என் மலர்
நீங்கள் தேடியது "மீனாட்சி அம்மன் கோவில்"
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
- பக்தர்களையும், வியாபாரிகளையும் மற்றும் பொதுமக்களையும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. எனவே வருகிற 20-ந் தேதி தீபாவளி பண்டிகை நாளான்று கோவில் அருகிலோ, சித்திரை வீதிகளிலோ, ஆவணி மூலவீதிகளிலோ தீ விபத்தினை ஏற்படுத்தும் பொருட்களையோ, வெடிக்கும் பொருட்களையோ, பாதுகாப்பு கருதி உபயோகப்படுத்திட வேண்டாம் என பக்தர்களையும், வியாபாரிகளையும் மற்றும் பொதுமக்களையும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார்.
- அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா வருகிற 23-ந்தேதி தொடங்கி 2-ந்தேதி வரை நடக்கிறது.
இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலவர் சன்னதியில் நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் நடைபெறும்.
விழா நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கோவிலில் வைக்கப்படும் கொலுவுக்கு அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை பக்தர்கள் உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.
நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார். 23-ந் தேதி ராஜராஜேசுவரி, 24-ந் தேதி வளையல் விற்றது, 25-ந் தேதி ஏகபாதமூர்த்தி, 26-ந் தேதி ஊஞ்சல், 27-ந் தேதி ரசவாதம் செய்த படலம், 28-ந் தேதி ருத்ரபசுபதியார் திருக்கோலம், 29-ந் தேதி தபசுகாட்சி, 30-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி, அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது.
- இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா?
மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 8-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீங்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றது நல்லது. ஆனால் ஏன் எல்லா விதிகளையும் மீற வேண்டும்? தாமரை குளம் பகுதியைத் தவிர, உள்ளே மொபைல்கள் மற்றும் கேமராக்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு ஒரு விதி, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு ஒரு விதி என பாகுபாடுகள் ஏன்? இந்த விதிமீறல் குறித்து கோவில் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுரை:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10 இடங்களில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை தீவிர கள ஆய்வு மேற்கொண்டது.
இதையடுத்து தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில் பலகட்ட ஆலோசனை நடத்திய அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் டெல்லி சென்றபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 11-ந்தேதி தமிழகம் வந்த அமித்ஷா அந்த கூட்டணியை உறுதிப்படுத்தினார். மேலும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற அமித்ஷா, அவர் அளித்த விருந்திலும் கலந்துகொண் டார். அதனை வரவேற்ற அ.தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறிவைத்தும் மதுரையை மையப்படுத்தி மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை காய் நகர்த்தி வருகிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க.வுக்கு எதிரானது உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவர்களுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்ட பா.ஜ.க., சட்டமன்ற தேர்தலுக்கு தாங்களும் ஆயத்தமாகி விட்டதை அறிவிக்கும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் இன்று மாலை நடைபெறும் அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு தமிழ்நாட்டில் 2026-ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 10.30 மணியளவில் அமித்ஷா மதுரை வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்த அமித்ஷா, இன்று உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் மீண்டும் ஓட்டலுக்கு திரும்பிய அவர் பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

வழக்கமாக மையக்குழு கூட்டம் என்பது ஒருநாள் முழுவதும் நடைபெறும். ஆனால் குறுகிய காலத்தில் அமித்ஷா வந்துள்ளதால் குறைந்த நேரத்தில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன் னாள் மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன்,கே.பி.ராம லிங்கம், கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், கார்த்தியாயினி, பொன் பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, எச்.ராஜா உள்ளிட்ட 22 பேர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பா.ஜ. க.வை பலப்படுத்துதல், அரசியல் ரீதியாக அதிரடியான சட்டமன்ற தேர்தல் வியூகம் வகுத்தல், அதற்கேற்றவாறு எந்தமாதிரியான முன்னெடுப்புகளை பா.ஜ.க. மேற்கொள்ள வேண்டும், அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணி அமைத்த பிறகு தற்போதைய அரசியல் சூழல் குறித்து மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு அறிந்தார்.
2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மையக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறார்.
மேலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள், தென் மாவட்டங்களில் பா.ஜ.க. நல்ல வளர்ச்சி கண்டுள்ளதால் அங்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுதல், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மூலம் அங்குள்ள வாக்காளர்களின் தி.மு.க. வுக்கு எதிரான மனநிலையை பா.ஜ.க.வுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மாலை 4 மணியளவில் ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொண்டு பேச உள்ளார். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி வியூகம் வகுத்து அதன் மூலம் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த அமித்ஷாவின் தமிழகம் வருகையும் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க.வினர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.
அதற்கேற்ப 2026 மிஷன் என்ற இலக்கை நிர்ணயித்து, தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் புதிய திட்டங்களுடன் கூடிய தேர்தல் வியூகத்தை அமித்ஷா தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் இரண்டாம் இடத்தை 10 தொகுதிகளில் பெற்றதுடன், அதில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளை கட்டாயம் வென்றாக வேண்டும், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. காலூன்ற வேண்டும் என்பதற்காக அமித்ஷா நேரடியாக களம் இறங்குகிறார்.
மேலும் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப பா.ஜ.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் வியூகம் வகுத்து அவர் பேச உள்ளார். தற்போது கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு ஆகியவற்றுடன் பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் ஒருங்கிணைக்க அமித்ஷா திட்டமிட்டு உள்ளார்.
மேலும் அமித்ஷாவின் இந்த மதுரை பயணத்தின்போது பா.ஜ.க. மாநில நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தலுக்கான வேலைகள் குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். கட்சியின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது.

