என் மலர்
திண்டுக்கல்
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
- புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது உறை பனி சீசன் நிலவி வருகிறது. கொடைக்கானலில் மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 5 டிகிரி செல்சியஸ் மட்டுமே காணப்படுகிறது. மேலும் நகர் முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.
ஓங்கி உயர்ந்த மலை உச்சி கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. நேற்று மாலை முதல் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிந்துள்ளனர்.
இதனால் நகர் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஏரியில் பனிமூட்டத்துக்கு நடுவே படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேக்கேஜ் டூரில் கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இங்கு சாரல் மழை, பனி மூட்டம், உறை பனி என காஷ்மீர் போன்ற சீதோஷ்ணம் காணப்படுவதால் அதனை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.
மேலும் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
பழனி:
பழனி மதனபுரம் பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம் (வயது 45). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் திருஆவிணன்குடி கோவில் சாலையில் டீக்கடை மற்றும் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவருக்கும் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையை சேர்ந்த மாரிமுத்து (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவரம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர். இதனால் மாரிமுத்துவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இருந்த போதும் அவருடன் பேச மாரிமுத்து முயன்றுள்ளார். ஆனால் பிடிவாதமாக பஷிராபேகம் தவிர்த்து வந்ததால் இன்று காலை அரிவாளுடன் மாரிமுத்து அவரது கடைக்குச் சென்றார்.
அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். அவர் உயிருக்கு பயந்து ஓடியபோதும் துரத்தி வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தானும் வெட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனால் மாரிமுத்துவுக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த மாரிமுத்துவையும் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சாலை பழனி கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக சென்று வந்த போது நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்களும் அலறியடித்து ஓடத்தொடங்கினர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களை சேர்த்து தீவிர களப்பணியாற்ற வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், அமைப்புச் செயலாளர் மருதராஜ், பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியபுல்லான், மாணிக்கம், தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-
கடந்த 3½ ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான எந்தவித நலத்திட்டங்களையும் செயல்படுத்தாத நிர்வாக திறனற்ற அரசாக தி.மு.க. உள்ளது. இதனால் மக்கள் தெளிவாக முடிவெடுத்து விட்டனர்.
அரசு ஊழியர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். எனவே வருகிற 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவது உறுதி.
எனவே கட்சியில் அதிகப்படியான இளைஞர்களை சேர்த்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம் என்பதை உணர்த்த வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது,
தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மக்கள் விரும்பும் தலைவர்களாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விளங்கினர். அவர்களது வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை கொடுத்தார். எனவே மீண்டும் அவரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த கட்சியினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது,
கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதுபோன்று ஏற்பட்டு விடாமல் தீவிர களப்பணியாற்ற வேண்டும் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும். இதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் உழைத்தால் 100 சதவீத வெற்றி உறுதி. அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாக சீர்கேடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றை கண்டித்து விரைவில் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, இளைஞரணி செயலாளர் ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஜெயபாலன், ஜெயராமன், திவான்பாட்சா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ரவிக்குமார், பிரபு, லெனின், திண்டுக்கல் கிழக்குப்பகுதி பேரவை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விடுதிகள், தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
- மலை கிராமங்களில் படர்ந்துள்ள உறைபனியால் பூண்டு, காய்கறிகள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நிலவும் உறைபனி சீசன் காலத்தில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் தொடர்மழை பெய்து வந்த நிலையில் தற்போது உறைபனி சீசன் தொடங்கி உள்ளது.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு கொடைக்கானலில் பருவமழை அதிக அளவு பெய்துள்ளது. இதன் காரணமாகவே உறைபனியின் தாக்கமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கீழ்பூமி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி அதிக அளவில் காணப்படுகிறது.
