முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு கோவில்பட்டி வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு

புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு கோவில்பட்டி வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில், மின்வாரிய அலுவலகம் எதிரில், 3 சென்ட் இடத்தில் நகர தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 2 தளங்களை கொண்ட இந்த அலுவலகத்தின் முன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரத்தில் பீடம், 8 அடி உயரத்தில் சிலை என மொத்தம் 16 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மேலும், இந்த அலுவலகத்தில் தரைதளத்தில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தில் வைப்பதற்காக, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன.

அந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் நூலகத்திற்கு வந்து அங்குள்ள புத்தகங்களை வாசிக்கலாம்.

புதிதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் வருகையை ஒட்டி, கனிமொழி எம்பி., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் ஆகியோர் கோவில்பட்டிக்கு வந்து, புதிய தி.மு.க., அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய இடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் வழிகாட்டுதலின்படி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளருமான (மேற்கு) கருணாநிதி, நகர (கிழக்கு) பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com