என் மலர்tooltip icon

    சிவகங்கை

    எர்ணாகுளம்- வேளாங் கண்ணி புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றது. அந்த ரெயில் காரைக்குடி வந்த போது பயணிகள் வரவேற்பு கொடுத்தனர்.
    காரைக்குடி:

    தெற்கு ரயில்வே துறை சார்பில் அண்மையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த ரெயில் சோதனை ஓட்டமாக 3 மாதத்திற்கு மட்டும் கடந்த 6-ந் தேதி தொடங்கி வருகிற ஜூன் 30-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓடும் என அறிவிக்கப்பட்டது.

    சுமார் 734 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த ரெயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவள்ளா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் சந்திப்பு, குந்தாரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக மறுநாள் காலை வேளாங்கண்ணி சென்றடைகிறது.

    இந்த ரெயில் இரவு 11 மணிக்கு காரைக்குடி ரெயில் நிலையம் வந்தது. அப்போது அங்கிருந்த பயணிகள் உள்பட காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிடமணி, ரோட்டரி சங்க நிர்வாகி கந்தசாமி லயன்ஸ் சங்க ஆலோசகர் கண்ணப்பன், சையது ஆகியோர் ரெயில் ஓட்டுனர்கள், கார்டுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 7 முன்பதிவு படுக்கை வசதி பெட்டிகள் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் 2, சரக்கு பெட்டிகள் 2, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் 3 என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன.

    மறுமார்க்கத்தில் இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமை புறப்படுகிறது. கோடை காலத்தில் விடுமுறைகள், கேரள பயணிகள் வேளாங்கண்ணி ஆலயம் செல்லவும், தென் மாவட்ட பயணிகள் கேரளாவில் உள்ள கோவிலுக்கு செல்லவும் இந்த ரெயில் வசதியாக உள்ளது. மேலும் காரைக்குடி-திருவாரூர் அகல ரெயில்பாதை முடிவடைந்துள்ள நிலையில், இந்த ரெயிலை விரைவில் பட்டுக்கோட்டை மயிலாடுதுறை, திருவாரூர் வழியில் மாற்றப்படலாம் என ரெயில்வே வட்டாரத்தில் கூறப்படுகிறது. 
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #LokSabhaElections2019 #CashForVote #ElectionFlyingSquad
    காரைக்குடி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பணப் புழக்கத்தை தடுக்கவும், வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கவும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல கோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சுமதி தலைமையில் பறக்கும் படையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பணப்பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கடாசலம், பாலதண்டாயுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #CashForVote #ElectionFlyingSquad
    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    சிவகங்கை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் எச்.ராஜா, மானாமதுரை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    அண்ணா தி.மு.க. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி சுயநல சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் நீங்கள் தான் எஜமானர்கள். யார் நல்லது செய்தார்கள் என்று எண்ணிப்பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. 10 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தார்கள். தமிழகத்துக்கு ஏதாவது செய்தது உண்டா? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது. நல்ல திட்டங்களை கொண்டு வந்தது உண்டா? மத்தியில் 9 தி.மு.க.வினர் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்படி இருந்தும் தமிழகத்துக்கு என்ன பிரயோஜனம்? தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரியாக சென்றது. அதில் நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தது உண்டா?

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போவதாக சொல்லி பல ஆயிரம் கோடி வீணானது தான் மிச்சம். அத்திட்டம் சரி வராது.

    ஆனால் தி.மு.க. அடம் பிடித்து அத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி 40 ஆயிரம் கோடியை பாழடித்தது தான் மிச்சம். கடலில் போட்டார்களோ? அல்லது அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ என்று தெரியவில்லை. இப்படி உருப்படியில்லாத காரியங்களைத் தான் தி.மு.க. செய்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை. தமிழக ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தது தி.மு.க.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அம்மா கூறினார். மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் அதனை வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அதனை செய்யவில்லை.



    அம்மா தான் சட்ட போராட்டம் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றி தந்தார். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தார்.

    இந்த தேர்தலுடன் அண்ணா தி.மு.க. காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் கூறிவருகிறார். இந்த இயக்கத்தை 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இது தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 27 ஆண்டு காலம் பொது செயலாளராக இருந்து அம்மா கொடுத்த இயக்கத்தை வழி நடத்தி 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக உயர்த்தினார். இது யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டை. எப்படி காணாமல் போகும். இந்த இயக்கம் ஒரு ஆலமரம். 1½ கோடி தொண்டர்கள் விழுதுகளாக இருந்து தாங்கி பிடித்திருக்கிறார்கள். புயல், பூகம்பம், சுனாமி என எது வந்தாலும் அசைக்க முடியாது. தி.மு.க. என்றாலே வன்முறை தான். கடைக்கு போய் பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுக்கணுமா, இல்லையா? தி.மு.க.வினர் பிரியாணி கடையில் போய் சாப்பிட்டு விட்டு பணமும் கொடுக்காமல், ஊழியர்களையும் உரிமையாளரையும் தாக்கி அடித்து உதைக்கிறார்கள். அழகு நிலையத்துக்குச் சென்று பெண்களை தாக்கி இருக்கிறார்கள். செல்போன் கடைக்கு சென்று தாக்கி இருக்கிறார்கள். இது தான் தி.மு.க. ஆட்சியில் இல்லாத போதே இப்படி ஆடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?

