search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pchidambaram"

    • தி.மு.க. அரசின் ரூ.1,000 திட்டம் மகளிருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பயன் தருகிறது.
    • மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால் அடுத்து தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான் என்றார்

    சென்னை:

    தென் சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 3 ஆண்டுகளில் பல முத்தான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    பெண்களுக்கு நகரப் பேருந்தில் இலவச பயணம்; காலை உணவு திட்டம் என முத்திரை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    தி.மு.க. அரசின் ரூ.1,000 திட்டம் மகளிருக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பயன் தருகிறது.

    10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வந்த முத்தான திட்டங்கள் என்னென்ன? புயல், வெள்ள பாதிப்பு நிதியை கூட பா.ஜ.க அரசு தரவில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது.

    நான் அச்சமூட்டுவதாக நினைக்க வேண்டாம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை என்றால், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே சந்தேகம்தான்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை. ஏன் நாவலிலும் கூட படித்ததில்லை என தெரிவித்தார்.

    • வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டது.
    • மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாக ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம்.

    ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்சினைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்க முடியும்?

    பீகார், மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துங்கள்.

    ஆனால் மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது.

    மணிப்பூர் பா.ஜ.க. அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
    • இந்தக் கடிதத்துக்கு கர்நாடகத்தை சேர்ந்த 4 பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒடிசாவில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து உலகையே உலுக்கியது. பல உயிர்களை பலி வாங்கிய இந்த விபத்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளும் பா.ஜ.க. மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பல கேள்விகளை எழுப்பி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், ரெயில்வேயின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்கு பதில் ஊடகங்களில் எப்பொழுதும் காட்சியளிப்பதற்காகவே மேலோட்டமான பூச்சு வேலைகள் மட்டும் நடைபெற்றதாகவும், ரெயில் பாதுகாப்பு சம்பந்தமாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் பாதுகாப்பு குறித்த கோஷங்கள் அனைத்தும் வெற்று கூற்றுக்கள் என வெட்ட வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உட்பட கர்நாடகத்தை சேர்ந்த 4 பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், கார்கேயின் கடிதம், உண்மைக்கு மாறாகவும் வெற்று கோஷங்கள் மட்டுமே நிறைந்ததாகவும் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    பி.சி.மோகன், எஸ்.முனிஸ்வாமி, தேஜஸ்வி சூர்யா, சதானந்த கவுடா ஆகியோர் கார்கேவிற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் "தங்களைப் போன்ற உயர்ந்த தலைவர் ஒருவர், 'வாட்ஸ் அப் பல்கலைக்கழகம்' தருகின்ற ஆதாரமற்ற செய்திகளை தருவது உங்கள் அந்தஸ்துக்கு பொருந்தாத செயல். இருப்பினும், ஒருவேளை வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகி விட்ட காரணத்தினாலோ என்னவோ, அதில் படிப்பதை அப்படியே உங்கள் கடிதத்தில் தாங்கள் கொட்டிவிட்டீர்கள்" என எழுதியிருந்தனர்.

    இந்நிலையில், கர்நாடக எம்.பி.க்களின் கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

    எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக் கட்சி பா.ஜ.க. கார்கேவின் கேள்விகளுக்கு பதிலாக பா.ஜ.க. எம்.பி.க்கள் எழுதியுள்ள பதில் கடிதம் ஆதாரபூர்வமற்றதாகவும், பலமில்லாத தர்க்கவாதங்களைக் கொண்டதாகவும் உள்ளது.

    ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கே அவர்களுக்கு பிரதமருக்கு கடிதம் எழுத எல்லா உரிமையும் உண்டு. ஜனநாயகம் உள்ள நாட்டில் பிரதமர் இதுபோன்ற கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் நம் நாட்டு ஜனநாயகத்தில் பிரதமர் பதில் கடிதம் எழுத வேண்டிய அளவிற்கு காங்கிரஸ் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என கருதுகிறார். பிரதமருக்கு பதிலாக 4 எம்.பி.க்கள் பதில் கடிதம் எழுதுகின்றனர்.

