search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானை அருகே வாகன சோதனையில் ரூ.11 லட்சம் சிக்கியது
    X

    திருவாடானை அருகே வாகன சோதனையில் ரூ.11 லட்சம் சிக்கியது

    திருவாடானை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    தொண்டி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பறக்கும்படை அதிகாரி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலுச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரவு கோடானூர் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருவாடானையில் இருந்து பாண்டுக்குடி சென்ற காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படை குழுவினர் காரை சோதனை செய்தனர்.

    காரில் ரூ.11½ லட்சம் ரொக்கம் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் வந்த தொண்டி தளிர் மருங்கூரைச் சேர்ந்த சிவா (வயது29), நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி செந்தூர்பாண்டி (39), சென்னை சாலிகிராமம் ராஜேஷ் (36) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என்ற அடிப்படையில் 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. #LokSabhaElections2019

    Next Story
    ×