என் மலர்
சென்னை
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட சமூக நீதி எனும் பேரொளியை தூக்கி சுமந்த விடிவெள்ளி வி.பி.சிங்.
- ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றை திரிபுகளால் மாற்றுவது அடிமைத் தனத்துக்கே வழிவகுக்கும் முயற்சி.
சென்னை:
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!
ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வரும் 04.07.2025 முதல் 08.07.2025 வரையிலான நாட்களில், இவ்விழாவிற்கு, தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக வரும் 04.07.2025 மதியம் முதல் 08.07.2025 மதியம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விழாவினை முன்னிட்டு, திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் குமாரபுரம், நாகர்கோவில் சாலையில் தெப்பக்குளம், தூத்துக்குடி சாலையில் ITI வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து, திருச்செந்தூர் கோவில் வாசல்வரை செல்வதற்கு வசதியாக 30 கட்டணமில்லா சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் பங்கேற்க வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி சென்னை, திருச்சி, கும்பகோணம்., காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை., கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 06.07.2025, 07.07.2025 மற்றும் 08.07.2025 ஆகிய நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு https://www.tnstc.in/ மற்றும் TNSTC Mobile App மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- அதிமுக, தொடர்ந்து பாஜக உடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று.
- திராவிடத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை...
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் அதிமுக தலைவர்கள் மேடையில் இருந்தபோதே, பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கனிமொழி எம்.பி.யிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பின்வருமாறு:-
அதிமுக, தொடர்ந்து பாஜக உடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடிய ஒன்று. இன்னும் ஒருபடி மேலே சென்று பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக் கூடிய இடத்திலேயே அவர்களும் இருந்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது அவர்கள் யார் என்பதையும், திராவிடத்திற்கும் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பதில் அளித்தார்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர்.
- போர்ச் சூழல் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுத்தியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 498 மீனவர்களும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 72 மீனவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 3 மீனவர்களும், ஆகமொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிப்பதாகவும், அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ்நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர்.
மேலும், மீனவர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். மீனவர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக காத்திருக்கின்றனர். தற்போது அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பிட அரசின் உதவியை நாடுகிறேன்.
இந்த மனிதாபிமான விஷயத்தில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் விரைவான தலையீடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும். ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும், அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை.
- மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு?
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கேள்விக்கு, "நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம். எங்களை விட பொதுமக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறார்கள். பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததைத் திமுக மட்டுமில்ல, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம். ஒரு சொல்லும் சரி, ஒர் ஆயிரம் சொல்லும் சரி உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும்" எனப் பதில் அளித்தார்.
இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்கிற கேள்விக்கு "மக்களே எதிர்க்கும்போது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு? இதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் இதை புறக்கணித்துவிட்டார்கள். நாங்கள் 100 மாநாடு நடத்தி திமுகவுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டை ஒரே மாநாட்டில் சேர்த்து விட்டார்கள்" எனப் பதில் அளித்தார்.
- ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.
- ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குசாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
'ஒரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.
வரக்கூடிய ஜூலை 1ஆம் தேதி முதலமைச்சர் இதுகுறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, முறைப்படி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்.
அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பேரணியாகச் சென்று இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடக்கி வைக்க இருக்கிறோம்.
அதை தொடர்ந்து ஜூலை மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குசாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்ப துறை முகவர்கள், மற்ற அணிகளாக இளைஞர் அணி, மகளிரணி போன்றவற்றின் நிர்வாகிகள், கிளை கழகத்துடைய நிர்வாகிகள் ஒவ்வொரு பூத்-களிலும் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிடம் அமர்ந்து, அங்கே இருக்கும் வாக்காளர் பெருமக்களில் 30% நம்முடைய கழகத்தில் இணையகூடிய வகையில் அரசியல் பணியாற்றச் சொல்லியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, அத்தனை வாக்காளர்களையும் சந்தித்து மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைய அழைப்பு விடுக்கப்போகிறோம். இதன் இன்னொருகட்டமாக, ஏறத்தாழ 2 கோடி பேரை நமது கழகத்தின் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நமது கழகத்தின் முக்கிய திட்டங்களை விளக்கி, இந்த நான்கு ஆண்டு ஆட்சி சாதனைகளை அவர்கள் இடத்தில் எடுத்து சொல்லி, டிஜிட்டலாக அவர்கள் ஒரு செயலியின் மூலமாகவும், ஒரு படிவம் மூலமாகவும் அவர்களை இணைக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் செல்லும் அளவில் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்கள் நடைபெற இருக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் எந்த ஒரு அரசியல் சூழ்நிலையிலும் மதங்களையோ, சாதிகளையோ அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு எப்போதும் ஒரணியில் நின்று அரசியல் கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.
