என் மலர்
கன்னியாகுமரி
- ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
- மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களில் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை மேற்கொண்ட போது மீன், இறைச்சி, நண்டு போன்றவை சமைத்து பயன்படுத்தாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு 150 கிலோவுக்கும் மேற்பட்ட பழைய மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களை கைப்பற்றி அவற்றை குப்பைத் தொட்டியில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். அத்துடன் 5 ஓட்டல்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறும்போது, ' உணவு பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து வழங்கினாலோ, செயற்கையான வண்ண பொடிகளை சமையலில் பயன்படுத்தினாலோ அந்த ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்கப்படும். ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை வழங்கினால் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.
இந்த சோதனையின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தி முருகன், தக்கலை வட்டார அலுவலர் பிரவீன் ரகு, குளச்சல் வட்டார அலுவலர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
- திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
- பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. தொடர்ந்து நேற்று இரவும் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. நாகர்கோவில், தக்கலை, குளச்சல், இரணியல், பூதப்பாண்டி, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை அணைப் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணைகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறையாறு, கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.79 அடியாக இருந்தது. அணைக்கு 1080 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 432 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 532 கன அடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.52 அடியாக உள்ளது. அணைக்கு 941 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 14.69 அடியாக உள்ளது. அணைக்கு 199 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கீரிப்பாறை, தடிக்காரங்கோணம், குலசேகரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 45.8, பெருஞ்சாணி 46, சிற்றார் 1-27.4, சிற்றார் 2-34.2, கன்னிமார் 6.2, கொட்டாரம் 24.2, மயிலாடி 25.4, நாகர்கோவில் 14.6, முக்கடல் 10, பாலமோர் 22.2, தக்கலை 38, குளச்சல் 19.4, இரணியல் 5.2, அடையாமடை 26.4, குருந்தன்கோடு 10.2, கோழிப்போர்விளை 22.4, மாம்பழத்துறையாறு 20.5, களியல் 30.2, குழித்துறை 26.4, புத்தன் அணை 40.2, சுருளோடு 35.4, ஆணைக் கிடங்கு 20, திற்பரப்பு 41.2, முள்ளாங்கினாவிளை 16.8.
- கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் வருகை இன்று திடீர் என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியி லும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கருமேகம் திரண்டு மழை தூறி கொண்டிருந்ததால் இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சூரியன் உதயமான காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். ஆனால் இன்று காலை மழை செய்து கொண்டிருந்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை.
காலை 8.30 மணிக்கு மழை நின்றதை தொடர்ந்து ½ மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து படகு துறையில் சுற்றுலா பயணிகள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள பாரத மாதா கோவில் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை இன்று திடீர் என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
- முன்விரோதத்தில் தான் தற்போது ஜாக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
திருவட்டார்:
குமரி மாவட்டம் திருவட்டார் மூவாற்றுமுகம் குன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (வயது 38). திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர் தற்போது சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி உஷாகுமாரி. இவர் திருவட்டார் பேரூராட்சியின் 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார்.
நேற்று இரவு ஜாக்சன், அந்தப் பகுதியில் உள்ள ஆர்.சி. சர்ச் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் 6 பேர் இருந்தனர். அவர்கள் ஜாக்சன் அருகே வந்து பேசினர். இந்த பேச்சு திடீரென வாக்குவாதமாக மாறியது.
அப்போது 6 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து ஜாக்சனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனை கண்ட கொலைக்கும்பல் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
அவர்களை பிடிக்க அந்தப் பகுதியினர் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாக்சனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஜாக்சன் பரிதாபமாக இறந்தார்.
பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், தக்கலை துணை சூப்பிரண்டு உதய சூரியன் வந்து விசாரணை நடத்தினர். இதில் சிதறால் அருகே உள்ள புன்ன மூட்டுவிளை வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் தலைமையில் வந்தவர்கள் தான் ஜாக்சனை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தில் தான் தற்போது ஜாக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக திருவட்டார் போலீசில் உஷா குமாரி புகார் செய்தார். அதில், நேற்று இரவு எனது கணவர் ஜாக்சன், குழந்தைகளுக்கு பழம் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வழியில் பாரதபள்ளியில் உள்ள அந்தோணியார் ஆலய குருசடியில் ஜெபம் செய்தார். அங்கிருந்து வெளியே வரும் போது முன்விரோதம் காரணமாக ராஜகுமார் என்ற விலாங்கன் மற்றும் கண்டால் தெரியும் 5 பேர் சேர்ந்து தகராறு செய்து தாக்குதல் நடத்தினர் என குறிப்பிட்டு உள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
- பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களை சந்தித்து கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டேன்.
வெளிநாட்டு வாழ் குமரி மாவட்டத்தின் மக்கள், சுற்றுலா பயணிகள், கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவை தேவை என்பதை எடுத்து கூறினேன்.

அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய ஒரு இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
- இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
- சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி வியாபாரமும் நடைபெற்று வருவதால் காலை முதல் மதியம் 1 மணி வரை இந்த மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் நெருக்கடியாக உள்ளது போன்ற காரணங்களை கூறி மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்காக சென்றனர். அந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்றும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வியாபாரிகள் கடை வைக்க முடியாத அளவிற்கு மணல்களை கிளறி விடும் நடவடிக்கையை எடுத்தனர். அவர்களுடன் வாக்குவாதம் செய்த வியாபாரிகள், தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி நின்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட வியாபாரிகள், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை அதிகாரிகளை சந்திக்கப் போவதாக கூறினர். அதன்படி அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதில் இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில் இன்று சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கடை அமைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தை செயல்பட்டு வருகிறது. தற்காலிக அனுமதியை நிரந்தரமாக பெற முயன்று வருகிறோம். அரசு எங்கள் விசயத்தில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
- கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது.
