என் மலர்
தூத்துக்குடி
- சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 5-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.
பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்ட பத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
பின்னர் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனைக்கு பின் மதியம் 2மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமும், மூன்றாவதாக தன்முகம் (சூரன்), நான்காவது சேவலாக மாறிய சூரனை வதம் செய்கிறார்.
பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்கு பிறகு சுவாமி, அம்பாள் கிரிப் பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாளை சூரசம்ஹாரத்தை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இதனால் திருச்செந்தூரில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளிக்கிறது.
சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரலை செய்யப்பட உள்ளது.
7-ம் திருவிழாவான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். அங்கு மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ராஜகோபுரம் அருகில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் மின்கட்டணம்.
- அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும் என்றனர்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 4-வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளர் சபரி ராஜன். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ்பகுதியில் இவரும், மேல் பகுதியில் இவரது மகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இருவருக்கும் தனித்தனி மின் இணைப்பு இருந்த நிலையில் அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மின் இணைப்பாக மின்வாரிய அதிகாரிகள் மாற்றி உள்ளனர். இதனால் வழக்கமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக வந்து உள்ளது. இதனை மாற்ற வலியுறுத்தி சபரி ராஜன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்துள்ளார். அதிகாரிகளும் ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இந்த மாதம் வீட்டுக்கு ரூ.8 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. வழக்கமாக ரூ.1000 முதல் 1,500 வரை மின் கட்டணம் செலுத்திய நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் வந்து இருப்பது சபரிராஜனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனது மகள் வெளியூர் சென்றுள்ளதால், மின்சாரம் பயன்படுத்தாத நிலையிலும் மின் கட்டணம் அதிகரித்து உள்ளதாகவும் , வழக்கம்போல இரு மின் இணைப்பு வழங்க ஆன்லைன் மூலமாக தேவையான ஆவணங்கள் அளித்திருப்பதாகவும், அதன் மீது எதுவும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக சபரிராஜன் புகார் கூறினார்.
மேலும், டீக்கடை நடத்தி வரும் தன்னால் ரூ.8 ஆயிரம் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை இருப்பதாக கூறி சபரிராஜன் இன்று காலை தனது மனைவியுடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் மின் கட்டணம் கண்டிப்பாக கட்டித்தான் ஆக வேண்டும். எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறினர். இதைக்கேட்ட சபரி ராஜன் ஆவேசமடைந்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சபரி ராஜனிடம் இருந்து மண்ணெண்ணை கேனை பறித்ததோடு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலமைச்சர் வரும் சாலையில் புதிதாக தார் ஊற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
- பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில், மின்வாரிய அலுவலகம் எதிரில் கோவில்பட்டி நகர தி.மு.க., அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் முன்பு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட நகர தி.மு.க., அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்பட்டிக்கு வருகை தந்து, நகர தி.மு.க. அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ள தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து 29-ந் தேதி (புதன்கிழமை) தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக இலத்தூர் விளக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் மைதானம் தயார் செய்யப்பட்டு அதில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில நாட்களாக தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியிலும் கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரியும் பொதுமக்கள் சிரமம் இன்றி வந்து செல்வதற்காக மழை பெய்தால் தண்ணீர் தேங்காத அளவிற்கு மண் கொட்டப்பட்டும், முதலமைச்சர் வரும் சாலையில் புதிதாக தார் ஊற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் பந்தல் பணிகள் நடைபெறுவதை தென்காசி எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் மாவட்ட தலைவருமான பழனி நாடார் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பல கோடி மதிப்பில் பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட உள்ளார். அதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது.
- கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.
- கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் இயல்பாக உள்ளது. இந்த நாட்களில் கடல் சுமார் 50அடியில் இருந்து 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரியும். ஆனால் கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் குறைவான பக்தர்களே புனித நீராடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று 4-வது நாளாக சீற்றம் காணப்பட்டது.
கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது. இதனால் பக்தர்கள் தயங்கியவாறு புனித நீராடி வருகின்றனர் இதனால் எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் நேரத்தில் கடல் அலைகள் சீற்றத்தால் குறைவான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.
