என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எப்படி துப்பு கிடைக்கிறது? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். #ITRaids #Kanimozhi #PChidambaram
    சென்னை:

    கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே ‘துப்பு’ கிடைக்கிறது?


    2019 தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் ஏதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே.

    வருமானவரித் துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது கொடுத்த புகார் சட்ட விரோதமானது, செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து இருக்கிறது. அவ்வளவு தான்.

    இந்த மேல்முறையீட்டில் கார்த்தியின் வழக்கறிஞர்கள் பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #ITRaids #Kanimozhi #PChidambaram
    வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து அத்தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் ஆதங்கத்துடன் கருத்துக்களை தெரிவித்தனர். #LokSabhaElections2019 #VelloreConstituency
    வேலூர்:

    இறுதிக்கட்ட பிரசாரம் 6 மணிக்கு முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் இப்படி அறிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்த உழைப்பு வீணடிக்கப்பட்டு விட்டது. மக்களை தேர்தல் கமி‌ஷன் ஏமாற்றிவிட்டது.

    தமிழகத்தில் பல இடங்களில் பணம் கொடுத்த புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு பணம் கைப்பற்றப்பட்டதற்கு இப்போது தேர்தலை ரத்து செய்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று பொதுமக்கள் தங்களது கருத்தை கூறினர்.

    தேர்தல் ரத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பரந்தாமன் முன்னாள் எம்.எல்.ஏ. - வேலூர்

    ரத்த செய்யப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலை உடனடியாக மறு தேதி அறிவித்து நடத்த வேண்டும். வேலூருக்கு எம்.பி. வேண்டும். இவ்வளவு நாட்கள் நடந்த மக்கள் உழைப்பிற்கு பரிகாரம் வேண்டும்.

    சுமதி - சத்துவாச்சாரி

    வேலூர் பாராளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது வேதனையாக உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறதா? அல்லது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதா என தெரியவில்லை. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை.

    மீனா - வேலப்பாடி

    வேட்பாளரிடம் பணம் பறிமுதல் செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி உடனே தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு தேர்தல் ரத்து என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கபட்டுள்ளது.

    ஷீலா - தோட்டபாளையம்

    தேர்தல் ரத்து செய்தது சரியான நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களையும் செய்யமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறவே ஒழிக்க வேண்டும்.

    தாமோதரன் - ஆம்பூர்

    தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்திருப்பது சரி என்றால் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும்.


    ராம்நாத் - ஆம்பூர்

    தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க சென்னையில் வேலை பார்க்கும் நான் விடுப்பு எடுத்து ஆவலாக ஊருக்கு வந்தேன், ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென நேற்று தேர்தலை ரத்து செய்து விட்டது.

    இது எனக்கும் என்னை போன்ற இளம் வாக்காளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

    இக்பால் வாணியம்பாடி

    தேர்தலை ரத்து செய்திருப்பது சரியல்ல, இதனால் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பணத்தை பறிமுதல் செய்த அன்றே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு இவ்வாறு நடந்து கொள்வது தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.

    சுகுமார் - வாணியம்பாடி

    தேர்தல் ரத்து என்பது வேலூர் மாவட்ட தொகுதியில் மட்டும் செய்திருப்பது சரியானதல்ல. எல்லா தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தை திரும்ப பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் என்னென்ன நடக்கும் தேர்தல் ரத்து செய்தது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனாலும் வெளியூரில் இருந்து லீவு போட்டு ஓட்டுபோட வந்தவர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் அவர்கள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

    தேர்தல் கமி‌ஷன் எடுத்த முடிவு சரிதான். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியாக பல தரப்பு மக்களும் தேர்தல் கமி‌ஷன் எடுத்த ரத்து முடிவுக்கு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தும் போதாவது பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினர். #LokSabhaElections2019 #VelloreConstituency
    ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று ஆண்டிப்பட்டியில் தேர்தல் அதிகாரிகள் ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

    அந்த பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வும், தேர்தல் ஆணையமும் இணைந்து ஜோடித்த நாடகம்தான் இது.

