search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamarajar statue"

    • ஆலங்குளம் வந்த சபாநாயகர் அப்பாவுவிற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பின்னர் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு குற்றாலம் செல்லும் வழியில் ஆலங்குளம் வந்தார். அவர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

    ஆலங்குளத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு இடம் தேர்வு செய்வது குறித்து பிரச்சினை எழுந்த போது, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த இடத்தில் சிலை அமைக்க உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி மக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்கி வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு 3 நாட்கள் தங்க வனத்துறையினர் அனுமதி அளித்திருந்த நிலையில் நம் பகுதி மக்கள் 5 நாட்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த அரசு அனைத்து சமய வழிபாடுகளுக்கும் துணை நிற்கும் அரசு. எந்த ஜாதி. மத இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டு வழிபாட்டுத் தலங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்

    அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெய பாலன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, ஒன்றியக் குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன். சமுத்திர பாண்டியன் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் எழில்வா ணன், நகர தி.மு.க. செயலாளர் நெல்சன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், மாரி வண்ணமுத்து, மகேஷ் மாயவன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் தங்க செல்வம் மற்றும் கவுன்சிலர் பொன் செல்வம், காங்கிரஸ் மாநில செயலர் ஆலடி சங்கரய்யா, ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஞானபிரகாஷ், நகரச் செயலாளர் வில்லியம் தாமஸ், பொறியாளர் அணி அமைப்பாளர் மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி சாமுவேல் ராஜா, முன்னாள் கவுன்சிலர் மோகன்லால், அருணாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • புதிய வெண்கல சிலை அமைப்பதற்கு முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக சிவபத்மநாதன் அறிவித்தார்.
    • சுமார் 3,300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் காமராஜர் பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது. தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா ஏற்பாட்டின் பேரில் கோவில் திருவிழா போன்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பேசிய மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நான்கு வழிச்சாலையால் தற்போதுள்ள காமராஜர் சிலை பாதிப்புக்குள்ளாகும் நிலையில் புதிய வெண்கல சிலை அமைப்பதற்கு முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் திரளானோர் பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர். பின்னர் காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் பேரூராட்சித் துணைத் தலைவர் ஜான்ரவி தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மேலும் ச.ம.க. சார்பில் நகர செயலாளர் ஜெயபாலன் தலைமையிலும், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் முருகையா பாண்டியன் தலைமையிலும், தே.மு.தி.க. சார்பில் மாவட்டசெயலாளர் பழனிசங்கர் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் நகர செயலாளர் சொக்கலிங்கம் தலைமையிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆலங்குளம் ஊர் மக்கள் சார்பாக கல்லூரி மற்றும் பள்ளி-மாணவ மாணவிகள், ஆதவரற்ற குழந்தைகள் இல்லம் உள்ளிட் இடங்களில் சுமார் 3,300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

    சேலத்தில் காமராஜர் சிலை அருகே பா.ஜனதா கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்ததால், காங்கிரஸ்-பா.ஜனதா கட்சி தொண்டர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் டவுன் 2-வது அக்ரஹாரம் தெருவில் பெருந்தலைவர் காமராஜர் சிலை உள்ளது. நேற்று காமராஜரின் பிறந்தநாள் என்பதால் அவரது சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக காமராஜர் சிலை அருகே பா.ஜனதா கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மேலும் கட்சி தொண்டர்களும் மத்திய மந்திரியை வரவேற்க காத்திருந்தனர்.

    இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் கட்சி தொண்டர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அங்கு வந்தனர். அப்போது, சிலை அருகே பா.ஜனதா கொடிகள் கட்டப்பட்டிருந்ததை கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே எந்த கட்சி கொடியும் இல்லாத சமயத்தில் பா.ஜனதா கொடி மட்டும் எப்படி கட்டலாம்? என்றும், அதை உடனடியாக அவிழ்க்கவில்லை என்றால் நாங்களே அவிழ்த்து விடுவோம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். அதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்து கொண்டிருப்பதாகவும், அவர் வந்துவிட்டு சென்றபிறகு கொடியை அப்புறப்படுத்திவிடுவதாக பா.ஜனதாவினர் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், சிலை அருகே கட்டப்பட்டிருந்த பா.ஜனதா கட்சி கொடியை அவிழ்க்க முயன்றனர்.

    இதை பார்த்த பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர், காங்கிரஸ்-பா.ஜனதா தொண்டர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கொடி கம்புகளால் அடித்து மோதிக்கொண்டனர். மேலும், கூட்டத்துக்குள் சிலர் கற்களையும் வீசி தாக்கினர்.

    அந்த சமயத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென பெரிய கல்லை எடுத்து காமராஜர் சிலை மீது வீசினார். ஆனால் அந்த கல் சிலை மீது படாமல் சிலையின் பீடத்தில் விழுந்தது. இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் இரு கட்சி தொண்டர்களையும் தடுத்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து பயங்கர மோதலில் ஈடுபட்டனர்.

    அப்போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காரில் அங்கு வந்தார். பின்னர், அவரது முன்னிலையிலும் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சி தொண்டர்கள் ஒருவரை ஒருவர் அடித்து மோதிக்கொண்டனர். பிறகு பா.ஜனதா தொண்டர்கள் அமைதியாக இருக்குமாறும், கட்சி கொடியை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சிலை அருகே கட்டப்பட்டிருந்த பா.ஜனதா கொடிகள் அவிழ்த்து வேறு இடத்தில் கட்டப்பட்டன. இருப்பினும், மத்திய மந்திரியுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் களை போலீசார் சமாதானம் செய்தனர்.

    இந்த மோதல் சம்பவத்தில் பா.ஜனதா சூரமங்கலம் மண்டல தலைவர் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மேலும், காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காமராஜர் சிலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து மோதலில் படுகாயம் அடைந்த பா.ஜனதா நிர்வாகி ரமேஷ், அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பா.ஜனதா-காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் சம்பவத்தால் காமராஜர் சிலை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
    ×