என் மலர்
வேலூர்
ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி உமாராணி (வயது 45). ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை உமாராணியை கம்பெனியில் விட்டு வருவதற்காக லோகநாதன் பைக்கில் அழைத்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பஸ் பைக் மீது மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் உமாராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். லோகநாதன் படுகாயமடைந்தார்.
ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவரை மீட்டு, வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள இலவம்பட்டி கிராமத்தையொட்டி உள்ள காட்டுபகுதியில் உள்ள மரத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனைக்கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றினர். வாலிபர் சட்டையில் அவரது செல்போன் இருந்தது.
இதன்மூலம் இறந்து கிடந்த வாலிபர் கேரள மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (27) என்பது தெரியவந்தது.
வாலிபர் இங்கு எப்படி வந்தார். அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள மூங்கபட்டு கிராமத்தை சேர்ந்தவர் அரி (வயது 33) நகை தொழிலாளி. இவரது மனைவி ரோஜா (எ) குமரி (27), மதியழகன் (6), கோபியா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.
அரி, ரோஜா இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கபட்டனர். அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று மாலை 2 பேர் உடல் நிலையும் மோசமானது. இதனையடுத்து வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டனர். அங்கு சேர்க்கபட்ட சிறிது நேரத்தில் அரி பரிதாபமாக இறந்தார். ரோஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மூங்கப்பட்டு கிராமத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். வட்டார மருத்துவ அலுவலர் விமல் தலைமையில் அங்கு மருத்துவ முகாம், சுகாதார பணிகள் நடந்தது.
அரி, ரோஜா தம்பதி இறந்ததால் அவர்கள் குழந்தைகள் தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. #Mysteryfever
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியான இவர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 25 வழக்குகள் உள்ளது.
சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவருக்கும் வள்ளலாரில் டிபன் கடை நடத்தி வரும் தண்டுமாரி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.
தண்டுமாரி இந்திரா நகரில் வசித்து வந்தார். அவரது கணவர் இறந்து விட்டார். அவருக்கு போடி (20) என்பவர் உள்பட 2 மகன்கள் உள்ளனர்.
தங்கராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். எப்போதும் தண்டுமாரி வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். 2 பேருக்கும் 6 ஆண்டுகளாக கள்ளக்காதல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் தங்கராஜ் தண்டுமாரி வீட்டுக்கு வந்தார். அப்போது தண்டுமாரிக்கும், தங்கராஜ்க்கும் இடையே நள்ளிரவு 1 மணியளவில் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த தண்டுமாரி, அவரது மகன் போடியுடன் சேர்ந்து தங்கராஜின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தங்கராஜ் இறந்ததை உறுதி செய்த தண்டுமாரி தனது மகனுடன் தலைமறைவாகி விட்டார்.
சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராஜின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
வாலாஜா:
பொன்னை எம்.எஸ். கண்டிகை ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38). இவரது மனைவி சரளா (36). இவர்கள் 2 பேரும் திருவண்ணாமலை மாவட்டம் ராந்தம் கொரட்டூரில் உள்ள உறவினர்கள் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று மாலை அங்கிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். லாலாபேட்டை நெல்லிக்குப்பம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சரஸ்வதி பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்த சரஸ்வதியை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.
கடந்த 2 மாதங்களில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பாகாயம் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் ஜெயிலில் பணியாற்றும் முதன்மை தலைமை சிறைக்காவலர் செல்வின் தேவதாஸ் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள், ஏட்டு செல்வின் தேவதாசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டு பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டம் முழுவதும் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகள் நிரம்பியது.
மோர்தானா, ஆண்டியப்பனூர் உள்ளிட்ட அணைகளும் நிரம்பின.
இதனால் விவசாயி பணிகள் துரிதமாக நடந்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் மழை பெய்ய தொடங்கியது. மேலும் கர்நாடகா, ஆந்திராவில் மழைகாரணமாக தடுப்பணைகள் நிரம்பி பாலாற்றில் வெள்ளம் வந்தது.
