என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை.
    • கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    கோவை:

    தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த சம்பவம் மன வருத்தம் அளிக்கிறது. அங்கு ரத்தம் சிந்தி இருக்கிறது. வைகுண்ட ஏகாதசி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

    ரத்தம் சிந்தும் அளவிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து இருப்பது, பாதுகாப்பு சீர்கேடுகளை காட்டுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். வேறு மாநிலத்தவர்கள் நம் கோவிலுக்கு வரும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டியது நம் கடமை.

    பெரியாரை, தேசிய விரோத கருத்துகளை பகிர்வதற்கு கேடயமாக தி.மு.க.வினர் பயன்படுத்துகின்றனர். பெரியாரின் கருத்துகள் மதிக்கக்கூடியவை. பெரியாரின் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்வோம் என முதலமைச்சர் தெரிவிக்கின்றார். பெண்களுக்கு உரிமை கொடுக்கும் ஆட்சிதான் மத்தியில் இப்போது நடக்கின்றது. தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தாரை வார்த்ததை மத்திய அரசு மீட்டு எடுத்து கொண்டு வருகின்றது. காஷ்மீர், கவர்னர், கட்சத்தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த பொழுது செய்யாத விஷயங்களை இப்போது தி.மு.க. பேசிக்கொண்டு இருக்கிறது.

    கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். கேரள கவர்னர் மீது தாக்குதல் முயற்சி வன்மையாக கண்டிக்கதக்கது.


    மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு உதயநிதி வார்த்தைகளை அடக்கி பேச வேண்டும். அடக்கவில்லை என்றால் அவர் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியிலும், மற்ற இடங்களிலும் வருவார்.

    கலைஞரின் பேரனா நீங்க? அவர் இப்படியா பேசினார்? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழில் திட்டுவார். தி.மு.க. யாரோட அப்பன் வீட்டு சொத்து. தி.மு.க. தொண்டர்கள் முதலில் இதை உதயநிதியிடம் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு அவரே வழி செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
    • தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    கோவை:

    கோவை நகரில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், முத்தணன் குளம், உக்கடம் பெரிய குளம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    செயற்கை நீரூற்றுகள், பிரமாண்ட டவர்கள், பொம்மை சிற்பங்கள், குளத்துக்குள் நடைபாதை, படகு சவாரி என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது உள்ளூர்க்காரர்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    சமீபத்தில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களை தேர்வு செய்து விருது வழங்கியது. அதில் பில்ட் என் விரான்மென்ட் என்ற தலைப்பில் கோவைக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கோவையில் வருகிற 16-ந் தேதி தேசிய அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

    அதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 150 நகரைச் சேர்ந்த மேயர்கள் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மற்ற மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் கமிஷனர்களுக்கும் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    அன்றைய தினம் கருத்தரங்கு முடிந்ததும் உக்கடம் பெரியகுளத்தில் அமைந்துள்ள அனுபவ மையம் மற்றும் ஐ லவ் கோவை செல்பி பாயிண்ட், வாலாங்குளத்தில் மேம்பாலத்துக்கு கீழ் அமைந்துள்ள கட்டமைப்பு மற்றும் ரேஸ்கோர்ஸ் மாதிரி சாலையை அக்குழுவினர் சுற்றி பார்க்கிறார்கள்.

    இதையொட்டி ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்வதற்கு உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர் கொண்ட குழு நியமித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    • கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
    • கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை:

    மதுரையை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். திருமணம் ஆனவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் கோவைக்கு வேலைக்கு வந்தபோது சிங்காநல்லூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கதிர்வேல் (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவரவே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண் கணவரை பிரிந்து கதிர்வேலுடன் வந்து குடும்பம் நடத்தினார். சிங்காநல்லூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

    அதன்பின்னர் இளம்பெண்ணுக்கு மதுரையை சேர்ந்த கூலித் தொழிலாளி பாக்கியராஜ் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கதிர்வேல் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண், பாக்கியராஜை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த விவகாரம் கதிர்வேலுக்கு தெரியவரவே அவர் இளம்பெண்ணை கண்டித்தார்.

