என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    அ.ம.மு.க.வில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை கிடையாது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    வேலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வேலூர் மண்டி தெருவில் திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதோடு தமிழகத்தை வஞ்சிக்கும் துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துள்ளது. இது ஒரு மினி சட்டமன்ற தேர்தல். ஏனென்றால் இந்த 18 தொகுதிகளிலும் வெல்ல முடியவில்லை என்றால் மோடி என்ன?, அவர்களுக்கெல்லாம் டாடி வந்தால் கூட இவர்களை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தான் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்.

    துரோகிகளுடன் இணைந்து தற்போது இரட்டை இலையை தூக்கி கொண்டு வருகிறார்கள். இரட்டை இலைக்கு பின்னால் மோடி இருக்கிறார் என்று யாரும் மறந்து விடக்கூடாது. இந்த அமைச்சர்களுக்கு பின்னாலும் மோடி தான் இருக்கிறார். ஜெயலலிதாவின் கட்சி இது.


    ஆனால் இந்த படுபாவிகள் ஆட்சியையே மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். ஜெயலலிதா கட்சி தொடங்கியதில் இருந்து கடைசி காலம் வரை அனுமதிக்கபடாதவர்கள் இன்று இரட்டை இலையை தூக்கிக் கொண்டு வந்து நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும்.

    மற்றொரு வேட்பாளரை அவரது தந்தை தத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடைகள், பியூட்டி பார்லர், டீ கடைகள் அடித்து நொறுக்குகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் இவர்களை ஆட்சி கட்டிலில் அனுமதிக்கவில்லை.

    தற்போது அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தீர்கள் என்றால் அடுத்த நிமிடமே அவர்கள் மோடியின் பக்கம் சென்று விடுவார்கள்.

    ஏனென்றால் அவர்களின் வரலாறு அப்படி. கட்சி மாறுபவர்கள் அவர்கள். ஆட்சி அதிகாரத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் கூறுவார்கள். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வாய் மூடி நின்றவர்கள் அவர்கள்.

    வேலூர் மக்கள் அரசியல் அறிவு கொண்டவர்கள். தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. பாலாறு, காவிரி, மீத்தேன், நீட் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்துக்குள் வர அவர்கள் கதவை திறந்து விடுவார்கள்.

    தத்து கொடுத்து விட்டார்கள் என நினைத்து நீங்கள் ஏமாந்து வாக்களித்தால் உங்களது சொத்துகள் அனைத்தும் பறிக்கப்படும். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாடு சுருட்டப்படும். தமிழகத்தை விற்று விடுவார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி மலர எங்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    சின்னம் கிடைப்பதற்காக நாங்கள் துரோகிகளிடம் போராடி நீதிமன்றம் சென்று சின்னம் பெற்றுள்ளோம். கூட்டணி கட்சியினரும் நம்முடைய வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள். நம்மிடம் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பிரிவினை கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran

    பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் தொகுதி பெயரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். பெரியகுளத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வேட்பாளர் பெயர் மற்றும் அவர் போட்டியிடும் தொகுதியின் பெயரை மாற்றி மாற்றி கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார்

    முதலில் ரவீந்திர குமார் என்றும் பின்னர் ரவீந்திரநாத்தாகூர் என்றும் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி என்பதற்கு பதிலாக பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி என்று மாற்றி கூறினார்.

    மேலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெயரை முதலில் மயில்வேல் என்றும் பின்னர் வேல் மயில் என்றும் கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்போது மேடையில் ஏறி பேசினாலும் சர்ச்சையான கருத்துகளை கூறுவது வழக்கம். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றும் சர்ச்சையான கருத்துகளை கூறி வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் சீனிவாசன் பேசிய கருத்துகளால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரம் செய்தார். இன்று காலை பல்லாவரத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரம் செய்தார். இன்று காலை 8 மணிக்கு பல்லாவரத்தில் அவர் பிரசாரத்தை தொடங்கினார்.

