என் மலர்
இந்தியா
- இந்துக்களும் நக்சல்களாக உள்ளனர். பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
டெல்லி கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா, "மக்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார். சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.
பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது தவறு. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்.
இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நக்சல்களாக உள்ளனர். கடற்படையில் பல பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
இந்த நாற்காலி எனக்கு தாய் போன்றது. நான் 34 ஆண்டுகளாக பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
மாணவனாக இருந்தபோது நான் கண்டு வியந்த போலீஸ் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காவல் துறையில் சேர்ந்தேன்." என்று பேசினார்.
மேலும் காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நரேந்திர குமார் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் களப் பணியில்(Field of duty) இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
- பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பாட்னா:
243 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் 'இந்தியா' கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின.
தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன.
தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில மந்திரிகள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா்.
இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டெல்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, "பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்" என்றார்.
புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக நிதிஷ்குமார் நாளை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார்.
நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ந்தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரிசபையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கடந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மட்டுமே இடம் பெற்றன.
பா.ஜ.க.வில் 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் 12 பேரும், லோக் ஜனசக்தி கட்சியில் 6 பேரும், இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சார்பில் ஒரு வரும் மந்திரிகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.
முதன்முதலில் அவர் 2000-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சி சார்பில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்-மந்திரி ஆனார். அதன்பிறகு 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார்.
கடந்த 2010-ம் ஆண்டு நிதிஷ்குமார் 3-வது முறை முதல்-மந்திரி ஆனார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளித்தது. பின்னர் 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்தார். லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்றார்.
இதில் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினார். 2020-ம் ஆண்டு மறுபடியும் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி
ஆர்.ஜே.டி., காங்கிரசின் மெகா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியானார்.
இதற்கிடையில் 2024-ம் ஆண்டு மே 24-ந்தேதி முதல் 278 நாட்கள் ஜே.டி.யு. ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்-மந்திரியாக இருந்தார்.
ஜனவரி 2024-ம் ஆண்டு நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து 9-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். தற்போது 10-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பேற்க உள்ளார்.
- உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை யில் கடந்த 10-ந்தேதி கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். காரில் வெடிபொருட்கள் நிரப்பி தற்கொலை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது பலியானார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த உமர், அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். பரிதாபாத்தில் இருந்து 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தது.
இதற்கிடையே உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. டாக்டர் உமர், டெல்லியில் குண்டுவெடிப்புக்கு ஒரு நாள் முன்பு வரை அரியானாவின் நூஹ் நகரில் வாடகை அறையில் தங்கி இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
அப்போது அவர் பல செல்போன்களைப் பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்தனர். அவரது நெருங்கிய கூட்டாளி டாக்டர் முசாம்மில் ஷகீல்லை போலீசார் பிடித்ததை அறிந்ததும் உமர் பரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியை விட்டு வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, அல் பலாஹ் பல்கலைக் ழகத்தில் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்ததும், டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருப்பதும் தெரியவந்தது.
டாக்டர் உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல ஹவாலா வியாபாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் உமர் அரியானாவின் நூஹ் நகரில் உள்ள ஒரு சந்தையில் பணம் கொடுத்து அதிக அளவில் உரங்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட 3 தோட்டாக்களில் ஒன்று மட்டும் வெற்று ஷெல் ஆகும். இந்த 9 மிமீ தோட்டாக்கள் பொதுவாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த அனைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஆயுதங்களிலும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்களின் தோட்டாக்கள் சரியாக இருந்தது.
எனவே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள் பாதுகாப்பு படையினர், போலீசாருக்கு சொந்தமானவை அல்ல என்பது உறுதியானது. இதையடுத்து இந்த தோட்டாக்கள் யாருடையது? என்றும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தோட்டாக்கள் எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் மேலும் முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரிதாபாத் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பழைய டெல்லி வரை உமரின் பயணத்தின் புதிய தெளிவான படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
டெல்லி-என்.சி.ஆரில் உள்ள பல மாவட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சோதனைச் சாவடி களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இருந்த காட்சிகள் மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
- இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க பத்திரிகையாளர்கள் பாடுபட்டனர்.
- நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.