    இதனால் இளம்பெண் கதிர்வேலுவை பிரிந்து பாக்கியராஜூடன் சென்றார். அந்த பெண்ணும், பாக்கியராஜூவும் ஆனையங்காடு வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கதிர்வேலை பார்க்கும்போது உன் காதலி என்னுடன் தான் உள்ளார் என பாக்கியராஜ் ஏளமாக பேசி வந்துள்ளார். இதனால் கதிர்வேலுக்கும், பாக்கிய ராஜூக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று இரவு பாக்கியராஜூவும், அவரது கள்ளக்காதலியும் வீட்டில் அமர்ந்து மதுகுடித்துக் கொண்டு இருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த போது வீட்டிற்குள் கதிர்வேல் அத்துமீறி நுழைந்தார். அவரும் மதுபோதையில் இருந்தார். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு பாக்கியராஜ் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல், பாக்கியராஜை கீழே தள்ளினார். நிலை தடுமாறி கீழே விழுந்த போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் கதிர்வேல் அங்கு இருந்த மின்சார டெஸ்டர் கம்பியை எடுத்து பாக்கியராஜின் கழுத்தில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பாக்கியராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கதிர்வேல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொலை செய்யப்பட்ட பாக்கியராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாக்கியராஜை குத்தி கொலை செய்த கதிர்வேலுவை கைது செய்தனர்.

    • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

    சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

    இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 2021 நவம்பர் 22-ந்தேதி நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறையை வேறிடத்துக்கு மாற்றி விட்டு ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

    சிறையை வேறு இடத்துக்கு மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால் செம்மொழி பூங்கா திட்டத்தை பேஸ்-1, பேஸ்-2 என பிரித்து முதல்கட்டமாக சிறைத்துறை வழங்கிய 41 ஏக்கர் நிலத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.172 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.

    இதைத்தொடர்ந்து காந்திபுரம் மத்திய சிறை அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 18-ந் தேதி கோவையில் நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று செம்மொழி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    பின்னர் எஸ்.என்.ஆர். கல்லூரியில் நடைபெறும் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அன்றைய தினம் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.20 மணிக்கு கோவைக்கு வருகிறார். நிகழ்ச்சிகள் முடிந்து அன்று பிற்பகல் 2.10 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். மேலும் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக கேரளாவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி ஜனனி பிரியா தலைமையில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு போலி மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படும் எரி சாராயம் உள்பட அனைத்து உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வீட்டில் இருந்த கேரளாவை சேர்ந்த அருண் (29), சந்தோஷ்குமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைதான 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண் என்பவர், தனது நண்பரான அனில்குமார் (50) என்பவருடன் சேர்ந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை வந்தார்.

    பின்னர் காரமடை அருகே உள்ள செந்தூர் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். அடிக்கடி இவர்கள் வெளியில் சென்று விடுவதால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் வரவே அவர் அவர்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் கேரளாவில் வியாபாரம் செய்து வருகிறோம். அதனால் வாரத்தில் 2-3 நாட்கள் அங்கு சென்று விடுவோம் என தெரிவித்துள்ளனர். அவரும் அதனை நம்பி விட்டார்.

    இதனை தொடர்ந்து, அவர்கள் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக அவர்கள் கேரளாவில் இருந்து எரிசாராயம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளனர்.

    மதுபானம் தயாரித்த பின்னர் அந்த பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஓட்டி, மதுக்கடைகளில் பெட்டிகளில் அடுக்கி வைப்பது போன்று, பெட்டிகளை வாங்கி அதில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து கேரளாவுக்கு அனுப்பி விற்பனை செய்ததும், இவர்களுக்கு சந்தோஷ் உதவியாக இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், வீட்டில் இருந்த 1600 போலி மதுபான பாட்டில்கள், தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களில் இருந்த 175 லிட்டர் எரிசாராயம், மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த உபகரணங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இதில் தொடர்புடைய அனில்குமார் என்பவரை தேடி வந்தனர். அப்போது, அவர் ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்தது தெரியவந்தது.

    மேலும் விடுதலையான பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான், காரமடை அருகே போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்த தகவல் தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் சென்னையில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • ஐயப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார்.

    கோவை:

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4½ கிலோ நகை கொள்ளை போனது. போலீஸ் விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவர் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக விஜய்யின் மனைவி நர்மதாவை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விஜய் கொள்ளையடித்த நகையை குப்பை மற்றும் சாலையோரம் புதைத்து வைத்த விஜய்யின் மாமியார் யோகராணியும் கைது செய்யப்பட்டார். அவர் புதைத்து வைத்து இருந்த 4 கிலோ 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

    இந்த நிலையில் விஜய் சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக கோவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் சென்னை வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி விஜய்யை கைது செய்தனர்.

