.

    பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறைவிடப்பட்டுள்ளதால் லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக வடசென்னை பகுதிகளும் வாகனப் போக்குவரத்து இன்றியே காணப்படுகிறது.

    நாளை காணும் பொங்கலுக்கு இன்று இருப்பதை விட வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு திரும்புகிறார்கள். காலையில் இருந்து பஸ் மற்றும் ரெயில்களில் பயணத்தை தொடர முன்பதிவு செய்துள்ளனர். 19-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. 18-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் (எண்.06160 ) புறப்பட்டு மறுநாள் (திங்கள்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அதிவேக சிறப்பு ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 

    • பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும்.
    • 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது.

    மதுரை:

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மனிதனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் கடவுளுக்கும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் கோட்டைக்கு போவார் அப்போது தமிழக மக்களுக்கு நிச்சயமாக வழி பிறக்கும்.

    உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டி மன்னராட்சி முதல் தற்போது மக்களாட்சி வரை மக்கள் ஜல்லிக்கட்டாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது உதயநிதிக்காக ஜல்லிக்கட்டா? மு.க.ஸ்டாலினுக்காக ஜல்லிக்கட்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகாலையில் இருந்து மாடுபிடி வீரர்களும், காளைகளும் அனைவரும் பல மணி நேரம் காத்திருந்து தொடங்கப்படவில்லை. பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது. உதயநிதிக்காக வேடிக்கை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறார்கள். தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறி சென்று விட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனநாயகம் மலர இந்த தைத்திருநாளில் நாம் சூளுரை ஏற்க வேண்டும் என்று கூறினார். 

    ×