தமிழ்நாடு எந்த ஒரு சவாலையும் எதிர்க்கொள்கிற போது, அது ஒரணியில் திரண்டு நிற்பதுதான் தமிழ்நாட்டிற்குரிய இயற்கையான பண்புக்கூறு என்பதை மனதில் வைத்து, இந்த 'ஓரணியில் தமிழ்நாடு' என்கிற உறுப்பினர் சேர்க்கையை முதலமைச்சர் அவர்கள் 1 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார்.
இவ்வாறு தெரிவித்தனர்.
- மத்திய கொள்முதல் முகமைகள் தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த மாம்பழங்களை கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும்.
- மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி-யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
மாம்பழங்களை உரிய விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடுமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது.
மத்திய கொள்முதல் முகமைகள் தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்த மாம்பழங்களை கொள்முதல் செய்திட உத்தரவிட வேண்டும். மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி-யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வழிகாட்டுதல்கள் வழங்கவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
- சமீபத்தில் அமித் ஷா, டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.
- ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.
தமிழகத்தை பிடிக்கப்போவதாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முட்டாள் என திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ. ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ. ராசா பேசியதாவது:-
* சாதனைகளுக்காக மட்டுமே ஒரு அரசு 50 ஆண்டு காலம் இருக்கும் எனச் சொல்ல முடியாது.
* இந்திரா காந்தி மறைந்தபோது ஆட்சி மாறியது.
* எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்ற போது மாறியது.
* 2ஜி 1.76 லட்சம் கோடி ஊழல் எனச் சொன்னார்கள். அப்போது ஆட்சி மாறியது.
* ஜனநாயகத்தில் நாம் செய்த சாதனைகள் மற்றும் தலைவர்கள் ஆளுமையோடு நிற்காது. எதிரிகள் வெவ்வேறு வடிவில் வருவார்கள்.
* சமீபத்தில் அமித் ஷா, மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டெல்லியை பிடித்துவிட்டோம். ஹரியானாவை பிடித்துவிட்டோம். மகாராஷ்டிராவை பிடித்துவிட்டோம். அடுத்து தமிழ்நாடு எனக் கூறியுள்ளார்.
* முட்டாள்... முட்டாள்... டெல்லியில் பார்த்த கெஜ்ரிவால் தனிப்பட்ட தலைவன். ஹியானாவில் தோற்கடித்தது ஒரு தனி மனிதனை. மகாராஷ்டிராவில் தோற்கடித்தது தனி மனிதனை. ஸ்டாலின் தனி மனிதன் அல்ல. இவருக்கு பின்னால் பெரியார், அண்ணா, கலைஞர் என்ற தத்துவம் இருக்கிறது.
இவ்வாறு ஆ.ராசா தெரிவித்தார்.
- கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடங்களில் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் இயக்கப்பட்டு வந்தன.
- தற்போது 9 பெட்டிகள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை ரெயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
9 பெட்டிகளாக இருந்த புறநகர் மின்சார ரெயில்கள் 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது.
கடற்கரை- செங்கல்பட்டு, சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
- கொகோ என்கிற தாவரத்தில் இருந்துதான் கொக்கையின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
- கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை இவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது பின்னணியில் இருப்பவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.
இந்த இரண்டு போதைப்பொருள்களும் சென்னை மாநகரில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் மதுவுடன் கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்கள் இரண்டுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட இந்த இரண்டு போதைப்பொருட்களும் சென்னை மாநகரத்தில் எப்படி ஊடுருவி வருகின்றன?
அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கொகோ என்கிற தாவரத்தில் இருந்துதான் கொக்கையின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. கொக்கைன் இலைகளை பறித்து நன்றாக காய வைத்து பின்னர் அதனை பொடியாக்கி கொக்கைன் போதைப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் பழங்குடி மக்கள் இதனை அதிக அளவில் தொடக்க காலத்தில் மயக்க மருந்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நாளடை வில் போதைப்பொருட்களாக பயன்படுத்த தொடங்கியதும் பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.
இருப்பினும் தடையை மீறி கொக்கையின் போதைப்பொருள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கடத்தல் சந்தையாகவே மாறி இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாக்களில் வரும் வாலி ர்கள் கொகைன் போதைப்பொருளை கடத்தி வந்து இங்குள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூலமாக படித்த இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள். பவுடராக மூக்கு வழியாக நுகர்ந்தும், பல் ஈறுகளுக்கு இடையில் வைத்தும் போதை ஏற்றுகிறார்கள்.
அதே நேரத்தில் கொகைனை ஒரு சில்வர் பேப்பரில் வைத்து அதன் கீழே லைட்டரில் தீயை காட்டி அதன் மூலமாக வெளியேறும் புகையை நுகர்ந்தும் கொக்கைன் போதையை அனுபவிக்கிறார்கள். பவுடர் வடிவிலான கொகைன் வெள்ளைப் பொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். இதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவார்கள்.
