என் மலர்
சென்னை
- நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா்.
- நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஒருவரது மகனுக்கும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவருமான பிரசாத் என்பவருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது.
அப்போது பிரசாத்துடன் வந்த சில தொழில் அதிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். மது பாரையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். டி.எஸ்.பி. மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாரில் ரகளையில் ஈடுபட்டதாக பிரசாத், அஜய் ரோகன், தூண்டில் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கும், கொகைன் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனால் உஷாரான நுங்கம்பாக்கம் போலீசார் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்திய போது வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் கொகைன் போதைப்பொருளை ஒரு கும்பல் சப்ளை செய்து இருப்பதும் அதில் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலம் பிரசாத் ஏற்கனவே சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரை போலீசாா் தங்களது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனா். விசாரணையில் பிரசாத்துக்கு கொகைன் போதைப்பொருள் பழக்கம் இருப்பதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மதுபான விடுதியில் அவருக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப் குமாா் என்ற பிரடோ என்பவா் கொகைன் போதைப் பொருளை விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், நுங்கம்பாக்கம் போலீசாரும் பிரதீப்குமாா் குறித்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், பிரதீப்குமாரையும், சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜானையும் கடந்த 19-ந்தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா்.
இருவரிடமும் கொகைன் விற்பனை குறித்து போலீசாா் விசாரணை செய்தனா். அப்போது பெங்களூரில் வசிக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த நைஜீரியாவின் ஜூரிக், சென்னையில் உள்ள போதைப் பொருள் விற்கும் கும்பலுக்கு கொகைனை விற்று உள்ளாா்.
இந்தக் கும்பலிடம் இருந்து பிரதீப்குமார் கொகைனை கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாங்கி வந்து சென்னையில் விற்று வந்துள்ளாா். ஒரு கிராம் கொகைனை அவர் ரூ.7 ஆயிரம் கொடுத்து வாங்கினார். அதை சென்னையில் ரூ.13 ஆயிரத்துக்கு விற்றுள்ளாா்.
அவர் மூலம் பல தடவை பிரசாத் கொகைன் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி உள்ளார். பிரசாத் "தீங்கிரை" என்ற சினிமா படத்தை தயாரித்தார். அந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஸ்ரீகாந்துக்கும், பிரசாத்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.
அந்த நட்பு காரணமாக பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் பழக்கம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு பரவியது. இருவரும் வாட்ஸ்அப் மூலம் கொகைன் பயன்படுத்துவதை பற்றி பல தடவை பேசியுள்ளனர். நாளுக்கு நாள் கொகைன் பயன்படுத்துவதை நடிகர் ஸ்ரீகாந்த் அதிகரித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கொகைகனுக்கு அடிமையாகி விட்டதாகவே கூறப்படுகிறது.
இதனால் பிரசாத்திடம் இருந்து மட்டுமின்றி நேரடியாக பிரதீப்குமாரிடமும் நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் வாங்க தொடங்கி உள்ளார். கொகைன் வாங்குவதற்கு ஜிபே மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார். ஒரு கிராம் கொகைனை ரூ.13 ஆயிரத்துக்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் மட்டும் அவர் ரூ.5 லட்சம் செலவு செய்து இருக்கிறார். அப்படி வாங்கிய கொகைனை திரை உலக பிரபலங்கள் பலருக்கும் ஸ்ரீகாந்த் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே போலீசார் பிரதீப்குமாரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது நடிகர் ஸ்ரீகாந்த் கணக்கில் இருந்து அவருக்கு ஆயிரக்கணக்கில் பணம் வந்திருப்பதை கண்டனர். இது தொடர்பாக விசாரித்தபோது நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி பிரதீப்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் போதைப் பொருள் கொடுத்ததை ஒத்துக்கொண்டார். இந்த தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் ஸ்ரீகாந்துக்கு போலீசாா் அழைப்பாணை வழங்கினா். அதன்படி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானாா். அவரிடம் விசாரித்தபோது, தான் கொகைனை வாங்கவில்லை என்று முதலில் மறுத்தாா். நேற்று காலை நீண்ட நேரம் போலீசார் அவரிடம் இந்த விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
இதையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், கொகைன் மற்றும் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடா்புகளை ஸ்ரீகாந்த் தெரிவித்தாா். இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனா்.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீகாந்த் வீட்டிலும் போலீசாா் சோதனையிட்டனா். இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து 7 கொகைன் கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் மீது போலீசார் போதைப் பொருள் தடுப்பு சட்டம் 1985-ன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஒன்று:- 8சி (போதைப் பொருள் பயன்படுத்துவது மற்றும் கடத்தி விற்பது)
இரண்டு:- 22 (போதைப் பொருள் பதுக்கி வைப்பது)
மூன்று:- 29(1) (போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து சதி செய்தது)
நான்கு:- 27 (போதைப் பொருளை கூட்டாக கடத்துவது)
இந்த 4 பிரிவுகளின் கீழ் தொடரப்படும் வழக்குகளை தீவிரமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் எந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தினார்களோ அல்லது பயன்படுத்தினார்களோ அதற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுவதாக தெரிகிறது.
