என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    மதுரை மீனாட்சிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த அழகர் மகன் கேசவன் (17), வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கலராஜா (27) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூர் அருகே அவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழைய கன்னிவாடி கரிசல்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (21) என்பவர் தனது அத்தை மகளான துர்கா என்பவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை காரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அடைக்கலராஜா மற்றும் கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வரவே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான கேசவனின் தந்தை அழகரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.
    • காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இங்குள்ள வட்டகானல் பகுதியில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இஸ்ரேலிய நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருவார்கள்.

    இங்கு நிலவும் இதமான கால நிலையை ரசிக்கவும், ஓய்வெடுக்கவும் வருகை புரியும் இவர்கள் மொத்தமாக கூடி சபாத் என்னும் சிறப்பு வழிபாடு வார வெள்ளிக்கிழமைகளில் நடத்துவார்கள்.

    இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இங்கு வார வழிபாட்டில் கூடும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளை தாக்க திட்டமிட்டிருந்ததும், மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் இருந்தாலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணிநேரமும் கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களாக இஸ்ரேலில் போர் நடைபெற்றதால் அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. தற்போது கொடைக்கானல் வட்ட கானல் பகுதிக்கு இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    ஆனால் வழக்கமாக இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை சோதனைச் சாவடி செயல்படாமல் உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

    இஸ்ரேல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு போலீசார் சோதனைச் சாவடி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர்.
    • தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.

    இதனால் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி பழனி கோவில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டது.

    இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், சத்திரம் காப்பாளர், சுகாதார மேஸ்திரி தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவி மின் பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    நேரடியாகவும், தபால் மூலமாகவும் கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி ஜனவரி 8-ந் தேதி என அறிவிக்கப்பட்டது.

    இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். நேற்று மாலை வரை சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் இந்த பணியிடங்களுக்காக வரப்பட்டதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கோவிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் அரசு வேலை கனவில் இருக்கும் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் அளித்தனர்.

    விண்ணப்ப மனுக்கள் மூட்டை மூட்டையாக தேவஸ்தான அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பரிசீலனை செய்யப்பட்டு எந்த தேதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட உள்ளது. வெளிப்படையான முறையில் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

    திண்டுக்கல்:

    மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை, குருவாயூர்-சென்னை, கோவை-நாகர்கோவில், நாகர்கோவில்-கோவை, நாகர்கோவில்-மும்பை தாதர், நாகர்கோவில்-திருப்பதி ஆகிய ரெயில்கள் மதுரைக்கு வராமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

    இதேபோல் நாளை கன்னியாகுமரி-ஹவுரா, கன்னியாகுமரி-கச்சக்குடா, சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் ஆகியவையும் நாளை மறுநாள் திருச்செந்தூர்-மணியாட்சி மற்றும் நாகர்கோவில்-எக்மோர் ரெயில்களும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.
    • சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த மாதம் முதல் கடுமையான பனி நிலவி வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் 7 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை சென்றதால் பல்வேறு இடங்களில் உறைபனி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு 62-வது மலர் கண்காட்சிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதற்கட்ட மலர் செடிகள் நடவு நடைபெற்றது.

    தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சால்வியா, பிங்க் ஆஸ்டர், ஒயிட் ஆஸ்டர், டெல்பினியம், லில்லியம் உள்ளிட்ட 10 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

    கடந்த சில நாட்களாக மனிதர்களை மட்டுமின்றி மலர் செடிகளையும் பனி கடுமையாக பாதித்து வருகிறது. மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 10 மணிவரை நீடிக்கிறது.

    இதனால் மலர் நாற்றுகள் கருகுவதை தவிர்க்க பூங்கா நிர்வாகம் சார்பில் செடிகளுக்கு நிழல்வலை அமைப்பு கொண்ட பனிப்போர்வை போர்த்தப்பட்டுள்ளது. பனிக்காலம் முடியும் வரை இந்த போர்வை இருக்கும் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடுமையான பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் கொடைக்கானலில் வார நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.

    • தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.
    • கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது.