    கார்கே எழுதியுள்ள கடிதத்திற்கு சான்றாக தலைமை கணக்கு தணிக்கையாளர் டிசம்பர் 2022 அன்று சமர்ப்பித்த கடிதங்களே போதுமானது. தென்மேற்கு ரெயில்வேயின் தலைமை செயல் அதிகாரி 2023, பிப்ரவரி 9 அன்று எழுதிய கடிதம் பாலசோரில் நடந்த விபத்துகளை முன்கூட்டியே எச்சரித்து இருந்தது. ஆனால் அக்கடிதம் தொடப்படாமல் இருந்திருக்கிறது. அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என 4 உறுப்பினர்களும் சொல்வார்களா?

    குற்றங்களை துப்பு துலக்குவதற்குத்தான் சி.பி.ஐ. உள்ளதேயன்றி ரெயில் விபத்துக்களை துப்பறிவதற்கு அல்ல. சி.பி.ஐ. உள்பட சட்டத்தை அமலாக்கும் எந்த துறையும் தொழில்நுட்ப ரீதியான, அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான குறைபாடுகளை கண்டுபிடித்து, எவரையும் பொறுப்பேற்க செய்யமுடியாது. அதுமட்டுமல்லாமல் ரெயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு, சமிக்ஞைகள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் சம்பந்தமானவை பற்றிய தொழில்நுட்ப திறன் சி.பி.ஐ. வசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

    • ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் செயல்படுத்தி இருக்கலாம்.
    • அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    எப்படி புற்று நோய் உடலுக்கு கெடுதலோ அதுபோல தீவிரவாதம் என்பது தேசத்தின் புற்று நோய். அதை அப்படியே  விட்டு விட்டால், அது தேசம் முழுவதும் பரவி விடக் கூடாது. அதனால்தான் என்.ஐ.ஏ.அலுவலகம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

    மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் தீவிரவாதத்தையும், தீவிரவாத முயற்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். ஆகவே இதில் அரசியல் புகுத்தாமல், எந்த சமூகத்தை சார்ந்தவர், எந்த இயக்கத்தை சார்ந்தவர் எந்த பின்புலத்தை சார்ந்தவர் என்று இல்லாமல் தீவிரவாதத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பாதுகாப்பை தர முடியும். ஒட்டுமொத்தமாக தீவிரவாதம் இல்லாத பாரத தேசம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வெளிநாடுகளில் எல்லாம் இரண்டு முதல் 4 மொழிகள் அரசாட்சி மொழியாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு தமிழிசை கூறியதாவது:

    சிதம்பரம் இன்னைக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா...நேற்றுதான் வந்தாரா...முந்தாநாள் வந்தாரா...பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட அரசாங்கத்தில் அங்கமாக அவர் இருந்து வந்துள்ளார். இதை ஏன் அன்றைக்கு அவர் சிந்திக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் பல நடைமுறைகளை செயல்படுத்தி இருக்கலாம். அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பதுதான் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மயிலாப்பூரில் காய்கறி வாங்கும் வீடியோவை மத்திய நிதி மந்திரி வெளியிட்டிருந்தார்.
    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வீடியோ குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்.

    திருப்பூர்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன்  அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான சிதம்பரம் கூறியுள்ளதாவது:

    கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும் என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநரே ஒப்புக் கொள்கிறார். மயிலாப்பூர் சந்தைக்கு சென்று (மத்திய நிதி மந்திரி) காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
    • இப்படியே போனால் நாளைக்கு ஒரு நாடு ஒரே பத்திரிக்கை என்றுகூட அறிவித்துவிடுவார்கள்.

    காரைக்குடி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இது ஒரு நாடுதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு நாட்டிற்குள் பல மாநிலங்கள் இருகின்றன, பல மொழிகள் இருக்கின்றன, பல கலாச்சாரம் இருக்கிறது, பல வரலாறுகள் இருக்கின்றன, பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.

    நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நான் ஒரு காரணத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறேன். ஒரு மாநிலம் தன்னுடைய நிதியில் இருந்து தன்னுடைய மாநில மக்களுக்காக தன்னுடைய பொறுப்பில் கல்லூரி நிறுவினால், அதில் எந்த மாணவர்களை சேர்ப்பது என்று அந்த மாநிலத்திற்கு முடிவு எடுப்பதற்கு அதிகாரம் கிடையாதா? இது என்ன வேடிக்கை? எந்த நாட்டில் இதுபோன்ற சமஸ்டி முறை நிலவுகிறது?

    சும்மா பொம்மை அரசாக மாநில அரசுகள் இருக்கும், மத்திய அரசுதான் எல்லா முடிவும் எடுக்கும் என்றால்... என்ன சமஸ்டி அரசு முறை? பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே நீட்டை எதிர்க்கலாம்.

    இப்போ 'நீட்' 'கியூட்' என எல்லா தேர்வுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில அரசில் ஒரு உயர்கல்வி அமைச்சர் எதற்கு? உயர்கல்வி துறை எதற்கு? மத்திய அரசே மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவுவது போல் எல்லா கல்லூரிகளையும் மத்திய அரசுதான் நிறுவும் என்று அறிவிக்கலாமே?

    மாநில அரசுக்கு வேறு வேலையே கிடையாதா, மாநில அரசுகள் எல்லாம் நகராட்சிகளாக, பேரூராட்சிகளாக குறைக்கப்படுமா? இதை எல்லாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதனுடைய விளைவுகளை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாடு ஒரே அடையாள அட்டை, ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரு நாடு ஒரு தேர்வு, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு கலாச்சாரம், ஒரு நாடு ஒரு பழக்கவழக்கம், ஒரு நாடு ஒரு உடை... இது எங்கே போய் நிற்கும் என்றால் ஒரு நாடு ஒரு கட்சி என்று வந்துவிடும். ஒரு நாடு ஒரு தலைவர் என்று வரும்.

    இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் மிகப் பெரிய தவறு. இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். எதற்காக மொழி வாரியாக மாநிலங்கள் என்று நம்முடைய மூத்த தலைவர்கள் அன்று பிரித்தார்கள்? அந்தந்த மாநிலத்தில் உடைய மக்கள் அவர்கள் பல பொருள்களில் சுயாட்சி பெற்ற அமைப்பாக சுயமாக சிந்தித்து சுயமாக முடிவு எடுக்கக்கூடிய அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதை எல்லாம் கெடுப்பதற்கு அழிப்பதற்குத்தான் இந்த ஒரு நாடு ஒரே... என்ற நிலைப்பாடு. நாளைக்கு உங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு ஒரு நாடு ஒரே பத்திரிக்கை என்று அறிவித்துவிடுவார்கள். ஒரு நாடு ஒரு தொலைக்காட்சி என்று அறிவிப்பார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    • அக்னிபாத் திட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு
    • இத்திட்டம் ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

    இத்திட்டம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-

    அக்னிபாத் திட்டம் சர்ச்சைக்குரியது. பல ஆபத்துகளை கொண்டுள்ளது. ஆயுதப் படைகளின் நீண்டகால பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளை சீர்குலைக்கிறது. இத்திட்டம் ராணுவ பயிற்சியை கேலி செய்வதாக தோன்றுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு நாட்டை பாதுகாக்க ஊக்கம் அளிக்கப்படும் என்பதற்கும், சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த திட்டத்தை கைவிடவேண்டும்.

    இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

    மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்திலும் அடுத்த நாளே ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று ப.சிதம்பரம் பேசினார். #pchidambaran #modi #centralgovernment

    தேவகோட்டை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காரைக்குடி சட்டசபை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் தேவகோட்டையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி 18 வயது முதல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து வருகிறார். பெரியார் இல்லையென்றால் சுயமரியாதை திருமணங்கள் நடந்திருக்காது. பெரியாரை இழிவாக பேசுபவர்கள் உண்மையான தமிழர்களாகவே இருக்க மாட்டார்கள்.