அடுத்ததாக புகைக்கக்கூடிய வகையில் சற்று திடப்பொருளாக கொக்கையினை மாற்றியும் பயன்படுத்துகிறார்கள் பேக்கிங் சோடா அல்லது அம்மோனியாவுடன் கலந்து இதனை உருவாக்குகிறார்கள். இதனை சூடுபடுத்தி புகையாக உறிஞ்சுவதன் ரத்தத்தில் கொகைன் விரைவாக கலந்து அதிக போதையை ஏற்படுத்துகிறது.
இதேபோன்று சில ரசாயனங்களை கொண்டு வீடுகளிலேயே தயாரிக்கப்படும் மெத்த பெட்டமைன் போதைப்பொருளும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு போதைப்பொருட்களையும் தான் நடிகர் ஸ்ரீகாந்த் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.
இவரைப் போன்று பிரபலங்கள் பலரும் கொக்கைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் தவறான பழக்க வழக்கங்கள் அதிகமாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் வார இறுதி நாட்களில் அவர்கள் பாலியல் அழகிகளை தேடிச் சென்று இன்பம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த விஷயத்தில் மிகவும் வீக்கான சினிமா பிரபலங்கள் பலரும் கொக்கையின் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை நீண்ட நேர பாலியல் இன்பத்துக்காகவும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளன.
ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பல திரைபிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கும்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் பின்னணியில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா்.
- நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஒருவரது மகனுக்கும் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவருமான பிரசாத் என்பவருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது.
அப்போது பிரசாத்துடன் வந்த சில தொழில் அதிபர்கள் பீர் பாட்டிலை உடைத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். மது பாரையும் அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். டி.எஸ்.பி. மகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாரில் ரகளையில் ஈடுபட்டதாக பிரசாத், அஜய் ரோகன், தூண்டில் ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கும், கொகைன் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதனால் உஷாரான நுங்கம்பாக்கம் போலீசார் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்திய போது வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் கொகைன் போதைப்பொருளை ஒரு கும்பல் சப்ளை செய்து இருப்பதும் அதில் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிரசாத் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதன் மூலம் பிரசாத் ஏற்கனவே சில குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரை போலீசாா் தங்களது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனா். விசாரணையில் பிரசாத்துக்கு கொகைன் போதைப்பொருள் பழக்கம் இருப்பதும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மதுபான விடுதியில் அவருக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப் குமாா் என்ற பிரடோ என்பவா் கொகைன் போதைப் பொருளை விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும், நுங்கம்பாக்கம் போலீசாரும் பிரதீப்குமாா் குறித்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், பிரதீப்குமாரையும், சா்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜானையும் கடந்த 19-ந்தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா்.
இருவரிடமும் கொகைன் விற்பனை குறித்து போலீசாா் விசாரணை செய்தனா். அப்போது பெங்களூரில் வசிக்கும் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த நைஜீரியாவின் ஜூரிக், சென்னையில் உள்ள போதைப் பொருள் விற்கும் கும்பலுக்கு கொகைனை விற்று உள்ளாா்.
இந்தக் கும்பலிடம் இருந்து பிரதீப்குமார் கொகைனை கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாங்கி வந்து சென்னையில் விற்று வந்துள்ளாா். ஒரு கிராம் கொகைனை அவர் ரூ.7 ஆயிரம் கொடுத்து வாங்கினார். அதை சென்னையில் ரூ.13 ஆயிரத்துக்கு விற்றுள்ளாா்.
அவர் மூலம் பல தடவை பிரசாத் கொகைன் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி உள்ளார். பிரசாத் "தீங்கிரை" என்ற சினிமா படத்தை தயாரித்தார். அந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஸ்ரீகாந்துக்கும், பிரசாத்துக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.
அந்த நட்பு காரணமாக பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் பழக்கம் நடிகர் ஸ்ரீகாந்துக்கு பரவியது. இருவரும் வாட்ஸ்அப் மூலம் கொகைன் பயன்படுத்துவதை பற்றி பல தடவை பேசியுள்ளனர். நாளுக்கு நாள் கொகைன் பயன்படுத்துவதை நடிகர் ஸ்ரீகாந்த் அதிகரித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கொகைகனுக்கு அடிமையாகி விட்டதாகவே கூறப்படுகிறது.