    கூடலூர்:

    கூடலூர் அருகே ஒரு வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி. செங்குட்டு வேலவன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஒரு வீட்டில் இருந்து அதிக நபர்கள் வந்த வண்ணம் இருந்ததால் 2வது வார்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது 55) என்பவரது வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர்.

    அப்போது ராஜா தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜாவை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக குடத்தில் வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூடலூர் அருகில் உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    தற்போது மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தேனி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மதுபான விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுகிறது. இதனிடையே சாராயம் விற்பனையும் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடிவாரம், பஸ்நிலையம், கிரிவீதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் கூடினர்.
    • மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இங்கு குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி கோவிலுக்கும் வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அடிவாரம், பஸ்நிலையம், கிரிவீதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் கூடினர்.

    மேலும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்கள் வருகையால் அடிவார பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்போது பாதயாத்திரையாக பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். அவர்கள் கிரி வீதியில் உற்சாகமாக ஆடிப்பாடி காவடி எடுத்து மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இனி வரும் காலங்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலைகளில் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    • ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜஸ்வந்த்குமார் (வயது28). இவர் சகோதரி ஜெஸி (27), இவரது கணவர் திலிப் (29), இவர்களது உறவினர் மாலன் (22) ஆகிய 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

    மூஞ்சிக்கல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் உணவு வாங்கி சாப்பிட்டனர். அந்த உணவு பொருட்களில் துர்நாற்றம் வீசியதால் வேறு உணவு மாற்றி கொடுக்கும்படி ஜஸ்வந்த்குமார் தெரிவித்தார். ஆனால் கடை ஊழியர்கள் அதனை மாற்றித்தர மறுத்ததுடன் அவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து உணவு பொருட்களை ஜஸ்வந்த்குமார் தனது செல்போனில் வீடியோவாக படம் எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கினர்.

    படம் எடுத்த செல்போன்களை வாங்கி உடைத்ததுடன் சுற்றுலா பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் காரில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயன்றபோது வழிவிடாமல் காரையும் அடித்து நொறுக்கினர். ஒரு வழியாக அவர்கள் 4 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

    பின்னர் தங்களுக்கு நேர்ந்த விஷயம் குறித்து அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவியது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கே இந்த நிலை என்றால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை எவ்வாறு மதிப்பார்கள்? எனவே போலீசார் இப்பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்ல முயன்றபோது அங்கும் தங்களை தாக்க ஓட்டல் ஊழியர்கள் வந்ததால் நாங்கள் மதுரைக்கு செல்வதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் ஓட்டலில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊழியர்களே சுற்றுலா பயணிகளை தாக்கியது உறுதியானது. மேலும் பெண் என்றும் பாராமல் சுற்றுலா பயணிகளை கடுமையாக தாக்கியது தெரியவந்ததால் ஓட்டல் ஊழியர்களான முகமதுஅலி (32), தர்வீஸ் முகைதீன் (35), அர்சத் (27), அரவிந்த் (27), சர்தார் (34), ஆஷிப்ரகுமான் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    புகாருக்கு உள்ளான ஓட்டல் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. கேரள சுற்றுலா பயணிகளை இதேபோல் ஒரு அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக புகார் உள்ளது. மேலும் தரமற்ற உணவுகள் வழங்கி வருவதால் மற்ற ஓட்டல் நிறுவனங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுவதால் இதன்மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும்.
    • கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானில் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் பனிக் காலம் நிலவும். இந்த சீசனில் கொடைக்கானலுக்கு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

    டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் நிலவுவதால் காஷ்மீரில் இருப்பது போன்று பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும். இது போன்ற சீதோஷ்ணத்தை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.

    இதன்படி கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் பனியையும் பொருட்படுத்தாது அனைத்து சுற்றுலா தலங்களிலும் தங்கள் பொழுதை உற்சாகமாக கழித்து வந்தனர்.

