என் மலர்
தூத்துக்குடி
- விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- திருச்செந்தூரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "ஜெயிலர் 2'ல் ரஜினியுடன் நடித்து வருகிறேன். விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- மோட்டார் சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டதால் தகராறு.
- உறவினருக்கு ஆதரவாக மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கத்திக்குத்து.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேச செல்வன் (வயது 41). ஏரல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.
அவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று சிவனேச செல்வன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செந்தில் ஆறுமுகத்தின் சித்தி மகனான பிளஸ்-1 படிக்கும் அர்ஜூன் (16) என்பவர் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் அர்ஜூன் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன் தனது மோட்டார் சைக்கிளின் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜூனை குத்தியுள்ளார். இதில் அர்ஜூன் படுகாயம் அடைந்தார்.
அர்ஜூனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவனேச செல்வன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிவனேச செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை நடத்தினார்.
- தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே 'மரங்களின் மாநாடு', அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் 'மலைகளின் மாநாடு'ஆகியவற்றை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் சென்றிருந்தார். அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
- துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
தூத்துக்குடி :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தூத்துக்குடி சம்பவத்தின் போது பா.ஜ.க. உண்மை கண்டறியும் குழு எங்கே சென்றிருந்தது?
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.
* தேர்தல் வருவதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு கரூர் வந்துள்ளது.
* துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
* ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மக்கள் புரட்சி.
* கரூரில் 41 பேர் மரணத்திற்கு த.வெ.க. தலைவர் விஜயே முதல் காரணம்.
* காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தே பேச்சை தொடங்கினார் விஜய்.
* 41 பேர் மரணத்திற்கு விஜய் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லையே.
* இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகளை இந்த முறை எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது.
* எங்களுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள் என்று மக்களிடம் கேட்கிறோம். எங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பத்தாம் நாளான இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது.
உடன்குடி:
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்து வந்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
இந்நிலையில், பத்தாம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனையொட்டி காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார்.
அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார். தொடர்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர்புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார்.
அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெரும் திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று காலை முதல் இரவு வரை மண்டகப்படிதாரர்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதையொட்டி காலையில் நடை திறந்தது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஏராளமான தசரா குழுவினர் நேற்று இரவு வரை மேளவாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டத்துடன் வந்து காப்புகட்டி சென்றனர்.
இன்றும் தசரா குழுவினர் வந்து காப்புகட்டி சென்றனர். சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் பலர் அதிகாலையிலே கோவிலுக்கு நடந்து வந்து தரிசனம் செய்தனர்.
இன்று கோவில் கலை அரங்கத்தில் மாலை 3 மணிமுதல் ஆசிரியர் பெருமாள், கிஷோர் சமய சொற்பொழிவு, நடனம், பரதநாட்டியம், தொடர்ந்து இரவு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கிறார்.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வாளர் முத்துமாரியம்மாள் அறங்காவலர் குழுத்தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் அறங்காவலர்கள், ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
- தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தூத்துக்குடி தருவைகுளத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்களை மட்டும் நம்பி தேர்தல் களத்துக்கு வந்த ஒரே தலைவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார். ஜூலை 7-ந் தேதி தொடங்கி இன்று 154-வது தொகுதியாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
இது எதை காட்டுகிறது என்றால் மக்கள் மீது உள்ள நம்பிக்கை அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு என்பதை தான் காட்டுகிறது.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட கூட்டணி வரலாம். சேரலாம். இருக்கின்ற கூட்டணிகள் கூட பிரியலாம். ஆனால் மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி மக்களை சந்திப்பதற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பகுதியில் நடந்த அ.தி.மு.க. பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டசபை தேர்தலுக்காக முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி இதுவரை 154 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.
மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே 2-வதுஇடத்தை பிடித்து யார் எதிர்க்கட்சியாக வருவது என்று தான் போட்டி உள்ளது.
டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
4 ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமியை மக்கள் அடுத்த முதலமைச்சராக்க முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால் தான் தெரியும் என்பது போல அ.தி.மு.க. ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய தொடங்கி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.
காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை தி.மு.க.வின் தவறை சுட்டிக்காட்டவில்லை. நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை. கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வப்பெருந்தகைக்கு அ.தி.மு.க. பற்றி பேச அருகதை இல்லை.
காங்கிரஸ் கட்சியை தி.மு.க. விழுங்க பார்க்கிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
- கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன்.
இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மகளை காணவில்லை என சிறுமியின் தந்தை கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் அவரது மகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரை நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை தடுத்து நிறுத்தி வெட்ட முயன்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உயிருக்கு பயந்து வண்டியை கீழே போட்டு விட்டு அருகே இருந்த மரக்கடைக்குள் புகுந்துள்ளார்.
ஆனாலும் அந்த கும்பல் விடாது துரத்தி மரக்கடைக்குள் சென்று மணிகண்டனை ஓட ஓட சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றினர்.
இக்கொலை தொடர்பாக சிறுமியின் தந்தை நட்டார், உறவினர் கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டி படுகொலை செய்ததாக சிறுமியின் தந்தை நட்டார் (48), தம்பி உட்பட 4 பேரை தாலுகா போலீசார் நேற்று இரவு கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
- இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30).
இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்துள்ளார்.
இன்று வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்றபோது தோப்பூர் விலக்கு அருகே அவரை மர்ம நபர்கள் 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சாலை ஓரத்தில் உள்ள மரக்கடைக்குள் ஓடினார். ஆனாலும் அவரைப் பின் தொடர்ந்த நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை குறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மரக்கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருச்செந்தூர் தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமித்ஷா வீடுதான் அதிமுகவிற்கு நீதிமன்றமாக இருக்கிறது.
- ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகின்றது பிஜேபி அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.
11 வருடம் மோடி ஆட்சியில் அராஜகம் தான் தலைவிரித்தாடுகிறது.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு தனியாக ரோடு ஷோ சென்று கொண்டிருக்கிறார்.
இவர் இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசியல் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை சொல்கிறார். முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள். திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார்.
திமுக பாம்பும் இல்லை. கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை. நீங்கள் உங்கள் கட்சியை கவனியுங்கள். நீங்கள் தான் தவளை. பிஜேபி பாம்பு உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாதி உள்ள போய்ட்டீங்க.
தவளையோட கை கால் தான் பாம்போட வாயிலிருந்து வெளியில் நீட்டிக்கிட்டு இருக்கு.
அதிமுக தலைவர்கள் இப்போது மாறி மாறி டெல்லிக்கு படை எடுக்கிறார்கள். கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார்.
அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு.
கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம்" என்று தெரிவித்தார்.
- பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை.
- வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் ஐ.டி. பாலிசியை கொண்டு வந்தார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளோம். அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை காப்பவராக குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.
மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது. அது பிரதமருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.
வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய பா.ஜ.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
- காங்கிரஸ் நாட்டை துண்டாட நினைக்கிறது.
தூத்துக்குடி:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர். அதன்படி பணி நிரந்தரம் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க.வை சேர்ந்த வேலூர் இப்ராகிம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அவர் போராட்டம் நடத்தவில்லை.
ஆனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளர். போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு முன்னர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்று வந்தபோது அதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டோம். ஆனால் அவர்கள் அதனை வெளியிடவில்லை.
தற்போது முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்தது குறித்து இதுவரை வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆளுங்கட்சியால் தொடர்ந்து மிரட்டல்கள் நடந்து வருகிறது.
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தமிழரான தற்போது மகாராஷ்டிர கவர்னராக உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார்.
மத்திய பா.ஜ.க. அரசு கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் காங்கிரஸ் நாட்டை துண்டாட நினைக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நீங்கள் செங்கோட்டையனை சந்திப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், செங்கோட்டையன் எங்களது கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிப்பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். எங்களது விருப்பம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான்.
ஆனாலும் அ.தி.மு.க. பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் உடனடியாக சந்திக்க முடியாது என்றார்.
தொடர்ந்து, நீங்கள் டெல்லி செல்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக 11-ந் தேதி டெல்லி செல்வேன் என்றார். அப்போது செங்கோட்டையனை சந்திப்பீர்களா? என்ற கேட்டபோது, அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார்.
பின்னர் செங்கோட்டையனை பின்னால் இருந்து தூண்டுவது பா.ஜ.க.தான் என்றும், அ.தி.மு.க.வை உடைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, தி.மு.க.வின் தூண்டுதலின் பேரிலேயே எல்லா பிரச்சனைகளும் நடக்கிறது. எல்லா பின்னணிக்கும் தி.மு.க. அரசாங்கம்தான் காரணம் என்றார்.