இதனால் கொடைக்கானல் ஏரிப்பகுதி, ஜிம்கானா, கீழ்பூமி, பிரையண்ட் பூங்கா ஆகிய பகுதிகளில் வெள்ளைக்கம்பளம் விரித்தது போல காணப்படுகிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் விதமாகவும், கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் கொடைக்கானலில் நிலவும் இந்த குளுகுளு சீதோசனத்தை உற்சாகமாக ரசித்து வருகின்றனர். உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கை கடும் குளிர் காரணமாக பாதிக்கப்பட்ட போதிலும், சுற்றுலா பயணிகள் கம்பளி மற்றும் ஜெர்க்கின், சுவட்டர், மப்ளர், கையுறைகள் அணிந்து சுற்றுலா இடங்களை ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக நட்சத்திர ஏரியில் அடர்ந்த பனிமூட்டத்திற்கு நடுவே செயற்கை நீரூற்றை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். கடந்த வாரம் வரை சாரல் மழை பெய்து வந்த நிலையில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். தற்போது படகு சவாரி மட்டுமின்றி, ஏரியைச் சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டியும் பொழுதை கழித்து வருகின்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பார்க், குணாகுகை, மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று இரவு கொண்டாடப்பட உள்ள நிலையில் தேவாலயங்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள், தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது.
மலை கிராமங்களில் படர்ந்துள்ள உறைபனியால் பூண்டு, காய்கறிகள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
- பூக்களின் அருகே நின்று சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள், வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள், நட்சத்திர மின் விளக்குகள் அலங்கரித்து வைத்துள்ளனர்.
மேலும் சாண்டா கிளாஸ் வேடம் அணிந்த கிறிஸ்தவர்கள் இரவு நேரங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று பரிசு பொருட்களை வழங்கி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் சிலுவை வடிவிலான பூக்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் மட்டுமே இந்த வகை பூக்கள் பூக்கும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட உள்ள நிலையில் சிலுவை பூக்கள் கொடைக்கானலில் பூத்து குலுங்குவது அதனை வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த பூக்களின் அருகே நின்று சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
- மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது.
- நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையும், புதுடில்லி பாரதீய மொழிகள் குழுமமும் இணைந்து அகத்திய மாமுனிவர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய மாநாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.
நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை தாங்கி பேசுகையில், மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது. அகத்திய மாமுனிவர் மறைந்துவிடவில்லை இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். நமது அன்னை பூமியான பாரதநாடு உள்ளவரை அகத்திய மாமுனிவரும் வாழ்ந்து கொண்டிருப்பார் என பேசினார். நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலா மாநாட்டைத் தொடங்கி வைத்துக் கருத்தரங்கு மலரை வெளியிட்டுப் பேசினார். கர்நாடக மாநிலம் மைசூரின் மூத்த வக்கீலும் அகத்திய மரபின் ஆய்வாளருமாகிய ஷாமா பட் மாநாட்டின் மைய உரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது. அவர் பாரத தேசம் முழுமைக்கும் உரியவராகத் திகழ்கின்றார். அகத்தியரின் படைப்புகள், பங்களிப்புகள், மருத்துவ மரபுகள் இந்திய மொழிகளின் தோற்றத்திற்கும் தொன்மைக்கும் சிறப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குகின்றன. வடமொழிக்கும் தமிழுக்குமான இணைப்புப் பாலமாக அகத்தியர் திகழ்ந்து வருகின்றார். இந்த இரு மொழிகளும் உலகின் பழமையான மற்றும் சிறப்பான மொழிக்குடும்பங்களாக, செம்மொழிகளாகத் திகழ்கின்றன.
பாரத தேசத்திற்கு அகத்தியர் மாமுனிவர்தான் முதுகெழும்பாகத் திகழ்கின்றார். இந்திய மூலிகை மருத்துவ அறிவின் தோற்றமாகவும் அவரது மருத்துவ மூலிகைகளின் நூல்கள் விளங்குகின்றன.
மருத்துவத்துறையில் அவரின் பங்களிப்புகள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. அகத்தியர் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அவரைப் பற்றிய முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். துளு என்னுடைய தாய்மொழி. தமிழில் நீங்கள் கூறும் மருந்து என்னும் சொல் துளு மொழியிலும் மருந்து என்றே வழங்கப்படுகின்றது என்றார்.
