search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Dindigul Srinivasan"

    பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் தொகுதி பெயரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    பெரியகுளம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். பெரியகுளத்தில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வேட்பாளர் பெயர் மற்றும் அவர் போட்டியிடும் தொகுதியின் பெயரை மாற்றி மாற்றி கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார்

    முதலில் ரவீந்திர குமார் என்றும் பின்னர் ரவீந்திரநாத்தாகூர் என்றும் கூறினார். தேனி பாராளுமன்ற தொகுதி என்பதற்கு பதிலாக பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி என்று மாற்றி கூறினார்.

    மேலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பெயரை முதலில் மயில்வேல் என்றும் பின்னர் வேல் மயில் என்றும் கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்போது மேடையில் ஏறி பேசினாலும் சர்ச்சையான கருத்துகளை கூறுவது வழக்கம். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், மோடியின் பேரன் ராகுல்காந்தி என்றும் சர்ச்சையான கருத்துகளை கூறி வரும் நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் சீனிவாசன் பேசிய கருத்துகளால் சலசலப்பு ஏற்பட்டது. #MinisterDindigulSrinivasan
    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இதில் அ.தி.மு.க. அரசு எப்போதும் மக்களின் உணர்வுகளை மதித்து உரிய முடிவு எடுக்கும். மக்களுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. மட்டுமே எதிர்கட்சி. மற்ற எந்த கட்சியையும் நாங்கள் போட்டியாக நினைக்கவில்லை. அரசியல் களத்தில் அவர்களை எதிர்த்தே எங்கள் பிரசாரம் இருக்கும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு போதிய நிவாரணம் அளிக்கவில்லை. அதற்காகத்தான் நாங்கள் மீண்டும் கடிதம் எழுதி வருகிறோம்.

    உரிய நிவாரணத்தை பெற்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அ.தி.மு.க. அரசு உறுதியாக செய்து தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    பெருந்துறை:

    பெருந்துறையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் பெருந்துறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 13 மாவட்டங்களில் விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் போலீசார் மிரட்டி அத்து மீறும் செயலில் ஈடுபடுகின்றனர்.

    அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யும் இடத்திற்கு செல்லக் கூடாது என சர்வாதிகார போக்குடன் ஈரோடு மாவட்ட போலீசும் செயல்பட்டு வருகிறது. எங்களது கட்சியின் மூத்த வக்கீல் மோகன் மீது வழக்கு போட்டுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    போலீசை வைத்து மிரட்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம். எங்களது மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ளது.

    அவரது மகள், மருமகன் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி இந்த இடத்தில் நீங்கள் எதுவும் செய்யக்கூடாது. இது மந்திரி உத்தரவு என மிரட்டியுள்ளனர்.


    இது குறித்து கேட்டதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதால் தான் தடுத்து நிறுத்தினோம் என போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே மேற் கொண்டு இதுபோன்ற மிரட்டல்கள் நடக்குமாயின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகையிடுவோம்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #mutharasan #MinisterDindigulSrinivasan

    ஸ்லோபாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொலை செய்து விட்டனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பாக குற்றம்சாட்டி பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க, அ.தி.மு.க என பாகுபாடு பார்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கு ஒரு கண் போனாலும் எதிரிக்கு 2 கண் போகவேண்டும் என தினகரன் நினைக்கிறார்.

    ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு சசிகலா துணையாக இருந்ததை வைத்துக் கொண்டு எல்லோரையும் மிரட்டியதை போல் தற்போதும் மிரட்டலாம் என பார்க்கிறார்.

    இந்த ஆட்சி, கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என ஸ்டாலினுடன் கூட்டணி சேர்ந்து முயற்சி செய்து வருகிறார். சர்க்கரை நோயாளியாக இருந்த ஜெயலலிதாவிற்கு எதைக்கொடுக்ககூடாதோ அதை வேண்டுமென்றே கொடுத்து ஸ்லோ பாய்சன் கொடுப்பது போல அவரை சசிகலா குடும்பத்தினர் கொலை செய்து விட்டனர்.


    இப்போது அவர்கள் உத்தமர் போல பேசி வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசே நான்தான் என தினகரன் கூறி வருகிறார். வழக்கில் இருந்து விடுபடுவதற்காக ஜெயலலிதாவை சிக்கவைத்து விட்டு கருணாநிதி உதவியை நாடியவர் தினகரன். அதனால்தான் ஜெயலலிதா தான் உயிரோடு இருந்தவரை அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவே இல்லை. அவரால் அ.தி.மு.க அரசை ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #Sasikala
    தி.மு.க.வுடன் உறவு வைத்து அ.தி.மு.க.வை தினகரன் அழிக்கப் பார்க்கிறார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி தமிழக அரசின் சாதனைகளை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூற பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி ஜெயலலிதா பேரவை சார்பில் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி முகாம், மதுரை ரிங்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

    முகாமில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இங்கே திரண்டுள்ள பெண்களை பார்க்கும்போது மகளிர் மாநாடு போல இருக்கிறது. தமிழகம் தற்போது 19 அரசு துறைகளில் தலைசிறந்து விளங்கி வருகிறது.

    1972-ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது முதல் வெற்றியை தந்தது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டம். இது போன்ற ஒரு வெற்றியை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாம் பெற வேண்டும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

    புரட்சித்தலைவி அம்மா, பெண்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியில் பெண்கள் நலம் காணும் அரசாக அ.தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.


    டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார். தி.மு.க.வோடு உறவு வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை வீழ்த்திவிடலாம் என கனவு காண்கிறார். அவரது எண்ணம் பலிக்காது. அவர் நமக்கு எதிரி அல்ல. தி.மு.க.தான் முக்கிய எதிரி. எனவே அ.தி.மு.க. வெற்றிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #DindigulSrinivasan #TTVDhinakaran #DMK
    சைக்கிள் பேரணி தொடக்க விழாவில் பழமொழியை மாற்றி கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #DindigulSrinivasan #ADMK

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    விழாவில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கையில் கட்டுப் போட்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

    அவரை வாழ்த்தி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... எழுந்தாலும் ஆயிரம் பொன்... என்பார்கள். அதுபோல உடல் நலக்குறைவால் மறைந்திருந்தாலும் புறநானூற்று வீரர் போல ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உற்சாகமாக எழுந்து வந்து விட்டார் என்றார்.

    “மறைந்திருந்தாலும்” என்ற வார்த்தையை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டது அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     


    யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.... இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் என்பதுதான் பழமொழி. ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “யானை படுத்தாலும் ஆயிரம் பொன்... யானை எழுந்தாலும் ஆயிரம் பொன்” என்று பழமொழியை மாற்றி பேசியதாலும் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி உறுதியாகி விட்டது. இந்த வெற்றிக்கு பிறகு தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்க முடியாது.

    ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டை காட்டி திருட்டுத்தனமாக வெற்றி பெற்றதுபோல திருப்பரங்குன்றத்தில் தினகரனால் வெற்றி பெற முடியாது. அதுமட்டுமல்ல சுண்டக்காய் கட்சிகளும் காணாமல்போய் விடும் என்று பேசினார். #DindigulSrinivasan #ADMK

    டெல்லி சென்று நரசிம்மராவுடன் துணை சபாநாயகர் தம்பித்துரை பேசுவார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. #ADMK #ThambiDurai #MinisterDindigulSrinivasan

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே வேடசந்தூர், கல்வார் பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,

    இங்குள்ள சுகாதார நிலையத்தை பரமசிவம் எம்.எல்.ஏ.வே திறந்து வைத்திருக்கலாம். எங்களை அழைத்திருக்க தேவையில்லை. ஆனால் அவரது அன்பின் வற்புறுத்தல் காரணமாக நான், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வந்துள்ளோம்.

    தற்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை பரமத்தி வேலூரில் பொதுமக்களிடம் குறை கேட்டுக் கொண்டு இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்து விடுவார். மாலை உணவுக்கு புதுக்கோட்டை சென்று விடுவார்.

    அதன் பின்னர் டெல்லியில் போய் உட்கார்ந்து பிரமதர் நரசிம்மராவுடன் பேசுவார் என்றார். இவ்வாறு பேசியதும் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

     


    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன்சிங் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர் என்றார்.

    மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா இட்லி சட்னி சாப்பிட்டார் என்று கூறியது பொய். எங்களை மன்னித்து விடுங்கள் என்று சர்ச்சை பேச்சுகளை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #ThambiDurai #MinisterDindigulSrinivasan

    மயிலாடுதுறையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தது தொடர்பாக தினகரன் கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
    மயிலாடுதுறை:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பேசும்போது ‘‘ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டியவர் டி.டி.வி.தினகரன்’’ என்று கூறினார்.

    இதனை கண்டித்தும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

    முன்னதாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் இருந்து நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் தலைமையில் அந்த கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே கிட்டப்பா அங்காடி வந்தடைந்தவுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், திடீரென திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை கைப்பற்றினர்.

    பின்னர் போலீசார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மாவட்ட செயலாளர் செந்தமிழன் உள்பட 47 பேரை கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    திண்டுக்கல்:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், கடந்த 18-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நான் கலந்து கொண்டு பேசினேன். அப்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டதை பற்றி குறிப்பிட்டேன்.

    மேலும் ஜெயலலிதாவின் புகழை வைத்து, 30 வருடங்களுக்கு மேலாக அவருடன் இருந்த சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்று கருத்துப்பட பேசினேன்.

    அதைத்தவிர, ஜெயலலிதாவை பற்றி தவறாக எந்த கருத்தையும் பேசவில்லை. நான் என்றைக்கும் ஜெயலலிதாவின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்ற தினகரன் அணியினர் முயற்சி மேற்கொண்டனர். இதனால் பதவி ஆசை காட்டி 18 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் அவர் இழுத்துக் கொண்டார். ஆனால் அவரால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் ஸ்டாலினை முதல்வராகவும், தினகரனை துணை முதல்வராகவும் உருவாக்க திட்டம் தீட்டினர்.

    அதுவும் நிறைவேறவில்லை. இதனால் சபாநயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டும் என டி.டி.வி. தினகரன் மற்றும் ஸ்டாலின் துடித்து வருகின்றனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் வியர்வை, ரத்தம், பணம் ஆகியவற்றை கொடுத்து எங்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. ஆக்கினார். அதே போல்தான் தற்போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 18 பேரும் எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா தயவால் உருவாக்கப்பட்டனர்.



    ஆனால் அவரது மறைவுக்கு பின் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களும் பெற்றுக் கொண்டு தற்போது மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப்பற்றி பேசிய இந்த சர்ச்சை பேச்சால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் வியப்புடன் அமைச்சரை பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் வேறு தலைப்பில் பேச்சைத் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #DindigulSrinivasan #AIADMK #Jayalalithaa
    ×