என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு.
    • தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சிறைக்காவல் முடிந்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தலா ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அபராத தொகையை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த மாதம் 8ம் தேதி புத்தளம் கடல் பகுதியில் 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது ெசய்தனர்.அத்துடன் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

    முன்னதாக, இன்று நடைபெற்ற மற்றொரு விசாரணையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மொட்டை.
    • தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.

    5 மீனவர்கள் மொட்டை அடித்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அரசியல் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி.
    • ராமநாதபுரம் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை யொட்டி இன்று அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தி.மு.க சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ராஜலட்சுமி, அன்வர் ராஜா, மணிகண்டன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க தொண்டர்கள் மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தர்மர் எம்.பி உட்பட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டி.டி.வி தினகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தே.மு.தி.க சார்பில் விஜய பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ம.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி டேவிட் சன் தேவ ஆசீர்வாதம் மேற் பார்வையில் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் தலைமையில் 3 டி.ஐ.ஜி, 19 எஸ்.பி, 61 டி.எஸ்.பி. உள்பட சுமார் 7 ஆயிரம் போலீசார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பரமக்குடி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 150 நவீன சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் டிரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு 163 (1) தடை உத்தரவு கலெக்டர் உத்தரவில் அமல்படுத்தப் பட்டுள்ளது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தந்த வழித்தடங்களில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

    • கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது.
    • தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 47 கி.மீ முதல் 55 கி.மீ. வரை சூறைகாற்று வீசக்கூடும்.

    எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது. மாலை முதல் ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தங்கச்சி மடம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியது.

    மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் அலைகள் பனைமர உயரத்திற்கு ஆக்ரோசமாக எழும்பியது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் சூறைகாற்று, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இன்று தடை விதித்தது. மேலும் அதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ராமேசுவரம் துறை மும் மற்றும் கடற்கரைகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது.
    • 7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மண்டபம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஜூன் மாதம் 22ந்தேதி அன்று மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு-நெடுந்தீவு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டினர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

    ரோந்து கப்பலை வைத்து படகுகளில் மோதச் செய்தனர். இதில் படகு உடைந்தது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் ராமேசுவரம் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஈசாக் ராபின், செல்வகுமார் ஆகியோரின் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்திருந்த சகாய ராபர்ட்(வயது49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோபு (24), ஹரிகிருஷ் ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எல்லை தாண்டி வந்ததாக கூறி ராதா (44), முத்துராம லிங்கம் (51), யாக்கோபு (24), இவரது மகன்கள் பொன் ராமதாஸ்(26), ராம்குமார்(24) மற்றும் லிபின்ராஜ் உள்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் மீண்டும் இதேபோல் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து சகாய ராபர்ட்டுக்கு 1 வருட சிறை தண்டனையும், ஹரிகிருஷ்ணனுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    7 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் 2 மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • ராமேசுவரத்தைச் சேர்ந்த மரியசியா என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்தனர்.
    • மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மண்டபம்:

    இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சு றுத்தல்களால் தமிழக மீன வர்கள் கடுமையான அவ திக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த வாரம் நாகை மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடையாளம் தெரியாத சிலர் மீது இந்திய கடலோர காவல் படையினர் வழக்குப்பதிவு செய்தபோதிலும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சம் தெரிவிக்கிறார்கள்.

    கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் அதற்கான பேச்சு வார்த்தை பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வார காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்து இருந்தது.

    காற்றின் வேகம் சற்றே குறைந்த நிலையில் 6 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இதில் நேற்றும் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய கடல் எல்லையாக கருதப்படும் பாரம்பரிய கடற்பகுதியான தனுஷ் கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே வலைகளை விரித்து இடையே மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது நள்ளிரவு அங்கு இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான கடற்படை ரோந்து கப்பல் வந்தது. இதைப்பார்த்த அந்த பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு புறப்பட தயாரானார்கள். ஆனாலும் மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த மரியசியா என்பவருக்கு சொந்தமான விசைப் படகை சுற்றி வளைத்தனர்.

    அதில் இருந்த தங்கச்சி மடத்தை சேர்ந்த கிங்சன் (வயது 40), மெக்கான்ஸ் (37), ராஜ் (43), இன்னாசிராஜா (45), சூசை (40), மாரியப்பன் (45), அடிமை (33) மற்றும் ராமேசுவரத்தை சேர்ந்த முனியராஜ் (23) ஆகிய 8 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரகள் உறுதியான நடவடிக்கை எடுக்க மீனவ சங்கங்கள் வலியுறுத்தி உள்ளது.

    • 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும் என 31 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை லஞ்சம் கேட்டு பெற்றதாக பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வழக்கு திடீர் சோதனையின் போது பணம் கைப்பற்றப் பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 24 அரசுத்துறை அதிகாரிகளும், தனி நபர்கள் 7 பேரும் என 31 பேர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக மேற்கண்ட லஞ்ச புகார் தொடர்பாக பாதிக்கப்பட்டிருந்த மனுதாரர்களின் அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனடியாக சரிசெய்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த ஆண்டு மாவட்டத்தில் லஞ்சம் கேட்டு பெற்றதாக 5 வழக்குகளும், திடீர் சோதனையின் போது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களில் மொத்தம் ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டு அந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் யாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ லஞ்சம் கேட்டால் புகார் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகார்களை கொடுக்கும் நபர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும். அவர்களின் குறைகள் உடனே தீர்த்து வைக்கப்ப டும்.