    நேற்று இரவு முதல் கொடைக்கானலில் மீண்டும் உறை பனி தொடங்கியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் உறை பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காணப்பட்டது. செடிகள் மீதும் உறை பனி படர்ந்து இருந்ததால் பச்சை நிறம் தெரியாத அளவுக்கு காணப்பட்டது. உறை பனியால் சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளான நிலையில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்து வந்தனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகாலை நேரத்தில் வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கி கிடந்தனர். இன்று காலை நிலவரப்படி கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது. வரும் நாட்களில் இது மேலும் 0 டிகிரியாக குறையலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு குறைந்துள்ள நிலையில் பகல் பொழுதில் வெளியே வர முடியாமல் மதிய நேரத்துக்கு பிறகே வெளியே வருகின்றனர்.

    மேலும் கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவி எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடும் உறை பனி, பனி மூட்டத்தால் பள்ளிக்கு செல்லும மாணவ-மாணவிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    • மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
    • அடிவாரம் பகுதியில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திண்டுக்கல்:

    புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகத்திலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் படிப்பாதையில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி திண்டுக்கல் சாலை, உடுமலை சாலையில் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் பழனி கோவிலுக்கு வருகை தந்தனர்.

    இதனால் பழனி படிப்பாதை வழியாக மலையேறும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். மலைக்கோவிலில் இருந்து இறங்கும் பக்தர்கள் படிப்பாதையில் ராணி மங்கம்மாள் மண்டபம் அருகே உள்ள வழியில் இறங்குமாறு அறிவிப்பு செய்யப்பட்டது.

    பழனி மலைக்கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு அதனை பக்தர்கள் பாதுகாப்பு அறையில் வைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி மலைக்கோவிலில் செல்போன் பயன்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

    புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது.

    மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அடிவாரம் பகுதியில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அதிகாலை முதல் கடும் பனியையும் பொருட்படுத்தாது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பெருமாளுக்கு திருமஞ்சனமும், சொர்ணா அபிஷேகமும் நடைபெறும். அதன்படி இன்று காலை 5.30 மணிக்கு பெருமாளுக்கு நாணயங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காகவே அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அதனை பெற்றுச் சென்றனர். 

    • அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர்.
    • போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமைக்கு நியாயம் கேட்டும், திண்டுக்கல் மாநகராட்சி கூடத்துக்கு வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். பெயரை நீக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும், நகரில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசு மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.

    அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் மருதராஜ், பாசறை மாநில செயலாளர் பரமசிவம், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரேம்குமார், பழனிசாமி, பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, இளைஞரணி செயலாளர் ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஜெயபாலன், ஜெயராமன், திவான்பாட்ஷா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ரவிக்குமார், பிரபு, லெனின் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
    • குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் ஆனந்தத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கடந்த 1 வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது கொடைக்கானலில் விட்டு விட்டு சாரல் மழை மற்றும் உறை பனி நிலவி வருகிறது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.

    மலையடிவாரப் பகுதியான காமக்காபட்டியில் இ-பாஸ் சோதனை பின்பற்றப்படும் நிலையில் வெள்ளி நீர்வீழ்ச்சியில் இருந்து அப்சர்வேட்டரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், செவன்ரோடு, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் 2 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான போலீசார் இல்லாத நிலையில் மாற்று நடவடிக்கைகளை கையாண்டும் முடியாத நிலை ஏற்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் மலை கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் தங்களது டிரிப்பை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    பயணிகள் அதிகரிக்கும் சமயங்களில் கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    தற்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு வரை இங்கேயே தங்கி புத்தாண்டை கொண்டாட விடுதிகளில் புக்கிங் செய்துள்ளனர். இதனால் அனைத்து விடுதிகளும் நிரம்பியுள்ளன. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, குணா குகை, மோயர் பாயிண்ட் பில்லர் ராக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களை அவர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். ஏரியில் நீரூற்றின் அருகே பன்னீர் தெளிப்பது போன்ற உணர்வை அனுபவித்து படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

    குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் ஆனந்தத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். காலையில் கடும் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் நேரம் செல்ல செல்ல சற்று இதமான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அதனை உற்சாகமாக ரசித்து வருகின்றனர்.

    ×