- நைவேத்தியம் தயாரிக்க தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத் தான் கோவில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது.
மின்விளக்கு வசதி இல்லாத இருள் சூழ்ந்து கிடக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள். மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அதேபோல இரவு அம்மனுக்கு நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் அப்பம், வடை போன்ற பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.
இந்த தீர்த்த கிணறு குப்பை கூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பணம், காசு மற்றும் தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக காசி, ராமேசுவரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரும் வடமாநில பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிக அளவில் பணம் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள்.
பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக் கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம், காசுகள் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படவில்லை.
இந்த நிலையில் கோவிலில் ஆய்வு செய்ய வந்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இந்த தீர்த்த கிணற்றை பார்வையிட்டார். அப்போது தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திறந்து எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
- கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.
கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் நாட்டிற்கு செய்த நற்பணிகளை போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்திற்கு சிலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.
பாராளுமன்றத்தின் 377-வது விதியின் கீழ் இன்று கோரிக்கையை சமர்ப்பித்த விஜய்வசந்த் எம்.பி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்வதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.
இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெருக செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இதனால் பயனடைவார்கள்.
மேலும் கட்டுமான தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இந்த சிலையை நிறுவிய பின்னர் வணிக ரீதியாகவும், வேலை வாய்ப்புகள் பெருகும் வகையிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கன்னியாகுமரியின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியை நாம் காண வழி வகை செய்யும்.

மேலும் இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றினையும் அமைக்க வேண்டும்.
இந்த சிலை அமைக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும், கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின் இதனை கட்ட வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜரின் இணை இல்லா சரித்திரத்தை உலகெங்கும் உள்ளவர்கள் அறியும் வகையில் இந்த சிலையை நிறுவ அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
- சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து.
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி கடல்பகுதி விளங்குகிறது. இங்கு தினமும் பல நாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அங்கு தியானம் செய்யும் இடம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவைகளையும் கண்டுகளிக்கின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடலின் நீர்மட்ட தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த அரிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.
- ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கோடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் மாம்பழம் ராஜேந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
முன்னதாக கோடம்பாக்கம் நாடார் சங்க நிர்வாகிகளில் ஒருவரான மறைந்த டாக்டர் சபாபதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு உதவி வழங்கினோம்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பால் கனகராஜ் திரைப்பட நடிகர் ஜீவா தங்கவேல் ஜாக்குவார் தங்கம் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ் நாடார், பொதுச்செயலாளர் சந்திரசேகர் நாடார் கோடம்பாக்கம் நாடார் சங்க காப்பாளர் ஜார்ஜ் நாடார், முன்னாள் தலைவர் ஐ கே ரூபன் நாடார், சாந்தகுமார் நாடார் சங்க ஆலோசகர் ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று முன்னதாக பம்மல் நாடார் பேரவை சார்பில் குடும்ப விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு காமராஜர் புகழ் பாடினேன்.
- கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.
- 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
தக்கலை:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அமராவதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், தனது மனைவி ஷோபியுடன் தக்கலையில் உள்ள வட்டம் அண்ணா நகரில் ஒரு வீட்டின் மாடியில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் மகேஷ் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு முதலில் திருமணமாகி மனைவி பிரிந்து விட்டதும், அதன்பிறகு விமானத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் சென்னையை சேர்ந்த ஷோபி என்பவரை 2-வது திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.
ஷோபி தனது பெற்றோரை பார்க்க சென்னை சென்றிருந்த நேரத்தில் தான் மகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தது யார்? என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்திலும், மகேசின் வீட்டிலும் மது பாட்டில்கள் கிடந்ததால், அவர் நண்பர்களுடன் மது அருந்தி இருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதினர்.
அதனடிப்படையில் கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதில் திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த மெக்கானிக் பெனிட்(27), பொற்றைகாட்டுவிளை பெயிண்டர் திரேன்ஸ்(23), மல்லன்விளை பிபின் ஜேக்கப்(23) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் போலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.
கேரளா மற்றும் சென்னைக்கு விரைந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்தநிலையில் மகேசின் உறவினர்கள் நேற்று தக்கலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.
அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், மகேஷ் உடல் வைக்கப்பட்டு இருந்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் மகேஷ் கொலையில் தேடப்பட்ட பிபின் ஜேக்கப், கோவையில் பதுங்கிருப்பது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் கோவை விரைந்தனர். அவர்கள் பிபின் ஜேக்கப் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்தனர்.
பின்பு வீட்டுக்குள் இருந்த பிபினை கைது செய்தனர். கைது செய்த அவரை தனிப்படை போலிசார் இன்று காலை தக்கலைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பிபின் ஜேக்கப் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மற்ற 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
- மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கேந்திர நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இரவு அங்கு தங்குகிறார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மோகன் பகவத் இரவு விவேகானந்த கேந்திராவில் தங்குகிறார். 24-ந் தேதி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.






