என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்த கிணறு"

    • கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது.
    • நைவேத்தியம் தயாரிக்க தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத் தான் கோவில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது.

    மின்விளக்கு வசதி இல்லாத இருள் சூழ்ந்து கிடக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள். மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல இரவு அம்மனுக்கு நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் அப்பம், வடை போன்ற பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த தீர்த்த கிணறு குப்பை கூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பணம், காசு மற்றும் தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக காசி, ராமேசுவரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரும் வடமாநில பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிக அளவில் பணம் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள்.

    பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக் கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம், காசுகள் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் ஆய்வு செய்ய வந்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இந்த தீர்த்த கிணற்றை பார்வையிட்டார். அப்போது தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திறந்து எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை.
    • சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குழந்தைப்பேறு, தொழிலில் அபிவிருத்தி அளிக்கும் பரிகார தலமாக திகழ்கிறது.

    தனது சாபம் நீங்குவதற்காக சந்திரன் சிவபெருமானை வழிபட்டது, மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது போன்ற பல்வேறு சிறப்புகளை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

    இந்த நிலையில் இங்கு சமீபத்தில் அதிசய தீர்த்தக்கிணறு வெளிப்பட்டு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது. கோவிலின் தென்மூலை பகுதி பல ஆண்டுகாலமாக புதர் மண்டி காணப்பட்டது. அந்த பகுதி பெரியவர்கள் யாரும் அங்கு சென்றதில்லை. கோவிலின் ஒரு பக்கச்சுவர் மட்டும் அதில் தென்பட்டிருந்தது. பல ஆண்டுகளாகவே சிறு குழந்தைகள் கூட அந்த பகுதிக்கு செல்ல பயப்படுவார்களாம்.

    புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் திருப்பணி வேலைகளுக்காக அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அந்த புதருக்குள் அதிசய தீர்த்தக்கிணறு இருப்பதை கண்டு அப்பகுதியினர் அதிசயித்தனர். தீர்த்த கிணறின் மேல்பக்க சுவரின் 4 முனிவர்கள் காவல் காப்பது போன்ற சிற்பம் காணப்பட்டது.

    இந்த சூழலில் அங்கு நின்ற பக்தர் ஒருவர் மூலமாக அருள்வாக்கு வந்தது. அந்த அதிசய தீர்த்த குளத்தின் உள்ளே சுமார் 400 அடி ஆழத்தில் முசுகுந்த முனிவர் எனும் சித்தரும், 200 அடி ஆழத்தில் அவரது சீடர் நாதமுனி சித்தரும் தவம் இருப்பதாகவும், அவர்களது தவத்திற்கு சீடர்கள் 4 முனிவர்கள் காவலாக இருப்பதாகவும் அருள்வாக்கு வெளிப்பட்டது. இதை கேட்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போயினர்.

    இது தொடர்பாக பக்தர்கள் சிலர் கூறியதாவது:-

    இந்த கோவில் அருகே ஏற்கனவே ஒரு கிணறு உள்ளது. தற்போது புதிதாக துலங்கி உள்ள இந்த கிணற்றில் சித்தர்கள் தவம் இருப்பது குறித்து அருள்வாக்காக கிடைத்த தகவல் அதிசயிக்கத்தக்கதாகும். இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் கோவில் திருப்பணிகள் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.

    மேலும் இங்குள்ள இறைவன் சந்திரமவுலீஸ்வரருக்கு தற்போது இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் பின்பக்கம் சித்தர் ஐக்கியமான சித்தர் பீடம் அமைந்திருப்பது இன்னும் சிறப்பக இருக்கிறது.

    இந்த அதிசய தீர்த்த கிணற்றில் சித்தர்கள் வாசம் செய்வதால் இந்த கிணற்றை வணங்கி வருகிறோம். சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த கோவில் அர்ச்சகர் பரமேஸ்வர குருக்கள் கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்தவரை இந்த இடத்தில் இப்படியொரு அதிசய தீர்த்த கிணற்றை நான் பார்த்ததில்லை. இப்போது இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு விசயங்கள் நடக்கின்றன. இதை சந்திரபுஷ்கரணை தீர்த்தம் என்று அழைக்கிறோம். தற்போது திருப்பணி வேலைகள் நடப்பதால் இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது என்றார்.

    முசிறி நகரம் 10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னன் முசுகுந்தனால் ஆளப்பட்டது. இந்த நகரின் ஆரம்பகால பெயர் "முசுகுந்தபுரி". இதுவே மருவி பின்னர் முசிறி என்று ஆனது. முசுகுந்த மன்னனே சித்தராகி கோவில் தீர்த்த கிணற்றில் ஐக்கியம் ஆகி தவத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.

    இதனிடையே புதிதாக துலங்கி உள்ள அதிசய தீர்த்த கிணற்றை பக்தர்கள் பக்தியுடன் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர். முசிறி மட்டுமின்றி அக்கம் பக்கத்து கிராமத்தினர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.

    ×