என் மலர்
கன்னியாகுமரி
- செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
- பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கும் நீட் முறைகேடுக்கு எதிராக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கன்னியாகுமரி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
இந்த போராட்டத்தில் கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
- அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் மழை பெய்த நிலையில் இன்று காலை முதலே இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது.
7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, அசம்புரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
காலை முதலே மழை பெய்து வந்ததால் பள்ளிக்கூடங்களுக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதற்கு சுணக்கம் காட்டினார்கள். பெற்றோர் அவர்களை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு வந்தனர். குடை பிடித்தவாறு வந்தாலும் ஒரு சில மாணவிகள் மழையின் வேகத்தினால் நனைந்தனர். சீருடைகள் நனைந்ததால் மாணவிகள் அவதிப்பட்டனர்.
பள்ளிக்கூடங்களுக்கு இருசக்கர வாகனங்களில் மாணவிகளை அழைத்து வந்த பெற்றோர் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளதால் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இடலாக்குடி பகுதியில் சாலையில் உள்ள பள்ளம் எங்கு கிடக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால் அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வந்த ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர்.
சுசீந்திரம், கன்னியாகுமரி, கொட்டாரம், அஞ்சுகிராமம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி, தக்கலை, குருந்தன்கோடு, சுருளோடு, மயிலாடி, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை கொட்டியது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
கோழிப்போர் விளை பகுதியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அந்த பகுதியில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் மட்டுமின்றி மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பேச்சிப்பாறை அணை நிரம்பியுள்ள நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணையில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் உபரிநீர் திறக்கப்படும் என்பதால் கோதை ஆறு, குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.42 அடியாக உள்ளது. அணைக்கு 653 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 637 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. அணைக்கு 345 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 16.14 அடியாகவும்,பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 40.76 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ரப்பர் பால் உற்பத்தி, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கன்னிமார் 17.2, கொட்டாரம் 27.8, மயிலாடி 15.2, நாகர்கோவில் 32.4, ஆரல்வாய்மொழி 13, பூதப்பாண்டி 25.2, பாலமோர் 34.4, தக்கலை 49.6, குளச்சல் 40, இரணியல் 14.4, அடையாமடை 23, குருந்தன்கோடு 28.2, கோழிப்போர்விளை 62.2, மாம்பாழத்துறையாறு 29, சிற்றாறு 1-10.2, சிற்றாறு 2-28.4, களியல் 14.2, பேச்சிப்பாறை 32.8, பெருஞ்சாணி 44.6, புத்தன் அணை 39.8, சுருளகோடு 31.2, ஆணைக்கிடங்கு 28.4, திற்பரப்பு 13, முள்ளங்கினாவிளை 43.8.
- இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
- பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இரணியல்:
இரணியல் அருகே உள்ள நெய்யூர் செட்டியார் மடம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 38). இவரது மனைவி சோபிகா (37). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நவநீதன் (45), அவரது மனைவி அமுதா (32). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று சோபிகா வீட்டின் குப்பைகளை அந்த பகுதியில் தீ வைத்து எரித்த போது, நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா இருவரும் தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டனர். அப்போது சோபிகாவின் மாமனார் மணி அதை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நவநீதன் இரும்பு கம்பியால் மணியை அடிக்க வந்தார். இதை பார்த்த சோபிகாவின் கணவர் ஜெகதீஷ் தடுத்த போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஜெகதீஷை, அமுதாவும் சரமாரியாக தாக்கினார்.
இதை தடுக்க வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18) என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த ஜெகதீஷ், மணிகண்டன் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சோபிகா இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் நவநீதனை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமுதாவை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
- வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பல தரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க அயராது மக்களுக்காக உழைத்து வரும் அன்பு தலைவர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.
வெறுப்பை வேரறுக்க அன்பென்ற ஆயுதம் ஏந்த கற்று தந்த நிகரற்ற தலைவன் கோடானு கோடி மக்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
மக்களின் பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் மக்களின் ஆசி மற்றும் பிரார்த்தனையால் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார்.
- போலீசார் சேகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது58). மாற்றுத் திறனாளியான இவர், திருமணமாகாததால் தனியாக வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதி அ.தி.மு.க. கிளை அவைத் தலைவராக இருந்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேகர் இரவில் வீட்டுக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. அவரது வீட்டுக் கதவும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் சேகர் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் சேகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆனால் அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததால் அவரது சாவில் சந்தேகம் ஏதாவது உள்ளதா? என்பதை விசாரிப்பதற்காக சேகர் உடலை உறவினர்களிடம் இதுவரை ஒப்படைக்காமல் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிண அறையில் கடந்த 2 நாட்களாக போலீசார் பாதுகாப்பாக வைத்து உள்ளனர். இதனால் சேகர் சாவில் குழப்பம் நீடிக்கிறது.
- மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
குழித்துறை:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பில் பிரபலமான ஓட்டல் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஓட்டல் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமானோர் சாப்பிட வருவதுண்டு.
மார்த்தாண்டம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், தனது மகன் ரோகித்திடம் இரவு சாப்பாட்டுக்கு மாட்டு இறைச்சி பிரை வாங்கி வருமாறு கூறி உள்ளார். அதன்படி அவர், அந்த ஓட்டலுக்குச் சென்று மாட்டு இறைச்சி பிரை வாங்கி வந்துள்ளார்.
தொடர்ந்து வீட்டில் வைத்து பார்சலை பிரித்த போது, இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லி கிடந்துள்ளது. இதனை பார்த்து ரோகித்தும் அவரது தந்தையும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ரோகித் புகார் செய்தார். அப்போது பல்லி கிடந்த இறைச்சியையும் அவர் காண்பித்தார்.
