என் மலர்
வழிபாடு

கந்த சஷ்டி விழாவில் நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
- சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 5-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.
பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்ட பத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.
பின்னர் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனைக்கு பின் மதியம் 2மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமும், மூன்றாவதாக தன்முகம் (சூரன்), நான்காவது சேவலாக மாறிய சூரனை வதம் செய்கிறார்.
பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்கு பிறகு சுவாமி, அம்பாள் கிரிப் பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
கந்தசஷ்டி விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாளை சூரசம்ஹாரத்தை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இதனால் திருச்செந்தூரில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளிக்கிறது.
சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் சூரசம்ஹார நிகழ்ச்சி நேரலை செய்யப்பட உள்ளது.
7-ம் திருவிழாவான 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். அங்கு மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி ராஜகோபுரம் அருகில் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