    அப்போது அய்யப்ப பக்தர் போல் விஜய் மாலை அணிந்து இருந்தார். ஆனாலும் போலீசார் அவரை அடையாளம் கண்டு மடக்கி பிடித்தனர். இதையடுத்து விஜய்யை கோவைக்கு அழைத்து சென்றனர்.

    • ரெயில், தண்டவாளத்தில் இருந்த இந்த கம்பியில் மோதியது தெரியவந்தது.
    • போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    மதுரையில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரத்துக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் மதுரையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு செல்கிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் மாலை 4.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு பொள்ளாச்சிக்கு வந்தது.

    பின்னர் அங்கிருந்து கேரளா நோக்கி சென்றது.

    இந்த ரெயில் இரவு 8 மணியளவில் ஆனைமலை அருகே உள்ள மீனாட்சி புரம்-முதலமடை இடையே சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று தண்டவாளத்தில் ஒரு அடி உயரம் கொண்ட கம்பி கிடந்தது. அந்த கம்பியில் ரெயில் மோதியது. ரெயில் பெட்டிகளும் குலுங்கின. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர்.

    ரெயிலில் இருந்து ஏதோ ஒரு சத்தம் வருவதை கேட்டதும் ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார்.

    பின்னர் அவர் கீழே இறங்கி பார்த்தார். மேலும் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போத்தனூர் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது ரெயில் நின்ற இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் இரும்பால் ஆன கம்பி ஒன்று கிடந்தது. ரெயில், தண்டவாளத்தில் இருந்த இந்த கம்பியில் மோதியது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் மூலம் ரெயில் சரி செய்யப்பட்டு 1 அரை மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கேரளா நோக்கி சென்றது. ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரி தும் அவதியடைந்தனர்.

    இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தின் மீது இரும்பு கம்பியை வைத்த நபர்கள் யார்? சதிவேலையில் ஈடுபட இதனை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இரவு நேரங்களில் அங்கு யாராவது சுற்றி திரிகிறார்களா? என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

    பொதுவாக தண்டவாளத்தின் ஒரத்தில் தூரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக ஒரு கி.மீ தூரத்துக்கு ஒரு அடி உயரத்துக்கு இரும்பால் ஆன கம்பி வைக்கப்பட்டு இருக்கும்.

    அந்த கம்பியை தான் யாரோ எடுத்து, ரெயில்வே தண்டவாளத்தில் வைத்துள்ளனர். அதன் மீது தான் ரெயில் மோதி உள்ளது. இந்த கம்பியை எடுத்து வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.
    • போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நெகமம் போலீசார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து வரும் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த முரளிகுமார்(51), ஆனைமலை அடுத்த சேத்துமடையை சேர்ந்த சுரேஷ்(29), பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ஜலீல்(46) ஆகியோர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முரளிகுமார், கோவையில் உள்ள மருந்துகடைகளில் வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதாக கூறி வாங்கி உள்ளார்.

    பின்னர் அதனை சுரேஷ் மற்றும் ஜலீல் ஆகியோரிடம் கொடுத்து, நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    முரளி குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில் போதை மருந்து மாத்திரைகள், டையாஜீபம் ஊசி 10, தூக்க மாத்திரை 180, சிரிங்ச் 50, என மொத்தம் ரூ.25000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

    மேலும் இவர்கள் போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.
    • யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.

    வால்பாறையில் இருந்து நேற்று மாலை சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை பென்னட் என்பவர் இயக்கி வந்தார். பயணிகள் 15 பேர் பயணித்தனர்.

    சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதியில் வந்தபோது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை திடீரென பஸ்சை வழிமறித்தது.

    சாலையில் யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான டிரைவர், சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை சில அடி தூரத்தில் நிறுத்தி விட்டார்.

    யானை அங்கிருந்து நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    அப்போது பஸ்சில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் பஸ்சை விட்டு கீழே இறங்கி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டார். அவருடன் பயணிகளும் இணைந்து யானையை விரட்ட முயன்றனர்.

    ஆனால் யானை அங்கிருந்து நகராமல், கோபம் அடைந்து வனத்துறை ஊழியரை நோக்கி ஓடி வந்தது. இதனால் அவர் ஓடி சென்று பஸ்சில் ஏறி கொண்டார்.