அதனை பெற்றுக்கொண்ட போலீசார், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் மற்றும் பணியாளர்கள், குறிப்பிட்ட ஓட்டலுக்குச் சென்றனர். அங்கு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வெளியேற்றி விட்டு இறைச்சியை பரிசோதனை செய்தனர்.

இதில் சந்தேகம் இருந்ததால் இறைச்சியை பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். மார்த்தாண்டம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டம் பகுதியில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட சிலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அந்த சம்பவம் மக்கள் மனதை விட்டு மறைவதற்குள் இறைச்சியில் பல்லி கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஓட்டல்களில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருவதால், அசைவ உணவு பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மக்களின் பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தரையில் உடைந்து கிடந்த ராஜீவ்காந்தி சிலையை மீட்டு துணியால் சுற்றி பாதுகாத்தனர்.
- தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
ஆரல்வாய்மொழி:
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே லாயம் விலக்கு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டு இருந்தது. 1992-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைவர்களில் ஓருவரான ஜி.கே.மூப்பனார் இந்த சிலையை திறந்து வைத்தார். ராஜீவ்காந்தியின் பிறந்த நாள், நினைவு நாள் அன்று இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.
ராஜீவ்காந்தி சிலை அருகே டீக்கடையும் செயல்பட்டு வந்தது. இதனால் காலை முதல் இரவு வரை அங்கு மக்கள் கூட்டம் இருக்கும். இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் டீ கடைக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு ராஜீவ்காந்தி சிலை உடைந்து கீழே கிடந்துள்ளது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலை அருகே உள்ள கடையும் சேதமாகி காணப்பட்டது.
ராஜீவ்காந்தி சிலையை யாரோ உடைத்து சேதப்படுத்தியதாக தகவல் பரவ, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்தனர். இதனால் காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தரையில் உடைந்து கிடந்த ராஜீவ்காந்தி சிலையை மீட்டு துணியால் சுற்றி பாதுகாத்தனர். விசாரணையில் வாகனம் மோதியதில் ராஜீவ்காந்தி சிலை சேதம் அடைந்து இருக்கலாம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 11.45 மணியளவில் நாகர்கோவில்-நெல்லை சாலையில் பாரம் ஏற்றப்படாத டாரஸ் லாரி வேகமாக வருவதும் அந்த லாரி, ராஜீவ்காந்தி சிலை மற்றும் டீக்கடையில் மோதிவிட்டு நிற்காமல் செல்வதும் தெரியவந்தது.
ராஜீவ்காந்தி சிலை உடைந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவர் செல்லமணி, ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு டாரஸ் லாரியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டாரஸ் லாரி மோதி, ராஜீவ்காந்தி சிலை உடைந்த சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும்.
குழித்துறை:
தமிழக-கேரளா எல்லைப்பகுதி வழியாக தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் சென்று வருகின்றன.
அடிக்கடி கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் காலியான சரக்கு வாகன ஓட்டுனர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த மாநிலத்தில் இருந்து மீன், கோழி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டி செல்லும் அவலநிலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும் அவ்வப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கழிவுகள் கொட்டி வரும் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில் குமரி-கேரளா எல்லை சோதனை சாவடி வழியாக நள்ளிரவில் கேரளாவில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் புழுக்களுடன் இறைச்சி கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை குழித்துறை அருகே விளவங்கோடு ஊராட்சி ஈத்தவிளை பகுதியில் வைத்து ஊர் மக்கள் மடக்கி சிறைபிடித்தனர்.
இது குறித்து தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., களியக்காவிளை போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து அறிந்த விளவங்கோடு ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய கவுன்சில் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஊராட்சி அதிகாரிகள் இந்த கழிவுகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இந்த வாகனத்தை களியக்காவிளை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து எல்லை பகுதிகள் வழியாக இரவு நேரங்களில் வரும் டிப்பர், கண்டெய்னர் லாரிகள் மற்றும் டெம்போக்களில் கழிவு பொருட்கள் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதனை தடுக்க கூடுதல் தனிப்படை போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும், மேலும் அவ்வாறு கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு நிறுத்தாமல் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், எல்லை பகுதியில் ஒரு சில போலீசாரை மட்டும் வைத்து பணி மேற்கொண்டால் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடைபெறும்.
எனவே அப்பகுதியில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும் என கூறினர்.
- தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
- பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர் குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
மேலும் இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்து பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர் குரல் கொடுத்த கமல்ஹாசனுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
- விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
- ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கன்னியாகுமரி:
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுதுபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள். இந்த நிலையில் மீன்பிடி தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள். இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள்.
இதைத்தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று மாலை முதல் சின்னமுட்டம் துறைமுகத்தில் தயாராக நின்ற விசைப்படகுகளில் டீசல் நிரப்பினார்கள். மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களை பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பினர்கள். அதன்பிறகு இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.
இன்று ஒரே நாளில் 293 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த விசைப்படகுகள் அனைத்தும் ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு இன்று இரவு 9 மணி முதல் கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, கைக்கொழுவை, நெடுவா, கணவாய், திருக்கை, கிளாத்தி, நவரை போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் பிடித்துக்கொண்டு வரும் உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
இந்த ஆண்டு முதல் வெளியூர் வியாபாரிகளும் நேரடியாக மீன் கொள்முதல் செய்யலாம் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை கட்ட தொடங்கிவிட்டது.
- தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
- குமரிக்கு வருகை தந்து எழுச்சிமிகு பிரசாரம் செய்ததற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி அடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து தலைவர்களை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சந்தித்து விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
மேலும் தேர்தல் பிரசாரத்திற்காக குமரிக்கு வருகை தந்து எழுச்சிமிகு பிரசாரம் செய்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, விஜய் வசந்த் தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
- தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
- சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 12.6.2024 தலைமைச் செயலகத்தில், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி தாரகை சுத்பெர்ட் சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.