    அதன்பிறகு அவர் தாம்பரம், படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

    மதியம் 3 மணிக்கு தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு பூந்தமல்லி பஸ் நிலையம், திருமங்கலம், நாதமுனி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    இரவு 7.30 மணிக்கு வில்லிவாக்கம் பஸ் நிலையம் பகுதியில் பேசும் அவர் தொடர்ந்து அயனாவரம் இணை அலுவலகம், புரசைவாக்கம் தாணா தெரு, சூளை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இரவு 10 மணிக்கு யானை கவுனியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். #LokSabhaElections2019 #KamalHaasan

    வி.வி.பாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்த்தால் தேர்தல் முடிவு அறிவிக்க 6 நாள் ஆகும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்துள்ளது. #ElectionCommission #SupremeCourt

    புதுடெல்லி:

    கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு எந்திரத்தில் நாம் ஓட்டுகளை பதிவு செய்தால் எந்த சின்னத்துக்கு ஓட்டு விழுகிறது என்பதை உறுதி செய்யும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் இருந்தது.

    இப்போது வி.வி.பாட் என்ற புதிய எந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நாம் ஓட்டு பதிவு செய்ததும் எந்த சின்னத்திற்கு ஓட்டு அளித்தோம் என்பதை காட்டும் ஒப்புகை சீட்டு வெளியே வரும்.

    இந்த சீட்டை வாக்காளர்களிடம் கொடுக்க மாட்டார்கள். தேர்தல் அதிகாரிகள் சேகரித்து வைப்பார்கள். ஏதாவது தொகுதியில் ஓட்டு எண்ணிக்கையில் பிரச்சினை ஏற்பட்டால் அதை ஒப்பிட்டு பார்த்து சரிபார்த்து கொள்ளலாம்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அது சரியாக இருக்கிறதா? என்பதற்காக பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கிய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஓட்டு எந்திரத்தில் மட்டும் ஒப்புகை சீட்டுகளை சரி பார்க்க உள்ளனர்.

    இவ்வாறு செய்யாமல் 50 சதவீத வி.வி. பாட் எந்திரங்களில் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்து ஓட்டு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


    காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த வழக்கை தொடர்ந்தன. இதன் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வந்தது.

    அப்போது தேர்தல் கமி‌ஷன் சார்பில் வக்கீல்கள் அரியமா சுந்தரம், அமித் சர்மா ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

    வி.வி. பாட் எந்திரம் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய புள்ளியல் துறை சார்பில் 479 வி.வி.பாட் எந்திரங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அதன்படி 99.9936 சதவீதம் வி.பி. பாட் எந்திரம் துல்லியமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இந்த எந்திரங்களை பயன்படுத்தி வருகிறோம். இதுவரை 1628 சட்டசபை தொகுதிகள், 21 பாராளுமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஓட்டு மாறியதாக புகார் கூறியுள்ளார். மற்றபடி அனைத்து இடங்களிலும் மிகச்சரியாக ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இந்த கருவி மீது முழு நம்பிக்கை இருக்கிறது. இதில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    நாடு முழுவதும் 10 லட்சத்து 35 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 50 சதவீதம் வி.வி. பாட் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றால் மிகவும் காலதாமதம் ஆகும்.

    ஒட்டுமொத்த பாராளுமன்ற தொகுதிக்குள் மொத்தம் 4125 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்குள்ளும் சராசரியாக 250 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச்சாவடியில் 50 சதவீத சீட்டுக்களை எண்ணுவதற்கு ஒரு மணி நேரம் ஆகும்.

    இவ்வாறு 250 வாக்குச் சாவடிகளில் 50 சதவீத ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவதாக இருந்தால் 5.2 நாட்கள் தேவைப்படும். அதன்பிறகு அந்த சிலிப்களை கண்ட்ரோல் யூனிட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்கு 10 மணியில் இருந்து 12 மணி நேரம் தேவைப்படும். இவ்வாறு தொகுதி முழுவதும் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்க்க வேண்டும் என்றால் 6 நாட்கள் ஆகும்.

    எனவே தேர்தல் முடிவுகளையே 6 நாள் கழித்து தான் அறிவிக்க முடியும். இதனால் இது சாத்தியமில்லாதது.