    அந்த வணிகவளாகம் அ.தி.மு.க பிரமுகர் அமரேஷ் என்பவருக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கும்போது அவரது இடத்தில் நாங்கள் பணம் பதுக்கி வைக்க முட்டாள்களா? ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் ரூ.150 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தார். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.



    பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்பதற்கு விளக்கம் சொல்ல முடியாது.

    தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமும் இல்லை. தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க.வினரே இதுபோன்ற புகாரை பரப்பி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
    கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பேசியபோது, ‘மன் கீ பாத்' உரையாற்ற நான் இங்கு வரவில்லை என கூறியுள்ளார்.#Loksabhaelections2019 #RahulGandhi
    வயநாடு:

    கேரளா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை கேரளா மாநிலத்தின் வயநாடுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள திருநெல்லி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.  அதன்பின்னர் கோவிலில் செய்யப்படும்  சடங்குகளை செய்து முடித்தார். 



    இதையடுத்து வயநாடு தொகுதியில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர்  பேசியதாவது:

    நான் கேரளாவிற்கு ஒரு அரசியல்வாதியாக வரவில்லை. மற்ற அரசியல் தலைவர்களை போல் நான் என்ன நினைக்கிறேன், என்ன செய்யப்போகிறேன் என கூறப்போவதுமில்லை. என்னுடைய  ‘மன் கீ பாத்’  உரை ஆற்றவும் இங்கு வரவில்லை. உங்கள் இதயங்களில்,  எண்ணங்களில் என்ன உள்ளது என்பதை அறிவதற்காகவே  இங்கு வந்துள்ளேன்.

    நான் இந்நாட்டின் பிரதமர் போல் வருகை தந்து, உங்களிடம் பொய் உரைக்க வரவில்லை. ஏனென்றால் உங்கள் திறமை, அறிவுக்கூர்மை குறித்து நான் நன்கு அறிவேன். சில மாதங்கள் மட்டுமே உங்களுடன் உறவுகொள்ள வரவில்லை. இந்த உறவு காலம்தோறும் தொடர வேண்டும் என்றே விரும்பி வந்துள்ளேன். என்னால் உங்களை புரிந்து கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #RahulGandhi





    வேட்பாளர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் வாதாடினார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    சென்னை:

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு, அவரது கல்வி நிறுவனம் மற்றும் திமுக பிரமுகர் சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியாக கணக்கு காண்பிக்கப்பட்டதாக கூறியுள்ள கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற வைப்பதற்காக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக குற்றம்சாட்டினார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.



    இந்நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்படுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதாடினார். ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவில் இணைந்த மகனுக்காக, அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ணா விகே பாட்டீல் பிரசாரம் செய்துள்ளார். #RadhakrishnaVikhePatil
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 18,23,29 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ணா விகே பாட்டீலின் மகன் சுஜெய் பாட்டீல் ஆவார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் சுஜெய்க்கு சீட் வழங்கப்படாததால், அதிருப்தி அடைந்தார். இதையடுத்து சுஜெய் கடந்த மாதம் பாஜகவில்  இணைந்தார். பின்னர் அகமதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சுஜெய் பாட்டீல் அறிவிக்கப்பட்டார்.



    இதனையடுத்து ராதாகிருஷ்ணா, காங்கிரஸ் சார்பில் அகமது நகர் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யப்போவதில்லை என கூறினார். ஆனால், பாஜகவில் இணைந்து போட்டியிடும் மகனுக்காக அகமது நகருக்கு வெளியே  உள்ள ரகுலி பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகளை அழைத்து பிரசாரம் செய்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியை பதிவு செய்ய முயன்ற தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர்களையும் ராதாகிருஷ்ணா பாட்டீலின் ஆதரவாளர்கள் மிரட்டி அனுப்பிவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

