

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 12 பேர் நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் பிரதமர்- சீன அதிபர் வருகையை ஒட்டி அவர்களை வரவேற்கும் பொருட்டு நாங்குநேரியில் முகாமிட்டிருந்த தமிழக அமைச்சர்கள் இன்று சென்னை புறப்பட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னைக்கு புறப்படுவதற்காக வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
இடைத்தேர்தல் பொதுமக்களோடு மக்களாக இருந்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். அப்போது தான் மகிழ்ச்சியாக பிரசாரம் செய்திட முடியும். மாமல்லபுரத்தை கண்டுபிடித்த நரசிம்ம பல்லவன் பெருமையை, தமிழன் பெருமையை இன்று உலக அரங்கில் எடுத்து செல்லும் பெருமை பிரதமர் மோடியையே சேரும்.
இவ்வாறு அவர் கூறினார்.