மாநாட்டில் பேராசிரியர் அரங்க. ராமலிங்கம், பழனி ஐவர்மலை அனாதி நிறுவனத்தின் நிறுவனர் ஆதி நாராயண சுவாமிகள், தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்தகுமார், பேராசிரியர்கள் முத்தையா, சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாரம்பரிய மருத்துவர்கள் அகத்தியர் மருத்துவ குறிப்பு சம்பந்தமான கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மாநாட்டில் பல்கலைக்கழக வேளாண்மை துறை சார்பில் சித்த மருத்துவ மூலிகைகள், காணிக்காரப் பழங்குடிகளின் மருந்துப் பொருட்கள், மருத்துவத் தாவரங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சித்த மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு அகத்தியர் பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
- அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 18-ந் தேதி காலை மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்காக வந்தனர். வீட்டின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிய அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறவும், உள்ளே நுழையும் வெளி நபர்களையும் சோதனையிட்டனர்.
இந்த வீட்டின் அருகில் இருந்த அலுவலகம், விருந்தினர் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கனியாவதி ஆகிய குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தனர்.
கடந்த 4 நாட்களாக நடந்த சோதனை இன்று அதிகாலை நிறைவு பெற்றது. சோதனையின் போது செந்தில் குமாரின் பங்களா அருகில் ஒரு பாழடைந்த வீடு இருந்தது குறித்து அதிகாரிகள் கேட்டனர். அதில் பழைய பொருட்கள் இருப்பதாக அவர் கூறினார். அந்த அறையின் சாவியை கேட்டபோது, அது தொலைந்து போய் விட்டதாக தெரிவித்தார். இதனால் கடப்பாறையை எடுத்து வரச்சொல்லி அந்த அறையை உடைத்து பார்த்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் சொத்து தொடர்பாக முக்கிய ஆவணங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் கணக்கில் வராத நகைகள் மற்றும் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வரவே அதனையும் கைப்பற்றினர்.
செந்தில்குமாரின் உறவினர்களான குழந்தைவேல் மற்றும் இவரது தம்பி முருகன் ஆகியோர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் இவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கும் இயங்கி வருகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையால் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். குழந்தைவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டை ரோட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய வீட்டு மனை ஒன்றை உருவாக்கினார். இதற்காக 1000 கிடாய்களை வெட்டி மாபெரும் விருந்து வழங்கப்பட்டது. அப்போது இருந்தே இவருக்கு போட்டியாக தொழில் நடத்தி வருபவர்கள் இவர் மீது அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
இது தவிர பைனான்ஸ் அதிபர் செந்தில்குமார் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு நெருக்கமானவர். இதனால் அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டியில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்துள்ளதால் அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.
- கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
- பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கைகள் கோவில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் எண்ணப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோவில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தநிலையில் பயன்படுத்த இயலாத தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும், வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு வரப்பெற்ற ரூ.136 கோடி மதிப்பிலான 192.984 கிலோ கிராம் தங்க நகைகளை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஓய்வு பெற்ற நீதியரசர் மாலா ஆகியோர் பங்கேற்று வங்கி அதிகாரிகளிடம் நகைகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதற்கட்டமாக 23 கோவில்களில் இருந்து காணிக்கை தங்கங்களை உருக்கி 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சம் வட்டி கிடைக்கிறது. 2ம் கட்டமாக பழனி கோவிலில் 192.984 கிராம் தங்கமும், மாசாணியம்மன் கோவிலில் 28 கிலோ தங்கம், திருச்சி குணசீலன் கோவிலில் 12 கிலோ தங்கம் என 13 கோவில்களில் தங்க முதலீடு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு, ரூ.700 கோடி அளவிற்கு வைப்பு நிதியாக வைக்கப்படும். அதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.12 கோடி வட்டி வருமானம் பெறப்படும். 2007ம் ஆண்டு பழனி கோவிலில் 191 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.1 கோடியே 38 லட்சம் வருமானம் பெறப்படுகிறது.
அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும். கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் படி யானை வாங்க இயலாது. புதிய யானையை வாங்கி பராமரிப்பு செலவையும் ஏற்கும் வகையில் புதிய யானையை பக்தர்கள் வாங்கிக் கொடுத்தால் அவை பெற்றுக்கொள்ளப்படும். பழனி கோவிலில் 2-வது ரோப்கார் மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளதை போல நவீன முறையில் அமைக்கப்படும். பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி மலைக்கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், வங்கி அதிகாரிகள், கோவில் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை தொகை வங்கியில் இருப்பு வைக்கப்படுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக பணம், நகைகள், பட்டு வஸ்திரம், வெள்ளி, வெளிநாட்டு கடிகாரம், நவதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
தமிழகத்திலேயே அதிக வருவாய் கிடைக்கும் கோவிலாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை தொகை வங்கியில் இருப்பு வைக்கப்படுகிறது.
இதுதவிர கோவிலில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்களில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்து வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2010ம் ஆண்டு பழனி கோவில் நகைகள் தங்க பத்திரமாக மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று பழனி கோவில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 192.984 கிலோ பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி, முன்னாள் நீதிபதி மாலா, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 19). இவரும் பாடியூர் கிராமத்துக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (22) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் முத்துலட்சுமி செல்போனில் அடிக்கடி பேசுவதை அவரது பெற்றோர் நோட்டமிட்ட போது அவர் காதலில் விழுந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவீட்டில் இருந்தும் பெற்றோர் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் பெற்றோர்கள் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என நினைத்து தாங்களாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வீட்டிற்கு சென்றால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என அவர்களது பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு மணமகன் வீட்டாருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.
மகளிடம் அவரது தாய் மன்றாடி தன்னுடன் வருமாறு கேட்டும், வராமல் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்ததால் கதறி அழுது புலம்பியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.
- வருமானவரி துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவற்காக வந்தனர்.
- ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவற்காக வந்தனர். வீட்டின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிய அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறவும், உள்ளே நுழையும் வெளி நபர்களையும் சோதனையிட்டனர்.
இந்த வீட்டின் அருகில் இருந்த அலுவலகம், விருந்தினர் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கனியாவதி ஆகிய குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தனர். பள்ளிக்கு சென்ற செந்தில்குமாரின் மகள் வீட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டார். நேற்று இரவு வரை நடந்த இந்த சோதனை இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
இதனால் அவரது வீடு மற்றும் அலுவலகம் முன்பு உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.
செந்தில்குமாரின் உறவினர்களான குழந்தைவேல் மற்றும் இவரது தம்பி முருகன் ஆகியோர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் இவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கும் இயங்கி வருகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். பைனான்ஸ் அதிபர் செந்தில்குமார் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு உறவினர் என்று கூறப்படும் நிலையில் அவரது வீட்டில் நடந்த இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி:
தமிழகத்தில் அறுபடை வீடுகளாக போற்றப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களுக்கு கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்கும் திட்டத்தை அறநிலையத்துறை தொடங்கியது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயணத்தில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அறுபடை வீடுகளை தரிசனம் செய்தனர்.
2ம் கட்டமாக இந்த ஆண்டும் ஆன்மிக பயணம் செல்லும் திட்டம் இன்று பழனியில் தொடங்கியது.
அவர்கள் இன்று காலை பழனியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணத்துக்கு புறப்பட்டு சென்றனர். இதில் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பஸ்களில் நேற்று பழனிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்றிரவு பழனி மலைக்கோவிலுக்கு சென்ற மூத்த குடிமக்கள் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், இன்று காலை அவர்கள் பழனியில் இருந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை பழனி சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