    மேலும் இதுகுறித்து ராதாகிருஷ்ணா பாட்டீல் கூறுகையில், ‘நான் இப்போதும் காங்கிரஸில்தான் இருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட பலத்தைக் காண்பிப்பதற்காக  இந்தக் கூட்டத்தை நடத்தினேன். இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துக்கும் நான் தெரிவித்துவிட்டேன்’ என கூறினார். #RadhakrishnaVikhePatil


    நீலகிரி தொகுதியில் மாவோயிஸ்டு நடமாட்டத்தை தடுக்க நக்சல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Maoist

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் 3 மாநில எல்லையில் அமைந்துள்ளது. 16 எல்லையோர சோதனை சாவடிகள் உள்ளன. நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரம், வயநாடு, பாலக்காடு மற்றும் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ளன.

    நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் குறிப்பாக பழங்குடியின மக்கள் தைரியமாக வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையிலும், தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என யாரேனும் மக்களை அணுகிடுவதை தவிர்க்கும் வகையிலும், எக்காரணத்தை கொண்டும் தேர்தலை புறக்கணிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் பழங்குடியினர் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    கேரளாவில் ஜலீல் என்ற மாவோயிஸ்டு சுட்டுக் கொல்லப்பட்டதும் மாவோயிஸ்டுகள் தேர்தலை புறக்கணிக்க கோரி பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டினார்கள். நீலகிரி மாவட்டத்துக்குள் அவர்கள் நுழைந்து மக்களை அச்சுறுத்த கூடாது என்பதற்காத 200 அதிரடிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவில் 50 பேரும், கமாண்டோ பயிற்சி முடித்த 44 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முக்கிய இடங்களில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 240 கி.மீ., தூரம் மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சி.ஆர்.பி.எப்., ஒரு கம்பெனி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒரு கம்பெனியினர் வந்துள்ளனர்.

    இது தவிர உள்ளூர் போலீசார் 1400 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நீலகிரி தொகுதியை பொறுத்த வரை 78 பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளன. அங்கு சி.ஆர்.பி.எப்., படையினர் மற்றும் ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். #Maoist

    22 தொகுதி இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. அரசை கவிழ்க்கும் வாய்ப்பு தி.மு.க.வுக்கு கிடைக்கும் என்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #TNBypoll #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:-

    கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது.

    பதில்:- மோடி மற்றும் அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை காண முடிந்தது. மக்கள் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளிக்க தயாராகி விட்டனர். தமிழகம் புதுவை உள்பட அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

    கே:- ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா?

    ப:- இந்த தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய சக்தியாக இருக்கும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் நாட்டின் அனைத்து மாநில மக்களிடமும் உள்ளது. ஏன் என்றால் மத்திய அரசால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வோம். மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம்.

    கே:- பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கானா, ராஷ்டீரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற 3-வது அணி கட்சிகள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தி.மு.க.வின் நிலைபாடு எப்படி இருக்கும்?

    ப:- பாசிச பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்திவிட்டு ராகுல் காந்தி தலைமையில் அரசு அமைப்பது என்பதே எங்களது ஒரே குறிக்கோள். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.

    கே:- 22 தொகுதி இடைத்தேர்தலும் நடப்பதால் மாநில அரசை கவிழ்க்க முடியும் என்று கருதுகிறீர்களா?



    ப:- ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில் இந்த ஆட்சியை இன்னுமா விட்டு வைத்து இருக்கிறீர்கள்? என்று எங்களிடம் மக்கள் கேட்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நாங்கள் ஜனநாயக ரீதியில் தான் செயல்படுவோம். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு இந்த அரசை கவிழ்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். மக்களின் விருப்பத்தை நாங்கள் ஜனநாயக ரீதியாக நிறைவேற்றுவோம்.

    கே:- கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து உங்களுக்கு தேவையான மெஜாரிட்டி கிடைத்தால் நீங்கள் ஆட்சி அமைப்பீர்களா? அல்லது சட்டசபையை கலைக்க சொல்வீர்களா?