    ரெயில்வே துறையில் கடைநிலை ஊழியர் வேலைக்கு உயர்கல்வி படித்த இளைஞர்கள் கூட விண்ணப்பிக்கும் அவலநிலை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை பிரதமர் சந்தித்ததே கிடையாது.

    100 நாள் வேலை வாய்ப்பை உருவாக்கி அதனை வெற்றிகரமாக செய்து காட்டியது காங்கிரஸ் அரசு. ரூ.65 ஆயிரம் கோடி விவசாய கடனை ரத்து செய்ததும் காங்கிரஸ் அரசு தான். ஏழை மக்களுக்காக மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மூலம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அடுத்த நாளே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது மக்களின் கையில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #pchidambaran #modi #centralgovernment

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மன்னிக்க முடியாது என்று திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். #pchidambaram #congress #admk #bjp

    திருப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருப்பூர் ராயபுரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கட்சிகளுக்கு கொள்கை அளவில் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. ஜாதி, மத, மொழி இன வேறுபாடு இல்லாமல் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே இரு கட்சிகளின் கொள்கை. தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் அமைந்துள்ளது.

    ஆனால் அ.தி.மு.க. அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கவர்னரிடம் கூறிய பா.ம.க. இன்று அதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அப்படியென்றால் அது ஊழல் கூட்டணி தான் என்று சொல்ல வேண்டும்.

    அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணி அமைத்ததை கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழகத்தில் மதவாதம் காலூன்ற எப்போதும் பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜனதா தமிழகத்தில் காலூன்றவும் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடிக்கு முதல்முறை வாக்களித்தவர்கள் நாடு முழுவதும் வெகுண்டெழுந்து உள்ளனர்.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று பா.ஜனதா அரசு சொல்லி வாக்கு கேட்டது. விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்கப்போகிறேன் என்று சொன்ன மோடி இன்று) விவசாய குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கப்போகிறார். விவசாய குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரத்தில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கொடுக்கப்போகிறார்.


    இது ஓட்டுக்காக கொடுக்கிற லஞ்சம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த பணத்தை 12 கோடி இந்திய விவசாயிகளுக்கு கொடுக்கப்போகிறார். ஆனால் இந்த பணம் நிலம் வைத்துள்ள பெரும் விவசாயிகளுக்கும், சிறு விவசாயிகளுக்கும் கிடைக்கப்போகிறது. விவசாய தொழிலாளர்களுக்கு, நகர்ப்புற ஏழைக்கு கிடைக்கப்போவது இல்லை. ரபேல் போர் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

    இந்த அரசுக்கு அமைச்சர், அமைச்சரவை தேவையில்லை. தனி மனிதர் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்.நேரு, இந்திரா காந்தி, மொராஜ் தேசாய், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் அலங்கரித்த நாற்காலியில் சர்வாதிகாரி உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். நாடு சர்வாதிகார நாடாகி வருகிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று அதே இந்திய விவசாயி ஒருவருக்கு கடன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரமாக உள்ளது. அந்த கடனை விவசாயி எப்படி அடைக்க முடியும். அதனால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. கடன் ரத்து என்பது விவசாயியை காப்பாற்றும் வேலை. அதைத்தான் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. உணவு பாதுகாப்பு சட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது, பட்டினியை ஒழித்தது காங்கிரஸ் அரசு.