    எனவே மக்களுக்கு நல்லது செய்ய தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும், மத்தியில் நாட்டை பாதுகாப்பாக வைக்க பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகவும், அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது என்று பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பிரேமலதா பேசினார். #Premalatha #hraja #dmdk






    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா, தே.மு.தி.க. கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டார். அப்போது அவர் பெரியகடை வீதியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவிற்கு ஆதரவு கேட்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:– 

    எங்கு பக்தி இருக்கிறதோ, அங்கே பண்பும் இருக்கும், பணிவும் இருக்கும். அதுபோல் பதவி வரும் போது, பணிவும் வேண்டும், துணிவும் வேண்டும். எச்.ராஜா, கேப்டன் விஜயகாந்தை போல் தைரியமானவர். அவர் மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். தைரியமாக பேசுபவர்களிடம் உண்மை இருக்கும்.

    இந்தக் கூட்டணியில் எந்த குறையும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்கும் சக்தி எங்கள் கூட்டணிக்கு உள்ளது, மேலும் சவாலை எதிர்க்கக் கூடிய வல்லமையும் இந்த கூட்டணிக்கு உள்ளது. பதவியோடும், பணிவோடும், தொகுதியையும், அதன் மக்களையும் காப்பாற்ற கூடிய நல்ல வல்லமையானவருக்கு நீங்கள் வாய்ப்பு தர வேண்டும். இந்த தொகுதியில் எச்.ராஜாவை சரித்திர வெற்றியாளராக ஆக்க வேண்டும்.

    உழைக்க தயாராக உள்ள வேட்பாளருக்கு உங்கள் வாக்கை அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இந்த முறை பிரேமலதா கூட்டத்தினரை பார்த்து, எங்கள் கூட்டணி வேட்பாளர் எச்.ராஜாவுக்கு நீங்கள் தாமரை சின்னத்தில் ஓட்டளிப்பீர்களா, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்வீர்களா, சிவகங்கை தொகுதியில் தாமரை வென்றது என்ற சரித்திரத்தை படைப்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு கூட்டத்தினர் ஆதரவாக பதில் கூறினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். ஒன்றிய செயலாளர் வாசு, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், தே.மு.தி.க. தனசேகரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #Premalatha #hraja #dmdk
    சிவகங்கையில் பிரசித்தி பெற்ற மகா பஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் சண்டி யாகமும், அதைத் தொடர்ந்து ராம்ராஜ்ய லட்சுமி யாகம், பிரித்தியங்கிரா யாகம் நடந்தது.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பஞ்சபூதேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற மகா பஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது.

    இங்கு 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறும். நேற்று மாலை பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு வெயில் குறைந்து மழை பெய்ய வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் சண்டி யாகம் நடந்தது. அதைத் தொடர்ந்து ராம்ராஜ்ய லட்சுமி யாகம், பிரித்தியங்கிரா யாகம் நடந்தது.

    இதில் அனைத்து வகை யான பழங்கள் உயர்தர மிளகு, தேன், பட்டு புடவை கள் மற்றும் தங்கம், வெற்றி ஆபரணங்கள், பூ மாலைகள் போட்டு யாக வேள்வியில் சிறப்பு பூஜை நடந்தது. பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது.
    திருப்பத்தூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.4¾ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே சிங்கம்புணரி சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு அலுவலரும், மண்டல துணை தாசில்தார் உமாமகேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.4 லட்சம் இருந்தது. அந்த வேனில் பணத்தை கொண்டு வந்த காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த காளஸ்வரன், செந்தில் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி டோல்கேட் அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரி மாணிக்கவாசகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ராயபுரத்தை சேர்ந்த முத்து என்பவரிடம் ரூ.70 ஆயிரம் இருந்தது. ஆனால் இதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதைதொடர்ந்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    எஸ்.புதூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
    எஸ்.புதூர்:

    எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டியில் இருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் கே.புதுப்பட்டி உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு சாலையோரத்தில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகள், ஊசிகள் மற்றும் காலி மருந்து பாட்டில்களை கொட்டி சென்றுள்ளனர்.

    இந்த வனப்பகுதியில் மான், முயல், காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இது மட்டுமின்றி அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.

    இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும், மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, மாடுகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அது மட்டுமின்றி அந்த பகுதியில் செல்லும் மக்களுக்கு இவற்றினால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இது போன்று மருந்து கழிவுகளை மக்கள் நடமாடும் பகுதியில் ஆபத்தான முறையில் கொட்டுவது குற்றமாகும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இந்த மருந்து கழிவுகளை சாலையோரம் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மருத்துவ கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு இவற்றை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, மருந்துவ கழிவுகளை சாலையோரம் கொட்டிய நபர்கள் யார் என்று கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami #HRaja
    சிவகங்கை:

    பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    திமுக கூட்டணி சுயநலக்கூட்டணி. சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க விவசாயிகளின் நண்பனாக தமிழக அரசு செயல்படுகிறது.



    மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற தகுதிவாய்ந்த பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்கவேண்டும்.

    எம்பியாகவும் மத்திய நிதிமந்திரியாகவும் இருந்த சிதம்பரம், இந்த சிவகங்கை தொகுதிக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவரே செய்யாதபோது அவரது மகன் கார்த்தி எப்படி திட்டங்களை கொண்டு வருவார்?

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami #HRaja
    சிவகங்கை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது.
    சிவகங்கை:

    சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்ட மன்றத் தொகுதிகள் மற்றும் மானாமதுரை (தனி) இடைத்தேர்தலுக்கும் விகிதாசார அடிப்படையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட பதிவான வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு விகிதாசார அடிப்படையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட பதிவான வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தைபிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 452 எந்திரமும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 438 எந்திரமும், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு 456 இயந்திரமும், மானாமதுரை(தனி) சட்டமன்ற தொகுதிக்கு 421 எந்திரமும் மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 437 எந்திரமும். ஆக மொத்தம் 2204 பதிவான வாக்குகளை உறுதி செய்யும் எந்திரத்தை விகிதாசார அடிப்படையில் நான்கு சட்டமன்ற தொகுதி மற்றும் மானாமதுரை(தனி) சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் லதா தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, வட்டாட்சியர்கள் உட்பட்ட அரசு அலுவலர்கள் பணி மேற்கொண்டனர். #tamilnews
    தூங்குகிற ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தின்பொழுது பேசினார். #edappadipalanisamy #mkstalin #parliamenelection
    சிவகங்கை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச். ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  அவர் பேசும்பொழுது, எச். ராஜா கோபக்காரர் தான். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என கூறினார்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி கொண்டிருக்கிறார்.  தூங்கி கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என கூறியுள்ளார்.

    இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.  இதுபற்றி பேசிய பழனிசாமி, தந்தையே ஒன்றும் செய்யாத போது மகன் கார்த்தி சிதம்பரம் என்ன செய்யப்போகிறார் என கூறினார். #edappadipalanisamy #mkstalin #parliamenelection
    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் அடுத்த நாளே ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று ப.சிதம்பரம் பேசினார். #pchidambaran #modi #centralgovernment

    தேவகோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காரைக்குடி சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி 18 வயது முதல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து வருகிறார். பெரியார் இல்லையென்றால் சுயமரியாதை திருமணங்கள் நடந்திருக்காது. பெரியாரை இழிவாக பேசுபவர்கள் உண்மையான தமிழர்களாகவே இருக்க மாட்டார்கள்.

    ரெயில்வே துறையில் கடைநிலை ஊழியர் வேலைக்கு உயர்கல்வி படித்த இளைஞர்கள் கூட விண்ணப்பிக்கும் அவலநிலை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்ததே கிடையாது.

    100 நாள் வேலை வாய்ப்பை உருவாக்கி அதனை வெற்றிகரமாக செய்து காட்டியது காங்கிரஸ் அரசு. ரூ.65 ஆயிரம் கோடி விவசாய கடனை ரத்து செய்ததும் காங்கிரஸ் அரசு தான். ஏழை மக்களுக்காக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது மக்களின் கையில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #pchidambaran #modi #centralgovernment

    தேவகோட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    தேவகோட்டையில் கடந்த 26–ந்தேதி இரவு பிரபு (வயது 28) என்ற வாலிபர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குபதிவு செய்து 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஜெயராமன் மகன் பிரகாஷ், சின்னத்தம்பி மகன் முத்துக்குமார் ஆகியோர் தலைமறைவானார்கள். இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், முத்துக்குமார் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.

    முக்கிய குற்றவாளியான பிரகாஷ் என்பவர் இதுவரை தலைமறைவாக இருக்கிறார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 1,150 பேர் நேற்று கலெக்டர் ஜெயகாந்தனை சந்திக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக கூறினர். அதற்கு போலீசார் மறுத்ததும், அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களில் 10 பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுப்பி வைத்தனர். மற்ற அனைவரையும் போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே அனுப்பினர்.

    இந்தநிலையில் வெளியே இருந்தவர்கள் திடீரென்று அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாலிபரை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். அதைதொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கலெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வந்தவர்கள், தங்களுடன் வந்தவர்களை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். அதில் கலெக்டரை சந்திக்க சென்ற 2 பெண்கள் தங்கள் விட்டு சென்ற கைக்குழந்தைகளை காணவில்லை என்று பதறினர். உடனே அங்கிருந்த போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றனர்.

    இது குறித்து கலெக்டரிடம் சென்று முறையிட்டனர். இதையடுத்து கலெக்டர் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுவிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    ×