    இதையடுத்து பயணிகள் அனைவரும் சேர்ந்து சத்தம் எழுப்பினர். இதனால் யானை அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, கடந்த சில தினங்களாக இங்கு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நாங்கள் அச்சத்தில் உள்ளோம். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
    • காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

    குனியமுத்தூர்:

    கோவை பாலக்காடு ரோடு திருமலையாம் பாளையம் பிரிவு அருகே கியாஸ் நிரப்பப்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கக்கூடிய பார்க்கிங் பகுதி ஒன்று உள்ளது.

    இங்கு எந்த நேரமும் 30-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பின்னர் சற்று நேரம் இளைப்பாரி விட்டு அவரவர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று அதிகாலை லாரிகள் நிற்கும் பார்க்கிங் பகுதியில், பக்கவாட்டில் அமைந்துள்ள சுவர் மலையில் இடிந்து விழுந்தது.

    அதில் ஒரு செங்கல் கியாஸ், நிரப்பப்பட்ட லாரியின் வால்வு பகுதியில் விழுந்ததால், அந்த வால்வு உடைந்தது. இதனால் அதில் இருந்து கியாஸ் கசிய ஆரம்பித்தது.

    இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சற்று அச்சம் அடைந்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சம்பவம் குறித்து கியாஸ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கியாஸ் கசிவை நிறுத்தி சீராக்கினார்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இது மழை நேரம் என்பதால் இந்த கியாஸ் கசிவால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.இல்லை என்றால் மூச்சு திணறல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

    மேலும் காற்றோட்டமான, வெட்ட வெளியான பகுதி என்பதாலும் மற்றவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லாமல் போய்விட்டது.

    இதுதவிர கியாஸ் கசிவு காரணமாக ஒருவேளை தீப்பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
    • தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று காலை சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், பெள்ளேபாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளாதி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.

    இந்த மழைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் அதிகமான குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மருதூர் ஊராட்சிக்குட்பட்ட ஏழு சுழி தடுப்பணையில் அணை நிரம்பி, கசிவு ஏற்பட்டது. இதையறிந்ததும் மருதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு கருதி அங்கு மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

    இதன் காரணமாக 50-க்கும் அதிகமான சாலைகள் அனைத்தும் நீரில் மூழ்கி அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    நேற்று நள்ளிரவு மீண்டும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிறுமுகை அடுத்த இலுப்பநத்தம் ஊராட்சியில் கொட்டிய கனமழைக்கு இரும்பறை முதல் சிறுமுகை செல்லும் சாலையில் மேடூர் என்ற பகுதியில் மழைநீர் கடல் நீரை போல சாலைகள் தெரியாத அளவுக்கு மூழ்கடித்தபடி சென்றது.

    இந்த சாலையினை 50 கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    இலுப்பநத்தம் ஊராட்சியில் உள்ள அன்னதாசம்பாளையம் கிராமத்தில் பெய்த மழைக்கு அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார், தாமோதரன் ஆகியோர் பயிரிட்டிருந்த 10 ஏக்கர் அளவிலான வாழை பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது.

    சில வாழைகள் தண்ணீரிலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கனமழைக்கு அண்ணாநகர் சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மிதந்தன. தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மக்கள் வீட்டில் உள்ள வாளி, பாத்திரங்களை வைத்து, வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 40 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே இரும்பறை முதல் சிறுமுகை சாலையில் மேடூர் என்ற இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், கணபதி, ரெயில் நிலையம், டவுன்ஹால், உப்பிலிபாளையம், காந்திபுரம், காந்தி பார்க், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டியது.

    இந்த மழையால் அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    பீளமேடு பகுதியில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், சில இடங்களில் தேங்கியும் நின்றது.

    கனமழைக்கு நஞ்சுண்டாபுரம் ராமலிங்கம் ஜோதிநகர், சுங்கம் சிவராம் நகர், பீளமேடு வரதராஜபுரம், சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    நள்ளிரவில் கொட்டிய கனமழையால் உடையாம்பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள பொருட்கள் தண்ணீரில் மிதந்தன.

    நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத நிலை இருந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, அங்கிருந்த மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

    இதேபோல் உடையாம்பாளையம் கக்கன் நகர் பகுதியில் கார் ஒன்று மழைவெள்ளத்தில் சிக்கி கொண்டது. அதில் 3 பேர் சிக்கியிருந்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பீளமேடு பகுதியில் 10 செ.மீ மழை பெய்துள்ளது.

    ×