இதனால் பிரசாத்திடம் இருந்து மட்டுமின்றி நேரடியாக பிரதீப்குமாரிடமும் நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் வாங்க தொடங்கி உள்ளார். கொகைன் வாங்குவதற்கு ஜிபே மூலம் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்துள்ளார். ஒரு கிராம் கொகைனை ரூ.13 ஆயிரத்துக்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியது தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் மட்டும் அவர் ரூ.5 லட்சம் செலவு செய்து இருக்கிறார். அப்படி வாங்கிய கொகைனை திரை உலக பிரபலங்கள் பலருக்கும் ஸ்ரீகாந்த் கொடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே போலீசார் பிரதீப்குமாரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது நடிகர் ஸ்ரீகாந்த் கணக்கில் இருந்து அவருக்கு ஆயிரக்கணக்கில் பணம் வந்திருப்பதை கண்டனர். இது தொடர்பாக விசாரித்தபோது நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் 43 தடவை கொகைன் போதைப் பொருள் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி பிரதீப்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கொகைன் போதைப் பொருள் கொடுத்ததை ஒத்துக்கொண்டார். இந்த தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகா் ஸ்ரீகாந்துக்கு போலீசாா் அழைப்பாணை வழங்கினா். அதன்படி, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்த் நேற்று ஆஜரானாா். அவரிடம் விசாரித்தபோது, தான் கொகைனை வாங்கவில்லை என்று முதலில் மறுத்தாா். நேற்று காலை நீண்ட நேரம் போலீசார் அவரிடம் இந்த விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.
இதையடுத்து, அவரை மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், கொகைன் மற்றும் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை ஸ்ரீகாந்த் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
பின்னா் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடா்புகளை ஸ்ரீகாந்த் தெரிவித்தாா். இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனா்.
இதன் ஒரு பகுதியாக ஸ்ரீகாந்த் வீட்டிலும் போலீசாா் சோதனையிட்டனா். இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து 7 கொகைன் கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் மீது போலீசார் போதைப் பொருள் தடுப்பு சட்டம் 1985-ன்படி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ஒன்று:- 8சி (போதைப் பொருள் பயன்படுத்துவது மற்றும் கடத்தி விற்பது)
இரண்டு:- 22 (போதைப் பொருள் பதுக்கி வைப்பது)
மூன்று:- 29(1) (போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து சதி செய்தது)
நான்கு:- 27 (போதைப் பொருளை கூட்டாக கடத்துவது)
இந்த 4 பிரிவுகளின் கீழ் தொடரப்படும் வழக்குகளை தீவிரமாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் எந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தினார்களோ அல்லது பயன்படுத்தினார்களோ அதற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படுவதாக தெரிகிறது.
சமீபத்தில் 2 கிலோ போதைப் பொருள் வைத்திருந்த நபருக்கு சென்னை கோர்ட்டு 10 ஆண்டு கடும் காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஒன்று முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அவரிடம் மீண்டும் விசாரணை நடத் தப்பட்டது. அதன் பிறகு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரது உடல்நலம் பற்றி போலீசார் ஆய்வு செய்து அறிக்கை பெற்றனர். இதைத் தொடர்ந்து 10 மணி நேர விசாரணைக்கு பிறகு ஸ்ரீகாந்த் எழும்பூர் 14-வது நீதித்துறை நடுவர் மன் றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
அவரை ஜூலை 7-ந்தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டார். அப்போது ஸ்ரீகாந்த் தரப்பு வக்கீல் நீதிபதியிடம், "ஸ்ரீகாந்த் முறையாக வருமான வரி செலுத்தி வருவதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். இதை ஏற்ற நீதிபதி முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகர் ஸ்ரீகாந்திடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரை காவலில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மனு தயார் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் அவரிடம் 3 கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
1. ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை திரையுலக பிரமுகர்களுக்கு விற்பனை செய்தாரா?
2. திரையுலக விருந்துகளில் பங்கேற்ற நடிகர்-நடிகைகளுக்கு கொகைன் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நடிகர்-நடிகைகள் யார்?
3. கொகைன் போதைப் பொருள் மூலம் ஸ்ரீகாந்த் மிகப்பெரிய நெட்வொர்க்குக்கு உதவி செய்தாரா? ஆகிய 3 கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும் ஸ்ரீகாந்துக்கு நெருக்கமான நடிகர் கிருஷ்ணா உள்பட மற்ற நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் ஸ்ரீகாந்த்துடன் தொடர்பில் இருந்த நடிகர்-நடிகைகள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது குடும்ப சூழ்நிலையை குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருளை அவரது தேவைக்கு மட்டும் வாங்கினாரா அல்லது வேறு யாருக்கும் வாங்கிக் கொடுத்தாரா என போலீசாா் விசாரித்துள்ளனர்.
நடிகா் ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், நண்பன், சவுகாா்பேட்டை, சதுரங்கம், போஸ் உள்ளிட்ட 54 படங்களில் நடித்துள்ளாா். மிகவும் பிரபலமான நடிகரான ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரைப்படத்துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப் பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.