சமீபத்தில் 2 கிலோ போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு சென்னை கோர்ட்டு 10 ஆண்டு கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஒன்று முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அவரிடம் மீண்டும் விசாரணை நடத் தப்பட்டது. அதன் பிறகு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உடல்நலம் பற்றி போலீசார் ஆய்வு செய்து அறிக்கை பெற்றனர். இதைத் தொடர்ந்து 10 மணி நேர விசாரணைக்கு பிறகு ஸ்ரீகாந்த் எழும்பூர் 14-வது நீதித்துறை நடுவர் மன் றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
அவரை ஜூலை 7-ந்தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டார். அப்போது ஸ்ரீகாந்த் தரப்பு வக்கீல் நீதிபதியிடம், "ஸ்ரீகாந்த் முறையாக வருமான வரி செலுத்தி வருவதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதி முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகர் ஸ்ரீகாந்திடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனு தயார் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் அவரிடம் 3 கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
1. ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை திரையுலக பிரமுகர்களுக்கு விற்பனை செய்தாரா?
2. திரையுலக விருந்துகளில் பங்கேற்ற நடிகர்-நடிகைகளுக்கு கொகைன் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நடிகர்-நடிகைகள் யார்?
3. கொகைன் போதைப் பொருள் மூலம் ஸ்ரீகாந்த் மிகப்பெரிய நெட்வொர்க்குக்கு உதவி செய்தாரா? ஆகிய 3 கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும் ஸ்ரீகாந்துக்கு நெருக்கமான நடிகர் கிருஷ்ணா உள்பட மற்ற நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் ஸ்ரீகாந்த்துடன் தொடர்பில் இருந்த நடிகர்-நடிகைகள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது குடும்ப சூழ்நிலையை குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை அவரது தேவைக்கு மட்டும் வாங்கினாரா அல்லது வேறு யாருக்கும் வாங்கிக் கொடுத்தாரா என போலீசாா் விசாரித்துள்ளனர்.
நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா். மிகவும் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்படத்துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப் பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
- நம் வெற்றித் தலைவர் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை.
- நெடுஞ்சாலையோரங்களில் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது.
சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க. பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க.வை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
காயமடைந்த முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை.
நம் வெற்றித் தலைவர் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர்.
- சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது.
சென்னை:
தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க. தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரை முருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தி.மு.க.வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் அதிகாரமிக்க பதவியாகும்.
தி.மு.க. தலைமையில் இருந்து வெளியாகும் அனைத்து அறிவிப்புகளும் பொதுச்செயலாளர் பெயரில்தான் வெளிவரும். ஒரு சில அறிவிப்புகள் மட்டுமே தலைவர் பெயரில் வரும்.
கருணாநிதி, தி.மு.க. தலைவராக இருந்த கால கட்டத்தில் அவருக்கு பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன், பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமியும் பக்கபலமாக இருந்தனர்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சிக்கு தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீனியர் அமைச்சர் என்ற முறையில் துரைமுருகனை பொதுச்செயலாளர் ஆக்கினார்.
கருணாநிதி காலத்து மரபை மீறாமல், பொதுக்குழு, செயற்குழு அறிவிப்புகளும், நிர்வாகிகள் நீக்கம், நியமனம் உள்ளிட்ட தகவல்களும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில்தான் வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக தற்போது இளைஞரணி செயலாளராக உள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் அதிக செல்வாக்கு உள்ளது.
அதனால் பெரும்பாலான கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகின்றனர். மூத்த நிர்வாகியான அமைச்சர் துரைமுருகன் இப்போது அண்ணா அறிவாலயத்திற்கு தினமும் வருவதில்லை. ஏதாவது முக்கிய ஆலோசனை நடைபெறும் பட்சத்தில் வந்து செல்கிறார்.
சமீபத்தில் துரைமுருகனிடம் இருந்த கனிம வளத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கு மாற்றி கொடுக்கப்பட்டது. இதில் துரை முருகனுக்கு கொஞ்சம் மனவருத்தம் உண்டு என்று கட்சியினர் பரவலாக பேசுகின்றனர்.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிலும் துரைமுருகன் இடம் பெறவில்லை. இந்த குழுவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த குழுதான் முக்கிய முடிவுகள் குறித்து பரிந்துரைத்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் துரைமுருகன் பெயரளவில் பொதுச் செயலாளராக இருப்பதாகவும் அவருக்கு அந்த அளவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
தி.மு.க. விதிப்படி புதிய தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் 2027-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அந்த தேர்தலில் துரைமுருகன் விடுவிக்கப்பட்டு அந்தப் பதவிக்கு டி.ஆர்.பாலு அல்லது கே.என்.நேரு பொதுச்செயலாளராக வருவார்கள் என்று கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது. இந்த சூழலில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ள நிலையில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பது போக போகத் தான் தெரியவரும்.
- இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை.
- சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 2014-15 முதல் 2024-25 வரை ரூ.2,533 கோடியும், (ஆண்டுக்கு ரூ.230 கோடி) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை. இது அவர்களது 1952 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைகளுக்காக, பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்?
சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் முக்கியமான மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன். செம்மொழி தகுதி பெற்ற அனைத்து மொழிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்டவர் கவியரசர் கண்ணதாசன்.
- கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலைப் படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
- சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மணலி புதுநகரை அடுத்த வெள்ளிவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 64). இவர் விச்சூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி காலை 9 மணியளவில் கம்பெனியின் மெயின் கேட்டை மூடும்போது எதிர்பாராத விதமாக கேட் அடியோடு சரிந்து குமாரசாமி மேல் விழுந்தது.
இதைப்பார்த்த அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து கேட்டுக்குள் சிக்கிய குமாரசாமியை வெளியே எடுத்தனர். இதில் கால், மார்பு பகுதியில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டது.
- புழல் சிறையில் உள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்தி வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் எனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பிரச்சனை உள்ளது எனக்கூறி ஜாமின் வழங்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத் தான் கொக்கைன் பழக்கத்தை கற்றுத்தந்தார். 'தீங்கிரை' என்ற படத்திற்காக பிரசாத் தனக்கு ரூ.10 லட்சம் தர வேண்டி இருந்தது. பணத்தைக் கேட்கும் போதெல்லாம் பிரசாரத் கொக்கைன் வாங்கித் தருவார். 2 முறை பயன்படுத்திய பின்னர், 3-வது முறை நானே கொக்கைன் கேட்கும் நிலை ஏற்பட்டது. வேறொரு வழக்கில் பிரசாத்தை கைது செய்வதற்கு முன்பு கால் கிலோ கொக்கைன் தந்ததாக ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், 8 முறை போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் பப்-ல் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் பிரசாத் உள்ளார்.
புழல் சிறையில் உள்ள பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்பின் இவ்வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டலாம் என கூறப்படுகிறது.
- அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காது.
- முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சென்னை:
முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விடுக்கப்பட்ட அன்பான அழைப்பினை ஏற்று கலந்து கொண்டோம். முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே தான் கலந்து கொண்டோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோம்.
பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஏன் தி.மு.க.வுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அ.தி.மு.க. மீது அவதூறு பரப்புவதற்கு ஏதாவது சாக்குபோக்கு கிடைக்காதா என்ற வகையில் தான் அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள்.
முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.
- நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
- தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று நடிகர் ஸ்ரீகாந்த் கைதானார். இச்சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என கூறிய ஸ்ரீகாந்த் பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 8 கொக்கைன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் தவறு செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் தனது மகனை கவனித்துக்கொள்வதற்காக தனக்கு ஜாமின் வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, சிறையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்தது ஏன்? என்ன பலரும் கேள்வி எழுப்பினர். வருமான வரி முறையாக செலுத்திவரும் நபர் என்பதால் சிறையில் முதல் வகுப்பு சலுகை ஸ்ரீகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது.
- தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலமாகி உள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533.59 கோடி செலவு செய்தது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.
- தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் மத்திய அரசு சமஸ்கிருத மொழியைப் பரப்ப ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்குச் சேர்த்து ஒதுக்கப்பட்ட ரூ.147.56 கோடியை விட 17 மடங்கு அதிகமாகும் என்று தகவல் அறியும் உரிமை (RTI) மூலம் பெற்ற தகவலை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்குச் சராசரியாகச் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற ஐந்து செம்மொழிகளுக்குச் சராசரி ஆண்டு நிதி ரூ.13.41 கோடி மட்டுமே மத்திய பாஜக அரசு ஒதுக்கி தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளது. இந்த பாரபட்சமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
2004ல் முதன் முதலாகச் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழுக்கு, மொத்தம் ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. – இது சமஸ்கிருதம் பெற்ற தொகையை விட 22 மடங்கு குறைவு.
இந்தியாவின் மக்கட்தொகையில் 22% மக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழி பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் பேசுபவர்கள் மிகவும் சொற்பமானவர்களே.
சமீபத்தில் மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் தலைசிறந்த மொழி தமிழ் என்று பேசியது வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே என்பதை இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
தமிழ் மற்றும் பிற செம்மொழிகளுக்கு மொழிகளுக்கான உரிய அங்கீகாரம், நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
- உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
- திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகள், மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் திருநங்கைகளும் பயன் பெறலாம்.
இதுவரை திருநங்கைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே கல்லூரி படிப்பில் ரூ.1000 உதவித்தொகை பெற முடியும் என்று இருந்தது.
இப்போது இந்த விதிமுறையை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என எந்த வழியில் பயின்றிருந்தாலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை தாங்கள் பயிலும் கல்லூரியில் சான்றாக சமர்ப்பித்தால் போதுமானது.
திருநங்கை, திருநம்பி, இடைபாலினத்தவர்கள் UMIS இணையதளத்தில் விண்ணப்பித்து உயர்கல்வி பயில உதவித்தொகை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.






