என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் ஸ்கீமை அமுலுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.
    • நண்பர்களுடன் சேர்ந்து 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து பார்த்தோம்.

    சேலம்:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நாமக்கல்லில் பரமத்தி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்குள்ள லாரியின் முன் பகுதி விற்பனை செய்யும் கடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவி செய்ததுடன் அவர்கள் தீயை விரைந்து அணைக்க உதவினார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2023-ம் ஆண்டு தொடக்கத்தில் முதலமைச்சர் வழிகாட்டுதல் படி ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் நிதி ஆதாரம் சம்பந்தமாக கேட்டுக்கொள்ள டோக்கியோவுக்கு நானும், துறை அதிகாரிகளும் சென்றோம். டோக்கியோவில் 8 கி.மீ . தூரத்திற்கான நடைபாதை ஹேல்த் வாக் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு சாலையில் இரு மருங்கிலும் மரங்கள் நடப்பட்டு இருக்கைகள் நடப்பட்டு நடப்பதினால் ஏற்படும் நன்மைகளை குறிப்பிட்டு விளம்பர பலகைகள் வைத்து சாலைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    அவர்களிடம் 8 கிலோ மீட்டர் என்று நிர்ணயத்திருக்கீறிர்கள் இதற்கான பிரத்யோக காரணம் உண்டா? என்று கேட்ட போது அவர்கள் சொன்னது 8 கி.மீ. நடந்தால் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் அடியை எடுத்து வைப்போம். அந்த வகையில் தினந்தோறும் ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் 10 ஆயிரம் அடி நடந்தால் உடலுக்கு நல்லது, எந்த விதமான நோய் பாதிப்பும் இருக்காது என்ற வகையிலான செய்தியை சொன்னார்கள், நாங்கள் சென்னைக்கு திரும்பியதும் முதலமைச்சரிடம் அந்த கருத்தை வலியுறுத்தினோம்.

    முதலமைச்சரும் டோக்கியோவில் இருப்பது போலவே தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்த் வாக் ஸ்கீமை அமுலுக்கு கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் வருவாய் மாவட்டங்கள் 38 மாவட்டத்திலும் இந்த ஹெல்த் வாக் ஸ்கீம் 8 கி.மீட்டர் தூரம் அடையாளம் காணப்பட்டு இரு மருங்கிலும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருக்கைள் போடப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மரங்களும் அடர்த்தியாக நடப்பட்டு இந்த திட்டம் நவம்பர் 4-ந்தேதி 2023 அன்று துணை முதலமைச்சர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கொட்டும் மழையில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 38 மாவட்டங்களில் இருந்தும் நடப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்த வகையில் அன்றிலிருந்து இந்த ஹெல்த் வாக் என்பது தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கவும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வந்திருந்த நான் இன்று காலை நடப்போர் நல சங்கம் வைத்து 700-க்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலேயே 700-க்கும் மேற்பட்டோர் நடப்போர் நல சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வது என்பது நாமக்கல் தான் முதலிடமாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்த வகையில் அந்த நண்பர்களுடன் சேர்ந்து 8 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து பார்த்தோம்.

    மிக சிறப்பான வகையில் 46 இடங்களில் நிரந்தரமாக நடந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பது குறித்தான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளியில் தொடங்கி டிரினிட்டி கல்லூரி வரை 4 கிலோ மீட்டர், மீண்டும் அங்கிருந்து இங்கு வந்தால் 4 கி.மீட்டர், இரு பக்கமும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 3 அடி உயரத்திற்கான சாலை தடுப்புகள் இருப்பதை பார்த்தோம், அதனை உட்காரும் இருக்கைகளாக மாற்றுமாறு கூறி உள்ளோம். சில இடங்களில் மரங்கள் நட வேண்டியது இடங்கள் இருக்கிறது. சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு சாலையில் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம்.

    ராஜேஷ்குமார் எம்.பி.யிடமும் இதனை வலியுறுத்தி நிறைய சாலைகளை பசுமை பகுதியாக மாற்ற ஆயிரக்கணக்கான மரங்களை குறிப்பாக நாட்டு மரங்களான புங்கை மரம், பூவரசு மரம், அத்தி மரம், நாவல் மரம், வேப்ப மரங்களை நடவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவோம். அந்த வகையில் இந்த ஹெல்த் வாக் சாலை மிக சிறப்பாக உள்ளது. இங்கு இருப்பவர்களும் மிக சிறப்பாக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரால் 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ., நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொதுமக்களிடம் சிகிச்சைகள் கேட்டறிந்தார். மேலும் டாக்டர், செவிலியர்களிடம் பொதுமக்கள் வருகை மற்றும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.



    • மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆன்றாபட்டி அருகே உள்ள குப்பாண்டாம் பாளையம் ஊராட்சி வன்னியர் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் கபில் ஆனந்த் (வயது 41) லாரி டிரைவர்.

    இவருக்கு நதியா என்ற மனைவியும், ஹரி ரஞ்சித், விக்னேஷ் ஆகிய 2 மகன் உள்ளனர்.

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஹரி ரஞ்சித், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்தனர். தனது இரு மகன்களும் தேர்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் கபில் ஆனந்த் இருந்து வந்தார்.

    தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகன்களாவது படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த கபில் ஆனந்த் மகன்கள் தேர்வில் தோல்வி பேரதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து நேற்று மாலை வீட்டிலிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் சென்ற கபில் ஆனந்த் கதவை சாத்திவிட்டு கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கடப்பாறை கொண்டு கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கபில் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தனது மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்றாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கேப்டன் தான் என்னுடைய எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன்.
    • கேப்டனுக்கு அம்மா இல்லை. அம்மா பாசமே அவருக்கு தெரியாது.

    நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

    இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழகம் முழுவதும் சினிமா பிரபலங்கள் பலரும் பல வருடம் வாழ்ந்து விட்டு விவகாரத்து செய்கின்றனர். ஏன் தெரியல. ஒன்னு மட்டும் சொல்றேன் கணவன்-மனைவிக்குள் உண்மையான புரிதல் இருக்கணும். ஈகோ இருக்கக்கூடாது. நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்று. புரிதல் இருக்கணும், விட்டுக்கொடுத்து வாழணும். அதுதான் வாழ்க்கை.

    ஓ நீ இப்படியா, நான் அப்படின்னு வாழ்ந்தால் எப்படி அந்த குடும்பம் விளங்கும். அதுக்கான உதாரணங்கள் தான் இன்றைக்கு எத்தனை எடுத்துக்காட்டுகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் நான் பெருமையாக சொல்றேன்... கேப்டன் தான் என்னுடைய எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன்.

    எனக்காக எந்தவிதமான சுய விருப்பம் எதுவும் இல்லை. அவர் என்ன விரும்புகிறாரே அதுதான் என்னுடைய விருப்பம். அவர் என்ன சொல்றாரோ அதுதான் என்னுடைய சொல். அவர் என்ன செய்கிறாரோ அதுதான் என் செயல். இப்படி 1990 ஜனவரி 30-அன்று தாலி கட்டின மறுநிமிடமே என் வாழ்க்கையை கேப்டனுக்காக அர்ப்பணித்து விட்டேன். கேப்டன் எவ்வளவு பெரிய கோவக்காரர் தெரியுமா? அவருக்கு கோபம் அப்படி வரும். பொறுமையா பார்ப்பேன். அதனால தான் அவரை அறியாமலேயே ஒரு பேட்டியில் கேப்டன் சொல்லியிருக்கிறார், என்னுடைய மனைவி நிழல் சக்தி அல்ல நிஜ சக்தி.. அவள் என்னுடைய மனைவி மட்டுமல்ல என் தாய் என்று சொல்லியிருக்கிறார். அந்த பேட்டியை இப்போ தினமும் போட்டு பார்ககிறேன்.

    கேப்டனுக்கு அம்மா இல்லை. ஒரு வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். அம்மா பாசமே அவருக்கு தெரியாது. அதனால என்கிட்ட கேட்டாரு, அம்மா பாசம் தெரியாது. எனக்கு நீ சாப்பாடு ஊட்டி விடுவியா என்று கேட்டார். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை தினமும் நான்தான் அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன். சூட்டிங் முடிந்து நடுராத்திரி எப்போது வந்தாலும் சூடாக சமைத்து ஊட்டிவிட்டு தான் படுப்பேன். ஏன் இதெல்லாம் சொல்றேன் என்றால் அந்த புரிதல் இருக்கணும். அந்த புரிதல் இருந்தால் இந்த விவகாரத்து எல்லாம் தூசி மாதிரி. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கிற 'தில்' போதும். இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் இதை என்னுடைய அட்வைஸாக எடுத்துக்கணும் என்று பேசினார்.

    • தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மனைவி கவிதா (40). இவர் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகள் கீர்த்திவாசனி (15). பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

    தேர்வு இன்று வெளியாக உள்ள நிலையில் தேர்வில் குறைந்த மதிப்பெண் மட்டுமே கிடைக்கும் எனவும், தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு மாணவி கீர்த்தி வாசனி தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அங்கன்வாடிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த அவரது தாய் கவிதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவரது மகள் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கீர்த்தி வாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தமிழ் - 70, ஆங்கிலம் - 83, கணிதம் - 81, அறிவியல் - 70, சமூக அறிவியல் - 44 என மொத்தம் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    • முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.
    • வெயில் காலங்களில் முட்டையின் நுகர்வு குறையும்.