மதுரை வருகை தந்துள்ள அமித்ஷா இன்று மாலை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் மூலம் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் அவர்களுக்கான ஓட்டு வங்கியை அப்படியே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு அதற்கான வழிமுறைகளையும் அமித்ஷா இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த இருக்கிறார்.
மதுரையில் இன்று அமித்ஷா பங்கேற்கும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்கம் என்றும், கட்சியினருக்கு புதிய ஊக்கம் கொடுப்பதாக அமையும் என்றும் கட்சியினர் தெரிவித்தனர்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், விரகனூர் ரிங் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், ஒத்தக்கடை மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் வேலம்மாள் திடல் ஆகிய பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
- மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை பகுதியில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி நேற்று இரவு மதுரை வருகை தந்தார். இதையடுத்து இன்று காலை 11.15 மணியளவில் அவர் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதற்காக சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் புறப்பட்ட மத்திய மந்திரி அமித்ஷா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கிழக்கு கோபுரம் வழியாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்து கொண்டு அமித்ஷா மனமுருகி சுவாமி தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்றார். இதையொட்டி மற்ற கோபுரங்கள் வழியாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்துடன் மாசி வீதிகள் தொடங்கி சித்திரை வீதிகள் வரையிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். கோவில் அருகே உள்ள உயரமான கட்டிடங்களில் போலீசார் ஏறி நின்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அதேபோல் கோவிலை சுற்றிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். கோவில் வளாகத்தில் அமித்ஷா ஓய்வெடுப்பதற்காக தற்காலிக ஓய்வறையும், தீயணைப்பு நிலைய வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
- மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
- தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழா அன்று சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், பெரிய சப்பரம் போன்ற தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர்.
இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச் சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி சப்பர திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 16-ந் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மார்கழி 1-ந் தேதி தொடங்குவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அஷ்டமி திருவிழா நடைபெற உள்ளதால் சப்பரம் உலா வரும் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
- அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார்.
மதுரை
மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சர் சேகர்பாபு, யானைக்கு பழம் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் யானை குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தையும் அவர் பார்வை யிட்டார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தின் திருப்பணிகளுக்கு வந்துள்ள கற்களை தூண்களாக அமைக்கும் பணிகள் மதுரை அருகே உள்ள பெருங்குடி சின்ன உடப்பு கிராமத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முழு நேர அன்னதான திட்டத்தை காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும்
மதுரை
தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்களில் முழுநேர அன்னதானம் திட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்த திட்டம் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியர் கோவில் ஆகிய தலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் "தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருவண்ணா மலை அருணாசலேசுவரர் கோவில் ஆகிய ஆன்மீக தலங்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
அதற்கான விழா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் கோவில் அதிகாரிகள் செல்லத்துரை, அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன்படி அங்கு தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது.
- இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை:
மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் அமைப்பு யூ-டியூப், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விரும்பும் பக்தர்கள் ரூ. 1000 செலுத்தினால் ஆண்டுதோறும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தவறான தகவல்களை பரப்பியது தொடர்பாக கோவில் மேற்பார்வையாளர் ஆறுமுகம் போலீசில் புகார் செய்தார். அதில், மதுரையை சேர்ந்த காவேரி சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலின்றி தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி தலைமையில் இன்ஸ்பெக்டர் ராதிகா தனியார் டிரஸ்ட்டை சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
- மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும்.
மதுரை
மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி. 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தெப்பத் திருவிழா கொடியேற்றம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடை பெறுகிறது. முன்னதாக, கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளு கின்றனர்.
தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காம தேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். பிப்ரவரி 3-ந் தேதி 11-ம் நாள் விழாவையொட்டி, சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பா டாகி கீழ மாசி வீதி வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு, கதிரறுப்பு திருவிழா நடைபெறும்.
பிப்ரவரி 4-ந் தேதி சுவாமி யும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்று காலையில் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் 2 முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வருகின்றனர்.
தொடர்ந்து, அன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தரு ளுகின்றனர். பின்னர், மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
அதன்பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளுகின்றனர். விழாவையொட்டி, பிப்ரவரி 4- ந் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.
எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும். மேற்கண்ட நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
- அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்று அம்மன்-சுந்த ரேஸ்வரருக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை வருகிற 18-ந் தேதி மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். அப்போது பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலுக்குள் தரிசனத்திற்காக அனுமதிக் கப்படுவார்கள்.
இதேபோல் இம்மை யிலும் நன்மை தருவார் கோவில், சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்பு டையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், பேச்சியம்மன் படித்துறை, காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில், உள்பட பல சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
- ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
- ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மதுரை:
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மதுரை வருகிறார். கோவையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து மதுரை வரும் ஜனாதிபதி அன்று காலை 11.30 மணிக்கு மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் பலத்த பாதுகாப்புடன் ரிங்ரோடு, தெப்பக்குளம் வழியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடையும் ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். மீண்டும் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார்.
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களாக மதுரையில் உள்ள தங்கும் விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. கடைக்காரர்கள் முன்பகுதியில் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று மதியம் மதுரை வந்தனர். அவர்கள் 3 நாட்கள் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்பு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
மதுரை ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) கணேசன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விசுவநாதன், மாநகர் காவல் துணை ஆணையாளர் சாய் பிரனீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சுவாமிநாதன், வருவாய்த்துறை சார்பில் திருமங்கலம் வருவாய் கோட்ட அலுவலர் கோட்டைச்சாமி, சுகாதார துறை சார்பில் மண்டல இணை இயக்குநர் அர்ஜூன்குமார், மருத்துவ அலுவர் தனசேகரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