    இந்தியாவில் இன்னும் வறுமை ஒழியவில்லை. அதை ஒழிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கல்விக்கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு. 34 கோடி பேருக்கு ‘ஜீரோ பேலன்ஸ்’ வங்கிக்கணக்கு தொடங்கிய அரசு காங்கிரஸ் அரசு. இப்போது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஜீரோ பேலன்ஸ்’ முறை மீண்டும் வரும். பறிமுதல் செய்த பணத்தை திருப்பி வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.ஜனநாயக திருவிழாவாக தேர்தல் வருகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் வகையில் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #pchidambaram #congress #admk #bjp

    பாரதீய ஜனதாவுக்கு துணைபோகும் அதிமுக-பா.ம.க. கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ப.சிதம்பரம் பேசியுள்ளார். #PChidambaram #pmk #admk #congress

    சென்னை:

    மத்திய அரசின் ரபேல் ஊழலை கண்டித்தும், ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருவான்மியூரில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    மோடி தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறு, குறு தொழில் துறை உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் வகையில் வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்கவரி ஆகியவற்றில் இருந்து நோட்டீசுகளை அனுப்பி கதறவைக்கின்றனர். இது தான் வரி பயங்கரவாதம்.

    ஜி.எஸ்.டி. வரியை சிதைத்ததால் ஏராளமான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதாரரீதியாக இந்தியாவை 10 ஆண்டுகளுக்கு பின்னாக தள்ளி இருக்கிறது பா.ஜ.க. அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 31 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. இதை கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தாண்டியதே இல்லை. சமூக நீதி கட்சி என்று சொல்லும் பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றது அதைவிட கேவலமானது.

    ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்று கூறும் பா.ஜ.க.வுக்கு துணைபோகும் அ.தி.மு.க., பா.ம.க.வை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் ஒருபோதும் வரவேற்பு இருக்காது.


    மாணவர்கள், விவசாயிகள், குடும்ப தலைவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் தெரிவித்த கருத்துகள், கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். நாங்கள் செய்ய முடிந்தவைகளை மட்டுமே தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு முன்பு தந்ததுபோல 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றியை தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், விஜயதரணி எம்.எல்.ஏ., தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார்.

    மாங்கா சேகர், தரமணி கோபி, நாச்சிக்குளம் சரவணன், கோடம்பாக்கம் ராஜசேகர், விருகை ராமசந்திரன், சைதை முத்தமிழ், கிண்டி லோகநாதன், கோபால் சுந்தரம், ஆதிநாராயணன், இஸ்மாயில்

    அடையார் துரை, சாந்தி, மலர்கொடி, மகேஷ்வரி, மயிலை நாராயணன், திருவான்மியூர் சீத்தாராமன், காலனி சரவணன், ராயப்பேட்டை ஆரிப், சைதை கோகுல், சைதை சசிகுமார், பி.டி.சி. ஏழுமலை, நொச்சிக்குப்பம் பாண்டியன், மயிலை தாமஸ், அப்பு ஜெயபால், சீனிவாசபுரம் ரகுகுமார், வக்கீல்கள் சித்தார்த்தன், மயிலை பாலு, மீனா வெங் கட்ராமன், சுசீலா கோபாலகிருஷ்ணன், மகேஸ்வரி, கோட்டூர் ஜான்சன், விக் னேஷ்வரன்,

    திருவான்மியூர் கதிரேசன், பழனி, சீத்தாராமன், தரமணி சீனு,, அடையார் மாதவன், தங்கராஜ், பட்டினபாக்கம் பன்னீர் செல்வம், கவுரிசங்கர், தங்கம், விஜி, சிவகுமார், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். #PChidambaram #pmk #admk #congress 

    திருவான்மியூரில் காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசுகிறார். #pchidambaram #congress

    சென்னை:

    காங்கிரஸ் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாளை (22-ந் தேதி) மாலை 6 மணிக்கு திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் நடக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்குகிறார். முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் வரவேற்கிறார். எச்.வசந்தகுமார், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன், தி.நகர் ஏ.ஸ்ரீராம் முன்னிலை வகிக்கிறார்கள். முன்னதாக மாலை 5 மணிக்கு லஷ்மன் ஸ்ருதி குழு வினரின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. 

    கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செய்துள்ளது. #pchidambaram #congress

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #PChidambaram #DelhiHighCourt
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய மந்திரியாக இருந்த போது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்படி வருகிற 15-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறை, சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இதனையடுத்து நேற்றைய வழக்கு விசாரணைக்குப்பின் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Chidambaram #INXMedia
    ×