என் மலர்
சென்னை
- கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு.
- கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.
முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து, அவர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசு, குறைந்தபட்சம் கொரோனா தொற்றுப் பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியைக்கூடச் செய்ய மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
கொரோனா பெருந்தொற்றுக் காலம் முதல் தற்போதைய டெங்கு தொற்றுக் காலம் வரை தம் உயிரைப் பொருட்படுத்தாது, மக்கள் உயிர் காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றி வருபவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள் வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணமாகும். தமிழ்நாட்டின் 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை-எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர்.
ஆடம்பரத் திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் திமுக அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளைக் கூட இன்றுவரை நிறைவேற்றாமல் அலட்சியம் செய்வது கொடுங்கோன்மையாகும்.
அதுமட்டுமன்றி, கொரோனோ பெருந்தொற்றுப் பணியின்போது உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சிறிதும் மனச்சான்று இன்றி திமுக அரசு ஏற்கமறுப்பது அதைவிடவும் பெருங்கொடுமையாகும்.
கடந்த 22.11.2020 அன்று மருத்துவப்பணியில் இருக்கும்போதே கொரோனா தொற்றால் மரணமடைந்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் விவேகானந்தன் அவர்கள் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவருடைய மனைவி திவ்யாவிற்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி கேட்டுப் பலமுறை முறையிட்டும் திமுக அரசு அவரது கோரிக்கைக்கு இன்றுவரை செவிமடுக்கவில்லை.
அரசு மருத்துவர் விவேகானந்தன் மரணத்திற்குப் பிறகு அவரது ஏழைக் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அவரது மனைவிக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று முதலில் அறிக்கை வெளியிட்டது வேறு யாருமல்ல; அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும், இன்றைய முதல்வருமான ஐயா ஸ்டாலின் அவர்கள்தான்! தான் முன்வைத்த கோரிக்கையை, தன் கையில் அதிகாரம் கிடைத்த பிறகு நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும்.
கள்ளச்சாராயம் குடித்துச் செத்தால் 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர் பணியின் போது ஏற்பட்ட கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரது குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைப்பதுதான் சமூக நீதியா?!
உயிர்களைக் காக்க நாள்தோறும் போராடிவரும் மருத்துவர்கள் தங்கள் உரிமைகளைக் காக்க ஆண்டுக்கணக்கில் போராடிவரும் துயரம் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலை நீடிப்பது மருத்துவர்களின் ஈகத்தை அவமதிக்கும் செயலாகும் என்பதை உணர்ந்து, திமுக அரசு, மருத்துவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அரசாணை 354-ன் படி, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
மக்கள் உயிர் காக்க தன் உயிரைப் பணயம் வைத்த அரசு மருத்துவரின் குடும்பத்தை ஒரு கருணை வேலைக்காகக் காத்திருக்கச் செய்து அலைகழிப்பது என்பது, மருத்துவர்களின் ஈகத்தையும், அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துவதாகும். திமுக அரசின் இத்துரோகச்செயல், இனிவரும் இளந்தலைமுறை மருத்துவர்களிடத்தில் சேவைபுரிய வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடும் கொடுஞ்சூழலை ஏற்படுத்திவிடும்.
ஆகவே, கொரோனோ பெருந்தொற்று பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும், முறைப்படி வழங்க வேண்டிய உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும், போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எதிர்வரும் 11.06.2025 அன்று சேலம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அரசு மருத்துவர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள்கொடுத்து துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.
- தி.மு.க. - 4, அ.தி.மு.க.-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
- மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. எனவே இந்த 6 பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 2- ந்தேதி தொடங்கியது.
இந்த தேர்தலில், எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 பேரும், அ.தி.மு.க சார்பில் 2 பேரும் வெற்றி பெறுவார்கள். அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். தி.மு.க. தனது மற்றொரு எம்.பி. பதவியை கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கியது. எனவே அந்த இடத்திற்கு கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். மொத்தம் தி.மு.க. - 4, அ.தி.மு.க.-2 என 6 பேரை தவிர மேலும் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் என 13 பேர் மொத்தம் 17 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
வேட்புமனுக்கள் பரிசீலனையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சைகள் 7 பேர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியாததால் சுயேட்சைகள் 7 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 12-ந் தேதியாகும். தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரும் வெற்றி பெற்றதாக 12-ந்தேதி மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
- ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணமாகும்.
- மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜூலை 13-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழக அரசு தான் காரணமாகும். இந்த சிக்கலில் தமிழ்நாட்டிற்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய நீதி இப்போது வரை தள்ளிக் கொண்டே போவதற்கு காரணம், தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அலட்சியமும், அடுக்கடுக்காக இழைக்கப்பட்ட தவறுகளும் தான்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதி வரை வழங்காத நிலையில், அதைக் கண்டித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் தொடர்ந்து வெளியிட்ட அனைத்து அறிக்கைகளிலும் இதையே வலியுறுத்தியிருந்தேன். கடந்த மே 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் ஒருமுறை இந்த யோசனையை வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், தமிழக அரசோ, அதை மதித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வீண் அரசியலைச் செய்து காலத்தைக் கடத்தியது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததற்கும் இது தான் காரணம் ஆகும். நேற்றைய வழக்கு விசாரணையின் போது, எவ்வளவு காலமாக மத்திய அரசின் நிதி வரவில்லை என்றும், எப்போது வழக்கு தொடர்ந்தீர்கள் என்றும் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால நீதிபதி வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், கடந்த ஆண்டு முதலே நிதி வரவில்லை என்றும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதி தான் வழக்குத் தொடர்ந்ததாகவும் பதிலளித்தார். அதனடிப்படையில் தான் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியவாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கும். தமிழகத்திற்கான நிதியும் கிடைத்திருக்கும். ஆனால், மக்கள் நலனை விட, அரசியல் லாபம் தேடுவதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டியது. அதனால் தான் 43 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குவதையும் தமிழக அரசு தடுத்து விட்டது. இப்படியாக தமிழக அரசின் செயல்களால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
மாநிலங்களின் உரிமைகளை மீட்பது தான் தங்களின் லட்சியம் என்று கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை. சுமார் ஓராண்டு காலம் உறங்கிக் கொண்டிருந்து, மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் நிதியைப் பெறுவதில் தோல்வியடைந்து விட்டது.
தமிழக அரசு உடனடியாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழகத்திற்கு நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்கவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு.
- வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது.
உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் என்ற நிலையை அடைந்திருக்கிறோம்.
* தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் உதவி உள்ளது.
* நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு உள்ளது.
* சாலை மேம்பாடு, நீர் பாசனம் போன்ற திட்டங்களிலும் உலக வங்கி உதவி உள்ளது.
* பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்போருக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது என் கனவு.
* மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலனில் சிறந்த முன்னெடுப்புகளை தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது.
* we safe எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
* நகரமயமாக்கல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
* வெறும் கடன் உதவி என்று கூறி உலக வங்கியின் உதவியை சுருக்கி பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- 10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தக பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக பூங்காவை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை பார்வையிட்டார்.
10 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெறும் வகையில் இந்த புத்தக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
- இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கும் விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் இருந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக விமானிகள் அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர்.
கிண்டி பகுதியில் இருந்து சக்திவாய்ந்த லேசர் ஒளி விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் பரங்கிமலை, கிண்டி போலீசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்
சென்னையில் கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட 3வது சம்பவம் இது ஆகும். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.
- வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.
கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை ஆனது. கடந்த 7-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 980-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்துவிட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.8,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
05-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-06-2025- ஒரு கிராம் ரூ.119
08-06-2025- ஒரு கிராம் ரூ.118
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
06-06-2025- ஒரு கிராம் ரூ.118
05-06-2025- ஒரு கிராம் ரூ.114
- நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது.
- இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?
மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 8-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது. ஆனால் ஏன் எல்லா விதிகளையும் மீற வேண்டும்? தாமரை குளம் பகுதியைத் தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதி என பாகுபாடுகள் ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும்.
- கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
- சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- உதவி மேலாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், எந்தத் தவறும் செய்யாத அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுனரை அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் காலணியால் அடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அதற்குக் காரணமாக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது அதைக் விடக் கொடுமையானது. போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக, பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது உயரதிகாரியான மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும் என்று கூறியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை.
இது தொடர்பாக உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது, பயணிகளை தரக்குறைவாக பேசிய உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை தாம் அணிந்திருந்த காலணியால் அடித்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம்.
ஓட்டுனரை உதவி மேலாளர் காலணியால் தாக்கும் காணொலி வைரலாகி வரும் நிலையில், அதனடிப்படையில் விசாரணை நடத்தி உதவி மேலாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு. இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை.
பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும்பட்சத்தின் அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால், பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு, யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள். இப்படி ஒரு சூழலைத் தான் தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா? என்பதை அரசு விளக்க வேண்டும்.
அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
ஓட்டுனர் தாக்கப்பட்டதற்கு காரணமான உதவி மேலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மூதாட்டி நகைக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
- குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நகைக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொங்குப் பகுதிகளில் இதுவரை நடந்த அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணமானவர்களைக் கண்டு பிடித்து கைது செய்துவிட்டோம் என திமுக அரசு ஒருபுறம் மார்தட்டிக் கொண்டிருக்க, அதே பகுதியில் அதே பாணியில் மீண்டுமொரு கொலை அரங்கேறியுள்ளது, மக்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும் மக்களின் கண்டனக் குரல்களை ஒடுக்கவும் யாரையோ கைது செய்துவிட்டு குற்றவாளி அகப்பட்டுவிட்டதாக திமுக அரசு நாடகமாடுகிறதா? என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கிறது.
எனவே, தமிழகத்தில் குறிப்பாக கொங்குப் பகுதிகளில் பெருகி வரும் கொலை, கொள்ளை குற்றங்களின் மூளையாக செயல்படுவோர் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






