என் மலர்
சென்னை
- தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடிகிறது.
- விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன்.
- பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித்ஷாவை பதவி விலக சொல்வதா என நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேசத்தின் ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசரகாலத்திலும் அரசியலா?
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் அப்பாவிப் பொது மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனிதத் தன்மையற்ற தீவிரவாதிகளின் வன்முறையைக் கண்டிக்கிறேன்.
சுற்றுலாவிற்காக காஷ்மீர் சென்ற நம் மக்கள் மீது நடைபெற்ற கோழைத்தனமான. கொடூர தாக்குதலுக்கு ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழுந்து தங்களது கண்டனங்களையும், வேதனைகளையும் பதிவு செய்து வருகிறது. உலக நாட்டு மக்களும். தலைவர்களும் நமக்கு ஆறுதல் சொல்லி நமது நடவடிக்கைகளுக்குத் துணையாக நிற்கிறார்கள்.
நமது பாரதப் பிரதமர். நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் ஆண்டு அரியணை ஏறியதில் இருந்து இந்த நிமிடம் வரை, உள்நாட்டு தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என அனைத்திற்கும் எதிரான தன் கடுமையான யுத்தத்தை முன் வைத்துள்ளார். தன் உறுதியான நடவடிக்கைகளின் மூலம், தாய்நாட்டைப் பாதுகாத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியானது தனது ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் மாநிலத்தில் துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்க அஞ்சியதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம், ஆம். இந்த நாட்டைத் துண்டாடத் துடித்தவர்களின் கரங்களைத் தங்களின் வாக்கரசியல் மூலம் பலப்படுத்தியது காங்கிரஸ்.
ஆனால் தேசந்தின் வலிமையை, ஒற்றுமையை, சம உரிமையை நம்பும் பாஜக-வின் ஆட்சியில் காஷ்மீர் மீட்டெடுக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் இடைச்செருகலாக வந்தது தான் 370 வது சட்டப்பிரிவு சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தன் எதிர்ப்பைத் தெரிவித்தும், அப்போதைய ஆட்சியாளர்களால் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இந்த 370 வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் ஆன்மாவிற்கு சவால் விடுவதாக அமைந்திருந்த இந்த சட்டத்தை மாற்றி அமைத்து தேசப் பிரிவினைவாதிகளின் நோக்கங்களை முறியடித்தது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜ ஆட்சியில்தான்.
ஆனால். 370 வது சட்டப்பிரிவை நீக்கக் கூடாது என காங்கிரஸ் திமுக கூட்டணியோடு சேர்ந்து திருமாவளவன் அவர்களும் மேடைக்கு மேடை முழங்கினார்.
காஷ்மீர் பிரிவினைவாத போராட்டத்தைப் புரட்சி என்று வர்ணிப்பவர்களை எல்லாம் விசிக-வில் வைத்துக் கொண்டு, திருமாவளவன் அவர்களும் அதே தொனியில் பேசி வந்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தாலும், தீவிரவாதிகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதை விட இழப்புகளுக்கு அஞ்சலி செலுத்துவதை விட, திரு. திருமாவளவன் அவர்களின் கருத்தில் பாஜக அரசு 370 வது சட்டப்பிரிவை நீக்கியதைக் குறை சொல்வதுதான் இப்போது விஞ்சி நிற்கிறது. இதன் அடிப்படை நோக்கம் ஒன்றுநான்.
திரு. திருமாவளவன் அவர்களின் இண்டி கூட்டணிக்கு, காஷ்மீர் பழையபடி நாட்டின் வளர்ச்சிக்கு விரோதமான பிரிவினைவாதம் பேசும் பகுதியாகவே இருக்க வேண்டும். லால் சவுக்கில் இந்தியக் கொடி பறக்கக் கூடாது என்ற எண்ணம் இருப்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.
ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கும் போது. இண்டி கூட்டணியும் அதன் பங்காளியான திருமாவளவன் அவர்களும் 370 வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு மட்டுமே எதிராக உள்ளனர். இதில் மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களையும் பதவி விலகச் சொல்கிறார் திரு. திருமாவளவன் அவர்கள். அதே போன்று தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய சாவுகள் (கள்ளக்குறிச்சியில் மட்டும் 68 பேர் இறந்தனர்).
லாக்-அப் மரணங்கள். சாதிய படுகொலைகள். பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஆகி ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்று. காவல்துறையைத் தன் நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள, சட்டமொழுங்கு சீர்கேட்டில் No.1 முதல்வரான திரு. ஸ்டாலின் அவர்களைப் பதவி விலகச்சொல்வாரா திருமாவளவன் அவர்கள்?
மேலும். கோவை கார் குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு எனப் பூசி மெழுகப் பார்த்து இன்று வரை வழக்கின் ஆழம் தீவிரவாத செயலாகவே நீண்டு செல்கிறதே அதற்காக ஏன் தமிழக முதல்வரைப் பதவி விலகச் சொல்லவில்லை? கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு கொடுத்தது திமுக அரசு.