    மேலும் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு ஊழியர்களுக்கு அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுவிட்டன. வி.வி.பாட் எந்திர ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது தொடர்பாக அவர்களுக்கு எந்த பயிற்சியையும் அளிக்கவில்லை. இனி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் சாத்தியமில்லை.

    இதனால் இந்த தேர்தலில் 50 சதவீத ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவது முடியாத காரியம். ஆகையால் அடுத்த தேர்தலில் வேண்டுமானால் இதை பரிசீலித்து பார்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #SupremeCourt

    மதுராவுக்கும், எனக்கும் தெய்வீக உறவு உள்ளது என்று பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
    பா.ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஹேமமாலினி மும்பையில் வசிப்பதால் அவரை வெளியூர்வாசி என சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் கூறி வருகின்றன.



    இந்நிலையில் ஹேமமாலினி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் மும்பையில் தான் வசிக்கிறேன். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை?. எனக்கு மதுராவிலும் வீடு இருக்கிறது. மதுராவுக்கும் எனக்கும் தெய்வீக உறவு உள்ளது. நான் எம்.பியாக அறிவிக்கப்பட்டபோது கோவிலில் தான் இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த போது இங்கு 250 முறை வந்துள்ளேன். இந்த தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முதல் 2 ஆண்டுகள் எனக்கும், இந்த தொகுதி மக்களுக்கும் சரியான தகவல் தொடர்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைசி 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இதை வரும் தேர்தலில் வெற்றி பெற்றும் தொடருவேன். எனக்கு மந்திரி ஆகும் ஆசை கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini
    பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் தனக்கு தயக்கம் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #PMModi
    ரேபரேலி :

    காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கடந்த புதன்கிழமை, ‘‘கட்சி விரும்பினால் நான் தேர்தலில் போட்டியிட தயார்’’ என்று கூறினார். இதனால் அவர் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவார் என்ற கருத்து நிலவியது.

    இந்நிலையில் நேற்று தனது தாயார் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் தனக்கு தயக்கம் இல்லை என்பதை சூசகமாக தெரிவித்தார்.

    பிரியங்காவிடம் கட்சி தொண்டர் ஒருவர், ரேபரேலி தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று கூறினார். அதற்கு பிரியங்கா, அப்படியென்றால் நான் வாரணாசி தொகுதியில் போட்டியிடவில்லையா? என்று நகைச்சுவையாக கேட்டார். #PriyankaGandhi #PMModi
    மோடியின் பெயர், வளர்ச்சி, பாகிஸ்தானில் புகுந்து நடத்திய விமான தாக்குதல் ஆகியவை வெற்றியை பெற்றுத்தரும் என்று பாஜக நம்புகிறது. மொத்தத்தில், வெற்றியை ருசிக்க கடினமாக களப்பணியாற்ற வேண்டிய நிலையில் பாஜக இருப்பது தெளிவாகிறது. #BJP #PMModi
    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஏப்ரல் 23-ந்தேதி பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், மோடி அலை வீசியதை பயன்படுத்தி, குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், அந்த நிலைமை மாறி விட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்தது. அதற்கு முந்தைய 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது. அதே சமயத்தில், பாஜகவின் பலம், 115-ல் இருந்து 99 ஆக குறைந்தது.

    கடந்த 30 ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றி இதுவே ஆகும். அதன்பிறகு, இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் இழுக்கும் பணி நடந்தது. அதனால், இந்த பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால், 8 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை விட 14 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றிருந்தது.

    இந்த 8 மக்களவை தொகுதிகளில், 7 தொகுதிகள் சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் ஆகிய பிராந்தியங்களில் அமைந்துள்ளன. எனவே, அந்த பிராந்தியங்களில் பாஜக பலவீனமாக இருப்பது உறுதியாகி உள்ளது. மேற்கண்ட 8 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டும் தற்போதைய எம்.பி.க்களுக்கு பாஜக மீண்டும் ‘சீட்’ கொடுத்துள்ளது. ஒரு தொகுதியில் புதுமுகத்தை நிறுத்தி உள்ளது. மீதி 5 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எனவே, பாஜக தடுமாறுவது போல் தோன்றுகிறது.



    சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து, சவுராஷ்டிரா பிராந்தியத்தில், செல்வாக்கு மிக்க சாதி தலைவர்களையும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் வளைக்கும் பணியை பாஜக தொடங்கியது. இதற்கு ‘மிஷன் தாமரை’ என்று பெயர் சூட்டப்பட்டது.

    இதன்படி, சவுராஷ்டிரா பிராந்தியத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் குன்வர்ஜி பவாலியா பாஜகவுக்கு இழுக்கப்பட்டு, மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பாஜகவுக்கு தாவினர். இன்னும் 6 பேர் தாவ தயாராக இருப்பதாக தெரிகிறது. சவுராஷ்டிரா பகுதியில் அதிகமாக வாழும் அகிர் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு மிக்க மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜவகர் சாவ்டாவையும் பாஜக இழுத்து விட்டது. அதுபோல், வடக்கு குஜராத்தில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட சமுதாய இளம் தலைவர் அல்பேஷ் தாகோருக்கும் குறி வைத்துள்ளது. இதன்மூலம், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பிராந்தியங்களில் நிலவும் பலவீனத்தை சரிக்கட்ட போராடி வருகிறது.

    பிரதமர் மோடியும் தன் பங்குக்கு பட்டிதார் சமூகத்தினரின் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதுவும், நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்த மத்திய அரசின் முடிவும் பட்டிதார் சமூகத்தின் ஓட்டுகளை பெற்றுத்தரும் என்று பாஜக கருதுகிறது.

    பாஜகவின் வியூகத்தை உணர்ந்த காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர் அகமது படேலை குஜராத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட எழுச்சியை குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா தைரியமாக கூறி வருகிறார்.

    பாஜக, பிரதமர் மோடியின் கவர்ச்சியையே பெரிதும் நம்பி இருப்பதாக தெரிகிறது. மோடியின் பெயர், வளர்ச்சி, பாகிஸ்தானில் புகுந்து நடத்திய விமான தாக்குதல் ஆகியவை வெற்றியை பெற்றுத்தரும் என்று பாஜக நம்புகிறது. மோடியின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று மாநில பாஜக தலைவர் ஜித்து வகானி உறுதிபட தெரிவித்தார். மொத்தத்தில், வெற்றியை ருசிக்க கடினமாக களப்பணியாற்ற வேண்டிய நிலையில் பாஜக இருப்பது தெளிவாகிறது. #BJP #PMModi

    சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து, ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள் என்று தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மீது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டி உள்ளார். #OPanneerSelvam #ADMK #DMK
    திருச்சி:

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனை ஆதரித்து, திருவெறும்பூரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்று, எம்.பி.யாக பதவியேற்றவுடன், திருச்சி மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கான திட்டங்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் நல்லாட்சி நடத்தினார். ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த உருப்படியான திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்து, ரூ.40 ஆயிரம் கோடியை கடலில் போட்டு வீணாக்கி விட்டார்கள்.

    கடந்த 1972-ம் ஆண்டு கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே 4 அணைகள் கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நதி நீர் குறைந்து விட்டது. இப்பிரச்சினையை தீர்க்க 17 ஆண்டு காலமாக காவிரி நடுவர் மன்றம் விசாரித்தது. கடந்த 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.

    அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால் 2011-ம் ஆண்டு அவர்களது ஆட்சி முடியும் வரை நடக்கவில்லை. அதன்பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்று பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி அந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார்.



    கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆகிவிடுவேன் என்று கூறி கலர், கலராக உடைகளை அணிந்து, கரும்பு தோட்டத்தில் சிமெண்டு சாலை போட்டு நடந்து சென்றார். ஆனால் ஒன்றும் எடுபடவில்லை. தற்போது அவர்கள் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் டீக்கடையே நடத்தியவர்கள்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து தமிழ்நாட்டையே கொளுத்திவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். அவர்கள்தான் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தியவர்கள். வன்முறை கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட கட்சி தி.மு.க.தான். அவர் தமிழக முதல்-அமைச்சர் ஆனால் தமிழகத்தின் நிலைமையை எண்ணிப்பார்க்க முடியுமா?. இந்த தேர்தலுடன் அ.தி.மு.க.வின் கதை முடிந்து விடும் என்று ஸ்டாலின் கூறுகிறார். இந்த தேர்தலின் முடிவுக்கு பின்னர் யார் கதை முடியப்போகிறது என்பது தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerSelvam #ADMK #DMK 
    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை எதிர்த்து கர்நாடக மாநிலம், தும்கூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டி மனு தாக்கல் செய்த காங்கிரஸ் எம்.பி. இன்று வாபஸ் பெற்றுள்ளார். #DeveGowda #TumkurLSpolls
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. 

    இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் கடந்த 25-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இதே தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பதவி வகிக்கும் முட்டாஹனுமேகவுடாவும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவர்கள் இருவரில் யார் வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்? என்பது புரியாத நிலை நீடித்து வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையின் அறிவுரைப்படி தும்கூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவை முட்டாஹனுமேகவுடா இன்று திரும்பப் பெற்றார். 

    இதேபோல், தும்கூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தேவேகவுடாவின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., கே.என். ராஜன்னா என்பவரும் கடைசி நேரத்தில் வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

    பாஜக சார்பில் தும்கூர் தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பசவராஜ் போட்டியிடுகிறார். #DeveGowda #TumkurLSpolls
    நாட்டை விழிப்புடன் காவல் காக்கும் நபர் பிரதமராக இருப்பதால் மக்கள் அச்சமின்றி நடமாடுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, புதிய இந்தியா உருவாக பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். #Votefor #NewBharat #ModiinTelangana
    ஐதராபாத்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகரில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றி ஆதரவு திரட்டினார்.

    ஜாதகம், ஜோசியத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர் என்று தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவை குற்றம்சாட்டிய மோடி, வாரிசு அரசியல் மற்றும் சமரச அரசியல் மூலம் அவர் பிழைப்பு நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

    ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள உங்களது முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநில சட்டசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னதாகவே சட்டசபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலை நடத்தும் நிலையை உருவாக்கி விட்டார். ஜோசியரின் ஆலோசனையை கேட்டு அவர் செய்த இந்த காரியத்தால் தற்போது இங்கு இரண்டு தேர்தல்கள் நடைபெறுகிறது. 


    இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற அவர் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்திருக்க முடியும். ஆனால், பதவியின் மூலம் தனது குடும்பத்தாருக்கு மட்டும் நன்மைகளை செய்த அவர் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. 

    என்னை திட்டியும், தாக்கியும் பேசி வருபவர்களின் ஏச்சுகளுக்கு இடையில் மக்களின் ஆசிகளுடன் முன்னேற்றத்துக்கு தேவையான பல்வேறு நல்ல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி முடித்துள்ளது.

    பெண்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தேவையான பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். 

    ஏப்ரல் 11-ம் தேதி இங்கு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் தொகுதியின் எம்.பி.க்காகவோ, மத்தியில் அடுத்து ஆட்சி செய்யப்போகும் பிரதமருக்காகவோ நீங்கள் வாக்களிக்கப் போவதில்லை. புதிய பாரதம் உருவாவதற்காக வாக்களிக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் இந்த தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். #Votefor #NewBharat #ModiinTelangana
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #VCKleader #Thirumavalavan #policesecurity #deaththreats
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    ஆனால், இவ்வழக்கை வழக்கமான நடைமுறைகளின்படி விசாரித்த ஐகோர்ட் தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VCKleader #Thirumavalavan #policesecurity #deaththreats
    பாராளுமன்ற தேர்தலில் 845 பேரும், 18 சட்டசபை இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டியிடுகின்றனர் என தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். #LSpolls #ElectionCommision #FinalCandidateList
    சென்னை:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுவை தொகுதிக்கும் ஏப்ரல் 18- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் தமிழகம், புதுவையில் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிந்தது.

    வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மொத்தம் 932 மனுக்கள் ஏறுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

    இதேபோல, தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 518 மனுக்களில் 305 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.
     
    இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியானது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 845 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் 269 பேர் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கரூரில் 42 பேரும், தென்சென்னையில் 40 பேரும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 10 பேரும் போட்டியிடுகின்றனர். #LSpolls #ElectionCommision #FinalCandidateList
    ×