    மேலும் பொதுமக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகார்களை கொடுக்கலாம். அதன்படி 94982 15697 மற்றும் 94986 52159 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
    • சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்:

    தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. கோவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றுப் பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என கூறினார். உடனே, இப்போது சொல்லக்கூடாது. ஆகஸ்ட் 19-ம் தேதிக்குப் பிறகு தான் அவர் துணை முதலமைச்சர் என விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.
    • மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சென்று உள்ளார். அங்கு சத்திரக்குடியில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவதை பார்வையிட முடிவு செய்தார். 10 கிராமங்கள் வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு இறப்பு இல்லாமல் சாதனை படைத்துள்ளது.

    இதை அறிந்ததும் அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை நேரில் அழைத்து பாராட்டினார். தொடர்ந்து அவர்களுக்கு தேநீர் விருந்து அளித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இதே போல் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு சாதனை படைக்க வேண்டும் என்றும், மருத்துவமனையை பொறுத்தவரை என்ன தேவைகளாக இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். உதவுவதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

    அதைத்தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் சரிவர இல்லை. முக்கியமாக சி.டி.ஸ்கேன் அறை சுத்தமாக இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருந்தது. இதனால் மருத்துவமனை தலைமை மருத்துவர் தன் பணியில் சரிவர இல்லாமல் பொதுமக்கள் சுகாதாரத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் பணி செய்ததால் அவரை உடனடியாக பணிமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டார். மற்றும் இணை இயக்குனர் பணியில் சுணக்கம் காட்டியதற்கு விளக்கம் கேட்கும்படி மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு உத்தர விட்டார்.

    • பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
    • அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    • ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர்.
    • உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    ஆறு, ஏரி, குளங்களில் உள்ள மீன்கள் உப்பு தன்மை கொண்ட கடல் நீரில் உயிர் வாழாது என கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே வங்காள விரிகுடா கடலில் ஆறு மற்றும் ஏரிகளில் உள்ள ஜிலேபி மீன்கள் பிடிபட்டது. இதனைக் கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறை பேராசிரியர் முத்துசாமி ஆனந்த் என்பவர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    அப்போது கடலில் பாக் ஜலசந்தி பகுதியில் ஆறுகளில் வளரும் ஜிலேபி மீன்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை கண்டறிந்தனர். இந்த மீன்கள் கடலில் 2 முதல் 5 மீட்டர் ஆழத்தில் சுற்றி திரிகின்றன. 11 சென்டிமீட்டர் முதல் 23 சென்டிமீட்டர் வரை மீன்கள் வளர்ந்துள்ளன.

    கடல் தண்ணீரில் இந்த மீன்கள் இனப்பெருக்கம் செய்துள்ளன.

    தன்னை சுற்றியுள்ள உப்புநீர் சூழலுக்கு ஏற்ப இந்த ஜிலேபி மீன்கள் மாற்றி பழகி கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இவற்றின் வயிற்றில் உள்ள உணவை பார்த்தால் கடலில் உள்ள மென்மையான உயிரினங்களான கோப் காய்கள், மொல்லஸ்கள், சிறிய பிளாங்டன்கள், பாலி சீட் புழுக்கள் போன்றவற்றை சாப்பிட்டு வளர்ந்தது தெரிய வந்தது.

    இந்த ஜிலேபி மீன்கள் கடலில் இனப்பெருக்கத்தை அதிகரித்து வருவதால் அவை உண்ணக்கூடிய கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். வைகை ஆற்றில் இருந்து ஜிலேபி மீன்கள் கடலில் கலந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    • பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன.
    • புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே புதிய ரெயில் பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டு, அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன இந்த பாலத்துக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடலில் 333 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மீது இரும்பு கர்டர்கள் அமைத்து தண்டவாளங்களும் அமைக்கப்பட்டுவிட்டன. பாலத்தின் மையப்பகுதி வழியாக கப்பல்கள் கடக்க வசதியாக செங்குத்தாக திறந்து மூடும் வகையிலான தூக்குப்பாலம் அமைகிறது.

    இதற்காக 77 மீட்டர் நீளமும் சுமார் 650 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம், ரெயில்வே பாலத்தின் நுழைவுப்பகுதியில் வடிவமைக்கப்பட்டு நகரும் கிரேன்கள் மூலம் தூண்கள் வழியாகவே நகர்த்தி கொண்டு வரப்பட்டது. இந்தப்பணி சுமார் 2 மாதங்களாக நடந்தன. நேற்று முன்தினம் நள்ளிரவில் தூக்குப்பாலம் அமையும் மையப்பகுதியில் உள்ள 2 தூண்கள் மீது கொண்டு வந்து வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

    இதை கொண்டாடும் வகையில் ரெயில்வே கட்டுமான நிறுவனம் சார்பில் நடுக்கடலில் வாணவேடிக்கை நடைபெற்றது. அதிகாரிகள், என்ஜினீயர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

     

    இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    புதிய தூக்குப்பாலம், மெதுமெதுவாக நகர்த்தப்பட்டு, பாம்பன் கடலின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இனி அதனை திறந்து மூட தேவையான கேபிள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெறும். இந்தப் பணியை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின்னர் தூக்குபாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

    இந்த சோதனையானது, ரெயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தூக்குப்பாலம் வழியாக ரெயில் பாலம் முழுவதும் ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவர் அவருக்கு கூறினார்.

    இந்தியாவிலேயே கடலுக்கு நடுவே அமைந்துள்ள செங்குத்து வடிவிலான திறந்து மூடும் முதலாவது தூக்குப்பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாம்பன் பாலத்தின் மையப்பகுதியில் தூக்குப்பாலம் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதை நேற்று ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    ×