    ப:- கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.

    கே:- அ.தி.மு.க. அரசு கவிழும் என்று நீங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினீர்கள். எதை வைத்து நீங்கள் இப்படி சொன்னீர்கள்?

    ப:- எடப்பாடி அரசு மைனாரிட்டியாக உள்ளது. அனைத்து அரசியல் சாசன விதிகளும் மீறப்பட்டு மத்திய அரசின் உதவியால் இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மத்தியில் இந்த தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    கே:- பிரசாரத்தின் போது உங்கள் தந்தை இல்லாத நிலையை எப்படி உணர்ந்தீர்கள்?

    ப:- அவர் இல்லாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரை தந்தையாக பார்த்ததை விட தலைவராகத் தான் அதிகமாக பார்த்தேன். அவர் ‘‘உடன்பிறப்பே’’என்று 60 ஆண்டுகளாக அழைத்த அந்த காந்தகுரல் இல்லாதது மக்களையும், தொண்டர்களையும் வேதனை அடைய செய்யும் ஒன்றாக இருந்தது. அவருடைய நுட்பங்களையும், வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். நான் அனைத்து அரசியல் பாடங்களையும் அவரிடம் இருந்து கற்று இருக்கிறேன். அவருடைய காலடி தடத்தை தொடர்கிறோம். அவர் இப்போது இருந்திருந்தால் என்னை வழிநடத்தி இருப்பார்.

    கே:- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பலவகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறீர்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது என்று வைத்து கொள்வோம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை இன்றைய நிதி நிலையில் நிறைவேற்ற முடியுமா?

    ப:- நிச்சயமாக நிறைவேற்ற முடியும். 2006-ல் தி.மு.க. அரசு ஏற்பட்ட போது அன்றைய அ.தி.மு.க. அரசு கருவூலத்தை முற்றிலும் காலியாக்கி விட்டு சென்றிருந்தது. ஆனாலும் தலைவர் கருணாநிதி பதவி ஏற்றதும் ரூ. 7,000 கோடி விவசாய கடனை ரத்து செய்து முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.

    இதனால் மாநில நிதி நிலைமை மோசமாகும் என்று விமர்சித்தனர். ஆனால் தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் வளத்தை பெருக்கினார். மத்திய அரசும் உதவி செய்ததால் பற்றாக்குறை மிகவும் குறைக்கப்பட்டது.

    கடந்த 5 ஆண்டு மத்திய ஆட்சியில் அதானி, அம்பானி, அமித்ஷா மகன் போன்ற சில தொழில் அதிபர்களுக்கு தான் மத்திய அரசு உதவி இருக்கின்றது. மத்திய அரசின் தவறான கொள்கைகள் பண மதிப்பிழப்பு திட்டம் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிதி நிலைமைகளை சமாளிக்க நாங்கள் சிறந்த கொள்கைகளை வைத்து உள்ளோம். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

    கே:- தினகரன் மற்றும் அவரது கட்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

    ப:- ஜனநாயகத்தில் சில கட்சிகள் உதயமாகும் சில கட்சிகள் காணாமல் போகும். இந்த கட்சியை பொறுத்தவரை பங்காளி சண்டையாகவே பார்க்கிறேன். இந்த சண்டையில் யார் சக்தி படைத்தவர்? யார் வீழ்ச்சி அடைவார் என்பது மே 23-ந் தேதி தெரியவரும்.

    கே:- உங்கள் மகன் உதயநிதி இந்த தேர்தலில் நட்சத்திர பிரசாரமாக திகழ்ந்தாரே? அவருக்கு கட்சியில் ஏதேனும் முக்கிய பதவி வழங்குவீர்களா?