- கடலானது அடிக்கடி உள்வாங்கி காணப்படுவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
- பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.
இந்த கோவில் கடலானது அடிக்கடி உள்வாங்கி காணப்படுவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கோவில் கடலானது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக உள்வாங்குவதும், சில மணி நேரங்களுக்கு பின்னர் சீற்றத்துடனும் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று கோவில் கடலானது சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறையில் மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- மழை நீரால் பல்வேறு முதுமக்கள் தாழிகள் மற்றும் மணல்திட்டுகள் சேதமடைந்து உள்ளது.
- மழை நீர் விழும் இடத்தின் நேர் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து மழைநீர் குழிகளுக்குள் செல்லாமல் இருக்க வைத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த அகழாய்வில் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் தோண்டப்பட்ட குழிகளில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், இரும்பு மற்றும் வெண்கலப் பொருட்கள் மட்டுமல்லாமல் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதை பாதுகாக்க தற்காலிகமாக கூரைகள் அமைக்கப்பட்டது. இந்த கூரைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டு வந்தது. எனவே மழை காலத்திற்கு முன்பு அதை அகற்றி புதிய கொட்டகை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெய்த கனமழையால் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூரையில் உள்ள சேதமடைந்த பகுதி வழியாக அகழாய்வு குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மழை நீரால் பல்வேறு முதுமக்கள் தாழிகள் மற்றும் மணல்திட்டுகள் சேதமடைந்து உள்ளது.
மழை நீர் விழும் இடத்தின் நேர் பிளாஸ்டிக் பொருட்களை வைத்து மழைநீர் குழிகளுக்குள் செல்லாமல் இருக்க வைத்துள்ளனர். ஆனால் அந்த பொருட்களிலும் நீர் நிரம்பி தொல்லியல் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து வருவது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
- விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாநகரை ஒட்டிய பகுதிகளான கோரம் பள்ளம் காலங்கரை மற்றும் முத்தையாபுரம், முள்ளக்காடு, தருவைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதியில் உள்ள உப்பளங்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படா ததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர். விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை, கோரம்பள்ளம், அந்தோணி யார்புரம், காலங்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கனமழையின் காரணமாக காலங்கரை கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தூத்துக்குடி குமரன் நகர், முருகன் தியேட்டர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
இதேபால தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தூத்துக்குடி:
தமிழ்நாட்டில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டிய கனமழையால் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. மேலும் சிவன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.
கடந்த சில நாட்களாக திருச்செந்தூரில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
- விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலில் குவிந்தனர்.
கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.
அதில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ந்தேதி அதிகாலையில் யாக பூஜையுடன் தொடங்குகிறது.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க நேரில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 27-ந்தேதி நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு தீபாராதனை நடைபெறுகிறது.
பின்னர் மதியம் 3 மணிக்கு அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளி அங்கு தன்னை எதிர்த்து வரும் சூரபத்மனிடம் போரிட்டு சூரனை சம்சாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் கிரி பிரகாரம் வழியாக வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான 28-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தெய்வானை அம்மாள் தவசு காட்சிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் அருகில் வந்து சேர்தல் நடக்கிறது. அங்கு மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் அம்பாளுக்கு காட்சி கொடுத்து அங்கு தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது அன்று இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- திருச்செந்தூரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "ஜெயிலர் 2'ல் ரஜினியுடன் நடித்து வருகிறேன். விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டதால் தகராறு.
- உறவினருக்கு ஆதரவாக மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கத்திக்குத்து.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேச செல்வன் (வயது 41). ஏரல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.
அவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று சிவனேச செல்வன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செந்தில் ஆறுமுகத்தின் சித்தி மகனான பிளஸ்-1 படிக்கும் அர்ஜூன் (16) என்பவர் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் அர்ஜூன் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன் தனது மோட்டார் சைக்கிளின் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜூனை குத்தியுள்ளார். இதில் அர்ஜூன் படுகாயம் அடைந்தார்.
அர்ஜூனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவனேச செல்வன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிவனேச செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