அக்டோபர் மாத இறுதியில் 150-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தன. காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி கோடி போனது. பல இடங்களில் கிடா வெட்டி பொதுமக்கள் பூஜை செய்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை போதிய மழை பெய்யவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. சில ஏரிகளில் 25 சதவீத தண்ணீர் உள்ளது.
செப்டம்பர் மாத இறுதியில் பெய்த மழையை நம்பி பயிரிட்ட வேர்க்கடலை பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர்.
இந்த நிலையில் கஜாபுயல் சென்னை, கடலூர் வழியாக கரையை கடக்கும் என முதலில் அறிவிக்கபட்டது. இதனால் வேலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
நேற்று காலையில் மந்தமான தட்ப வெப்ப நிலை நிலவியது. லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அரக்கோணம் பகுதியில் மட்டும் பரவலாக மழை பெய்தது. மற்ற இடங்களில் தூரலுடன் நின்ற விட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மழை பொய்த்து வருவதால் இந்த ஆண்டு வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. #GajaStorm
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள குருசிலாபட்டு கூடபட்டுகாலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). கூலி தொழிலாளி. இவர் நேற்று காக்னாம்பாளையம் சுடுகாடு அருகே மணல் அள்ளிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராமல் திடீர் என மணல் சரிந்து ராஜேந்திரன் மீது விழுந்தது. இதில் ராஜேந்திரன் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த குறிசிலாபட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரில் பொய்கையில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் பங்கேற்க திருமாவளவன் வேலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை அதிபர் சிறிசேனா பதவி விலகுவது தான் சரியாக இருக்கும்.
பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையில் மோடி சர்வாதிகார போக்குடன் செயல்பட்டார். 2019 நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

தி.மு.க.வுடன், விடுதலை சிறுத்தை கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கக்கூடிய பொறுப்பு தி.மு.கவு.க்கு தான் உண்டு. தி.மு.க.வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாக தான் இருந்து வருகிறது.
பா.ஜ.க கொள்கை கோட்பாடு இந்திய தேசத்திற்கு, இந்திய மக்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக தி.மு.க உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வந்துள்ளது.
பா.ஜ.க ஆபத்தான கட்சியா என்பதற்கு நேரடியாக பதில் சொல்ல விரும்பாமல் பலசாலியா இல்லையா என்று திசை திருப்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.
பாம்பை கண்டால் படையுமே நடுங்கும் என சொல்லுவார்கள். அப்படி என்றால் படையை விட பாம்பு வலிமையானது என்பது பொருள் அல்ல,
படையே நடுங்கும் அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது, ஆபத்தானது என்பது பொருள். ஆகவே 10 பேர் சேர்ந்து பாம்பை அடிப்பதால் பாம்பு பலசாலியாகி விடாது. இப்படி தான் பா.ஜ.கவை பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #dmk #bjp #rajinikanth
அரக்கோணம்:
அரக்கோணம் டி.என்.நகரை சேர்ந்தவர் பாண்டியன் இவர் பஜார் பகுதி ஜீப்ளி தெருவில் புத்தக கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்த பின்பு பாண்டியன் கடையை பூட்டிச் சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டியனின் புத்தக கடையில் திடீரென தீப்பற்றியது.
இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கடையில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் எரிந்து நாசமானது. இது குறித்து பாண்டியன் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியகோமேஸ்வரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை நடந்து வருகிறது. விஷேச நாட்களில் பக்தர்கள் துலாபாரம் அளித்தும். உண்டியில் காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
நேற்று பூசாரி வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் மர்மகும்பல் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோவில் இருந்த 6 பவுன் சாமி நகைகள், பக்தர்கள் துலாபாரம் வழங்கிய ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகைகள் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடியாத்தம்:
குடியாத்தம் நல்லூர் பேட்டை புத்தர்நகரை சேர்ந்தவர் அருணாசலம் மகள் சுஜிதா (வயது 20). நர்சிங் படித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த சுஜிதா குளியலறைக்கு சென்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது உடலில் வேகமாக பரவிய தீ பற்றி எரிந்தது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். தீயை அணைத்து சுஜிதாவை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிக்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.குடியாத்தம் டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து சுஜிதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






