என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழனியில் 2ம் கட்டமாக அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் இன்று தொடக்கம்
- கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி:
தமிழகத்தில் அறுபடை வீடுகளாக போற்றப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களுக்கு கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 200 பேரை ஆண்டுக்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைக்கும் திட்டத்தை அறநிலையத்துறை தொடங்கியது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயணத்தில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அறுபடை வீடுகளை தரிசனம் செய்தனர்.
2ம் கட்டமாக இந்த ஆண்டும் ஆன்மிக பயணம் செல்லும் திட்டம் இன்று பழனியில் தொடங்கியது.
அவர்கள் இன்று காலை பழனியில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணத்துக்கு புறப்பட்டு சென்றனர். இதில் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளைச் சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பஸ்களில் நேற்று பழனிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை பழனி கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். நேற்றிரவு பழனி மலைக்கோவிலுக்கு சென்ற மூத்த குடிமக்கள் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், இன்று காலை அவர்கள் பழனியில் இருந்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களை பழனி சார் ஆட்சியர் கிஷன் குமார், கோவில் துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் உணவு, போர்வை, துண்டு, சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






