என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருபுவனை அருகே பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா மகன் ஷபியுல்லா (வயது 35). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர் தினமும் காலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று காலை ஷபியுல்லா வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வேலைக்கு புறப்பட்டார்.

    திருபுவனை அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகில் செல்லும்போது பின்னால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிவந்த தனியார் பஸ், ஷபியுல்லாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த பஸ், சாலையோரம் நின்றுகொண்டிருந்த திருபுவனையை சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது மோதியதில் அவருக்கு வலதுகாலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
    தவளக்குப்பம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பாகூர்:

    தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கடலூர் - புதுச்சேரி சாலை கொருக்கன் மேடு சந்திப்பில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் போலீசார், துணை ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் காரில் வந்த அந்தோணிராஜிடம் விசாரித்ததில் காரைக்காலில் உள்ள உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதாக அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் துறை பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    பாகூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே கொமந்தான்மேடு வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 58). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சேகர் கடந்த 2½ ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. நேற்று முன்தினம் வயிற்றுவலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சேகர் வீட்டின் எதிரே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,461 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என நலவழித்துறை தெரிவித்துள்ளது.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில் தினசரி நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 89,909 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் கடந்த 11-ந் தேதி வரை 4,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

    கடந்த 12-ந் தேதி 202 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில், மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4,066 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 72ஆக உள்ளது. மேலும், 3,950 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய நிலையில், மீதி 49 பேர், மாவட்ட அரசு பொது மருத்துவமனை, தங்கள் வீடுகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    காரைக்கால் மாவட்டத்தில், இதுவரை 621 சுகாதார பணியாளர்கள் மற்றும் 1,093 முன்கள பணியாளர்கள் என, மொத்தம் 1,714 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை 374 பேரும், 45 முதல் 59 வயதுடன் இணை நோய்கள் உடையவர்கள் 70 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக, 303 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    காரைக்காலில் முதல் மற்றும் 2-வது தவணையாக, இதுவரை 2,461 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.
    பி.ஆர்.டி.சி, அங்கன்வாடி, கான்பெட், ரொட்டிப்பால் ஊழியர்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
    காரைக்கால்:

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், பி.ஆர்.டி.சி, அங்கன்வாடி, கான்பெட், ரொட்டிப்பால் ஊழியர்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

    கொரோனா காலத்திலும், தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளையும் செய்து வருகின்றார்கள். சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் பணியாற்றுவதால் மனஉளைச்சலில் உள்ளனர். எனவே கவர்னர் அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அரியாங்குப்பம் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டிரைவர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அருகே மணவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 29). டிரைவர் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மது குடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதரன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

    மேலும் குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பது இல்லை. இதனால் ஸ்ரீதரனுக்கும், அவரது மனைவி பவித்ராவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இரவும் இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவியை மிரட்டுவதற்காக ஸ்ரீதரன் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார்.

    இதில் மயங்கி விழுந்த ஸ்ரீதரனை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதரன் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரியில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை திமுக வெளியிட்டது.

    புதுச்சேரியில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.

    புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:

    உருளையன்பேட்டை - எஸ்.கோபால்
    உப்பளம் - அனிபால்கென்னடி
    மங்கலம் - சண்குமரவேல்
    முதலியார்பேட்டை - எல்.சம்பத்
    வில்லியனூர் - சிவா
    நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்
    ராஜ்பவன் - சிவக்குமார்
    மண்ணாடிப்பட்டு - கிருஷ்ணன்
    காலாப்பட்டு - முத்துவேல்
    திருப்புவனை (தனி) - முகிலன்
    காரைக்கால் - நாஜிம்
    நிரவி திருப்பட்டினம் - நாக தியாகராஜன்
    காங்கிரசுக்கு துரோகம் செய்து ஆட்சியை கவிழ்த்தவர்கள் போட்டியிட தொகுதி கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மதவாத சக்திகளோடு இணைந்துள்ளார். இதன்மூலம் மக்களின் உணர்வுகளை அவர் புறக்கணித்துள்ளார். அதை பிரதிபலிக்கும் வகையில் வைத்தியநாதன் இங்கு வந்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் இணைய பலர் வந்து கொண்டுள்ளனர். இதற்கு முன் நடந்த தேர்தலில் டெபாசிட் இழந்த நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளது. சில துரோகிகளும் அவர்களுக்கு துணைபோய் விட்டனர். அதன் பலனை தற்போது அனுபவிக்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் பதவிக்காக சென்றவர்கள் தற்போது போட்டியிட தொகுதி இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள். புதுவை மக்கள் அனைத்து மதத்தையும் மதிப்பவர்கள். மதவாத சக்திகள் ஒற்றுமையை குலைக்கக் கூடாது என்பதற்காக ஒருங்கிணைந்து நாங்கள் செயல்படுகிறோம்.

