search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா

    • மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா அன்று சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், பெரிய சப்பரம் போன்ற தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர்.

    இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச் சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி சப்பர திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 16-ந் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மார்கழி 1-ந் தேதி தொடங்குவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    அஷ்டமி திருவிழா நடைபெற உள்ளதால் சப்பரம் உலா வரும் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×