    ப:- அவர் மீது ஊடகங்கள் அன்பு காட்டி காட்சி படுத்தியதற்கு நன்றி.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #TNBypoll #DMK #MKStalin
    வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால் பிரதமர் மோடிக்கு சிக்கல் ஏற்படும் என ராபர்ட் வதேரா கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் மே மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    வருகிற 26-ந்தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரியங்கா மிகவும் கடுமையாக உழைக்கக் கூடிய பெண் மணி. அவரை மாற்றத்தின் சக்தியாக பொதுமக்கள் பார்க்கிறார்கள். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்கிறார்கள்.


    பிரியங்காவை வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களம் இறக்கலாமா? என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதற்கு பிரியங்கா மிக சிறந்த வேட்பாளராக இருப்பார்.

    வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடும் பட்சத்தில் மோடிக்கு கடும் சிக்கல்கள் ஏற்படும். முடிவு எங்களுக்கு சாதகமாக அமையும்.

    நாடு முழுவதும் மோடி மீது மிக கோபத்தில் இருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை ராகுல்- பிரியங்காவால் கொடுக்க முடியும். எனவே வாரணாசி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டால் அவர் மிக பெரும் சாவலாக இருப்பார்.

    வாரணாசி மக்களும் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பிரியங்கா நம்பிக்கை ஒளியாக வந்துள்ளார்.

    இந்த நாட்டை ராகுல் வழி நடத்துவார். அவருக்கு துணையாக நானும், பிரியங்காவும் இருப்போம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மே 23-ந் தேதி இதற்கெல்லாம் விடை கிடைக்கும்.

    நிச்சயமாக இந்த தேர்தலால் நாட்டில் மாற்றம் வரும். தேர்தல் முடிவு வரும்போது நீங்கள் அதை பார்க்கத்தான் போகிறீர்கள்.

    இவ்வாறு ராபர்ட் வதேரா கூறினார். #LokSabhaElections2019 #PMModi

    வேலூர் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
    வேலூர்:

    தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை ஆதரித்து பிரசாரம் செய்தார். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது.


    எங்கள் வெற்றி வாய்ப்பை தடுக்க பா.ஜ.க, அ.தி.மு.க வருமான வரித்துறையை பயன்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சட்டத்திற்கு புறம்பாக எங்களது வீடு, கல்லூரிகளில் சோதனை நடத்தினர்.

    வருமானவரி சோதனை நடந்த 16 நாட்களுக்கு பிறகு தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பு தேர்தலை ரத்து செய்துள்ளனர். இதனால் தகுந்த விளக்கம் கூட அளிக்க முடியவில்லை.

    தேர்தல் ரத்து என்பது சரியான நடவடிக்கை இல்லை. எங்கள் வெற்றியை தடுக்க சோதனை நடந்துள்ளது. எனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Loksabhaelections2019 #VelloreLSPolls #KathirAnand #ElectionCommission
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு முதல் 9 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டியில் உள்ள வணிக வளாகத்தின் கீழே செயல்படும் அமமுக அலுவலகத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய 9 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மொத்தம்  94 பண்டல்கள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பண்டல்களில் வாக்காளர் பெயர் பட்டியல், வார்டு எண்ணுடன் இருந்தது. அத்துடன் ஒரு தபால் வாக்குச்சீட்டும் கைப்பற்றப்பட்டது. அதில், அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.



    ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மொத்தம் 2 கோடி ரூபாய் பணம் கொண்டு வந்துள்ளனர்.  வருமான வரி சோதனையின்போது, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் சிலர் பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். #ITRaids #LokSabhaElections2019 #Andipatti
    திருவாடானை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    தொண்டி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பறக்கும்படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரவு கோடானூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவாடானையில் இருந்து பாண்டுக்குடி சென்ற காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படை குழுவினர் காரை சோதனை செய்தனர்.

    காரில் ரூ.11½ லட்சம் ரொக்கம் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த தொண்டி தளிர் மருங்கூரைச் சேர்ந்த சிவா (வயது29), நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி செந்தூர்பாண்டி (39), சென்னை சாலிகிராமம் ராஜேஷ் (36) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்ற அடிப்படையில் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #LokSabhaElections2019

    ×