இன்று தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் அப்போதைய அரசாங்கத்தால் பெரும் அடக்குமுறையை சந்தித்து வந்தனர். அதையும் மீறி இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க அவர்கள் பாடுபட்டனர்.
காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்க முடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.
அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது.
பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.
ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில் தர்மத்தை கடைபிடித்து, செய்திகளை நெறிப்படுத்தி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.
தேசிய பத்திரிகை தினத்தன்று, நேர்மையாக செய்திகளை மக்களுக்கு தருவதில் தங்கள் உயிரையும் தியாகம் செய்த பல பத்திரிகையாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் இன்று நம் நாட்டில் பல அமைப்புகளால் நடத்தப்படும்.
உலகெங்கிலும் பல நாடுகளில் வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றத்திற்கும் பல புரட்சிகளுக்கும் பத்திரிகைகள் வழிவகுத்தன என்பது பத்திரிகை துறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும்.
வருடம் முழுவதும் 24 மணி நேரமும், வெயில், மழை, பனி என பாராமல், ஓய்வின்றி மக்களுக்கு செய்திகளை வழங்க பத்திரிகையாளர்கள் பாடுபடுகின்றனர். உணவு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை போல் பத்திரிகைகளின் சேவையும் பொதுமக்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள்.
- பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் 17-ந் தேதி தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும். பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராஜ்நாத் சிங் லக்னோவில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை அமைந்துள்ளது என்றார்.
லக்னோ:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்திற்குச் சென்றார். அவர் லக்னோவில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நமது தலைமை, நமது தொண்டர்களின் உழைப்பால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது.
லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.
பா.ஜ.க.வில் நான் மாவட்ட இளைஞரணி தலைவராகவும், தேசிய இளைஞரணி தலைவராகவும், கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளேன். கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.
இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார். தற்போது இந்தியா பேசும்போது உலகம் கேட்கிறது என தெரிவித்தார்.
- பீகார் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட மகாகட்பந்தன் கூட்டணி தோல்வி அடைந்தது.
- அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என லாலு மகள் பதிவிட்டுள்ளார்.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.
இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையும் துறக்கிறேன். அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்விக்கு ஆதரவாக ரோகிணி பிரசாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த மறுநாளே லாலு மகளின் அறிவிப்பால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பீகார் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது.
- காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. 243 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பீகார் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் வசிக்கும் பீகார் மக்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழா சூரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
நாடு ஏற்கனவே இந்த முஸ்லிம் லீக்- மாவோயிஸ்ட் காங்கிரஸை (MMC) நிராகரித்துள்ளது. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியுடன் பணியாற்றிய ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளனர். கட்சியை பாதுகாப்பது தற்போது மிகவும் கடினமானது என காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
50-60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர் தோல்வியால் இப்படித்தான் முடிவடைகிறார்கள் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது என்பதை உணர்த்தும் தெளிவான விசயம்.
என்.டி.ஏ. வெற்றி பெண்கள் மற்றும் இளைஞர் வாக்காளர்கள் கிடைக்கப்பெற்றது. ஜாமினில் வெளியே வந்தவர்கள், ஜாதிவாத விசத்தை பரப்ப தங்களுடைய அனைத்து எனர்ஜிகளையும் பயன்படுத்தினர். அவர்கள் இதுமட்டுமே வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தனர். பீகார் தேர்தல் சாதிவாத விசத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இது நாட்டிற்கு மிகவும் பிரகாசமான அறிகுறியாகும்.
தலித் மக்கள் அதிகம் உள்ள 38 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் எதிர்க்கட்சியை நிராகரித்துள்ளனர்.
பீகார் தேர்தலின்போது, ஜாமினில் வந்த அரசியல்வாதிகளும், அவர்களுடைய கூட்டாளிகளும் ஆட்சிக்கு வந்தால் வக்பு சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்று மசோதாவை பொது வெளியில் கிழித்தனர். பீகார் மக்கள் இந்த வகுப்புவாத விசத்தை முற்றிலுமாக நிராகத்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- சபரிமலை கோவில் நிர்வாகத்தை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றுவதே தனது விருப்பம்.