விசிக கட்சியோ அவருக்கு மரியாதை செலுத்தியது. இதற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டிய திரு. திருமாவளவன் அவர்கள். இந்த தேசத்தின் நவீன இரும்பு மனிதராக வாழும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களைப் பதவி விலகச் சொல்வது நியாயமா?
தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விட முடியும் என்று மனித குலத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளின் நடவடிக்கை. நம் நாட்டையே உலுக்கி இருக்கும் இந்தத் தருணத்தில் நேசத்தின் ஒற்றுமைக்காக உரத்த குரல் கொடுக்காமல் இந்த நேரத்திலும் அரசியல் செய்ய நினைக்கும் திருமாவளவன் அவர்களின் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.
நம் உறவுகளை எல்லாம் உயிரற்ற சடலங்களாக்கி, மதத்தின் பெயரால் மனிதநேயத்திற்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திரு. திருமாவளவன் அவர்கள் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு, தீவிரவாதத்திற்கு எதிராக எந்த உச்சபட்ச நிலைக்கும் செல்லும் என்பதற்கு கடந்த கால உதாரணங்களே நிறைய உள்ளன.
எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதை வேரோடு பிடுங்கி எறிய எல்லா முயற்சிகளையும் சமரசம் இல்லாமல் பாஜக அரசு செய்யும்.
ஆனால், அதற்குத் துணை துணை நிற்காமல், தேசத்தின் வளர்ச்சியை மனதில் நிறுத்தாமல் எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் போக்கினை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டுமென இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.
- வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.
புத்தகத்தில் உலகை படித்தால் அறிவு செழிக்கும், உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.
அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.
மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது #DravidianModel அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.
"புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்ரீபெரும்பு தூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு உள்ள தி.மு.க. அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளர் வைகைச்செல்வன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சோம சுந்தரம், குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் செயலாளர், மதனந்தபுரம் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக வெப்ப நிலை 97 டிகிரி முதல் 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் நேற்று ஈரோடு, மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 102 டிகிரி, சேலம், வேலூரில் 101 டிகிரி, திருத்தணி, தர்மபுரியில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மொத்தம் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கவர்னர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
- மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில் ஊட்டியில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் அதிகார மோதல் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை. ஆளுநர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு வருடமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இந்த ஆண்டும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கின. மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
2022 முதல் துணை வேந்தர் மாநாட்டை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடத்தி வருகிறார். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் தவறாக இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார போராட்டமாக முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
- மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

- 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
- அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலை படிப்பில் சேர்ந்தோருக்கான கட்டணம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
நீட் தேர்வு பிரச்சனையில் மக்களிடம் சாயம் வெளுத்துவிடும் என்பதால் 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தீர்கள் என மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறி இருப்பதாக அமளியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.
- அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை.
- நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், "அமலாக்கத்துறை வெளிப்படையாக இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் மறைந்துகொள்கிறது. எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போதுதான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கொடுமை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, 'மாநில போலீசார் பதிவு செய்த லஞ்ச வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது'' என்று வாதிட்டார்.
இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ்சிங் வாதம் செய்தார். அவர், 'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறி நீதிபதிகள், அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமை சார்ந்ததாகும். இதில் மோசடி நடந்தால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
இதுபோன்ற நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கை பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசியலை பொருத்தவரை 'ஏ' பார்ட்டி ஆட்சியில் இருக்கும் போது 'பி' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். 'பி' பார்ட்டி ஆட்சியில் இருக்கும்போது 'ஏ' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை கோர்ட்டு கவனிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே கோர்ட்டு பரிசீலிக்க முடியும்.
இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
- 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.
2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். அதேபோல, இந்திய அளவில் 39-ம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது 57 தமிழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள்.
* ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.
* தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டெல்லி செல்ல தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
- தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல்.
* குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
* தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.
* இறந்து கிடக்கும் கணவர் அருகில் மனைவி அமர்ந்து அழும் காட்சி மனதை வாட்டியது.
* பயங்கரவாதிகளின் இரக்கமற்ற செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டம்.
- நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியில் பா.ம..க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காயை நகர்த்தி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று இரவு சைவ அசைவ உணவுகளுடன் இரவு விருந்து அளிக்கிறார்.
இதைத் தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மாலை 4.30 மணி அளவில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் போட்டிருப்பதை உறுதி செய்து எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு பூத்துக்கும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொது கமிட்டி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில அளவிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து பூத்களிலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவதற்கான அறிவுரைகள் அவர்கள் மூலமாக பூத் கமிட்டியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி நாளை பூத்தமிட்டி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடு கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சட்டமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க உள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனி சாமி ஏற்பாடு செய்திருப்ப தன் மூலம் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அவர் தீவிரமாக தயாராகி இருப்பது தெரியவந்து உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பா கவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