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் 9 கோடிக்கும் அதிகமான கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தற்போது தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது.

    கடந்த 5-ந் தேதி 500 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் 545 காசுகளாக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்தி 550 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 8 கோடியாக இருந்த முட்டை உற்பத்தி கோடை காலமான தற்போது 7 கோடியாக சரிந்ததால் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் கூறி உள்ளனர்.

    இது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    குறிப்பாக கோடை காலங்களில் முட்டை கோழிகள் தீவனத்தை சரியாக எடுத்து கொள்ளாததால் முட்டை உற்பத்தி குறைவது வழக்கம். மேலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் கோழிகள் சரியாக உணவு எடுத்து கொள்ளாததால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி வழக்கத்தை விட 1 கோடிக்கும் மேல் சரிந்துள்ளது.

    மேலும் வழக்கமாக குளிர் காலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரிக்கும். வெயில் காலங்களில் முட்டையின் நுகர்வு குறையும். ஆனால் தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் வெயில் காலத்திலும் முட்டையின் நுகர்வு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் முட்டையின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

    முட்டையின் உற்பத்தி குறைந்த நிலையில் அதன் தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது . இதனால் ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கே வியாபாரிகள் முட்டைகளை பண்ணைகளில் ஒவ்வொரு நாளும் எடுத்து செல்கிறார்கள். இதனால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் தவிர்க்கப் பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி விலை 97 ரூபாய்க்கும், கறிக்கோழி விலை 105 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் நேற்று குறைந்துள்ளது.

    • ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார்.
    • கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள ஒரு மாடி வீட்டில் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ஜெகதீசன் (வயது 40). இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருப்பதால் குழந்தைகள் இருவரும் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    ஜெகதீசன் கடந்த 20 ஆண்டுகளாக இந்து முன்னணியில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆண்டுகளாக இந்து முன்னணி நாமக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் மாடியில் அவரது இந்து முன்னணி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு சுமார் 12 மணி அளவில் 2 மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளனர்.

    இவர்கள் குடியிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளதால் அவர்கள் தான் திரும்பி வந்து சாவி வாங்குவதற்காக கதவை தட்டுகிறார்கள் என நினைத்து கீதா தனது வீட்டின் கதவை திறந்தார்.

    அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் திடீரென கீதாவை பிடித்து கழுத்தின் குரல் வளையை அறுத்தனர். மேலும் அவரை சரமாரியாக வெட்டினார்கள்.

    இதில் கீழே சரிந்து கீதா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு அங்கு வந்த கணவர் ஜெகதீசனையும் மர்ம கும்பல் வெட்டினர். தலை, கை என 3 இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

    சுதாரித்து கொண்ட ஜெகதீசன் வீட்டின் கதவை கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டார். மர்ம நபர்கள் தொடர்ந்து கதவை தட்டினர். ஆனால் கதவை திறக்கவில்லை. பின்னர் வலி தாங்க முடியாமல் ஜெகதீசன் சத்தம் போட்டு உள்ளார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கணவன்- மனைவி இருவரையும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகதீசனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (42), இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு உதயா என்ற ஒரு மகன் உள்ளார்.

    இதே போல் திருச்செங்கோடு அருகே உள்ள பொம்மக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சக்தி என்ற மகனும், யசோதா என்ற மகளும் உள்ளனர்.

    விசைத்தறி தொழிலாளர்களான மயில்சாமியும், மகேந்திரனும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று அனிமூர் பிரிவு என்ற இடத்தில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டு சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி லாரி ஓட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். இதில் மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகேந்திரனும் பலியானார்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவர் கார்த்திகேயனை தேடி வருகிறார்கள்.

    • எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை.
    • வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை. பாதகமாகத்தான் உள்ளது. விதிமுறைகளை தளர்த்த நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. புதிய ஒப்பந்தத்தின் விதிமுறையால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தில் எங்களால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாது. அதனால் நாளை (27-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 4 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயங்காது. எரிவாயு ஏற்றும் 10 இடங்களில் லோடுகளை ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிற மண்டலத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம. அவர்களும் போராட தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), இவரது மாமியார் கோகிலா (45). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இதேபோல் அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள பிள்ள விடுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி பகுதியை சேர்ந்த இளவரசன் (18) ஆகிய 2 பேர் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார்.

    இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நாமக்கல்-மோகனூர் சாலையில் எதிர் எதிரே சென்றபோது நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் நவீன், தன்யா, கோகிலா ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தன்யாவை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், நவீனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கோகிலாவை அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    அதேபோல் இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், இளவரசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளவரசனை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் மற்றும் அவரது மாமியார் கோகிலா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீர் விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • இனி வரும் நாட்களில் முட்டை அதிக அளவில் தேங்க வாய்ப்புள்ளது.

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பகுதிகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த கோழிகள் மூலம் தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் தமிழகத்தின் சத்துணவு திட்டத்திற்கு தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கிறது. ஆனாலும் நிர்ணயித்த விலையை விட முட்டையை குறைந்த விலையில் விற்பதாக புகார் எழுந்ததால் அதனை கண்காணிக்க குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி 490 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக சரிந்து தற்போது 380 காசுகளாக உள்ளது. இதனால் கடந்த 8 நாட்களில் மட்டும் முட்டை விலை 110 காசுகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த திடீர் விலை சரிவுக்கான காரணம் குறித்து முட்டை பண்ணையாளர்கள் கூறியதாவது:-

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஆண்டு வரை 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெயில் காலம் தொடங்கி உள்ளதால் முட்டை உற்பத்தி படிப்படியாக அதிகரித்து 5 கோடியாக அதிகரித்துள்ளது.

    ஆனால் முட்டை உற்பத்தி அதிகரித்த நிலையில் அதற்கேற்றவாறு முட்டை விற்பனை அதிகரிக்கவில்லை. குறிப்பாக குளிர் காலத்தில் முட்டை விற்பனை அதிகரிக்கும், கோடை காலத்தில் முட்டை விற்பனை குறையும், அதே போல வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் முட்டையின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் அதன் நுகர்வு குறைந்துள்ளது.

    மேலும் ஆந்திர மாநிலம் முட்டை உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ளது. தற்போது ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் முட்டை விலை அங்கு வேகமாக சரிந்துள்ளது. இதனால் அங்குள்ள முட்டைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை குறைக்காவிட்டால் இங்கு கொண்டு வந்து ஆந்திர முட்டைகளை அதிக அளவில் விற்பனை செய்வார்கள். இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முட்டை விலை குறைந்த பின்னரும், தேவை குறைந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில் 2 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேங்கி உள்ளது. இனிவரும் நாட்களில் முட்டைகள் அதிக அளவில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் தேசிய ஒருங்கிணைப்புக்குழு 380 காசுகளுக்கு முட்டை விலையை நிர்ணயித்துள்ள நிலையில் அதை விட குறைவாக 10, 20 காசுகள் குறைத்து முட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்கிறார்கள். ஆனாலும் இனி வரும் நாட்களில் முட்டை அதிக அளவில் தேங்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.
    • அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விவசாய நிலத்தில் காலாவதியான ரசாயனங்களை மர்மநபர்கள் கொட்டி சென்றுள்ளனர். 20 பேரல்களில் காலாவதியான ரசாயனங்களை கொட்டி சென்றுள்ளனர்.

    அதிக திறன் கொண்ட கெமிக்கல் கழிவுகள் இரவில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஊர் முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. மூச்சு விடுவதில் சிரமப்பட்டனர்.

    கெமிக்கல் பாக்ஸ் மற்றும் கெமிக்கல் பேரல்களை விவசாய நிலங்களில் கொட்டி சென்றுள்ளதாகவும் ரசாயனங்களை கொட்டி சென்றது யார் என்று தெரியவில்லை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

    • படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் அருகே உள்ள கோலாரம் தேவேந்திர தெரு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (54). அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் அசோக் குமார் (35 ). இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை அண்ணாதுரை கோலாரம் அருகே உள்ள கரிச்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அசோக்குமாரும் கரிச்சிபாளையம் பகுதிக்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்தார். போதையில் முன் விரோதம் காரணமாக அசோக்குமாருக்கும், அண்ணாதுரைக்கும் வாய் தகராறு ஈடுபட்டு அடிதடி தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் ஆத்திரமடைந்த அசோக்குமார் வீட்டிற்கு வந்து அவரது அண்ணன் சின்னசாமி (40), அவரது சகோதரி கோமதி (45) ,அவர்களது தந்தை வீரமணி (70) ஆகியோரிடம் டாஸ்மார்க் கடையில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீரமணி, கோமதி, சின்னசாமி ஆகியோரை அசோக்குமார் அழைத்துக் கொண்டு அண்ணாதுரையின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர்.

    அப்போதும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் சூரி கத்தியால் அண்ணாதுரையை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அவர் உயிரிழந்ததை பார்த்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் .

    பின்னர் அண்ணாதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அசோக்குமார், சின்னசாமி, கோமதி, வீரமணி ஆகிய 4 பேரையும் பிடித்து நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×