- நம்பிக்கையைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் (TDB) புதிய தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட கே. ஜெயக்குமார், சனிக்கிழமை தனது தலைமையிலான நிர்வாகக்குழு பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் தக்கவைக்கவும் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.
திருவிதாங்கூர் தேவசம் போர்டின் புதிய தலைவராக கே. ஜெயக்குமார் இன்று பதவி ஏற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவசம்போர்டு தலைவராக இருப்பார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் செயல்பாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து தனக்குத் தெரியும் என்றும், அதுவே முன்னோக்கிச் செல்வதற்கான தனது தனிப்பட்ட பலம் என்றும் கூறினார்.
சபரிமலை கோவில் தங்கம் மாயமானது குறித்து கேள்விக்கு கே. ஜெயக்குமார் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-
நம்பிக்கை குறைவு இருப்பது உண்மைதான். ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் பக்தர்களின் மனதில் கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பக்தர்களின் இந்த நம்பிக்கை எவ்வாறு மீறப்பட்டது? ஏனென்றால் அங்கு சில விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கின்றன. வாரியத்தை வழி நடத்தும் நிர்வாகக்குழு, அங்கு இதுபோன்ற எதையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியான முடிவை எடுக்க வேண்டும். சபரிமலை கோவில் நிர்வாகத்தை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்றுவதே தனது விருப்பம்.
நவம்பர் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலம்- மகரவிளக்கு பூஜை தொடங்குகிறது. நாளை கோவிலுக்குச் சென்று இது தொடர்பாக மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த இருக்கிறேன். பக்தர்களுக்கு சரியான மற்றும் பொருத்தமான விஷயங்களைச் செய்து அவர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத விஷயங்களை ஒழுங்குபடுத்த வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு கே. ஜெயக்குமார் தெரிவித்தார்.
- அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
- மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில், அரியானாவில் பறிமுதல் செய்த வெடிபொருட்களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தில் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், ஜம்மு காஷ்மீரின் நவ்காமில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன, 24 பேர் காயமடைந்துள்ளனர் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கோழைத்தனமான கார் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் இது உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு வழிமுறைகளை வலுப்படுத்த மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்காமல் தப்பிக்க முடியாது.
பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் தேசத்துடன் ஒற்றுமையாக நிற்கிறது.
சமீபத்திய செங்கோட்டை பயங்கரவாத தாக்குதை முன்வைத்து, வெளிப்புற சக்திகளின் ஆதரவுடன் பயங்கரவாதத்தின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைப் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் மைதிலி போட்டியிட்டார்.
- 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் மைதிலி வெற்றி பெற்றார்.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜக 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் ஆகி கவனம் பெற்று வருகிறார். 84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில், எம்எல்ஏ மைதிலி தாகூர், தமிழில் பாடிய "கண்ணான கண்ணே' பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குச் சென்றுள்ளது.
- பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு -பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
கூட்டணியில் 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களிலும், 101 இடங்களில் போட்டியிட்ட ஜேடியு 85 இடங்களிலும், 29 இடங்களில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி 19 இடங்களிலும் இதர கூட்டணி கட்சிகள் 9 இடங்களிலும் வென்றன.
மறுபுறம் ஆர்ஜேடி - காங்கிரசின் மகபந்தன் கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் 143 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி 25 இடங்களிலும், 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 5 இடங்களில் வென்றுள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 20.08 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி பெற்றதை விட 0.5 சதவீதம் அதிகம் ஆகும்.
அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்வாகும்.
மகபந்தன் கூட்டணியில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.11 சதவீதம் குறைவாகும்.
அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 8.71 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.80 சதவீதம் குறைவு ஆகும். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
அதேபோல் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81 சதவீதம்) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2020-இல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்தனா்.
வாக்கு சதவீதம் என்ற முறையில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெற்றிருந்தபோதும் அதன் வெற்றி பெற்ற பெற்ற இடங்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் 75 ஆக இருந்த நிலையில் இந்த தேர்தலில் 25 ஆக சுருங்கி உள்ளது.
பாஜக, ஜேடியு தலா 101 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஆர்ஜேடி 143 இடங்களில் போட்டியிட்டதால் அதன் வாக்கு சதவீதம் கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