    பா.ஜ.க.வினர் சிலரை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை கொண்டும், பணபலம், அதிகார பலத்தை வைத்தும் சிலரை பிடித்து ஆட்சியை கவிழ்த்தார்கள். நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சியை கவிழ்த்த சம்பவம் இந்தியாவில் எங்கும் நடந்தது கிடையாது. அதன் விளைவுகளை இந்த தேர்தலில் சந்திப்பார்கள்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
    முத்தியால்பேட்டையில் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது சகோதரர் மணிகண்டன்(வயது 30). இவர்களது பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். மணிகண்டன் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. சமீப காலமாக நோயின் கொடுமை அதிகமானதால் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரியாங்குப்பம் அருகே நள்ளிரவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்தது. இதில் வெடிமருந்து குடோன் தரைமட்டமானது.
    அரியாங்குப்பம்:

    புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லப்பரெட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 45). இவர் அதே பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தென்னந்தோப்புக்கு மத்தியில் சிமெண்டு அட்டையிலான கூரை அமைக்கப்பட்ட சிறிய அறையில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையின் ஒரு பகுதியை வெடிமருந்து குடோனாக பயன்படுத்தி வந்தார்.

    இந்த பட்டாசு ஆலையில் ஆண்கள், பெண்கள் என 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தென்னந்தோப்பு பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. நேற்று முன்தினம் மகா சிவராத்திரி என்பதால் அப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் விடிய விடிய பூஜைகள் நடந்தது. இதனால் வாண வேடிக்கை ஏதேனும் நடக்கிறதா? என அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது தென்னந்தோப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து வெடி சத்தமும் புகை மூட்டமும் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சிலர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது பட்டாசு ஆலை மற்றும் குடோனின் சுவர்கள் நாலாபுறமும் சிதறி தரைமட்டாகி இருந்தன.

    மேலும் குடோனின் அருகில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் மற்றும் காய்கறி செடிகள் எரிந்து நாசமாகியிருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடோனில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் வெடி விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த பயங்கர வெடிவிபத்து குறித்து போலீசில் பட்டாசு ஆலை உரிமையாளர் சீத்தாராமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மின்கசிவு அல்லது அழுத்தம், உராய்வு காரணமாக இந்த பட்டாசுகள் வெடித்து பின்னர் குடோனில் வைத்திருந்த வெடிமருந்துகள் வெடித்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வெடி விபத்தால் பல ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் வெடி மருந்து, மூலப்பொருட்கள் நாசமானது. வெடி விபத்து நள்ளிரவில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
    புதுச்சேரியில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
    புதுச்சேரி:

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிடும்  18 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

    1. திருபுவனை- ரமேஷ்
    2.வில்லியனூர் - பானுமதி
    3.உழவர்கரை - பழனிவேலன்
    4. கதிர்காமம் -சந்தானம்
    5. இந்திரா நகர் - சக்திவேல்
    6. தட்டாஞ்சாவடி -  ராஜேந்திரன்
    7. காமராஜ் நகர் - லெனின்
    8.லாஸ்பேட்டை - சத்யமூர்த்தி
    9.காலாப்பேட்டை -சந்திரமோகன்
    10. ராஜ்பவன் -பர்வதவர்தினி
    11. உப்பளம் -சந்தோஷ் குமார்
    12. உருளையன்பேட்டை - சக்திவேல்
    13. நெல்லித்தோப்பு - முருகேசன்
    14. முதலியார்பேட்டை - அரிகிருஷ்ணன்
    15. அரியாங்குப்பம் - ருத்ரகுமார்
    16. ஏம்பலம் - சோம்நாத்
    17. நெட்டப்பாக்கம் - ஞானவொளி
    18. நெடுங்காடு - நரசிம்மன்.
    வில்லியனூர் அருகே சாராயம் வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 75). கூலி தொழிலாளி. இவருக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் உள்ளது.

    இவர் தினமும் வேலை செய்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொண்டமாநத்தம் சாராய கடையில் சாராயம் குடிப்பது வழக்கம்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த உதயா என்ற வாலிபர் சாராயம் வாங்கி கொடுக்குமாறு கலியமூர்த்தியை வற்புறுத்துவார். ஒரு சில நேரங்களில் உதயாவுக்கு கலியமூர்த்தி சாராயம் வாங்கி கொடுப்பார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கலியமூர்த்தி சாராய கடைக்கு சாராயம் குடிக்க சென்றார். அப்போது உதயா சாராயம் குடிக்க பணம் தருமாறு கலியமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு ஏற்கனவே பல முறை சாராயம் வாங்கி கொடுத்து விட்டேன். அதற்கு பணம் தரவில்லை. எனவே, இப்போது சாராயம் வாங்கி தர முடியாது என்று கலியமூர்த்தி உறுதியாக தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம அடைந்த உதயா தகாத வார்த்தைகளால் திட்டி கலியமூர்த்தியை சரிமாரியாக தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த கலியமூர்த்தி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயாவை தேடி வருகிறார்கள்.

    ×