search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேமுதிக"

    இனிவரும் காலங்களில் கூட்டணி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது பலமுறை ஆலோசிக்க தே.மு.தி.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அந்த கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து ஓய்விலேயே இருந்து வருகிறார். இதனால் அவரது மனைவியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார். கட்சி தொடர்பான முடிவுகளை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து பிரேமலதாவே எடுத்து வருகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியதை அந்த கட்சியினர் விரும்பவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் சில எம்.எல்.ஏ.க்களாவது சட்டமன்றத்துக்குள் சென்றிருப்பார்கள் என்றே தே.மு.தி.க.வினர் இப்போதும் கூறி வருகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கூட்டணி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது பலமுறை ஆலோசிக்க அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

    விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் தே.மு.தி.க. நிர்வாகிகள் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அவர்களது இல்ல விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் விஜயகாந்தின் மகன் என்கிற ஒற்றை அடையாளத்துடன் மட்டுமே அவர் கட்சி பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் விஜய பிரபாகரனை தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த கருத்தை பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க. இப்போதே ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் வகையிலும், அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது.

    அதற்குள் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று பிரேமலதா கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இளைஞர்களை அதிக அளவில் தே.மு.தி.க.வில் சேர்க்க வேண்டும் என்று கட்சி தலைமை நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த பணியை மேற்கொள்ள விஜய பிரபாகரனே தே.மு.தி.க.வில் தகுதியான நபர் என்றும், எனவே அவரை கட்சியின் இளைஞர் அணியில் முன் நிறுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
    பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பருத்தியை எல்லாம் அரசாங்கம் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் விவசாயம் மற்றும் நெசவாளர்கள் தான். இதன் மூலம் தான் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியும். கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட 6 மாவட்டங்களில் அனைத்து நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன.

    நூல் விலை, பருத்தி விலை உயர்வு காரணமாக இது சம்பந்தப்பட்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆலைகள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆட்சிகள் தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு ஆட்சியில் உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசு மீது பழி சுமத்துகிறார்கள். மத்திய அரசிடம் கேட்டால் இதை மாநில அரசு சரி செய்ய முடியும் என்கிறார்கள்.

    இப்படியே மக்கள் பிரச்சினைகளை மாறி மாறி பழி சுமத்தி தப்பிக்க வழியை தான் பார்க்கிறார்கள். பருத்தி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை செய்ய வேண்டும். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பருத்தியை எல்லாம் அரசாங்கம் வெளியே கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இன்று உலகத்தில் இந்தியா ஜவுளித்துறையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதில் தமிழ்நாடு 19.4 சதவீதம் ஏற்றுமதியில் உள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை, திருப்பூரை ஒரு காலத்தில் சொன்னார்கள். ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரி உள்ளது.

    ஆட்சியாளர்கள் என்பவர்கள் மக்களின் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பவராக இருக்க வேண்டும். பருத்தி நூல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆலைகளை திறக்க வேண்டும். அதை நம்பி வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

    அம்மா உணவகம் திட்டத்தை தமிழ்நாடு மக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றனர். அந்தத் திட்டத்தை தொடர வேண்டும். இன்று கலைஞருக்கு சிலை திறப்பு விழா வைத்திருக்கிறார்கள் இதை வரவேற்கிறோம். எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற காரணத்தில் நிறைய இலவசத் திட்டங்களை அறிவிக்க வேண்டியது. இதன் காரணமாக தான் இன்று இலங்கை பொருளாதார நெருக்கடியில் மாட்டி திணறி வருகிறது.

    விஜயகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்தபோது லஞ்சம், ஊழலை ஒழிப்போம் என்றார். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று இந்தியா முழுவதும் என்ன நடக்கிறது. அந்த லஞ்சம் ஊழலை ஒழிப்பது தான் எங்கள் முதல் நோக்கம் என்று எல்லா தலைவர்களும் பேசி வருகிறார்கள்.

    ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று முதலில் கூறியவர் விஜயகாந்த் தான். அன்று எல்லோரும் கேலி பேசினார்கள். இன்று எல்லாம் மாநிலங்களில் எடுத்துக்கொண்டாலும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று கூறுகிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் பற்றி நாங்கள் இன்னும் சிந்திக்கவில்லை. இப்போதைக்கு கட்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறோம். ஜூன் 2-ந்தேதி தலைமை கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்துள்ளோம். அடுத்தது உட்கட்சி தேர்தல். செயற்குழு பொதுக்குழு வைத்துள்ளோம். இவ்வாறு எங்கள் கட்சி வளர்ச்சி நோக்கியே நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் சமயம் எங்கள் கட்சி நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ஒருநாள் முன்னதாகவே 2-ந்தேதி நடைபெறுகிறது.
    சென்னை:

    தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த போது பிரமாண்டமான வெற்றியை ருசித்தது.

    இதன்பிறகு அந்த கட்சி தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது. 2016-ம் ஆண்டு மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன்நிறுத்தப்பட்ட நிலையிலும் மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதன்பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் இணைந்து தே.மு.தி.மு.க. தேர்தலை எதிர்கொண்டது. இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் கூட்டணியை முறித்துக்கொண்டு தினகரன் கட்சியோடு தே.மு.தி.மு.க. கூட்டணி அமைத்தது. இந்த 2 தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே சந்தித்தது.

    இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது மனைவியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவே கட்சியை வழி நடத்தி வருகிறார்.

    தொடர் தோல்விகளால் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி விட்டனர்.

    இதனால் தே.மு.தி.க. பழைய செல்வாக்குடன் இல்லை என்பதே உண்மையாகும். இதனை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வை பலப்படுத்த பிரேமலதா பல்வேறு அதிரடி திட்டங்களை வைத்திருப்பதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

    தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ஒருநாள் முன்னதாகவே 2-ந்தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 78 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க.வின் எதிர்காலம் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பான அறிவிப்புகளை பிரேமலதா வெளியிட உள்ளார்.

    இந்த கூட்டத்தில் கட்சியை மேலும் வலுவாக வழி நடத்திச் செல்வதற்கு ஏதுவாக பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவியை வழங்க மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்த உள்ளனர்.

    தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும், உள்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

    தே.மு.தி.மு.க. உள்கட்சி தேர்தல் கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    கிளை, வார்டு, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட அளவில் தே.மு.தி.க. நிர்வாகிகளை தேர்வு செய்ய விரைவில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தே.மு.தி.க. திட்டமிட்டு உள்ளது.

    தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் முடங்கும் நிலைக்கு வந்துள்ளது. பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித்துறையினர் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தே.மு.தி.க சார்பில் தமிழகம் முழுவதும் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்ட தே.மு.தி.க சார்பில் பஞ்சு, நூல் விலை உயர்வை கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    மாவட்ட கழக செயலாளர் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்கூறி இருப்பதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோனை கூட்டம் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த்தின் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தலைமையில் வரும் 03.06.2022 வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.

    மாவட்ட கழக செயலாளர் அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×